தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2/003-007

வீர அபிமன்யு

சுவாமிகளின் புலமைக்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற சம்பவங்கள் இருக்கின்றன. அவற்றில் அதிசயிக்கத்தக்க ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் கூறுகிறேன்:

நான் நடிக்கத் தொடங்கிய காலத்தில் அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டு வந்தது. ஒருநாள் நாடக சபையின் உரிமையாளர்களில் ஒருவரான திரு. பழனியா பிள்ளை அவர்கள் சுவாமிகளிடம், “சுவாமி! சண்முகம் கதாநாயகனாக நடிப்பதற்கு ஏற்றபடி ஒரு நாடகம் எழுதுங்கள்” என்று கூறினார். அப்போது எனக்கு வயது ஏழு; என்றாலும் நன்றாக நினைவிருக்கிறது.

அன்று மாலை சுவாமிகள் புத்தகக் கடைக்குச் சென்று அபிமன்யுசுந்தரி அம்மானைப் பாடல் பிரதியொன்று வாங்கி வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு ‘அரிக்கன்’ விளக்கை அருகில் வைத்துக் கொண்டு எழுதத்தொடங்கினார். மறுநாள் பொழுது விடிந்து நாங்கள் எழுந்தபோது சுவாமிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரது படுக்கையருகே அபிமன்யு நாடகம் மங்களப் பாட்டுடன் முடித்து வைக்கப்பட்டிருந்தது.

இது வெறும் கட்டுக் கதையன்று; உயர்வு நவிற்சியுமன்று. கண்கண்டஉண்மை. இச்சம்பவத்தை உடனிருந்து பார்த்த எங்கள் சக நடிகர்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர். திரு. பழனியா பிள்ளை அவர்கள் எல்லோரையும் அழைத்து ‘அபிமன்யு’ நாடகத்தைக் காண்பித்து ஆனந்தக் கண்ணீர்விட்டார்.

நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள்!... அதற்கேற்ற உரையாடல்கள்!ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அடித்தல் திருத்தல் கிடையாது!... ஒரு புத்தகத்தைப் பார்த்து நகல் எடுக்கும் வேலையைக்கூட இவ்வளவு விரைவாகச் செய்ய முடியாது. கற்பனையாக நான்கு மணி நேரம் நடைபெறக்கூடிய ஒரு நாடகத்தையே எழுதி முடித்துவிட்டார் சுவாமிகள். அவருடைய புலமைத் திறனை என்னென்று கூறுவது?

“அடே சின்னப் பயலே! இந்த ‘அபிமன்யு’ நாடகம் உனக்காக எழுதப்பட்டது” என்று கூறிச் சுவாமிகள் அன்று என் முதுகிலே தட்டியபோது எனக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. இன்று அதை நினைத்துப் பூரிப்படைகிறேன்; பெருமிதங் கொள்கிறேன்.

கற்பனைச் சிறப்பு

ஒரே இரவில் இவ்வளவு துரிதமாக எழுதி முடித்த ‘அபிமன்யு’ நாடகத்தில் உள்ள பாடல்களிலும் உரையாடல்களிலும் நிறைந்துள்ள கருத்துக்கள் எண்ணி எண்ணி இன்புறுதற்குரியன. சுவை மிகுந்த ஒரு வசனத்தைக் குறிப்பிடுகிறேன்.

சுந்தரியை அபிமன்யுவுக்குக் கொடுக்க மறுத்து, துரியோதனன் மகன் இலக்கணகுமாரனுக்கு மணமுடிக்கச் சகல ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. மணமகன் தனது பரிவாரங்களுடன் வந்துவிட்டான். மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன. இன்னும் சிறிது நேரத்தில் மணப்பெண்ணை அழைத்துப் போக வந்துவிடுவார்கள். இந்த மனமற்ற மணத்திற்காக நடக்கும் மேளதாள ஒலிகளைக் கேட்டுச்சுந்தரி உடல் நடுங்குகிறாள்; கண்ணிர் விடுகிறாள். இசைக் கருவிகளின் முழக்கம் அவள் இதயத்தில் அடிப்பது போலிருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் வழக்கம்போல் சுந்தரிக்கு மலர்கள் கொண்டு வந்த ஒரு பாட்டியின்மூலம் அத்தான் அபிமன்யு வந்து விட்ட சேதி தெரிகிறது. பூச்செண்டுக்குள் காதலன் வைத்தனுப்பிய கணையாழியும் ஓலையும் அவள் கையில் கிடைக்கின்றன. ஆனந்தக் கண்ணிர் வடிக்கிறாள் சுந்தரி. முன்பு இதயத்தைத் தாக்கித் துன்பத்தைத் தந்த அதே மேளவாத்திய ஒலிகள் இப்போது அவர் இதயத்தை மகிழ்விக்கின்றன. வசனத்தைப் படியுங்கள். சுந்தரியின் வாயிலாகச் சுவாமிகளின்புலமை வெளிப்படுகின்றது.

“தோழி! என்ன அதிசயமடீ! சற்று நேரத்திற்கு முன்அந்த முட்டாள் இலக்கணனுக்கு நான் மனைவியாகப் போவதை அறிவித்து என் இதயத்தைத் துன்புறுத்திய அதே மேளதாள வாத்திய ஒலிகளெல்லாம் இப்போது எனக்குத் தேறுதல் கூறுவது போல் ஒலிக்கின்றனவே!...

“துந்துபிகளெல்லாம் தும்தும்தும் என்றும், சங்குகளெல்லாம் பம்பம்பம் என்றும், தாளவகைச்சல்லரி மல்லரி கரடிகைகளோ தீம் தீம் தீம் என்றும், முரசு, பேரிகை, மிருதங்கங்களோ தோம் தோம் தோம் என்றும் தொனிக்கின்றன. ஆகவே, இவ்வகை வாத்திய ஒலிகள் எல்லாம் ஒன்றுகூடி தும்பம் தீம் தோம், தும்பம் தீம்தோம், துன்பம் தீந்தோம், துன்பம் தீர்ந்தோம் என்னும் பொருளைக் கொடுக்கலாயின. ஆஹா நான் செய்த பாக்கியமே பாக்கியம்.”

இந்த வசனத்தைச்சுந்தரி பேசி முடித்ததும் அந்த நாளில் சபையோர் நீண்ட நேரம் கைதட்டித் தங்கள் பாராட்டைத் தெரிவிப்பார்கள். இந்த அருமையான கற்பனை ஒரே இரவில் எழுதி முடித்த ஒருநாடகத்தில் இருந்தது என்பதை எண்ணிப்பார்க்கும்போது சுவாமிகளின் புலமை நன்கு புலனாகும்.

கோவலன்

சுமார் 43 ஆண்டுகளுக்குமுன் சுவாமிகளால் எழுதப்பட்ட கோவலன் நாடகம் மிகப் பிரசித்தி பெற்றது. தமிழ் நடிகர்கள் அனைவரும் இந் நாடகத்தை நடித்திருக்கின்றனர். புகழ்பெற்ற இந்தக் ‘கோவலன்’ நாடகத்தை இன்று புலவர்கள் சிலர் கண்டிக்கின்றனர்; குறை கூறுகின்றனர். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் பெருமை தெரியாத எவனோ ஒருவன் ‘கோவலன்’என்ற பெயரால் ஒரு கூத்தைக் கிறுக்கி வைத்து விட்டான் என்பது புலவர்களின் எண்ணம்.

கோவலன் கதை நாடகமேடைக்கு வந்த வரலாறும் சுவாமிகளின் பெரும் புலமைத் திறனும் இவர்களுக்குத் தெரியாது. தமிழ்மொழியிலே உள்ள அடிப்படை நூல்கள் அத்தனையும் சுவாமிகளுக்கு மனப்பாடம். அவருடைய பாடல்களிலும் வசனங்களிலும் திருக்குறளும் நாலடியாரும் வாரி இறைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, குறுந்தொகை முதலிய சங்கநூல்களிலே புதைந்து கிடக்கும் சீரிய பேருண்மைகளெல்லாம் சுவாமிகளின் உரையாடல்களிலே எளிமையோடு வெளிவந்து உலாவுவதைக் காணலாம்.

மணிமேகலையைச் சிறிதும் மாற்றம் செய்யாமல் காப்பியப்படியே நாடகமாக்கித் தந்த சுவாமிகள், சிலப்பதிகாரக் கோவலனுக்கு வேறு வடிவம் கொடுத்திருப்பாரா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாடக மேடைக் கோவலனை அந்தக் காலத்தில் பண்டிதர்களும் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். அவர்களில் எவரும் சிலப்பதிகாரத்தோடு நாடகக் கோவலனை இணைத்துப் பார்த்துக் குறைகூற முன் வரவில்லை.

அந்த நாளில் சுவாமிகள் இலங்கைக்குச் சென்றிருந்தபோது மாபெரும் புலவர்கள் நிறைந்த யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கத்தில் சுவாமிகளின் புலமையை ஆராயப் பல கேள்விகள் கேட்கப் பட்டன. அக் கேள்விகளுக்கெல்லாம் மிக எளிதாகச் சுவாமிகள் விடையளிக்கவே, அவரது முத்தமிழ்ப் புலமையைப் பாராட்டிச் சங்கத்தார் வலம்புரிச்சங்கு ஒன்றைப் பரிசாகத் தந்து சுவாமிகளைப் போற்றினர். இத்தகைய ஒரு பெரும் புலவர்மீது சிலப்பதிகாரத்தை அறியாதவர் என்ற குற்றச்சாட்டை வீசுதல் முறையன்று. கோவலன் நாடகம் தோன்றிய வரலாறு இது:

‘நளவெண்பா’ பாடிய புகழேந்திப் புலவர் பெயரால் அம்மானைப் பாடலாக நங்கைக் கதைகள் பல நமது நாட்டில் உலவி வந்தன. இக்கதைகள் நமது தாய்மார்களைப் பெரிதும் கவர்ந்தன. அல்லி அரசாணிமாலை, அபிமன்யு சுந்தரிமாலை, புலந்திரன் தூது, பவளக்கொடி மாலை, காத்தவராயன் கதை முதலிய பல கதைகள் இந்த வரிசையில் இடம் பெற்றவை. புலமைக்கடல் புகழேந்திப் புலவருக்கும் இந்தக் கதைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்க முடியாது. ஆனால், இந்தப் புத்தகங்களில் எல்லாம் “புகழேந்திப் புலவர் அம்மானைப் பாடல்கள்” என்றே குறிப்பிட்டிருக்கும். தன்னை மறைத்துக் கொள்ள விரும்பிய யாரோ ஒரு புண்ணியவான் புகழேந்திப் புலவர்மீது இப் பழியைச் சுமத்தினார் என்றே கொள்ள வேண்டும்.

சுவை மிகுந்த இக்கதைகள் பெரும்பாலும் நாடகமாக்கி நடிக்கப்பட்டன. இந்த நங்கைக் கதைகளிலே ஒன்றுதான் கோவலன் என்ற பெயரால் நாடக மேடைக்கு வந்த கண்ணகி கதை.

முதலில் கோவலனை நாடக மேடைக்குக் கொண்டு வந்தவர்கள் ஆலந்தூர் ஒரிஜினல் நாடகக் கம்பெனியார் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் இந்நாடகத்தை இரண்டு பாகமாக இரண்டு இரவுகள் நடத்தினார்களாம். '‘அல்லி பரமேஸ்வர ஐயர்’அவர்கள் கம்பெனியில் சுவாமிகள் இருந்தபோது கோவலன் நாடகம் ஒரே இரவில் நடிக்கும் முறையில் புதிதாக எழுதப்பெற்றது. விலைமாதர் கூட்டுறவால் அல்லற்படும் இளைஞர்களுக்கு நீதி புகட்ட ஒரு புதிய கதையை எழுதுவதைவிட நாடு நன்கறிந்த கோவலன் கதையை எழுதுவது நல்ல பயனைத் தரும் என்பது சுவாமிகளின் நோக்கமாயிருந்திருக்க வேண்டும். முதலில் கோவலனாக நடித்த திரு. சூரிய நாரயண பாகவதர் அவர்கள் சிறந்த பாடகராயிருந்ததால் அவருக்கென்றே பெரும்பாலும் வசனங்கள் தேவையில்லாத முறையில் எளிய நடையில் முழுதும் பாடல்களாகவே எழுதிக் கொடுத்தார் சுவாமிகள். அதன் பிறகு திரு. வேலு நாயர் அவர்கள் கோவலனாக நடித்தபோது வசனங்களும் எழுதப்பட்டன. திரு. பரமேஸ்வர ஐயர் அவர்கள் குழுவில் என் தந்தையாரும் நடிகராயிருந்தமையால் இச்செய்திகளை அவர்மூலம் நான் அறிய முடிந்தது.

கோவலன்நாடகத்தை முதன்முறை மதுரையில் அரங்கேற்றியபோது நிகழ்ந்த ஒரு சம்பவம் சுவாமிகளின் புலமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

‘கோவலன்’ நாடகக் கதை எல்லோருக்கும் தெரிந்திருப்பதால் விளக்கமாகக் குறிப்பிட்ட வேண்டியதில்லை. கண்ணகி கொடுத்த காற்சிலம்பை விற்றுவர மதுரைநகருக்குப் போவதாகக் கூறுகிறான் கோவலன். அப்போது கண்ணகியின் வாய்மொழியாக,


“மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு
மன்னா போகாதீர் இன்று”

என்ற பாடல் பாடப்படுகின்றது. மதுரை நகரில் அவர்கள் முன்னிலையிலேயே மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்குப் போகவேண்டாம் என்று பாடினால் அவர்கள் மனம் எப்படியிருக்கும்?.... இந்தப் பாடலைப் பாடத் தொடங்கியதும் சபையோர் கூச்சலிட்டு “எங்கே சங்கரதாஸ்? கொண்டு வா மேடைக்கு” என்று ஆரவாரம் செய்தார்கள்.

சுவாமிகள் மேடைக்கு வந்து கெம்பீரமாக நின்றார். சபையிலிருந்து கேள்விகள் சரமாரியாகக் கிளம்பின. “மாபாவியோர் கூடி வாழும் மதுரை" என்று குறிப்பிட்டு எழுதியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென மக்கள் குழப்பம் செய்தனர். சுவாமிகள் தமது கரங்களை உயர்த்தி அமைதியாக இருக்கும்படி வேண்டிக்கொண்டு தமது கருத்தை விளக்கத் தொடங்கினார்.

“மா என்ற சொல் திருமகளாகிய இலக்குமியையும், பா என்ற சொல் கலைமகளாகிய பாரதியையும், வி என்ற சொல் மலைமகளாகிய பார்வதியையும் குறிக்கிறது” என்று கூறி, அதற்கு ஆதாரமாகப் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலிருந்து சில செய்யுட்களைப் பாடி விளக்கம் தந்தார். “மாபாவியோர்கூடி வாழும் மதுரை“ என்றால், திருமகளும் கலைமகளும் மலைமகளும் சேர்ந்து வாழும் மதுரை என்று பொருள்படுகிறது. அதாவது, சகல செல்வங்களும் நிறைந்து விளங்கும் மதுரையில், செல்வம் கொழிக்கும் அத்திருநகரில் இந்தச் சிலம்பை வாங்க ஆள் கிடைக்காதே என்ற கருத்துப்பட “மா பாவியோர்கூடி வாழும் மதுரைக்கு மன்னா போகாதீர்” என்று மதுரை நகரைப் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, “சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை” என்றார். சபையோர் சுவாமிகளின் புலமையை வியந்து கை தட்டிப் பாராட்டினார்கள். முன்வரிசையில் இருந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் ஒருவர் எழுந்து, “சுவாமிகளே! நீர் எந்தக்கருத்தில் எழுதியிருந்தாலும் சரி; உமது புலமைக்குத் தலை வணங்குகிறோம்” என்றார்.

நடிப்பைக் கைவிட்ட கதை

இரணியன், இராவணன், எமன் முதலிய பாத்திரங்களைத் தாங்கிச் சுவாமிகள் நடித்து வந்தாரெனக் குறிப்பிட்டேனல்லவா? அந்த நாளில் இவ்வேடங்களை நடிப்பதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையெனச் சுவாமிகள் பெயர் பெற்றிருந்ததாகச்சொல்லப்படுகிறது.

நல்ல உடற்கட்டும், எடுப்பான தோற்றமுமுடைய சுவாமிகள் வேடந்தாங்கி மேடையில் நிற்கும்போதே பார்ப்பதற்குப் பயமாக இருக்குமாம். ஆவேசத்துடன் நடித்துத் தமது கெம்பீரமான குரலை உயர்த்திப் பேசும்போது சிறு குழந்தைகள் அலறி விடுவார்களாம்.

சுவாமிகள் இவ்வேடங்களில் நடித்த காலத்தில் நிகழ்ந்த சில அதிசயமான சம்பவங்களைப்பற்றிச் சுவாமிகளின் மாணாக்கர்களில் ஒருவரான எனது தந்தையார் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். எதிர்பாராத நிலையில் யாராவது திடீரென்று வந்து பயமுறுத்தும்போதோ, அல்லது அதிர்ச்சியுண்டாக்கத் தக்க பெரும் சத்தத்தைக் கேட்கும்போதோ, “அப்பா! கர்ப்பம் கலங்கி விடும் போலிருக்கிறதே!” என்று கூறுவதுண்டல்லவா?

ஒரு முறை சுவாமிகள் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் நடித்தபோது, சத்தியவானுடைய உயிரைக் கவர்ந்து வர முடியாமல் திரும்பிய கிங்கரர்களைக் கோபித்துக்கொள்ளும் கட்டத்தில் ஆவேசத்துடன் கூச்சலிட்டுக் கையிலிருந்த சூலாயுதத்தை ஓங்கித் தரையில் அடித்தவுடன் உண்மையாகவே சபையிலிருந்த ஒர் அம்மையாருக்குக் ‘கருச்சிதைவு’ ஏற்பட்டுவிட்டதாம். அன்றுமுதல் மேற்சொன்ன காட்சி நடைபெறுமுன் கம்பெனியார் மேடைக்கு வந்து, “கர்ப்பிணிகள் யாராவது இருந்தால் தயவுசெய்து இந்தக் காட்சி முடியும்வரை வெளியே சென்று விடுங்கள்” எனக் கேட்டுக் கொள்வார்களாம்.

மற்றொரு சமயம் ‘பிரகலாதன்’ நாடகத்தில் சுவாமிகள் இரணியனாக நடித்தபோது, “நாராயணாய நம” என்று கூறிய பிரகலாதனை இரணியன் தன் தடியிலிருந்து கீழே தள்ளிக் கோபித்துக் கொள்ளும் காட்சியில், சுவாமிகள் பிரகலாதனாக நடித்த சிறுவனைத்தமது வலது கையால்துக்கிக்கீழே எறிந்து கர்ஜித்தாராம். சபையிலிருந்த ஓர் அம்மையார், “ஐயோ பாவி! பிள்ளையைக் கொன்னுட்டானே” என்று அலறி மூர்ச்சையுற்றுச் சாய்ந்துவிட்டாராம்.

“நளதமயந்தி” நாடகத்தில் சுவாமிகளின் “சனீசுவர பகவான்” வேடம் பார்க்க மிகப் பயங்கரமாக இருக்குமாம். உடம்பெல்லாம் கறுப்பைப் பூசிக்கொண்டு அதன்மேல் எண்ணையும் தடவிப் பளபளப்பான கருநிற மேனியுடன் சுவாமிகள் மேடைக்கு வரும் போது, பயந்த சுபாவமுடையவர்கள் கண்களை மூடிக் கொள்வார்களாம்.

ஒரு நாள் சனிசுவரனாக நடித்துவிட்டு விடிய நான்கு மணிக்கு அப்படியே வேடத்தைக் கலைக்காமலேயே எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சுவாமிகள் வெளியே சற்று தொலைவிலிருந்த ஒரு கிணற்றுக்குச் சென்றாராம். கருக்கிருட்டில் கிணற்றிலிருந்து தண்ணிரெடுத்துக் கொண்டு எதிரே வந்த ஒரு மங்கை இவரது தோற்றத்தைக் கண்டு அந்த இடத்திலேயே மாரடைப்பினால் உயிர் துறந்தாராம்.

இவ்வாறு பல நிகழ்ச்சிகள் அடிக்கடி ஏற்பட்டு வந்ததின் விளைவாகச் சுவாமிகள் நடிப்பதைக் கைவிட்டு ஆசிரியப் பணியை மட்டும் மேற்கொண்டதாகத் தெரிகிறது.

சுவாமிகள் வேடம் பூண்டு நடிப்பதைப் பார்க்கக் கொடுத்து வைக்காவிட்டாலும், மற்றவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக நடித்துக் காட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். அதுவும் எமன், இரணியன், சிறுத்தொண்டரில் காள பைரவர், கடோத்கஜன் முதலிய வேடங்களைத் தாங்குவோருக்கு அவரேதான் நடித்துக் காட்டுவார். கண்களை உருட்டி விழித்துக் கோபக்கனல் தெறிக்கப் பற்களை ‘நற நற’ வென்று கடிக்கும்போது எங்களுக்கெல்லாம் சுவாமிகளைப் பார்ப்பதற்கே அச்சமாயிருக்கும். சாதாரணத் தோற்றத்திலேயே இவ்வாறு அச்சமேற்படுமானால் வேடத்தையும் போட்டுக்கொண்டு நிற்கும்போது எப்படி இருந்திருக்கும்?