தாய்மொழி காப்போம்/எது கவிதை

35. எது கவிதை?

ஒருத்தியும் ஒருவனும் உள்ளத் தெழுந்த
பருவ உணர்ச்சி பக்குவம் பெற்றுக்
கருக்கொளும் பின்னர் உருக்கொளும்; எல்லா
உறுப்பும் அமைந்து வனப்புடன் ஒருமலர்
வந்து தோன்றும்; வாய்த்த அதைத்தான்
இந்த வுலகம் குழந்தையென் றியம்பும்;
கற்பனை வளமும் கவிஞன் உளமும்
பொற்புடன் மருவப் புதியதோர் உணர்ச்சி
கருக்கொளும் பின்னர் உருக்கொளும்; எல்லா
உறுப்புடன் அமைந்து வனப்புடன் நறுமலர்
வந்து தோன்றும்; வாய்த்த அதைத்தான்
இந்த வுலகம் கவிதையென் றியம்பும்;
உறுப்புகள் இல்லா உருவினை
வெறுக்கும் பிண்டமென் றிசைக்குமிவ் வுலகே.

 

(27-11-1980)