தாய்மொழி காப்போம்/பிரிந்து போ

14. பிரிந்து போ

தேசிய மொழிக ளென்று
செப்பினை பத்தும் நான்கும்
பேசிய துண்மை யென்றால்
பேணுவை சமமாக் கொண்டே;
வீசிய சொன்ம றந்து
விரைந்துநீ இந்தி யென்னும்
ஊசியை நுழைக்க வந்தால்
அதன் நுனி ஒடிந்து போகும்.

உன்மொழி மட்டு மென்ன
உலகிலே உயர்ந்த ஒன்றா?
என்மொழி மட்டுமென்ன
இழிந்ததா? எண்ணம் என்ன?
பொன்னெலாங் கோடி கோடி
பொழிகிறாய் வளர்க்க வேண்டி!
என்வரிப் பங்கும் உண்டால்
எதிர்க்கவும் உரிமை யுண்டு.

உனக்கென்ன உரிமை யுண்டோ
எனக்குமவ் வுரிமை யுண்டாம்
எனக்குள வுரிமை கொல்ல
எண்ணினை யாகின் அன்றே
எனக்குனக் குரிய பங்கைப்
பிரித்திட எழுவேன் கண்டாய்
மனத்தினிற் பட்ட ஒன்றை
வாய்திறந் தெடுத்துச் சொன்னேன்.

உலகிலே நீயும் நானும்
உறவுடன் பிறந்தா வந்தோம்
தலைதடு மாறி என்னைத்
தாள்பணி யென்று சொன்னால்
நிலைதடு மாறிப் போகும்
நெஞ்சிலே பதித்துக் கொள்வாய்
சிலையென என்னை யெண்ணின்
சீரழிந் தொழிந்து போவாய்.

 

(சிலை - கல்)

வெள்ளையன் விடுத்துச் சென்றான்
விரகினில் எடுத்துக் கொண்டாய்
கொள்ளையும் அடித்து விட்டாய்
கொடுஞ்செயல் பலவுஞ் செய்தாய்
வெள்ளைநெஞ் சுடைய யானும்
விடுதலைப் பயனுங் காணேன்
தள்ளையைக் கொல்ல வந்தால்
தலைமகன் பார்த்தா நிற்பான்?

இந்தியைப் புகுத்தி என்றன்
இளந்தமிழ் நோகச் செய்ய
வந்திடின் நின்னை நானும்
வாழ்த்தவா செய்வேன்? நெஞ்சம்
நொந்துழன் றழுவேன் பின்னர்
நொடியினில் துடித்தெ ழுந்து
வெந்தழல் விழியிற் காட்டி
விரட்டுவேன் வெருண்டு போவாய்

என்னுடன் உன்னைக் கூட்டி
இணைத்தனன் எவனோ வந்து
பின்னுமென் னுடைமை யெல்லாம்
பிடுங்கினை! என்றன் தாய்க்கும்
இன்னலே செயநி னைந்தால்
இனியுமுன் தொடர்பெ தற்கு?
சொன்னதும் பிரிந்து போபோ
சுடுமொழி தோன்று முன்னே

என்சொலைக் கேட்டு நெஞ்சுட்
சீறினை! என்ன செய்வாய்?
வஞ்சனை பலவும் செய்வாய்
வழக்குகள் தொடுத்து நிற்பாய்
வெஞ்சிறைக் கூட மென்று
வெருட்டுவாய் அடபோ பேதாய்
அஞ்சினேன் என்றால் என்றன்
அன்னையைக் காப்பு தெங்கே?

 

- 10.3.1587


(விரகு - தந்திரம், தள்ளை - தாய்)