தாய்மொழி காப்போம்/சட்டம் செய்க

15. சட்டம் செய்க

இந்தியத்தில் ஒருமொழிக்கே ஏற்றமெனில்
இரண்டுபடும் இந்த நாடு
விந்தியத்தின் வடபுலமே விடுதலையின்
பயன்பெறுமேல் விரைந்து தெற்கு
முந்தியெழுந் தார்ப்பரிக்க முயலாதோ
உரிமைபெற? அடிமை யென்றால்
வந்தெதிர்த்து விடுதலைக்கு வழிவகுக்கும்
நாளைவரும் *வயவர் கூட்டம்

கடலுக்குள் கலம்விட்ட காரணத்தாற்
செக்கிழுத்த காளை யைப்போல்
மிடல்மிக்கோர் ஆயிரத்தின் மேலானோர்
மொழிகாக்க மிகுதல் வேண்டும்
அடல்மிக்க வாஞ்சியைப்போல் ஆயிரவர்
எழல்வேண்டும்; அற்றை ஞான்றே
இடம்விட்டு விலகாதோ? இந்திபுக
வெருவாதோ? இடிந்தே போகும்.

விடுதலைக்குப் போர்தொடுத்தோம் வெள்ளையரோ
புறங்கொடுத்தார் விடிவு பெற்றோம்
அடிமையினி எமக்கில்லை அரியணையில்
யாமென்றோம் ஆனால் எம்மை
அடிமைகொள நினைக்கின்றீர் அம்மொழியைத்
திணிக்கின்றீர். அடுத்தி ருந்தே
குடிகெடுக்க முயல்கின்றீர், குடிலர்சிலர்
துணைநிற்கக் கொடுங்கோல் கொண்டீர்

பிறப்புரிமை எமக்குண்டு பேசுமொழி
காத்திடுவோம், பிறந்த நாடும்
சிறப்புறவே செய்திடுவோம். திருநாடு
யார் சொத்து? தெளிந்து சொல்க
மறுப்புரைக்க வாயுண்டோ ? மனமறிந்த
பொய்யுண்டோ? வஞ்ச நெஞ்சைத்
திறக்கின்றீர் இந்தியினைத் திணிக்கின்றீர்
ஒற்றுமையைத் தீக்குள் விட்டீர்.

 

(வயவர் - வீரர்)

எம்மொழியும் சமமாக இனியதொரு
வழிசெய்க இணைந்து வாழ்வோம்
நும்மொழிதான் கோலோச்ச நுழைப்பீரேல்
தனிநாடு நொடியில் தோன்றும்;
நன்மையெனிற் கைகொடுப்போம் நலிவுதரிற்
போர்தொடுப்போம் நயச்சொல் பேகம்
எம்மொழியும் இனிவேண்டா எழுதுங்கள்
சட்டத்தில், இதுதான் நேர்மை.


 

(7-3-1987)