தாய்மொழி காப்போம்/வாகை சூடு

22. வாகை சூடு

பண்பட்ட மொழியொன்று கண்டாய்- அது
பழுதாகி எழில்போதல் பாராது நின்றாய்
கண்பெற்றுங் குருடாக நின்றால் - பாரில்
கைகொட்டிச் சிரி கானையுனைக் கண்டால்

மொழிகாக்க ஒருநோக்கு வேண்டும்-தமிழ்
முன்னேறும் முன்னேறும் முழுதாக யாண்டும்
பழியாக்கும் பலநோக்கங் கொண்டால் - கட்சி
பார்த்தாலுன் தமிழன்னை பாராளல் உண்டோ ?

ஒருகோட்டில் நீயிங்கு நின்றால் போரில்
உனைவெல்ல நினைவாரும் உலகெங்கும் இன்றாம்
வருவார்க்கு நீயொன்று சொல்வாய்- கையில்
வாளுண்டு தோளுண்டு வழிகாண என்பாய்

வெறிநோக்கம் குறுநோக்கம் என்பார் - அந்த
வீணான சொல்லாலே வீழாதே அன்பா
பெருநோக்கம் தமிழ்காத்தல் ஒன்றே- என்று
பீடாக நின்றோது பேடில்லை என்றே

மொழிகாக்க முனையாத நாடு - பாரில்
மூலைமுடுக் கெங்குமுண் டாவென்று தேடு
வழிகாட்டி நிற்றல்கண் கூடு - போரில்
வாளுக்குந் தோளுக்கும் வாகைதனைச் சூடு

அங்கங்கே மொழிகாத்தல் உண்மை - அஃ(து)
அவ்வவர்க் கியல்பாக வாய்த்ததோர் தன்மை
இங்குள்ள மாந்தர்க்கு மட்டும் - அதை
இடித்திடித் தெந்நாளும் சொன்னால்தான் எட்டும்.

 
(9-3-1987)