19

நிகலாய் இவானவிச் அவளுக்குக் கதவைத் திறந்துவிட்டான், அவனது தலை கலைந்து போயிருந்தது; கையில் ஒரு புத்தகம் இருந்தது.

“அதற்குள்ளாகவா?” என்று உற்சாகமாகக் கூறினான் அவன். “நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான பேர்வழிதான்!”

அன்பு ததும்பும் கண்கள் அவனது மூக்குக் கண்ணாடிக்குப் பின்னே படபடவென்று இமை தட்டி விழித்தன. அவளது மேல் கோட்டைக் கழற்றுவதற்கு அவளுக்கு உதவினான்; அன்பு நிறைந்த புன்னகையோடு அவளது முகத்தைப் பார்த்தான்.

“நேற்றிரவு நம் வீட்டைச் சோதனை போட்டார்கள்” என்றான் அவன். “அதைக் கண்டு, போன இடத்தில் உங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நான் பயந்துபோனேன். ஆனால் அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை. உங்களைக் கைது செய்திருந்தால், என்னையும் அவர்கள் நிச்சயம் கொண்டு போயிருப்பார்கள்.”

அவளைச் சாப்பாட்டு அறைக்குள் அழைத்துச் சென்றான். போகும்போதே ஒரே உற்சாகத்தோடு பேசிக்கொண்டே போனான்.

“என் வேலை போய்விடும். அது நிச்சயம்தான். ஆனால், அது என்னைக் கொஞ்சம்கூடப் பாதிக்கவில்லை. மேஜையடியிலே உட்கார்ந்து, குதிரைகள் வைத்திராத விவசாயிகளைக் கணக்கு எடுத்து எடுத்து எனக்கே எரிச்சலாய்ப் போய்விட்டது.”

யாரோ ஒரு ராட்சதன் திடும் வெறியோடு வெளியிலிருந்து சுவர்களை உலுக்கி வீட்டிலுள்ள சாமான்களையும் உருட்டித் தள்ளிய மாதிரி. அந்த அறையே ஒரே அலங்கோலமாய்க் கிடப்பதைத் தாய் கண்டாள். படங்கள் எல்லாம் தரைமீது இறைந்துகிடந்தன. சுவரில் ஒட்டியிருந்த காகிதங்களெல்லாம் கிழிபட்டு, துண்டு துண்டாக நடாக்களைப்போல் தொங்கிக்கொண்டிருந்தன. ஒரு புறத்தில் தரையில் பதிந்திருந்த பலகை அகற்றப்பட்டுக்கிடந்தது. ஒரு கண்ணாடிச் சட்டம் தகர்த்தப்பட்டிருந்தது. அடுப்புக் கரியும் சாம்பலும் தரையில் பரவிக்கிடந்தன, தனக்கு ஏற்கெனவே பழகிப்போன இந்தக் காட்சியைக் கண்டு தலையை அசைத்துக்கொண்டாள் தாய். நிகலாயின் முகத்திலே தோன்றும் ஒரு புதிய தன்மையை உணர்ந்து அவனையே கூர்ந்து நோக்கினாள்.

ஆறிப்போன தேநீர் பாத்திரம், கழுவப்படாத ஏனைய தட்டுக்களோடு மேஜை மீது அப்படியே இருந்தது. தட்டுக்களில் வாங்கிவராமல், தாளில் பொட்டலம் கட்டி வாங்கிவந்த பாலடையும், சாஸேஜும் அந்தந்த காகிதத்தில் அப்படியப்படியே கிடந்தன. மேஜைத்துணி முழுவதிலும் அடுப்புக் கரியும் ரொட்டித் துண்டுகளும், புத்தகங்களும் குவிந்துகிடந்தன. தாய் லேசாகச் சிரித்தாள், நிகலாயும் பதிலுக்குக் குழப்பமாகப் புன்னகை புரிந்தான்.

“இந்த மாதிரிக் குழப்பத்தில் என் பங்கும் உண்டு, ஆனால், அது சரியாய் போயிற்று, நீலவ்னா! அவர்கள் திரும்பவும் வரக்கூடும் என்று நினைத்தேன். எனவேதான் நான் இவற்றை ஒழுங்குபடுத்தவில்லை. சரி, அது கிடக்கட்டும். நீங்கள் போய் வந்த விவரத்தைச் சொல்லுங்கள்.”

அந்தக் கேள்வி அவள் இதயத்தில் திடுக்கென விழுந்து உலுப்பியது. மீண்டும் அவள் கண் முன்னால் ரீபினின் உருவம் தோன்றியது. வந்தவுடனேயே அவனைப்பற்றிப் பேசாதிருந்ததைக் குற்றம் என்றே அவள் உணர்ந்தாள். அவள் நிகலாயின் பக்கமாகக் குனிந்து தான் போய் வந்த விவரத்தை அமைதியாக ஒன்றுவிடாமல் சொல்லத் தொடங்கினாள்.

“அவர்கள் அவனைக் கைது செய்துவிட்டார்கள்.......”

நிகலாயின் முகத்தில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது.

“அப்படியா?”

அவனைக் கையமர்த்திவிட்டு, தான் ஏதோ நியாய தேவதையின் சந்நிதியில் நிற்பதுபோலவும், அந்த தேவதையிடம் ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதையைப்பற்றி வாதாடி வழக்காடுவது போலவும், அவள் மேலும் பேசத் தொடங்கினாள். நிகலாய் நாற்காலியில் சாய்ந்து கொண்டும், வெளிறிய முகத்தோடு அடிக்கடி உதட்டைக் கடித்துக்கொண்டும் அவள் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் தன் கண்ணாடியை மெதுவாகக் கழற்றியெடுத்து அதை மேஜைமீது வைத்தான். தன் முகத்தில் ஏதோ கண்ணுக்குத் தெரியாத நூலாம்படை படிந்துவிட்டதுபோல் முகத்தைத் துடைத்து விட்டுக்கொண்டான்.

அவனது முகபாவம் திடீரெனக் கூர்மை பெற்றது. கன்ன எலும்புகள் புடைத்துத் துருத்தின; நாசித் துவாரங்கள் நடுநடுங்கின. இந்தமாதிரி என்றுமே அவனை அவள் பார்த்ததில்லை; அவனது தோற்றம் அவளை பயமுறுத்தியது.

அவள் பேசி முடிந்தபிறகு அவன் எழுந்து தனது முஷ்டிகளைப் பைகளுக்குள் அழுத்தி ஊன்றியவாறு கீழும் மேலும் நடந்தான்.

“அவன் ஒரு மகா புருஷனாய்த் தானிருக்கவேண்டும்” என்று பற்களை இறுகக் கடித்தவாறே அவன் முணுமுணுத்தான். “சிறையில் இருப்பது அவனுக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும், அவன் போன்ற ஆட்களுக்கு அது சிரமம்தான்.”

அவன் தனது முஷ்டிகளை அழுத்தியவாறே தனது உணர்ச்சி வேகத்தைத் தணித்துப் பார்த்தான். எனினும் அவனது நிலைமையைத் தாய் உணர்ந்துகொண்டாள்; அது தாய்க்குத் தானாகவே தெரிந்தது. அவன் தன் கண்களைச் சுருக்கினான்; கண்கள் கத்தி முனையைப்போல் நீண்டு சுருங்கின. மீண்டும் அவன் மேலும் கீழும் நடந்தவாறே அடங்கிக் குமுறும் கோபத்தோடு பேசத் தொடங்கினான்.

“இந்தப் பயங்கரத்தை எண்ணிப்பாருங்கள். ஜனங்களின் மீது தமக்குள்ள ஆதிக்கத்தை நிலை நிறுத்தவேண்டும் என்ற வெறியுணர்ச்சியில், ஒரு சில அயோக்கிய நபர்கள் ஒவ்வொருவரையும் உதைக்கிறார்கள்; நெரிக்கிறார்கள்; நசுக்குகிறார்கள். காட்டு மிராண்டித்தனம் பெருகி வருகிறது; கொடுமையே வாழ்க்கையின் நியதியாகி விடுகிறது! இதைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். அவர்களில் சிலர் ஜனங்களை அடித்து நொறுக்கி, மிருகங்களைப்போல் நடந்துகொள்கிறார்கள். ஏனெனில் சட்டம் தங்களை எதுவும் செய்யாது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். சித்ரவதை செய்வதில் அவர்கள் மோகவிகாரம் கொண்டு திரிகிறார்கள். அடிமைகளின் அடங்காத பைத்திய வெறியைப் பயன்படுத்தி, அந்த அடிமை மக்களின் அடிமை உணர்ச்சிகளையும், மிருக குணங்களையும் அவற்றின் பரிபூரண வேகத்தோடு பாய்ந்து குதறும்படி அவிழ்த்துவிட்டு விடுகிறார்கள். வேறுசிலர் பழிக்குப்பழி வாங்கும் விஷ ஆசைக்கு ஆளாகிறார்கள். தாம் வாங்கிய அடி உதைகளால் ஊமையாகவும் செவிடாகவும் போகிறார்கள், சிலர். மக்கள் குலத்தையே சீர்குலைத்துவிட்டார்கள்!”

அவன் பேச்சை நிறத்திவிட்டு மௌனமாகப் பற்களைக் கடித்தான்.

“இந்த மாதிரியான மிருக வாழ்க்கையில், நீ உன்னையும் மீறி மிருகமாகிவிட முடிகிறது!”

அவன் தன் உத்வேகத்தை அடக்கியாண்டவாறே அழுதுகொண்டிருந்த தாயின் பக்கமாக அமைதியோடு திரும்பி, தனது கண்களில் பிரகாசிக்கும் நிலையான ஒளியோடு அவளைப் பார்த்தான். "நாம் நேரத்தை வீணில் போக்கக்கூடாது. நீலவ்னா, நாமே முன்னின்று நமது காரியங்களைக் கவனிக்கலாம்.....”

சோகம் நிறைந்த புன்னகையோடு அவள் பக்கமாகச் சென்று அவள் கரத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கேட்டான்:

“உங்கள் பெட்டி எங்கே?”

“சமையலறையில்.”

“நம் வீட்டு வாசலில் உளவாளிகள் திரிகிறார்கள். அதிலுள்ள அவ்வளவையும் அவர்கள் கண்ணில் படாமல் நாம் வெளியே கொண்டுபோக முடியாது. அவற்றை மறைத்து வைப்பதற்கும் இடமில்லை. இன்று ராத்திரி அவர்கள் மீண்டும் சோதனை போட வருவார்கள் என்றே நினைக்கிறேன். எனவே—எவ்வளவு வருத்தம் தரத்தக்கதாயிருந்தாலும் சரி — நாம் அவற்றைச் சுட்டுப் பொசுக்கிவிட வேண்டியதுதான்.”

“எவற்றை?”

“டிரங்குப் பெட்டியிலிருக்கிறதே —அவற்றை!”

தாய் புரிந்துகொண்டாள். அவள் எவ்வளவுதான் வருத்தங்கொண்டிருந்த போதிலும், தனது காரிய சாதனையை எண்ணி அவள் மனத்தில் ஏற்பட்ட பெருமையுணர்ச்சி புன்னகையாக உருவெடுப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

“அதில் ஒன்றுமே கிடையாது - அதில் ஒரு துண்டுக் கடுதாசிகூடக் கிடையாது!” என்று கூறிவிட்டு, அதன் பின்னர்தான் ஸ்திபான் சுமக்கோவைச் சந்திக்க விவரத்தையெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாக உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் நிகலாய் முகத்தைச் சுழித்தவாறே ஆர்வத்தோடு கேட்டான்; ஆனால் அந்தச் சுழிப்பு சீக்கிரமே மறைந்து, அவன் முகத்தில் வியப்புக் குறி படர்ந்தது... இறுதியில் அவன் உணர்ச்சிப் பரவசமாகி அவள் பேச்சில் குறுக்கிட்டுக் கத்தினான்:

“அபாரம்! மாபெரும் வேலை!”

அவன் அவள் கைகளை இறுகப் பற்றி மெதுவாகச் சொன்னான்:

“உங்களுக்கு ஜனங்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.... உங்களை நான் என் சொந்தத் தாய்போலவே நேசிக்கிறேன்!” அவன் ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டு உற்சாகமடைகிறான் என்பதைப் புரிய முடியாமல் அவனை வியப்போடு கூர்ந்து நோக்கியவாறே புன்னகை புரிந்தாள் தாய்.

“பொதுவாக, இது மகத்தான காரியம்!” என்று கூறிக்கொண்டே அவன் தன் கைகளைத் தோய்த்துக்கொண்டான்; மெதுவாகச் சிரித்தான். “கடந்த சில நாட்களில், எனக்குப் பொழுது மிகவும் அருமையாகக் கழிந்தது. முழுநேரமும் தொழிலாளர்கள் மத்தியிலேயே கழிந்தது; அவர்களுக்கு நான் பாடம் சொன்னேன், அவர்களோடு பேசினேன்: அவர்களைக் கண்டுணர்ந்தேன். என் இதயத்திலே ஏதோ ஒரு புனிதமான பரிபூரணமாக வியப்பூட்டும் உணர்ச்சி நிறைந்து ததும்புகிறது. அவர்கள் எவ்வளவு அருமையான மனிதர்கள், நீலவ்னா! நான் வாலிபத் தொழிலாளர்களைப் பற்றிப் பேசுகிறேன். அவர்கள் எவ்வளவு பலமும். உணர்ச்சியும் அறிவுத்தாகமும் பெற்றவர்களாயிருக்கிறார்கள்! அவர்களைப் பார்க்கும்போது என்றாவது ஒரு நாள் ருஷ்ய தேசம்தான் உலகிலேயே தலை சிறந்த ஜனநாயக நாடாக விளங்கப்போகிறது என்ற எண்ணம்தான் நமக்கு உண்டாகும்!”

அவன் தன் கூற்றை அழுத்தமாக ஆமோதிப்பதைப்போல், சபதம் எடுப்பதுபோல் கரத்தை நீட்டினான். பிறகு ஒரு கணநேரம் கழித்து மேலும் பேசத் தொடங்கினான்.

“இந்தப் புத்தகங்களோடும் உருவங்களோடும் உட்கார்ந்து உட்கார்ந்து எனக்குப் புளித்தே போய்விட்டது. சுமார் ஒரு வருஷகாலம் இந்த மாதிரி வாழ்க்கையை—பயங்கர வாழ்க்கையை - வாழ்ந்தாயிற்று. நான் தொழிலாளரோடு வாழ்ந்து பழக்கப்பட்டவன். ஆனால், நான் மிகுந்த சிரமத்தோடும், பதனத்தோடும் அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு வாழ்வதாகவும் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்போதோ நான் மீண்டும் சுதந்திர புருஷனாக வாழ்கிறேன். நான் இனிமேல் முழு நேரம் அவர்களோடு வாழவேண்டும்; அவர்களோடு உழைக்கவேண்டும். நான் சொல்வது புரிந்ததா? இளமை நிறைந்த சிருஷ்டி சக்தியின் முன்னிலையிலே, புதிய சிந்தனைகள் என்னும் பிள்ளைத் தொட்டிலருகேயே நான் வளர்ச்சி பெறவேண்டும். அது அபூர்வமான அழகான வளர்ச்சி, பிரமாண்டமான உணர்ச்சிக் கிளர்ச்சி, அப்படிப்பட்ட வாழ்க்கை ஒரு மனிதனை இளைஞனாக்குகிறது: பலசாலியாக்குகிறது, அதுவே வாழ்க்கையின் செழிப்பு நிறைந்த மார்க்கம்!”

அவன் ஆனந்தப் பரவசத்தோடும். குழப்பத்தோடும் சிரித்தான். அவனது ஆனந்தத்தைத் தானும் உணர்ந்து அதில் பங்கெடுத்துக்கொண்டாள் தாய்.

“மேலும் - நீங்கள் ஓர் அற்புதமான பிறவி” என்றான் நிகவாய் “எவ்வளவு தெள்ளத் தெளிவாக மக்களைப்பற்றி வருணிக்கிறீர்கள்! எவ்வளவு நன்றாக அவர்களைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்?”

அவன் தாயின் அருகே உட்கார்ந்தான். முதலில் தனது பிரகாசம் பொருந்திய முகத்தை ஒரு புறமாகத் திருப்பிக்கொண்டு, தனது உணர்ச்சிக் குழப்பத்தை மறைப்பதற்காக, பிடரி மயிரைக் கோதிவிட்டுக்கொண்டிருந்தான். ஆனால் சீக்கிரமே அவன் தாயைத் திரும்பி நோக்கினான். அவளோ தனது அனுபவங்களை ஒன்றுவிடாமல், தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதுபோல, எளிய வார்த்தைகளால் விவரித்துச் சொன்னாள்.

“பேரதிருஷ்டம்தான்!” என்று வியந்தான் அவன்; “உங்களைச் சிறையில் தள்ளுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன, இருந்தாலும்... ஆமாம், விவசாயிகள் விழிப்புற்று எழத் தொடங்கிவிட்டார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது; அது ஒன்றும் அதிசயமில்லை, இயற்கைதானே! அந்தப் பெண் - அவளை நான் நன்றாகக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.... கிராமாந்திரப் பிரதேசங்களில் உழைப்பதற்கென்று நாம் சில பிரத்தியேக ஆட்களை நியமிக்க வேண்டும். ஆட்கள்! நம்மில் போதுமான ஆட்கள் இல்லையே! நமக்கு நூற்றுக்கணக்கான தோழர்கள் வேண்டும்!”

“பாவெல் மட்டும் வெளியில் இருந்தால் - அந்திரேயும் இருந்தால்!” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

அவன் அவளைப் பார்த்தான்; உடனே கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.

“நீலவ்னா, நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்குச் சிரமம் தருவதாயிருக்கலாம். நான் பாவெலை நன்றாக அறிவேன். அவன் சிறையிலிருந்து தப்பியோடி வரவே மாட்டான். அதுமட்டும் எனக்கு நிச்சயம், அவன் விசாரணைக்குத் தயாராயிருக்கவே விரும்புகிறான். விசாரணையின் மூலம் தனது முழு உருவையும் காட்ட நினைக்கிறான். அதற்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தை அவன் உதறித் தள்ளமாட்டான், ஏன் தள்ள வேண்டும்? அவன் சைபீரியாவிலிருந்து ஓடி வந்துவிடுவான்.”

தாய் பெருமூச்செறிந்துவிட்டு மெதுவாகக் கூறினாள்:

“ஆமாம். அதெல்லாம் அவனுக்கு நன்றாய்த்தான் தெரியும்...”

“ஹூம்!” என்று தன் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துக்கொண்டு மறுகணமே சொன்னான் நிகலாய்.

“உங்களுடைய அந்த முஜீக் தோழன் சீக்கிரமே வந்து நம்மைப் பார்ப்பான் என்றே நம்புகிறேன். ரீபினைப் பற்றி விவசாயிகளுக்கு ஒரு துண்டுப் பிரசுரம் எழுதியாக வேண்டும். அவன் இவ்வளவு பகிரங்கமாக வெளிவந்துவிட்டதால், இந்தத் துண்டுப் பிரசுரத்தால் அவனுக்கு எந்தக்கெடுதியும் விளையாது. நான் இன்றே எழுதிவிடுகிறேன். லுத்மீலா அதைச் சீக்கிரமே அச்சடித்துக் கொடுத்துவிடுவாள்... ஆனால், இந்தப் பிரசுரத்தை அவர்களிடம் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது?”

“நான் கொண்டு போகிறேன்.”

“இல்லை; நன்றி! நீங்கள் வேண்டாம்” என்று அவசரமாகச் சொன்னான் நிகலாய். “நிகலாய் வெஸோவ்ஷிகோவால் முடியுமா என்று யோசிக்கிறேன்.”

“அவனிடம் நான் கேட்டுப் பார்க்கட்டுமா?”

“முயன்று பாருங்கள். எப்படியெப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள்.”

“ஆனால், நான் என்ன செய்வது?”

“கவலைப்படாதீர்கள், உங்களுக்கு வேறு வேலை பார்க்கலாம்.” அவன் எழுத உட்கார்ந்தான். மேஜையைச் சீர்படுத்திக்கொண்டே, அவள் அவனைக் கவனித்தாள். வரிவரியாக வார்த்தைகளை நிரப்பிச் செல்லும் அவனது விரல்களினால் பேனா நடுநடுங்கிச் செல்வதைப் பார்த்தாள். சமயங்களில் அவனது கழுத்துத் தசை நெளிந்து அசைந்தது. அவன் தன் தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடியவாறு யோசிக்கும்போது, அவனது மோவாயின் நடுக்கத்தை அவளால் காண முடிந்தது. இது அவளது ஆர்வத்தைப் பெருக்கியது.

“தயாராகிவிட்டது” என்று கூறிக்கொண்டே, அவன் எழுந்தான். “இதோ, இந்தக் காகிதத்தை உடம்பில் எங்கேயாவது மறைத்து வைத்துக்கொள்ளுங்கள்-ஆனால் போலீஸார் வந்து உங்களைச் சோதனை போட ஆரம்பித்துவிட்டால்...”

“அவர்கள் நாசமாய்ப் போக!” என்று அமைதியாகச் சொன்னாள் அவள்.

அன்று மாலையில் டாக்டர் இவான் தனீலவிச் அங்கு வந்தான்.

“இந்த அதிகாரிகளுக்குத் திடீரென்று என்ன கொள்ளை வந்துவிட்டது?” என்று கேட்டுக்கொண்டே அறையில் குறுக்கும் மறுக்கும் நடந்தான் அவன். “நேற்று ராத்திரி அவர்கள் ஏழு வீடுகளைச் சோதனை போட்டிருக்கிறார்கள், சரி. நோயாளி எங்கே?”

“அவன் நேற்று போய்விட்டான்” என்றான் நிகலாய். “இன்று சனிக்கிழமை. அரசியல் வகுப்புக்குப் போகாமால் அவனால் இருக்க முடியவில்லை.”

“அது முட்டாள்தனம், உடைந்துபோன மண்டையோடு அரசியல் வகுப்புக்குச் சென்று உட்கார்ந்திருப்பது முட்டாள்தனம்....”

“நானும் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஒன்றும் பயனில்லை.”

“ஒருவேளை தான் அடிபட்டிருப்பதைத் தன் தோழர்களிடம் காட்ட வேண்டுமென்று விரும்பினானோ என்னவோ?” என்றாள் தாய்.

“'இதோ என்னைப் பாருங்கள். நான் ஏற்கெனவே ரத்தம் சிந்திவிட்டேன்’ என்று சொல்ல நினைத்தான் போலிருக்கிறது...?”

அந்த டாக்டர் தாயைப் பார்த்தான். போலிக் கடுமையோடு முகபாவத்தை மாற்றி முகத்தைச் சுழித்துக்கொண்டு சொன்னான்:

“அடேடே! நீங்கள் எவ்வளவு கல்நெஞ்சுப் பிறவி!”

“சரி இவான் நீ இங்கேயே இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. சீக்கிரமே போய்விடு. நாங்கள் ‘விருந்தாளிகளை’ எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம், நீலவ்னா, அந்தத் தாளை இவனிடம் கொடுங்கள்.”

“இன்னொரு தாளா?” என்று வியந்தான் டாக்டர்.

“ஆமாம். அதை எடுத்துக்கொண்டுபோய், அச்சாபீசிலே, கொடுத்துவிடு.”

“சரி. நான் அதை வாங்கிக்கொண்டேன்! போய்க் கொடுத்துவிடுகிறேன். வேறு ஏதாவது உண்டா?”

“ஒன்றுமில்லை. வாசல்புறத்தில் ஓர் உளவாளி நின்றுகொண்டிருக்கிறான்.”

“அவனை நானும் பார்த்தேன். என் வீட்டு வாசலிலும் ஒருவன் நிற்கிறான். சரி, வருகிறேன். ஏ, கல்நெஞ்சுக்காரி! நான் வருகிறேன். தோழர்களே. சந்தர்ப்பவசமாக, அந்த இடுகாட்டுச் சம்பவத்தால் நன்மைதான் விளைந்திருக்கிறது. நகர் முழுவதுமே அதைப் பற்றித்தான் பேச்சாயிருக்கிறது. அதைப்பற்றி நீ எழுதிய பிரசுரம் ரொம்ப நல்ல பிரசுரம்; மேலும், அது சரியான சமயத்தில் வெளிவந்துவிட்டது. மோசமான முறையில் சமாதானமாவதைவிட, நல்ல முறையில் சண்டையிட்டுப் பார்ப்பதே மேலானது என்று நான் எப்போதும் சொல்லிவந்திருக்கிறேன்.”

“சரிதான். நீ புறப்படு.”

“நீ மிகுந்த தயாள குணமுடையவன் என்று நான் சொல்லமாட்டேன், நீலவ்னா. கை கொடுங்கள். அந்தப் பையன் நிச்சயம் முட்டாள்தனமான காரியத்தைத்தான் செய்துவிட்டான். அவன் எங்கு வசிக்கிறான் என்பது உனக்குத் தெரியுமா?”

நிகலாய் அவனது விலாசத்தைக் கொடுத்தான்.

“நாளை நான் அவனைப் போய்ப் பார்க்கிறேன், அருமையான பையன், இல்லையா?”

“ஆமாம்.”

“அவனை ஜாக்கிரதையோடு கவனிக்கவேண்டும். அவனுக்கு நல்ல மூளை இருக்கிறது” என்று வெளியே போகும்போது பேசிக்கொண்டே சென்றான் அந்த டாக்டர்: “வர்க்க பேதமற்ற அந்த மேலுலகத்திற்கு நாம் செல்லும்போது அவன் மாதிரி நபர்கள்தான் பாட்டாளி வர்க்கத்தின் அறிவாளிகளாக வளர்ச்சிபெற்று உருவாக வேண்டும்.”

“இவான், நீ ரொம்ப ரொம்ப வாயளக்க ஆரம்பித்துவிட்டாய்.”

“ஏனெனில் நான் உற்சாக வெறியோடிருக்கிறேன். அப்படியானால், நீ சிறைக்குப் போவதைத்தான் எதிர்நோக்கி இருக்கிறாய் இல்லையா? போ, போ. போய் நன்றாக ஓய்வு பெற்றுக்கொள்.”

“நன்றி. நான் ஒன்றும் களைத்துப் போகவில்லை.”

அவர்களது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த தாய் அவர்கள் அந்தத் தொழிலாளி வர்க்கச் சிறுவனின் மீது கொண்டுள்ள அன்பைக் கண்டு மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தாள்.

டாக்டர் சென்ற பிறகு தாயும் நிகலாவும் சாப்பிட உட்கார்ந்தார்கள்; தங்களது இரவு விருந்தினர்களை எதிர்நோக்கி அமைதியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். நாடு கடத்தப்பட்ட தோழர்களைப் பற்றியும், அவர்களில் தப்பியோடி மீண்டும் ஊருக்குள் வந்தவர்களைப் பற்றியும், வெவ்வேறு பெயர்களில் அவர்கள் தங்களது இயக்க வேலையைத் தொடர்ந்து செய்து வருவதைப் பற்றியும் நிகலாய் தாயிடம் விளக்கிக் கூறினான். புத்துலக சமுதாயத்தை உருவாக்குவதில் தங்களைப் பரிபூரணமாக அர்ப்பணித்துவிட்ட அந்தப் புனிதமான, அடக்கமான வீரர்களைப் பற்றிய கதைகளை அந்த அறைச் சுவர்கள் கேட்டன; நம்ப இயலாத வியப்போடு அந்தக் கதைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் எதிரொலித்தன. அறியப்பட முடியாத மனிதர்களின் மீது ஏற்படும் அன்புணர்ச்சியால் இதயத்திற்குச் சூடேற்றி, வெதுவெதுப்பான ஒன்று அப்பெண்மணியை இதமாகச் சூழ்ந்தது. அந்த வீரர்கள் அனைவரும் அச்சமென்பதையே அறியாத ஒரு மாபெரும் பேருருவாக உருண்டு திரண்டு உருப்பெற்று பூமியின் மீது மெதுவாக, எனினும் நிச்சய தீர்க்கத்தோடு, முன்னேறி வருவதாகவும், அழுகி நாற்றமெடுக்கும் பண்டைப் பொய்மைகளையெல்லாம் தமது பாதையிலிருந்து விலக்கித்தூர எறிந்து, எளிய நெளிந்த வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காக முனைந்து முன்னேறுவது போலவும் தாய் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அந்த மாபெரும் உண்மை. புத்துயிர் பெற்ற அந்தச் சத்தியம். ஒரே மாதிரியாக எல்லோரையும் தன்னிடம் அழைக்கிறது. பேராசை, பொறாமை, பொய்மை என்ற மூன்று ராட்சச மிருகங்கள் தமது வெறிபிடித்த சக்தியினால் உலகம் பூராவையும் அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி வைத்திருப்பதையெல்லாம் தகர்த்து, ஒவ்வொருவருக்கும் உண்மையான விடுதலையை உத்தரவாதம் அளிக்கும்... இந்தக் கற்பனா சொரூபமான எண்ணம் அவளது மனத்தில் ஓர் உணர்ச்சியைக் கிளப்பியது. மற்ற நாட்களைவிட எளிதாக இருந்த அந்த நாட்களில் அவள் விக்ரகத்தின் முன் மண்டியிட்டுத் தொழும்போது அவள் உள்ளத்தில் எம்மாதிரி உணர்ச்சி பொங்கியதோ அம்மாதிரி உணர்ச்சிதான் அவளுக்கு இப்போதும் ஏற்பட்டது. இப்போதோ. அவள் அந்த நாட்களையெல்லாம் மறந்துவிட்டாள். எனினும் அந்த நாட்களில் அவள் மனத்தில் எழுந்த உணர்ச்சி மட்டும் விரிந்து பெருகி, முன்னைவிடக் குதூகலமும் பிரகாசமும் பொருந்தியதாக வளர்ந்து, அவளது இதய பீடத்தின் ஆழத்திலே இடம்பிடித்து, ஒளிமயமான தீபச்சுடராக நின்றெரிந்தது.

“போலீஸ்காரர்கள் வருவதாகத் தெரியவில்லையே!” என்று திடீரெனச் சொன்னான் நிகலாய்.

“அவர்கள் நாசமாய்ப் போகட்டும் என்றேனே” என்று அவனை விருட்டெனத் திரும்பிப் பார்த்தவாறே சொன்னாள் தாய்.

“உண்மைதான். ஆனால், நீலவ்னா, நேரமாகிவிட்டது. கொஞ்ச நேரமாவதுபடுத்துத் தூங்குங்கள். மிகவும் களைத்துப் போயிருப்பீர்கள். உங்களுக்கு அற்புதமான மனோதிடம் இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை, இந்த அபாயத்தையும் அயர்ச்சியையும் ரொம்பவும் சுளுவாகத் தாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால், உங்கள் தலைமயிர் மட்டும் விறுவிறுவென்று நரை தட்டி வருகிறது. சரி, போய்ப் படுத்துக் கொஞ்ச நேரமாவது களைப்பாறுங்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/48&oldid=1293156" இலிருந்து மீள்விக்கப்பட்டது