126. நிறை அழிதல்

தலைவி கூற்று

“நாணம் தாழ்ப்பாள்; நிறை கதவு, காமவேட்கை கோடரி; இது நாணத்தையும் நிறையையும் உடைத்து விடுகிறது.”

“காமம் இரக்கமற்றது; நடு இரவிலும் என்னைத் தூங்கவிடாமல் துயர் தருகிறது.”

“காமத்தை மறைக்கின்றேன்; தும்மல் கட்டுமீறி வெளிப்படுவது போல் என்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறது."

“நிறை உடையவள் என்று பெருமை கொண்டிருந்தேன்; காமம் என்னை நடுத் தெருவுக்குக் கொண்டு நிறுத்திவிடுகிறது”

“வெறுத்து ஒதுக்கியவர் பின் செல்லக் கூடாது என்ற வீறாப்பு எல்லாம் காமநோய் உற்றால் செயல்படுத்த முடியாத ஒன்று.”

“வெறுத்து நீங்கிய அவர்பின் என்னை நிறுத்துகிறது இக் கொடிய காமநோய்; நான் என்ன செய்வது? தோற்று விட்டேன்.”

“அவர் என்னைத் தொடும்போதும் என்னைத் தழுவ வரும்போதும் என் நாணம் என்னைவிட்டு நழுவி விடுகிறது.”

“மயக்கிப் பேசும் இனியர்; அவர் பணிந்த மொழிக்கு என் பெண்மை தோற்றுவிடுகிறது; என்னை அவர்க்குத் தந்துவிடுகிறேன்.”

“புலப்பது என்று உறுதியாக இருப்பேன்; என் நெஞ்சு அவரோடு கலத்தல் விரும்புகிறது; இனி அவரைத் தழுவிக் கொள்வது தவிர வழியே இல்லை.”

“மெழுகு தீயிற்கு உருகிவிடுகிறது; அத்தகைய இளகிய நெஞ்சு எனது; அவரைக் கண்டால் உருகி விடுகிறேன்; என் நிறை கருகிவிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/126&oldid=1107162" இலிருந்து மீள்விக்கப்பட்டது