29. கள்ளமை

வஞ்சித்துப் பொருள் ஈட்டுபவரை இந்த வையகம் தாழ்த்திப் பேசும். அதனால் பிறர் பொருளை வெளவக் கிஞ்சித்தும் நினைக்கக் கூடாது.

கள்ளத்தால் பிறர் பொருளைக் கவருவோம் என்று உள்ளத்தால் நினைப்பதும் தீயது ஆகும்.

களவினால் ஈட்டிய செல்வம் இருப்பது போலக் காட்டும். ஆனால் தீய பழக்கங்களுக்கு அவன் அடிமையாக அதுவும் தீர்ந்துவிடும்.

வஞ்சித்துப் பிறர் பொருளை வாரிக் குவித்துவிடலாம் என்றாலும் அவற்றை அனுபவிக்க இயலாது. துன்பங்கள் தொடர்ந்து வந்து அதனை அனுபவிக்க முடியாமல் செய்துவிடும்.

எவன் அசந்து கிடக்கிறானோ என்று பார்க்கும் கழுகின் பார்வையை உடையவர்கள், மற்றவர்கள் துன்பம் கண்டு உருகுவார்கள் என்று கூறுவதற்கில்லை. பொருள்வேட்கை உள்ள அவனிடம் அருள்வேட்கை இடம் பெறாது. அவர்கள் பிறரிடம் அன்பு காட்டமாட்டார்கள்.

பிறர் பொருளை நம்பி அதனைக் கவருவதே நோக்கமாகக் கொண்டிருப்பவர்கள், அத் தீமையிலும் அளவோடு நிற்கமாட்டார்கள். அதே போல அவர்கள் அளவறிந்தும் வாழ்க்கை நடத்தமாட்டார்கள்; தாறுமாறாகச் செலவுசெய்து அவர்கள் விரைவில் சீரழிவார்கள்.

போதும் என்ற மனத்தோடு வாழ்பவர் நெஞ்சில் அறம் நிற்கும். களவு வாழ்க்கை உடைய இவர்கள் நெஞ்சில் வஞ்சகமே தலைதூக்கி நிற்கும்.

களவு தவிர வேறு செயல் அறியாத இவ் வஞ்சகர் தீய செயல்கள் பலவற்றைச் செய்து அவற்றால் விரைவில் அழிந்துவிடுவர்.

நேர்வழியில் வாழ்பவர் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து இறுதியில் பலரும் போற்றும் நல்வாழ்வை அடைவர்; கள்ள மனமுடையவர்கள் நோய்நொடிகளுக்கு இரையாகி விரைவில் மரணத்தையும் சந்திப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/29&oldid=1106321" இலிருந்து மீள்விக்கப்பட்டது