62. ஆள்வினை உடைமை
(செயலாற்றும் திறன்)

“இது நம்மால் முடியாது” என்று அவநம்பிக்கை கொள்ளத் தேவை இல்லை; முயன்று பார்; வெற்றி உன் காலடியில் வந்து விழும்.

ஒரு காரியத்தை எடுத்தால் சோர்வு காரணமாக ஒரு சிலர் விட்டுவிடுவதும் உண்டு. அஃது அவர்தம் ஆண்மைக்கு அழகு அன்று. எடுத்த காரியத்தை முடிப்பது தான் அரசனுக்குப் பெருமை தரும்.

எவனொருவன் விடாமுயற்சி கொண்டு உழைத்து முன்னேறுகிறானோ அவன்தான் தாராள மனப்பான்மை கொள்ள முடியும்; தன்னை வந்து அணுகுபவருக்கு உபகாரமும் செய்ய முடியும். உழைத்து உயராதவன் உபகாரமும் செய்ய இயலாது. பேடி தன் கையில் வாள் எடுத்தால் வேடிக்கையாக இருக்குமே தவிர வீரம் அங்கு விளையாடாது.

இன்பம்! அதனைத் தேடிச் செல்லமாட்டான்; செயல் மீது நோக்கம் வைப்பான்; அவன்தான் சுற்றத்தினரின் துன்பத்தைத் துடைக்கமுடியும்; தூணாக நின்று அவர்கள் சார உதவுவான்.

முயற்சி செல்வத்தை உண்டாக்கும், முயற்சி இன்மை வறுமையில் ஆழ்த்திவிடும்.

சோம்பிக்கிட; மூதேவி வந்து தங்குவாள்; சுறுசுறுப்பாக இயங்கு; சீதேவி வந்து உதவுவாள்.

விதி கூட்டவில்லை என்றால் யாரும் பழிக்க மாட்டார்கள். அறிய வேண்டியவற்றை அறிந்து திறம்படச் செயலாற்றாவிட்டால் பழிக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது.

ஊழ் வந்து உதவவில்லை என்றாலும் முயற்சி செய்து கடின உழைப்பு மேற்கொண்டால் அதற்குத் தக்க ஊதியம் கிடைக்கும்.

“ஊழைவிட வலிமை மிக்கது வேறு யாதும் இல்லை” என்று பேசப்பட்டாலும் அதனையும் பெரு வெற்றிகொள்ள முடியும். சோர்வு இல்லாமல் உரிய காலத்தில் எதனையும் செய்து முடித்தால் ஊழைத் தலைகாட்டாதபடி செய்து விடமுடியும்; அதிக உழைப்பும் ஊக்கமும் செயற்பாடும் இருந்தால் விதியையும் வெல்ல முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/62&oldid=1106410" இலிருந்து மீள்விக்கப்பட்டது