79. நட்பு

‘நள்’ என்ற சொல்லே நட்புக்கு அடிச்சொல்; நண்ணுதல் என்பதும் இதன் அடியில் எழுந்தது.

நிறைமதி போன்று நாளும் வளர்வது உயர்நட்பு ஆகும்.

தீய நட்புத் தேய்பிறை போன்றது; உணர்ச்சிதான் நட்பாகும் உறவைத் தரும்; பழகிக்கொண்டே இருக்கத் தேவை இல்லை.

நட்பு ஒப்புயர்வு அற்றது; அழைத்தால் வருவார்கள்; விழைந்தால் பழகுவார்கள். அவர்கள் உயிரையும் ஈயும் உத்தமர்கள் ஆவார்கள். அவர்கள் உனக்கு அரண்; பாதுகாப்பு வேண்டும்போது வந்து உதவுவார்கள்; வேண்டாதபோது விலகி நிற்பார்கள். பழகும்தோறும் நூல்நயம் போல் இன்பம் செய்வார்கள்.

முகம் நக நட்பது நட்பு அன்று; நெஞ்சு அகம் நக நட்பதே நட்பு ஆகும். மாலை வேளை; பொழுது போக வில்லை; கூடி நின்று கூத்து ஆடிக் களிப்பில் முழுகி அழியக் கூடுபவர்கள் அவர்கள் அழிவாளிகள்; நண்பர்கள் அல்லர். கொள்ளை அடிப்பதில் கூட்டுச் சேர்பவரும் இருப்பார்கள்; அவர்கள் கூட்டாளிகள்.

மதுஉண்டு மகிழவும், மாதர் நலம் புனையவும் கூட்டுத் தேவைப்படுகிறது. அதற்காக மட்டமான மகிழ்ச்சிக்குத் திட்டமிட்டு அமைக்கும் மகிழ்ச்சி மன்றங்களும் உள்ளன.

சீட்டு ஆடிச் சிரித்துப் பொழுதுபோக்குவர்; பொருளைப் பறித்தும் வீட்டுக்கு அனுப்புவர். இவர்கள் எல்லாம் நண்பினர் என்று கூற இயலாது. பண்பினர்தாம் நண்பினர் என்று கூறமுடியும்.

‘உயிர் காப்பான் தோழன்’ என்னும் அமுதமொழியைக் கேட்டது இல்லையா! அவன் தக்க சமயத்தில் வந்து உதவுவான்; மானம் போகும் நிலையில் நிதானம் தவறாமல் வந்து உன்னைத் தூக்கிவிடுபவன் தோழன்; இடுக்கண் வரும்போது நடுக்கம் தீர்க்க வந்து சேருவான்; கட்டி இருக்கும் வேட்டி இடுப்பைவிட்டு நெகிழ்கிறது. கைகளை வேட்டியோ, இடுப்போ அழைக்கவில்லை. உடனே இரண்டு கைகளும் தாவிச் செல்கின்றன; அதனை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கட்ட அந்தக் கைகள்தாம் உதவின; கைகள்போல் உதவுபவர் நண்பினர்; இந்த நட்புத் தனி மனிதனுக்குத் தேவைப்படுகிறது.

நாட்டு அரசுக்கும் நட்பு அவசியமாகிறது. ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு உறுதி செய்யப்படுகின்றன. அமைதியான காலத்தில் பொருள் உதவி கிடைக்கிறது; போர்க்காலத்தில் படை உதவி கிடைக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/79&oldid=1106468" இலிருந்து மீள்விக்கப்பட்டது