திருக்குறள் மணக்குடவருரை/ஒப்புரவறிதல்

௨௨-வது.-ஒப்புரவறிதல்.

ஒப்புரவறிதலாவது, இல்லையென இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது கொடுக்கும் ஆற்றல் இல்லாரெனினும், தன் அளவிற்கும் தன் வருவாய்க்கும் ஏற்கத் தக்கார்க்குத் தக்கன அறிந்து கொடுத்தல். [ஒப்புரவு செய்யாமையும் தீவினையின்பால் படுமாதலால் இவ்வதிகாரம் தீவினையச்சத்தின் பின் கூறப்பட்டது.]

தாளாற்றித் தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு,

இ-ள்:- தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம்-ஒருவன் முயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு-தகுதியுடையார்க்கு உபகாரம் செய்தற்காக.

இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்க வென்றது. ௨௧௧.

கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்
டென்னாற்றும் கொல்லோ உலகு.

இ-ள்:- கடப்பாடு கைம்மாறு வேண்டா-ஒப்புரவு (செய்யுங்கால்) கைம்மாது (கருதிச்) செய்யவேண்டா; மாரிமாட்டு உலகு என் ஆற்றுமோ-(எல்லார்க்கும் நல்மழை சுரக்கின்ற) மாரிக்கு உலகம் என்ன கைம்மாறு செய்யுமோ?

கடப்பாடு - ஒப்புரவு. [கொல் என்பது அசை.]

ஒப்புரவாவது கைம்மாறு கருதாத கொடை என்று இது கூறிற்று. ௨௧௨.

டனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.

இ-ள்:- இடன் இல் பருவத்தும்-(செல்வம்) விரிவு அற்ற காலத்தினும், ஒப்புரவிற்கு ஒல்கார்-ஒப்புரவிற்குத் தளரார், கடன் அறி காட்சியவர்-ஒப்புரவை அறியும் அறிவையுடையார்.

இது, செல்வம் விரிவில்லாத காலத்தினும் ஒப்புரவு செய்ய வேண்டு மென்றது. ௨௧௩.

யனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயனீர்மை
செய்யா தமைகலா வாறு.

இ-ள்:- நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல்-நயனுடையான் நல்கூர்ந்தானாகின்றது, செயல் நீர்மை செய்யாது அமைகலா ஆறு-செய்தல் வேண்டுவன செய்யாதே அமையமாட்டாமை யாலே.

[நயன் உடையான்-ஒப்புரவை அறிந்தவன்,]

இது, செல்வம் குறைபடினும் அறிவுடையார் ஒப்புரவு செய்வரென்றது. ௨௧௪.

ப்புரவி னான்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து.

இ-ள்:- ஒப்புரவினான் கேடு வரும் எனின்-ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து-அக்கேட்டை (க்கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது;) ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளும் தகுதியை யுடைத்து.

இது, ஒப்புரவு செய்தலினால் கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகுமென்றது, பின் பயப்பன நன்மையாதலான். ௨௧௫.

ருணி நீர்நிறைந் தற்றே, உலகவாம்
பேரறி வாளன் திரு.

இ-ள்:- ஊருணி நீர் நிறைந்த அற்றே - ஊராரால் நீருண்ணப்படும் நீர் நிலை நீர் நிறைந்த தன்மையே போலும், உலகு அவாவும் பேர் அறிவாளன் திரு-உலகத்தா ரெல்லாரும் நச்சுகின்ற பெரிய (ஒப்புரவு) அறிவானது செல்வம்.

[நச்சுதல்-விரும்புதல். அவாவும் என்பது ஈற்று மிசை உகரம் மெய்யொடும் கெட்டு நின்றது. நிறைந்த என்பது ஈற்றகரம் கெட்டு நின்றது.]

இஃது, ஒப்புரவு செய்வார்க்கு உளதாகிய செல்வத்தை (நச்சிச் சென்றார்) வேண்டியவாறு கொள்ளலா மென்றது. ௨௧௬.

யமரம் உள்ளூர்ப் பழுத்தற்றால், செல்வம்
நயனுடை யான்கண் படின்.

இ-ள்:- பயமரம் ஊருள் பழுத்தால் அற்று-பயன்படும் மரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும், நயன் உடையான் கண் செல்வம் படின்-பிறரால் விரும்பப்படுவான் மாட்டுச் செல்வம் உண்டாயின்.

இஃது, ஒப்புரவு செய்வானது செல்வம் உபகாரம் வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது. ௨௧௭.

ருந்தாகித் தப்பா மரத்தற்றால், செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

இ-ள்:- மருந்து ஆகி தப்பா மரத்து அற்று-(பிணி) மருந்தாகி(த் தேடுவார்க்கு) மறைதலில்லாத மரத்தை ஒக்கும், செல்வம் பெருந்தகையான் கண் படின்-செல்வமானது பெருந்தகைமையான் மாட்டு உண்டாயின். [ஆல் என்பது அசை.]

இஃது, ஒப்புரவு செய்வானது செல்வம் வறிஞருடைய வறுமைப் பிணியை நீக்கு மென்றது. ௨௧௮.

த்த தறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

இ-ள்:- ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்-ஒப்புரவு அறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்-அஃது அறியாதான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன்.

இஃது, ஒப்புரவு அறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது. ௨௧௯.

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறற்கரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

இ-ள்:- புத்தேள் உலகத்தும் ஈண்டும்-தேவர் உலகத்தினும் இவ்வுலகத்தினும், ஒப்புரவின் நல்ல பிற-ஒப்புர வொழுகல்போல் நல்லவாகிய பிற, பெறற்கு அரிது- பெறுதற்கு அரிது.

இஃது, ஒப்புரவு செய்தல் போல நன்றாயிருப்பனவாகிய பிற தேவருலகத்தினும் இவ்வுலகத்தினு மில்லை யென்றது. ௨௨0.