திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை


"தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும் வயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடையவருமான எலயாசர் பன்றி இறைச்சி உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மாசுபடிந்தவராய் வாழ்வதைவிட மதிப்புடையவராய் இறப்பதைத் தேர்ந்து கொண்டு இறைச்சியை வெளியே துப்பிவிட்டுத் தாமாகவே சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார்." - 2 மக்கபேயர் 6:18


அதிகாரம் 5 தொகு

எகிப்தின்மீது படையெடுப்பு தொகு


1 அதே வேளையில் அந்தியோக்கு
எகிப்தின்மீது இரண்டாம் முறையாகப் படையெடுத்தான்.
2 எருசலேமெங்கும் ஏறத்தாழ நாற்பது நாள்
நடுவானில் காட்சிகள் தோன்றின;
பொன்னாடை அணிந்த குதிரைவீரர்கள் ஈட்டியை ஏந்தினவர்களாய்
உருவிய வாளுடன் கூட்டமாக உலவிக் கொண்டிருந்தார்கள்.
3 குதிரைப்படை அணிவகுத்து நின்றது;
அப்பக்கமும் இப்பக்கமுமாகத் தாக்குதல்களும்
எதிர்த் தாக்குதல்களும் தொடுக்கப்பட்டன;
கேடயங்கள் சுழன்றன; ஈட்டிகள் குவிந்தன.
அம்புகள் பாய்ந்தோடின.
குதிரைகளுக்குரிய பொன் அணிகளும்
எல்லாவகைப் படைக்கலங்களும் மின்னின.
4 ஆகவே இக்காட்சி ஒரு நல்ல அறிகுறியாக இருக்கவேண்டும் என்று
எல்லாரும் மன்றாடினர்.

யாசோன் எருசலேமை முற்றுகையிடல் தொகு


5 அந்தியோக்கு இறந்துவிட்டதாக ஒரு புரளி பரவியது.
உடனே யாசோன் ஆயிரத்திற்கும் குறையாத
ஆள்களைக் கூட்டிக்கொண்டுபோய்த்
திடீரென எருசலேமைத் தாக்கினான்.
நகர மதில்மேல் இருந்த படையினர் துரத்தியடிக்கப்பட்டனர்.
இறுதியாக நகர் பிடிபடும் நிலையில் இருந்தபோது
மெனலா கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்தான்.
6 ஆனால் யாசோன் தன் சொந்த நகரத்தாரையே
இரக்கமின்றிக் கொன்று குவித்தான்;
தன் இனத்தார்மீதே கொள்ளும் வெற்றி
மாபெரும் தோல்வி என்பதை அவன் உணரவில்லை;
தன் சொந்த மக்கள்மீது அல்ல,
தன் எதிரிகள்மீதே வெற்றி கொள்வதாக எண்ணிக்கொண்டான்.
7 ஆயினும் ஆட்சிப் பொறுப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை.
இறுதியில் தன் சூழ்ச்சியின்பொருட்டு இழிவுற்றவனாய்
அம்மோனியர் நாட்டில் மீண்டும் அடைக்கலம் புகுந்தான்.
8 இறுதியில் அவன் இரங்கத்தக்க முடிவை அடைந்தான்;
ஏனெனில் அரேபியருடைய மன்னனான அரேத்தா முன்பு
குற்றம்சாட்டப்பட்டான்; [1]
நகர் விட்டு நகர் ஓடினான்;
அனைவராலும் துரத்தியடிக்கப்பட்டான்;
சட்டங்களை எதிர்ப்பவன் என்று வெறுக்கப்பட்டான்;
தன் சொந்த நாட்டையும் மக்களையும் கொல்பவன் என்று அருவருக்கப்பட்டான்;
இறுதியில் எகிப்துக்கு விரட்டப்பட்டான்;
9 இலசதேமோனியரோடு யூதர்கள் கொண்டிருந்த உறவின்பொருட்டு
அவர்களிடமிருந்து பாதுகாப்புப்பெறலாம் என்னும் நம்பிக்கையுடன்
கடல் கடந்து சென்றான்;
பலரையும் தங்கள் சொந்த நாட்டினின்று அகதிகளாகக் கடத்தியவனே
இறுதியில் அகதியாக மாண்டான்.
10 அடக்கம் செய்யாமல் பலரையும் வெளியே வீசியெறிந்த அவனுக்காகத்
துயரம் கொண்டாடுவார் யாருமில்லை.
அவனுக்கு எவ்வகை அடக்கச் சடங்கும் நிகழவில்லை;
அவனுடைய மூதாதையரின் கல்லறையில் இடமும் கிடைக்கவில்லை.

அந்தியோக்கு எருசலேமைத் தாக்குதல் தொகு


11 நடந்தவைபற்றிய செய்தி அந்தியோக்கு மன்னனுக்கு எட்டியபோது
யூதேயா நாடு கிளர்ச்சியில் இறங்கியுள்ளது என்று அவன் எண்ணினான்;
ஆகவே சீறியெழுந்து எகிப்தினின்று புறப்பட்டு எருசலேமை
முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். [2]
12 எதிர்ப்பட்ட எவரையும் இரக்கமின்றி வெட்டி வீழ்த்தவும்,
வீடுகளில் தஞ்சம் புகுந்தோரைக் கொல்லவும்
தன் படைவீரர்களுக்கு ஆணையிட்டான்.
13 இளைஞரும் முதியோரும் படுகொலை செய்யப்பட்டார்கள்;
பெண்களும் சிறுவர்களும் அழிக்கப்பட்டார்கள்;
கன்னிப்பெண்களும் குழந்தைகளும் கொலையுண்டார்கள்.
14 மூன்று நாளுக்குள் எண்பதாயிரம் பேர் மறைந்துவிட்டனர்;
நாற்பதாயிரம் பேர் போரில் கொல்லப்பட்டனர்;
எஞ்சிய நாற்பதாயிரம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர்.
15 இத்தோடு மனநிறைவு அடையாத அந்தியோக்கு,
திருச்சட்டத்துக்கும் தன் நாட்டுக்கும் துரோகியான மெனலா காட்டிய வழியில்
உலகெங்கும் மிகக் தூயது என்று கருதப்பட்ட கோவிலிலும் புகத் துணிந்தான்;
16 தீட்டுப்பட்ட தன் கைகளால் தூய கலன்களைக் கைப்பற்றினான்;
தூய இடத்தின் மாட்சியும் பெருமையும் ஓங்க,
வேற்று நாட்டு மன்னர்கள் அளித்திருந்த நேர்ச்சைப் படையல்களைத்
தன் மாசுபடிந்த கைகளால் கவர்ந்து சென்றான்.
17 இறுமாப்புக் கொண்டவனாய் அந்தியோக்கு,
அந்நகரில் வாழ்ந்தவர்களின் பாவங்களைமுன்னிட்டே
சிறிது காலத்திற்கு ஆண்டவர் அவர்கள்மீது சினங்கொண்டுள்ளார்
என்பதை உணராதவனாய்த் தூய இடத்திற்குக் களங்கம் வருவித்தான்.
18 அந்நகர மக்கள் பற்பல பாவச் செயல்களில் ஈடுபடாதிருந்திருந்தால்,
கருவூலத்தைப் பார்வையிடச்
செலூக்கு மன்னனால் அனுப்பப் பெற்ற எலியதோரைப்போல்,
இம்மனிதனும் அங்கு வந்தவுடனேயே கசையடிபட்டிருப்பான்;
தன் விவேகமற்ற செயலை விட்டுவிட்டுப் பின்வாங்கியிருப்பான்.
19 ஆண்டவர் தூய இடத்திற்காக மக்களைத் தேர்ந்து கொள்ளவில்லை;
மக்களுக்காகவே அந்த இடத்தைத் தேர்ந்துகொண்டார்.
20 ஆதலால் மக்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களில்
அந்த இடத்திற்கும் பங்கு கிடைத்தது.
பின்னர் அவர்கள் அடைந்த நன்மைகளிலும் அது பங்கு கொண்டது.
எல்லாம் வல்லவருடைய சினத்தால் கைவிடப்பட்ட அந்த இடம்,
மாபெரும் ஆண்டவரோடு மக்கள் ஒப்புரவானபின்,
தன் முன்னைய மாட்சியை மீண்டும் பெற்றது. [3]


21 எனவே கோவிலிருந்து எழுபத்து இரண்டு டன் [4] வெள்ளியை எடுத்துக்கொண்டு
அந்தியோக்கி நகருக்கு அந்தியோக்கு மன்னன் சென்றான்;
அவனது மனம் செருக்குற்றிருந்ததால்
தன்னால் தரையில் கப்பலைச் செலுத்தவும்
கடலில் நடந்து செல்லவும் முடியும் என்று இறுமாப்போடு எண்ணினான்; [5]
22 மக்களை வதைக்கக் கண்காணிப்பாளர்களை ஏற்படுத்தினான்;
பிரிகிய இனத்தினனும் தன்னை அமர்த்தியவரைவிடக்
கொடிய பண்பினனுமான பிலிப்பை
எருசலேமில் கண்காணிப்பாளனாக அமர்த்தினான்;
23 அந்திரோனிக்கைக் கெரிசிமில் கண்காணிப்பாளனாக ஏற்படுத்தினான்;
இவர்கள் நீங்கலாக, மற்றவர்களைவிடக் கொடுமையாகத்
தன் சொந்த மக்களையே அடக்கியாண்ட மெனலாவையும் அமர்த்தினான்;
யூதர்கள்மீது கொண்டிருந்த பகைமை காரணமாக,
24 மீசியர்களின் படைத்தலைவனாகிய அப்பொல்லோனை
இருபத்திரண்டாயிரம் படைவீரர்களோடு
அந்தியோக்கி நகருக்கு அனுப்பி வைத்தான்;
வயதுவந்த ஆண்கள் அனைவரையும் கொல்லவும்,
பெண்களையும் இளைஞர்களையும் அடிமைகளாக விற்கவும் ஆணையிட்டான்;
25 அப்பொல்லோன் வந்தபோது,
நட்பு நாடி வந்தவன்போல நடித்து,
தூய ஓய்வுநாள்வரை காத்திருந்தான்;
அப்போது யூதர்கள் வேலை செய்யாமல் இருந்ததைக் கண்டு,
படைக்கலங்கள் தாங்கி அணிவகுக்குமாறு தன் வீரர்களைப் பணித்தான்.
26 வேடிக்கை பார்க்க வெளியில் வந்த அத்தனை பேரையும்
வாளுக்கு இரையாக்கினான்;
பின்பு படைக்கலங்கள் தாங்கிய வீரர்களோடு
நகருக்குள் பாய்ந்து பெரும்திரளான மக்களை வெட்டி வீழ்த்தினான்.
27 ஆனால் மக்கபே என்று அழைக்கப்பெற்ற யூதா
ஏறத்தாழ ஒன்பது பேருடன் பாலைநிலத்திற்கு ஓடிச்சென்றார்.
காட்டு விலங்குகளைப் போன்று அவரும் அவருடைய தோழர்களும்
மலைகளில் வாழ்ந்தார்கள்;
தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதவாறு
காட்டுக் கீரைகளை உண்டு காலம் கழித்தார்கள். [6]


குறிப்புகள்

[1] 5:8 - "சிறைப்பிடிக்கப்பட்டான்" என்பது கிரேக்க பாடம்.
[2] 5:11 = 1 மக் 1:17.
[3] 5:11-20 = 1 மக் 1:20-63.
[4] 5:21 - "ஆயிரத்து எண்ணூறு தாலந்து" என்பது கிரேக்க பாடம்.
[5] 5:21 = 2 மக் 9:8.
[6] 5:27 = 1 மக் 2:28.

அதிகாரம் 6 தொகு

கிரேக்க வழிபாட்டுத் திணிப்பு தொகு


1 சிறிது காலத்துக்குப்பின்,
யூதர்கள் தங்கள் மூதாதையரின் சட்டங்களைக் கைவிடும்படியும்,
கடவுளுடைய சட்டங்களின்படி நடப்பதை விட்டுவிடும்படியும்
அவர்களைக் கட்டாயப்படுத்துமாறு
ஏதன்சு நகர ஆட்சிமன்றத்தைச் சேர்ந்த ஒருவனை
அந்தியோக்கு மன்னன் அனுப்பி வைத்தான்.
2 மேலும் எருசலேமில் இருந்த கோவிலைத் தீட்டுப்படுத்தி
அதற்கு "ஒலிம்பு மலைச் சேயுவின் கோவில்" எனப் பெயரிடவும்,
கெரிசிமில் வாழ்ந்த மக்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க
அங்கு இருந்த கோவிலை,
"அன்னியர்களின் நண்பர் சேயுவின் கோவில்" என அழைக்கவும்
அவனைப் பணித்தான். [1]


3 இந்தத் தீச்செயல் மக்களுக்குத் துன்பம் தருவதாயும்
தாங்க முடியாததாயும் இருந்தது.
4 ஏனெனில் பிற இனத்தாரின் ஒழுக்கக்கேட்டாலும்
களியாட்டத்தாலும் கோவில் நிறைந்திருந்தது.
அவர்கள் விலைமாதரோடு காமக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள்.
திருஉறைவிடத்து எல்லைக்குள்ளேயே பெண்களோடு உடலுறவு கொண்டார்கள்.
விலக்கப்பட்ட பொருள்களையும் கோவிலுக்குள் எடுத்துச் சென்றார்கள்.
5 சட்டங்கள் விலக்கியிருந்த பலிப்பொருள்களால் பீடம் நிரம்பி வழிந்தது.
6 ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கவும்,
தங்கள் மூதாதையர் சிறப்பித்த திருவிழாக்களைக் கொண்டாடவும்,
யூதர்கள் என்று அறிக்கையிடவும்கூட அவர்களால் முடியவில்லை.
7 மன்னனுடைய பிறந்த நாள் விழாவின்
மாதாந்திரக் கொண்டாட்டங்களின் போது
பலிப்பொருள்களில் பங்குகொள்ளுமாறு
யூதர்கள் வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
தியனீசின் திருவிழாக் கொண்டாட்டத்தின்போது
கொடிகளால் புனைந்த முடி அணிந்து,
தியனீசின் பெயரால் நடைபெற்ற ஊர்வலத்தில்
கலந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
8 தாலமாய் நகர மக்களின் தூண்டுதலால்
பக்கத்தில் இருந்த கிரேக்க நகரங்களுக்கு ஓர் ஆணை பிறந்தது;
அந்த நகரங்களின் மக்களும் அதே முறையைக் கையாண்டு
யூதர்களைப் பலிப்பொருள்களில் பங்குகொள்ளச் செய்யவேண்டும்;
9 கிரேக்கப் பழக்கவழக்கங்களை ஏற்க விரும்பாதவர்களைக்
கொன்றுவிட வேண்டும் என்பதே அந்த ஆணை.
இதனால் யூதர்களுக்கு ஏற்பட்ட துன்பம் அனைவருக்கும் தெரிந்ததே.
10 எடுத்துக்காட்டாக,
தங்கள் குழந்தைகளுக்கு விருந்தசேதனம் செய்த பெண்கள் இருவரை
அவர்கள் கைதுசெய்தார்கள்;
பிள்ளைகளை அவர்களுடைய அன்னையரின் மார்புகளில்
கட்டித் தொங்கவிட்ட வண்ணம்
அவர்களை எல்லாரும் காண நகரைச் சுற்றி ஊர்வலமாக நடத்திச் சென்றார்கள்;
பின்பு நகர மதில்களின் மேலிருந்து அவர்களைத் தலைகீழாகத் தள்ளிவிட்டார்கள். [2]
11 ஓய்வு நாளை மறைவாய்க் கடைப்பிடிக்கும் பொருட்டு
அருகில் இருந்த குகையில் கூடியிருந்த மற்றும் சிலர்
பிலிப்பிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு
அவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சுட்டெரிக்கப்பட்டார்கள்;
ஏனெனில் ஓய்வுநாள்மீது அவர்கள் கொண்டிருந்த மதிப்பின் பொருட்டு
அவர்கள் தங்களையே காத்துக்கொள்ளத் தயங்கினார்கள். [3]

கடவுளின் இரக்கம் தொகு


12 இந்நூலைப் படிப்போர் இத்தகைய பேரிடர்களால்
மனந்தளராதிருக்குமாறு வேண்டுகிறேன்;
இத்தண்டனைகள் அனைத்தும் நம் மக்களை அழிப்பதற்காக ஏற்பட்டவை அல்ல;
அவர்களைப் பயிற்றுவிப்பதற்காகவே என்பதை உணரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
13 இறைப்பற்றில்லாதவர்களை நீண்ட நாளுக்குத்
தங்கள் விருப்பம்போல விட்டுவிடாமல்,
உடனடியாகத் தண்டிப்பது, உண்மையில் பேரிரக்கத்தின் அடையாளமாகும்.
14 ஏனெனில் ஆண்டவர் பிற இனத்தாருடைய பாவங்களுக்காக
அவர்களைத் தண்டிக்கும்பொருட்டுப்
பாவங்களின் முழு அளவை அவர்கள் அடையும்வரை
பொறுமையுடன் காத்திருக்கிறார்;
ஆனால் நம்மிடம் அவ்வாறு நடந்து கொள்வதில்லை;
15 நம்முடைய பாவங்கள் முழுஅளவை அடையுமுன்னரே
நம்மைத் தண்டித்து விடுகிறார்.
16 ஆகவே அவர்தம் சொந்த மக்களாகிய நமக்கு
இரக்கம் காட்டத் தவறுவதில்லை;
பேரிடர்களால் நம்மைப் பயிற்றுவித்தாலும் நம்மைக் கைவிடுவதில்லை.
17 இவ்வுண்மையை நினைவுபடுத்தவே
இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறினோம்;
இனிமேல் தொடர்ந்து வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு வருவோம்.

எலயாசரின் மறைசாட்சி இறப்பு தொகு


18 தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும்
வயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடையவருமான எலயாசர்
பன்றி இறைச்சி உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். [4]
19 ஆனால் அவர் மாசுபடிந்தவராய் வாழ்வதைவிட
மதிப்புடையவராய் இறப்பதைத் தேர்ந்து கொண்டு
இறைச்சியை வெளியே துப்பிவிட்டுத்
தாமாகவே சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார்.
20 உயிர்மேல் ஆசை இருப்பினும்,
திருச்சட்டம் விலக்கியிருந்த பண்டங்களைச் சுவைத்தும் பாராமல்
தள்ளிவிடத் துணியும் எல்லாரும் இவ்வாறே செய்யவேண்டும்.
21 சட்டத்திற்கு எதிரான அந்தப் பலிவிருந்துக்குப் பொறுப்பாய் இருந்தவர்கள்
அவரோடு கொண்டிருந்த நீண்டகாலப் பழக்கம் காரணமாக
அவரை ஒதுக்கமாக அழைத்துச் சென்று,
அவர் உண்ணக்கூடிய இறைச்சியை
அவரே தயாரித்துக் கொண்டுவருமாறும்,
மன்னன் கட்டளையிட்டபடி பலியிடப்பட்ட இறைச்சியை
உண்பதுபோல நடிக்குமாறும்
அவரைத் தனிமையில் வேண்டிக்கொண்டார்கள்.
22 இவ்வாறு செய்வதால் அவர் சாவினின்று காப்பாற்றப்படுவார் என்றும்,
அவரோடு அவர்கள் கொண்டிருந்த பழைய நட்பின் காரணமாக
மனிதநேயத்தோடு நடத்தப்படுவார் என்றும் அவர்கள் எண்ணினார்கள்.
23 ஆனால் எலயாசர் தமது வயதுக்குரிய தகுதிக்கும்
முதுமைக்குரிய மேன்மைக்கும்
நரைமுடிக்குரிய மாண்புக்கும்
சிறு வயதுமுதல் தாம் நடத்தியிருந்த மாசற்ற வாழ்க்கைக்கும்
கடவுள் கொடுத்திருந்த திருச்சட்டத்திற்கும் ஏற்றபடி
மேலான முறையில் உறுதிபூண்டவராய்,
உடனே தமது முடிவைத் தெரிவித்துத் தம்மைக் கொன்றுவிடுமாறு கூறினார்.
24 அவர் தொடர்ந்து, "இவ்வாறு நடிப்பது எனது வயதுக்கு ஏற்றதல்ல;
ஏனெனில் தொண்ணூறு வயதான எலயாசர்
அன்னியருடைய மறையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என
இளைஞருள் பலர் எண்ணக்கூடும்.
25 குறுகிய, நிலையில்லாத வாழ்வுக்காக
நான் இவ்வாறு நடிப்பேனாகில்
என் பொருட்டு அவர்கள் நெறி பிறழ நேரிடும்;
அவ்வாறு நேரிட்டால் அது என் முதுமையை நானே
களங்கப்படுத்துவதும் இழிவுபடுத்துவதுமாகும்.
26 மனிதரின் தண்டனையினின்று நான் தற்காலிகமாக விடுபட்டாலும்,
உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தாலும்,
நான் எல்லாம் வல்லவருடைய கைக்குத் தப்ப முடியாது.
27 ஆகவே இப்போது என் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம்
என் முதுமைக்கு நான் தகுதியடையவன் என் மெய்ப்பிப்பேன்;
28 மதிப்புக்குரிய, தூய சட்டங்களுக்காக விருப்போடும்
பெருந்தன்மையோடும் எவ்வாறு இறப்பது என்பதற்கு
ஓர் உயரிய எடுத்துக்காட்டை விட்டுச்செல்வேன்" என்றார்.
இதெல்லாம் கூறி முடித்ததும்
அவர் சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார்.


29 சற்றுமுன் அவரைக் கனிவோடு நடத்தியவர்கள்
இப்போது கல்நெஞ்சராய் மாறினார்கள்;
ஏனெனில் அவர் கூறியது அவர்களுக்கு மடமையாகத் தோன்றியது.
30 அடிபட்டதால் இறக்கும் தறுவாயில் இருந்தபோது அவர் அழுது புலம்பி,
"நான் சாவினின்று விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும்,
அடியினால் என் உடலில் ஏற்படும் கொடிய துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறேன்;
ஆண்டவருக்கு நான் அஞ்சுவதால்
என் உள்ளத்தில் மகிழ்ச்சியோடு இவற்றை ஏற்றுக்கொள்கிறேன்;
ஆண்டவர் தம் தூய ஞானத்தால் இவற்றையெல்லாம் அறிகிறார்" என்றார்.
31 இவ்வாறு எலயாசர் உயிர்துறந்தார்.
அவருடைய இறப்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல,
அவருடைய நாட்டு மக்கள் அனைவருக்குமே
சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டாகவும்
நற்பண்புக்கு அடையாளமாகவும் விளங்கியது.


குறிப்புகள்

[1] 6:2 = 1 மக் 1:46,54.
[2] 6:10 = 1 மக் 1:60-61.
[3] 6:11 = 1 மக் 2:32-38.
[4] 6:18 = லேவி 11:7-8.


(தொடர்ச்சி): மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை