திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

"அடைமழை பெய்யும்; ஆலங்கட்டிகள் விழும்; புயற்காற்று சீறியெழும்.." - எசேக்கியேல் 13:11

அதிகாரம் 13 தொகு

போலி இறைவாக்குரைத்த ஆடவருக்கு எதிரான இறைவாக்கு தொகு


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மானிடா! தங்கள் விருப்பப்படி வாக்குரைக்கும்
இஸ்ரயேலின் போலி இறைவாக்கினருக்கு எதிராக
நீ இறைவாக்குரைத்து,
'ஆண்டவரது வாக்கைக் கேளுங்கள்' என்று அவர்களுக்குச் சொல்.
3 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
மதிகெட்ட இறைவாக்கினருக்கு ஐயோ கேடு!
அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் நடக்கின்றனர்.
அவர்கள் ஒரு காட்சியும் காண்பதில்லை.
4 இஸ்ரயேலே!
உன் இறைவாக்கினர் பாலைநில நரிகளுக்கு ஒப்பானவர்.
5 ஆண்டவரது நாளில் நிகழவிருக்கும் போரில்
இஸ்ரயேல் வீட்டார் நிலைத்து நிற்பதற்காக,
நீங்கள் அவர்களைச் சுற்றியுள்ள மதிலின் உடைப்புகளுக்குள்
ஏறிச் சென்றதும் இல்லை; அவற்றைப் பழுது பார்த்ததும் இல்லை.
6 அவர்கள் பொய்க் காட்சி கண்டு,
ஏமாற்றுக் குறி தந்து 'இது ஆண்டவரின் வாக்கு' என்கின்றனர்.
அவர்களையோ ஆண்டவர் அனுப்பவே இல்லை.
7 நீங்கள் கண்டது பொய்க்காட்சி தானே?
நீங்கள் தந்தது ஏமாற்றுக் குறிதானே?
நான் ஒன்றும் உரைக்காதிருந்தும்
'இது ஆண்டவரின் அருள் வாக்கு' என நீங்கள் சொல்லலாமா?
8 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
"நீங்கள் புனைந்து பேசியுள்ளீர்கள்;
பொய்க்காட்சிகள் கண்டுள்ளீர்கள்.
எனவே நான் உங்களுக்கு எதிராக இருப்பேன்",
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
9 பொய்க்காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தரும்
போலி இறைவாக்கினருக்கு எதிராக என் கை இருக்கும்.
என் மக்களின் அவையில் அவர்கள் இரார்.
இஸ்ரயேல் வீட்டாரின் பதிவேட்டிலும்
அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிரா.
இஸ்ரயேலின் மண்ணில் அவர்கள் கால் வைக்க மாட்டார்கள்.
அப்போது நானே தலைவராகிய ஆண்டவர் என்பதை
நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
10 ஏனெனில், இவர்கள் நல்வாழ்வு இல்லாதிருந்தும்
'நல்வாழ்வு உளது' எனச் சொல்லி
என் மக்களை வழிதவறச் செய்தார்கள்.
மக்கள் எல்லைச் சுவர் எழுப்பியபோது
இவர்கள் அதற்குச் சுண்ணாம்பு பூசினார்கள். [*]
11 சுண்ணாம்பு பூசுகிறவர்களிடம் சொல்:
அது விழுந்துவிடும்; அடைமழை பெய்யும்;
ஆலங்கட்டிகள் விழும்; புயற்காற்று சீறியெழும்.
12 சுவர் விழும்போது,
'நீங்கள் பூசிய சுண்ணாம்பு எங்கே?' என்று
உங்களைக் கேட்கமாட்டார்களா?
13 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நான் சீற்றமுற, புயற்காற்று சீறியெழும்;
நான் சினமுற, அடைமழை பெய்யும்;
நான் கோபமுற, ஆலங்கட்டிகள் விழும்; சுவரும் அழிந்துவிடும்.
14 நீங்கள் சுண்ணாம்பு பூசிய சுவரை
நான் இடித்துத் தரைமட்டமாக்குவேன்.
அதன் அடித்தளம் பெயர்க்கப்படும்.
அது விழும்போது, அதனடியில் நீங்கள் அழிந்து போவீர்கள்.
அப்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
15 இப்படிச் சுவர் மீதும், அதில் சுண்ணாம்பு பூசியவர்கள் மீதும்
என் சினத்தைத் தீர்த்துக் கொண்டு,
'சுவரையும் காணோம்; அதற்குச் சுண்ணாம்பு பூசியோரையும் காணோம்'
என்று உங்களுக்கு உரைப்பேன்.
16 நல்வாழ்வு இல்லாதிருந்தும் 'நல்வாழ்வு உளது' என்னும் காட்சி கண்டு
எருசலேமுக்காக இறைவாக்குரைக்கும்
இஸ்ரயேலின் இறைவாக்கினரும் அவ்வாறே அழிவர்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

போலி இறைவாக்குரைத்த மகளிருக்கு எதிரான இறைவாக்கு தொகு


17 மானிடா! தங்கள் விருப்பப்படி இறைவாக்குரைக்கும்
உன் இனத்துப் புதல்வியருக்கு நேராக
உன் முகத்தை வைத்துக் கொண்டு,
அவர்களுக்கு எதிராக இறைவாக்குரை.
18 நீ சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
உயிர்களை வேட்டையாடுவதற்காக,
அனைவரின் கைகளிலும் மணிக்கட்டைச் சுற்றிக்
காப்புக் கயிறுகள் பின்னி,
ஒவ்வொருவர் உயரத்திற்கும் ஏற்ப
தலைக்கு முக்காடு செய்வோர்க்கு ஐயோ கேடு!
நீங்கள் என் மக்களின் உயிர்களை வேட்டையாடி
உங்கள் உயிர்களை மட்டும் காத்துக்கொள்வீர்களோ?
19 கைப்பிடி அளவு வாற்கோதுமைக்காகவும்,
சில அப்பத்துண்டுகளுக்காகவும்
என் மக்களிடையே எனக்குக் களங்கம் விளைவிக்கிறீர்கள்.
பொய்களுக்குச் செவிசாய்க்கும் என் மக்களிடம் பொய் சொல்லி,
சாகாமல் இருக்க வேண்டியோரைச் சாகடித்து,
உயிரோடு இருக்கக் கூடாதாரை உயிரோடு காத்துள்ளீர்கள்.
20 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
பறவைகளுக்கு வைப்பது போல்
உயிர்களுக்குக் கண்ணிவைக்க நீங்கள் பயன்படுத்தும்
காப்புக் கயிறுகளை நான் வெறுக்கிறேன்,
அவற்றை உங்கள் கைகளிலிருந்து அறுத்தெறிவேன்.
பறவைகளைப்போல் நீங்கள் கண்ணிவைத்துப் பிடிக்கும்
உயிர்களை நான் விடுவிப்பேன்.
21 உங்கள் முக்காடுகளையும் கிழித்தெறிந்து,
என் மக்களை உங்கள் கைகளினின்று விடுவிப்பேன்.
இனி அவர்கள் உங்கள் கைகளில் சிக்கமாட்டார்கள்.
அப்போது நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
22 நான் தளரச்செய்யாத நேர்மையாளனின் இதயத்தை
நீங்கள் வஞ்சகமாய்த் தளரச் செய்தீர்கள்.
தீயவர் தம் தீய வழியினின்று விலகித்
தம் உயிரைக் காத்துக் கொள்ளாதவாறு, வலுப்படுத்தினீர்கள்.
23 ஆதலால் பொய்க் காட்சியை இனிக் காணமாட்டீர்கள்;
குறி சொல்லவும் மாட்டீர்கள்.
உங்கள் கைகளினின்று என் மக்களை விடுவிப்பேன்.
அப்போது நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.


குறிப்பு

[*] 13:10 = எரே 6:14; 8:11.


அதிகாரம் 14 தொகு

சிலை வழிபாட்டிற்குக் கடவுளின் கண்டனம் தொகு


1 இஸ்ரயேலின் பெரியோருள் சிலர் என்னிடம் வந்து, என்முன் அமர்ந்தனர்.
2 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
3 மானிடா! இம்மனிதர் சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து,
அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
இவர்கள் என் திருவுளத்தை அறிய நான் விடுவேனோ?
4 ஆகையால், நீ அவர்களோடு பேசி, அவர்களிடம் சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது
சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து
அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே
இறைவாக்கினரிடம் வந்தால்,
அவர்களுக்கு ஆண்டவராகிய நானே
அவர்களின் எண்ணற்ற சிலைகளுக்கேற்ப பதில் அளிப்பேன்!
5 இவ்வாறு, சிலைகளால் என்னை விட்டு விலகிப்போயிருக்கும்
இஸ்ரயேல் வீட்டாரின் இதயங்கள் அனைத்தையும்
நான் என் வயமாக்கிக்கொள்வேன்.


6 ஆகவே, இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
திரும்புங்கள், உங்கள் சிலைகளை விட்டுத் திரும்புங்கள்;
உங்கள் அருவருப்புகள் அனைத்தையும் விட்டு
உங்கள் முகத்தைத் திருப்புங்கள்.
7 ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது,
இஸ்ரயேல் வீட்டில் வாழும் அயலாருள் எவராவது என்னைவிட்டகன்று,
தங்கள் சிலைகளிடம் மனத்தைப் பறிகொடுத்து
அவற்றைத் தங்கள் முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே,
இறைவாக்கினரிடம் வந்து
அவர் வழியாக என் திருவுளத்தை அறிய முற்பட்டால்,
அவர்களுக்கு நானே,
ஆண்டவராகிய நானே சரியான பதில் அளிப்பேன்!
8 அவர்களுக்கெதிராக என் முகத்தைத் திருப்பி,
அவர்களை அடையாளமாகவும் பழிச் சொல்லாகவும் ஆக்குவேன்.
அவர்களை என் மக்கள் நடுவிலிருந்து வெட்டியெறிவேன்.
அப்போது, நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.


9 இறைவாக்கினன் ஒருவன் ஏமாற்றப்பட்டு
ஒரு வாக்கை உரைப்பானாகில்,
ஆண்டவராகிய நானே அவனை ஏமாற்றினேன்.
நான் என் கையை அவனுக்கு எதிராக நீட்டி
என் மக்கள் இஸ்ரயேலின் நடுவிலிருந்து அவனை அழித்து விடுவேன்.
10 என் திருவுளத்தை அறிய முற்படுவோரின் குற்றப்பழியைப் போலவே
இறைவாக்கினனின் குற்றப்பழியும் இருக்கும்.
அவரவர்கள் தங்கள் குற்றப்பழியைச் சுமப்பார்கள்.
11 அப்போது, இஸ்ரயேல் வீட்டார் என்னை விட்டு
வழிதவறிப் போகாமலும்,
தங்கள் எண்ணற்ற குற்றங்களால் மீண்டும்
தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமலும் இருப்பர்.
அப்போது அவர்கள் என் மக்களாய் இருப்பர்.
நானும் அவர்கள் கடவுளாய் இருப்பேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நோவா, தானியேல் மற்றும் யோபு தொகு


12 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
13 மானிடா! ஒரு நாடு நம்பிக்கைத் துரோகம் இழைத்து
எனக்கு எதிராகப் பாவம் செய்தால்,
நான் கையை நீட்டி, உணவின் தரவை நிறுத்தி,
அங்குப் பஞ்சத்தை அனுப்பி,
அங்குள்ள மனிதரையும் கால்நடைகளையும் அழிப்பேன்.
14 அப்போது நோவா, தானியேல், யோபு
ஆகிய இம்மூவரும் அங்கிருந்தால்,
அவர்கள் தங்கள் நேர்மையால்
தங்கள் உயிரைமட்டுமே காத்துக்கொள்வர்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
15 நான் காட்டு விலங்களை நாடு முழுவதும் அலைந்து திரியவிட,
அவை அதனைப் பாழாக்கி வெறுமையாக்கும்.
அவற்றின் காரணமாய் யாரும் அங்கே நடமாட முடியாதிருக்கும்.
16 அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால் - என்மேல் ஆணை -
அவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவர்.
தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ
காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும்;
நாடும் பாழாய்ப்போகும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
17 அல்லது, நான் அந்த நாட்டின்மீது வாளை வரச்செய்து,
'வாள் நாட்டை ஊடுருவட்டும்' என ஆணையிட்டு
மனிதரையும், கால்நடைகளையும் வெட்டி வீழ்த்துவேன்.
18 அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால் - என்மேல் ஆணை -
அவர்கள்மட்டுமே காப்பாற்றப்படுவர்;
தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ
காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
19 அல்லது, நான் அந்நாட்டினுள் கொள்ளை நோயை அனுப்பி,
அதனின்று மனிதரையும் கால்நடைகளையும் அழிப்பதற்காக,
என் சீற்றத்தைக் குருதியாய் அதன்மீது கொட்டுவேன்.
20 அப்போது, நோவா, தானியேல், யோபு
ஆகியோர் அங்கிருந்தால் - என்மேல் ஆணை -
மகனையோ மகளையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற்போகும்.
தங்கள் நேர்மையின் பொருட்டுத்
தங்கள் உயிரை மட்டுமே காத்துக்கொள்வர்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


21 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
உண்மையிலேயே நான் மனிதரையும் கால்நடைகளையும்
எருசலேமினின்று ஒழிப்பதற்காக,
வாள், பஞ்சம், காட்டுவிலங்கு, கொள்ளைநோய்
ஆகிய என்னுடைய நான்கு கடும் தீர்ப்புகளையும் அதன்மீது அனுப்புவேன். [*]
22 அப்போது, அங்கிருந்து தப்பிப் பிழைக்கும் சிலர்
தங்கள் புதல்வரோடும் புதல்வியரோடும் வெளியேறி
உங்களிடம் வந்து சேர்வர்.
அவர்களின் நடத்தையையும் செயல்களையும் பார்த்த பிறகு,
நான் எருசலேமின்மீது வரச்செய்த தீங்கை -
நான் அதன்மீது வரச்செய்த ஒவ்வொரு தீங்கையும் -
குறித்து நீங்கள் தேற்றப்படுவீர்கள்.
23 நீங்கள் அவர்களின் நடத்தையையும் செயல்களையும் பார்க்கும்போது
அவர்களே உங்களுக்கு ஆறுதலாய் இருப்பர்.
அப்போது நான் அங்குச் செய்ததெல்லாம்
காரணமின்றிச் செய்யவில்லை என்று
நீங்கள் அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


குறிப்பு

[*] 14:21 = திவெ 6:8.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 15 முதல் 16 வரை