திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

கானான் நாட்டை உளவுபார்க்கச் சென்றோர். (எண் 13:17-20, 23-33).வரைபடம். 1907.

அதிகாரம் 13 தொகு

உளவாளிகள் தொகு

(இச 1:19-33)


1 ஆண்டவர் மோசேயிடம்,
2 "இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்" என்றார்.
3 ஆண்டவர் கட்டளைப்படியே மோசே அவர்களைப் பாரான் பாலைநிலத்திலிருந்து அனுப்பினார்; அந்த ஆள்கள் அனைவரும் இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள்.
4 அவர்களின் பெயர்கள்: ரூபன் குலத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா;
5 சிமியோன் குலத்திலிருந்து ஓரியின் மகன் சாபாற்று;
6 யூதாக் குலத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேபு;
7 இசக்கார் குலத்திலிருந்து யோசேப்பின் மகன் இகால்;
8 எப்ராயிம் குலத்திலிருந்து நூனின் மகன் ஓசெயா;
9 பென்யமின் குலத்திலிருந்து இராபின் மகன் பல்தி;
10 செபுலோன் குலத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்;
11 யோசேப்பு குலத்திலுள்ள மனாசே குலத்திலிருந்து சூசியின் மகன் காத்தி;
12 தாண் குலத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மீயேல்;
13 ஆசேர் குலத்திலிருந்து மிக்கேலின் மகன் செதூர்;
14 நப்தலி குலத்திலிருந்து ஓப்சியின் மகன் நக்பி;
15 காத்து குலத்திலிருந்து மாக்கியின் மகன் கெயுவேல்;
16 நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பிய ஆள்களின் பெயர்கள் இவைகளே. மோசே நூனின் மகன் ஓசேயாவை 'யோசுவா' [1] என்று பெயரிட்டு அழைத்தார்.


17 கானான் நாட்டை உளவு பார்க்கும்படி மோசே அவர்களை அனுப்பினார்; அவர் அவர்களிடம், "நீங்கள் நெகேபுக்குச் சென்று அதற்கு அப்பால் மலைநாட்டுக்குப் போங்கள்;
18 அந்த நாடு எப்படியிருக்கிறது, அங்கு வாழும் மக்கள் வலிமையுள்ளவரா வலிமையுற்றவரா, அவர்கள் பலரா சிலரா,
19 அவர்கள் குடியிருக்கும் நாடு வளமையானதா வளமையற்றதா, அவர்கள் தங்கியிருக்கும் நகர்கள் பாளையங்களா கோட்டைகளா,
20 அந்த நாடு செல்வம் மிக்கதா ஏழ்மையானதா, மரங்கள் அங்கு உண்டா இல்லையா என்று பார்த்து வாருங்கள்; துணிவுடன் இருங்கள்; அந்நாட்டின் கனிகள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார். அது திராட்சையின் முதற்கனிப் பருவம்.


21 அவ்வாறே அவர்கள் போய் சின் பாலைநிலத்திலிருந்து ஆமாத்து நுழைவாயிலருகில் இருந்த இரகோபு வரையிலும் நாட்டை உளவு பார்த்தனர்.
22 அவர்கள் நெகேபினுள் சென்று, பின் எபிரோனுக்கு வந்தனர். அங்கு ஆனாக்கின் வழிமரபினரான அகிமான், சேசாய், தல்மாய் ஆகியோர் இருந்தனர்; எகிப்திலுள்ள சோவானிலும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே எபிரோன் கட்டப்பட்டிருந்தது.
23 பின்னர் அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்; அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்; அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்; அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர்.
24 இந்த இடம் இஸ்ரயேல் ஆள்கள் இங்கிருந்து வெட்டிய திராட்சைக் குலையை முன்னிட்டு 'எசுக்கோல்' [2] பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது.


25 நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர்.
26 அவர்கள் பாரான் பாலை நிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்; அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்; நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர்.
27 அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்; அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது; இதுவே அதன் கனி.
28 ஆயினும் அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்; நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை; அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்;
29 அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்; இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலை நாட்டில் வாழ்கின்றனர்; கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர்.


30 காலேபு மோசே முன் மக்களை உடனே அமைதிப்படுத்தி, "நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம்; ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும்" என்றார்.
31 ஆனால் அவருடன் சென்றிருந்த ஆள்கள், "நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது; ஏனெனில் அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்" என்றனர்.
32 இவ்வாறு அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்; அவர்கள் கூறியது; உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது; அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்;
33 அத்துடன் நெப்பிலிமிலிருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்; எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்; அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம். [3]

குறிப்புகள்

[1] 13:16 எபிரேயத்தில், 'விடுதலையளிப்பவர்' என்பது பொருள்.
[2] 13:24 எபிரேயத்தில் 'குலை' என்பது பொருள்.
[3] 13:33 = தொநூ 6:4.


அதிகாரம் 14 தொகு

மக்களின் முறையீடு தொகு


1 உடனே மக்கள் கூட்டமைப்பு முழுதும் உரத்தக் குரலில் புலம்பிற்று; மக்கள் அன்றிரவு அழுது கொண்டே இருந்தனர்.
2 இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவர்களிடம், "எகிப்து நாட்டில் நாங்கள் இறந்திருந்தால் எவ்வளவோ நலம்! இந்தப் பாலை நிலத்தில் மடிந்தால் அதுவும் நலமே!
3 வாளுக்கு இரையாகும்படியா ஆண்டவர் எங்களை இந்த நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்? எங்கள் மனைவியரும் குழந்தைகளும் மடியப்போகிறார்கள்! நாம் எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் செல்வது நலமன்றோ?" என்றனர்.


4 மேலும் அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, "நாம் ஒரு தலைவனை நியமித்துக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிச் செல்வோம்" என்றனர்.
5 உடனே மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் முழுவதற்கும் முன்பாக முகங்குப்புற விழுந்தனர்.
6 மேலும் நாட்டை உளவு பார்த்து வந்தவர்களிடையே இருந்த நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு,
7 இஸ்ரயேலர் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் கடந்து சென்ற நாடு மிகச் சிறந்த நாடு.
8 ஆண்டவருக்கு நம்மேல் நல்விருப்பு ஏற்பட்டால் பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டினுள் அவர் நம்மை அழைத்துச் சென்று அதை நமக்குத் தருவார்.


9 எனவே ஆண்டவருக்கெதிராக மட்டும் கிளர்ந்தெழாதீர்; நாட்டின் மக்களுக்கு அஞ்சாதீர்; அவர்கள் நமக்கு இரையாவர்; அவர்களின் பாதுகாவல் அகன்று போயிற்று; ஆண்டவரோ நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்கு அஞ்சவேண்டாம். [1]


10 ஆனால் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அவர்களைக் கல்லால் எறியும்படி கூறினர்; உடனே ஆண்டவரின் மாட்சி சந்திப்புக் கூடாரத்தில் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தோன்றியது.

மோசே மக்களுக்காக வேண்டுதல் செய்தல் தொகு


11 ஆண்டவர் மோசேயிடம், "எதுவரை இம்மக்கள் என்னை இழிவுபடுத்துவார்கள், நான் அவர்களுக்கு அடையாளங்கள் தந்தும் எதுவரை இவர்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாதிருப்பார்கள்?
12 நான் அவர்களைக் கொள்ளை நோயால் வதைத்து அவர்களைப் புறக்கணித்து விடுவேன்; உன்னையோ அவர்களைவிடப் பெரியதும் வலியதுமான இனமாக்குவேன்" என்றார்.


13 ஆனால் மோசே ஆண்டவரிடம் கூறியது: அப்போது எகிப்தியர் இதைப்பற்றிக் கேள்விப்படுவார்களே! நீர் அவர்களிடமிருந்துதானே இம்மக்களை உம் ஆற்றலால் கொண்டு வந்தீர்!
14 அதோடு இந்த நாட்டுக் குடிகளிடமும் அவர்கள் சொல்லி வைப்பார்கள். ஆண்டவரே, நீர் இம்மக்களிடையே இருக்கிறீர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் ஆண்டவரே, நீர் நேர்முகமாய்க் காணப்படுகிறீர்; உமது மேகம் அவர்கள்மேல் நிற்கிறது; பகலில் மேகத் தூணிலும் இரவில் நெருப்புத் தூணிலும் நீர் அவர்களுக்கு முன்னே போகிறீர்.
15 நீர் இப்போது இம்மக்களை ஓர் ஆள் எனக் கொன்றுவிட்டால், உம் புகழைக் கேள்விப்பட்டிருந்த இனத்தவரெல்லாம்,
16 "ஆண்டவர் இம்மக்களுக்கு வாக்களித்த நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுவர இயலாததால் பாலைநிலத்தில் அவர்களைக் கொன்று போட்டார்" என்று சொல்வார்களே!
17 இப்போதும் உம்மை மன்றாடிக் கேட்கிறேன்; நீர் வாக்களித்தபடி ஆண்டவர் ஆற்றல் சிறப்புறுவதாக.
18 "ஆண்டவர் சினங்கொள்ளத் தாமதிப்பவர்; அருளிரக்கம் காட்டுவதில் அளவு கடந்தவர்; குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பவர்; எவ்விதத்திலும் நம்பிக்கைத் துரோகம் செய்வோரை விட்டு விடாதவர்; மூதாதையர் குற்றங்களுக்காக அவர்கள் பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டிப்பவர்" என்றும் சொல்லியிருக்கிறீரே! [2]
19 உம்மை மன்றாடிக் கேட்கிறேன், இம்மக்களின் குற்றங்களை மன்னியும்; உன் அருளிரக்கத்தின் பேரளவின்படியும் எகிப்திலிருந்து இதுகாறும் இம்மக்களை நீர் மன்னித்து வந்தது போன்றும் செய்யும். [3]


20 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: உன் வாக்கின்படி நான் மன்னித்துவிட்டேன்;
21 ஆயினும் உண்மையாகவே என் உயிர்மேல் ஆணை! பூவுலகனைத்தும் நிறைந்துள்ள ஆண்டவரின் மாட்சியின் மேல் ஆணை!
22 எகிப்திலும் இப்பாலை நிலத்திலும் என் மாட்சியையும் நான் செய்த அருஞ்செயல்களையும் கண்டிருந்தும், இப் பத்துத் தடவையும் இம்மனிதர்கள் என்னைச் சோதித்து என் குரலுக்குச் செவிகொடுக்காததால்,


23 இவர்களில் ஒருவன்கூட இவர்கள் மூதாதையருக்குத் தருவதாக நான் வாக்களித்திருந்த நாட்டினைக் காண மாட்டான்; என்னை இழிவுபடுத்திய எவனுமே அதைப் பார்க்கமாட்டான். [4]
24 ஆனால் என் அடியான் காலேபு வேறுபட்ட மனநிலை கொண்டு என்னை முழுமையாகப் பின்பற்றினான்; ஆகவே அவன் சென்று வந்த நாட்டுக்குள் அவனைக் கொண்டு வருவேன்; அவன் தலைமுறையினர் அதனை உடைமையாக்கிக்கொள்வர். [5]
25 இப்போது அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர். எனவே நாளைக்கு நீங்கள் செங்கடலுக்குப் போகும் வழியே பாலைநிலத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள்.

முறையிட்ட மக்களை ஆண்டவர் தண்டித்தல் தொகு


26 மேலும் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
27 இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பினர் எதுவரை எனக்கெதிராக முறுமுறுப்பர்? எனக்கெதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன்.
28 நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டியது, "ஆண்டவர் கூறுவதாவது: என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில் படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்;
29 எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள். [6]
30 நீங்கள் குடியிருக்கும்படி நான் வாக்களித்த நாட்டிற்குள் எப்புன்னே மகன் காலேபையும் நூன் மகன் யோசுவாவையும் தவிர ஒருவருமே வரமாட்டீர்கள்.
31 ஆனால் இரையாகிவிடப்போவதாக நீங்கள் கருதிய உங்கள் குழந்தைகளை நான் கொண்டு போய்ச் சேர்ப்பேன்; நீங்கள் இழிவாய் எண்ணின நாட்டை அவர்கள் கண்டறிவார்கள்.
32 உங்களைப் பொறுத்தமட்டில் நீங்கள் இப் பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள்.
33 நாற்பது ஆண்டுகள் உங்கள் பிள்ளைகள் இப் பாலைநிலத்தில் அலைந்து திரிவர்; உங்கள் நம்பிக்கைத் துரோகத்திற்காக இப் பாலைநிலத்தில் உங்களுள் கடைசி ஆள் பிணமாக விழும்வரை அவர்கள் துன்புறுவர். [7]
34 நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப்பழியைச் சுமப்பீர்கள்; என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள்.
35 ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்; எனக்கெதிராக ஒன்றுகூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்துமுடிப்பேன்; இப்பாலைநிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்."


36 நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பி, பின் திரும்பி வந்து நாட்டைப் பற்றித் தவறான அறிக்கையைக் கொண்டுவந்து மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவருக்கு எதிராக முறுமுறுக்கச் செய்த ஆள்கள்,
37 அதாவது, நாட்டைப்பற்றித் தவறான அறிக்கை கொண்டு வந்த ஆள்கள் ஆண்டவர் முன்னிலையில் வாதையால் மாண்டனர்.
38 ஆயினும் நாட்டை உளவு பார்க்கச் சென்றவர்களில் நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் உயிர் தப்பி வாழ்ந்தனர்.

நாட்டைக் கைப்பற்றும் முதல் முயற்சி தொகு

(இச 1:41-46)
39 மோசே இவ்வார்த்தைகளை இஸ்ரயேல் மக்கள் எல்லாரிடமும் கூறினார்; மக்கள் மிகவும் அழுது புலம்பினர்.
40 அவர்கள் காலையில் எழுந்து, "இதோ நாம் இங்கிருந்து ஆண்டவர் வாக்களித்த இடத்திற்கு ஏறிச் செல்வோம்; நாம் பாவம் செய்து விட்டோம்" என்று சொல்லி மலையுச்சிகளை நோக்கிச் சென்றனர்.
41 அப்போது மோசே சொன்னது: ஏன் இப்போது ஆண்டவர் கட்டளையை மீறுகிறீர்கள்? அது நடக்கப் போவதில்லை.
42 உங்கள் எதிரிகளால் முறியடிக்கப்படாதபடி நீங்கள் ஏறிச் செல்ல வேண்டாம்; ஆண்டவர்தாம் உங்களிடையே இல்லையே!
43 அங்கே அமலேக்கியரும் கானானியரும் உங்களை எதிர்க்க இருக்கிறார்கள்; நீங்கள் வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள், ஏனெனில் ஆண்டவரைப் பின்பற்றுவதினின்று நீங்கள் விலகிவிட்டீர்கள்; ஆண்டவர் உங்களோடிருக்கமாட்டார்.


44 ஆனாலும் அவர்கள் மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்லத் துணிந்தனர்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ, மோசேயோ பாளையத்தை விட்டுப் புறப்படவேயில்லை.
45 அப்போது அம் மலை நாட்டில் தங்கியிருந்த அமலேக்கியரும் கானானியரும் இறங்கி வந்து அவர்களை முறியடித்து ஓர்மா மட்டும் அவர்களைத் துரத்திச் சென்றனர்.


குறிப்புகள்

[1] 14:9 = எபி 3:16.
[2] 14:18 = விப 20:5-6; 34:6-7; இச 5:9-10; 7:9-10.
[3] 14:13-19 = விப 32:11-14.
[4] 14:21-23 = எபி 3:18.
[5] 14:24 = யோசு 14:9-12.
[6] 14:29 = எபி 3:17.
[7] 14:33 = திப 7:36.

(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை