திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 51 முதல் 52 வரை

"ஆண்டவர் மண்ணுலகின் எல்லையினின்று முகில்கள் எழச் செய்கின்றார்; மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்; தம் கிடங்குகளினின்று காற்று வீசச்செய்கிறார்." - எரேமியா 51:16

அதிகாரம் 51 தொகு

எருசலேமின் வீழ்ச்சி தொகு


1 ஆண்டவர் கூறுவது இதுவே:
பாபிலோனுக்கும் கல்தேயாவின் குடிமக்களுக்கும் எதிராக
அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.


2 புடைப்போரைப் பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்;
அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்;
தண்டனை நாளில் அவர்கள் எப்பக்கத்தினின்றும்
அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்;
அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.


3 வில்வீரன் வில்லை நாணேற்ற விடாதீர்கள்!
தன் கவசத்தை அணிந்து நிற்க விடாதீர்கள்!
அதன் இளைஞர்கள் யாரையும் விட்டுவைக்காதீர்கள்;
அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.


4 கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில் வீழ்ந்து கிடப்பர்.
காயமடைந்தோர் அதன் தெருக்களில் கிடப்பர்.


5 தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்
இஸ்ரயேலையும் யூதாவையும் கைவிட்டுவிடவில்லை.
இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக்
கல்தேயரின் நாடு குற்றங்களால் நிறைந்துள்ளது.


6 பாபிலோன் நடுவினின்று தப்பியோடுங்கள்;
ஒவ்வொருவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளட்டும்;
அதன் குற்றகளுக்காக நீங்கள் அழிந்து போகாதீர்கள்;
இது ஆண்டவர் பழிவாங்கும் காலம்,
அவரே அதற்குத் தகுந்த தண்டனை வழங்குவார்;


7 பாபிலோன் ஆண்டவரின் கையில்
பொற்கிண்ணம்போல் இருந்தது;
அது மண்ணுலகு முழுவதற்கும் போதை ஊட்டியது;
மக்களினங்கள் அதன் திராட்சை இரசத்தைப் பருகின;
நாடுகள் வெறிகொண்டன. [1]


8 பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கிற்று;
அதற்காகப் புலம்பியழுங்கள்;
அதன் காயத்துக்கு மருந்து கொண்டு வாருங்கள்;
ஒருவேளை அது நலம் பெறலாம்!


9 நாங்கள் பாபிலோனைக் குணப்படுத்த முயன்றோம்;
அதுவோ நலம் அடைவதாயில்லை!
அதைக் கைவிட்டுவிடுங்கள்;
நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த நாட்டுக்குப் போவோம்;
பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்பு
விண்ணுலகை எட்டியுள்ளது;
அது வானத்தைச் சென்றடைந்துள்ளது. [2]


10 ஆண்டவர் நமக்கு நீதி வழங்கியுள்ளார்;
வாருங்கள்! நம் கடவுளான ஆண்டவரின் செயலைச்
சீயோனில் பறைசாற்றுவோம்.


11 அம்புகளைக் கூர்மையாக்குங்கள்;
கேடயங்களைக் கையிலெடுங்கள்;
ஆண்டவர் மேதிய அரசர்களைக் கிளர்ந்தெழச் செய்துள்ளார்;
பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்;
இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டு ஆண்டவர் பழிவாங்குவார்.


12 பாபிலோன் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள்;
காவலை வலுப்படுத்துங்கள்;
இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்;
கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்;
பாபிலோனின் குடிகளுக்கு எதிராக
ஆண்டவர் உரைத்திருந்ததைத்
தமது திட்டப்படியே நிறைவேற்றுவார்.


13 நீர்வளம் கொண்டவனே!
செல்வம் மிகுந்தவனே!
உனக்கு முடிவு வந்துவிட்டது;
உன் வாழ்நாளின் இழை துண்டிக்கப்பட்டுவிட்டது. [3]


14 வெட்டுக்கிளிகளைப் போன்று
எண்ணற்ற மனிதரால் உன்னைத் திண்ணமாய் நிரப்புவேன்;
அவர்கள் உனக்கு எதிராக வெற்றி முழக்கம் செய்வார்கள்,
என்று படைகளின் ஆண்டவர்
தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார்.


15 அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்;
தம் ஞானத்தால் பூவுலகை நிலைநாட்டினார்;
தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார்.


16 அவர் குரல் கொடுக்க,
வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகின்றது;
மண்ணுலகின் எல்லையினின்று முகில்கள் எழச் செய்கின்றார்;
மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்;
தம் கிடங்குகளினின்று காற்று வீசச்செய்கிறார்.


17 மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்;
கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;
அவர்களின் வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை;
அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை.


18 அவை பயனற்றவை, ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;
தம் தண்டனையின் காலத்தில் அவை அழிந்துவிடும்.


19 யாக்கோபின் பங்காய் இருப்பவரோ
இவற்றைப் போன்றவர் அல்லர்;
அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;
தம் உரிமைச் சொத்தாகிய இனத்தை
உருவாக்கியவரும் அவரே;
படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும்.


20 நீ என் சம்மட்டியும் படைக்கருவியும் ஆவாய்;
நான் உன்னைக்கொண்டு மக்களினங்களை நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு அரசுகளை அழித்தொழிப்பேன்.


21 உன்னைக்கொண்டு குதிரையையும்
குதிரைவீரனையும் நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு தேரையும்
தேரோட்டியையும் நொறுக்குவேன்.


22 உன்னைக்கொண்டு ஆணையும்
பெண்ணையும் நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு முதியோனையும்
சிறுவனையும் நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு இளைஞனையும்
இளம்பெண்ணையும் நொறுக்குவேன்;


23 உன்னைக்கொண்டு ஆயனையும்
அவனது மந்தையையும் நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு உழவனையும்
அவன் காளைகளையும் நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு ஆளுநர்களையும்
அதிகாரிகளையும் நொறுக்குவேன்;


24 பாபிலோனும் கல்தேயாவின் குடிகள் எல்லாரும்
சீயோனில் செய்த தீச்செயல் அனைத்தின் பொருட்டு,
உங்கள் கண்முன்னால் அவர்களைப் பழிவாங்குவேன்,
என்கிறார் ஆண்டவர்.


25 அழிவைக் கொணரும் மலையே,
மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே,
நான் உனக்கு எதிராய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர்.
நான் உனக்கு எதிராய் என் கையை நீட்டுவேன்;
உன்னைப் பாறை முகடுகளினின்று உருட்டிவிடுவேன்;
உன்னை எரிந்துபோன மலை ஆக்குவேன்.


26 மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ,
உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது;
நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய், என்கிறார் ஆண்டவர்.


27 மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்;
மக்களினங்கள் நடுவில் எக்காளம் ஊதுங்கள்;
அதனை எதிர்த்துப் போரிட
மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;
அதனை எதிர்க்குமாறு அரராத்து, மின்னி,
அஸ்கனாசு ஆகிய அரசுகளுக்கு அழைப்பு விடுங்கள்;
அதற்கு எதிராய்த் தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள்.
வெட்டுக்கிளிக் கூட்டம்போல் குதிரைகளைக் கொணருங்கள்.


28 அதனை எதிர்த்துப் போரிட
மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;
மேதிய மன்னர்கள், ஆளுநர்கள், அதிகாரிகளையும்
அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட
எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள்.


29 மண்ணுலகு நடுநடுங்கி,
வேதனையால் பதைபதைக்கிறது;
பாபிலோன் நாட்டை மக்கள் குடியிருப்பில்லாத
பாழ்நிலம் ஆக்கும் பொருட்டு அதற்கு எதிராக
ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள் நிலைக்கும்.


30 பாபிலோனின் படைவீரர்கள் போரிடுவதைக் கைவிட்டார்கள்;
அவர்கள் தங்கள் கோட்டைகளுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள்;
அவர்களின் வலிமை குன்றிப்போயிற்று.
அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள்.
அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின;
அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின.


31-32 ஓர் அஞ்சற்காரன் அடுத்த அஞ்சற்காரனைச்
சந்திக்க ஓடுகின்றான்;
ஒரு தூதன் அடுத்த தூதனைச் சந்திக்க ஓடுகின்றான்;
'நகர் எல்லாப் பக்கங்களிலும் கைப்பற்றப்பட்டது;
கடவுத் துறைகள் பிடிப்பட்டன;
கோட்டை, கொத்தளங்கள் தீக்கிரையாயின;
படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்', எனப்
பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க அவர்கள் ஓடுகிறார்கள்.


33 இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
புணையடிக்கும் காலக் களத்துக்கு
மகள் பாபிலோன் ஒப்பாவாள்;
இன்றும் சிறிது காலத்தில்
அதன் அறுவடைக் காலம் வரும்.


34 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
என்னை விழுங்கிவிட்டான்;
அவன் என்னைக் கசக்கிப் பிழிந்து விட்டான்;
வெறுமையான பாத்திரம்போல் என்னை ஆக்கிவிட்டான்;
அரக்கன் போன்று என்னை விழுங்கிவிட்டான்;
என் அருஞ்சுவை உணவுகளால்
தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான்.
என்னைக் கொப்பளித்துத் துப்பிவிட்டான்.


35 'எனக்கும் என் உறவினர்க்கும் இழைக்கப்பட்ட கொடுமை
பாபிலோன் மேல் வரட்டும்'
என்று சீயோன் குடிகள் கூறட்டும்;
'என் இரத்தப் பழி கல்தேயக் குடிகள்மீது வந்துவிழட்டும்,'
என்று எருசலேம் சொல்லட்டும்.


36 எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நானே உனக்காக வழக்காடுவேன்;
உன் பொருட்டுப் பழிவாங்குவேன்;
அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்;
அதன் நீரூற்றுகள் காய்ந்துபோகச் செய்வேன்.


37 பாபிலோன் பாழ்மேடு ஆகும்;
குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும்.
அது குடியிருப்பாரற்றுப்
பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் உள்ளாகும்.


38 அவர்கள் சிங்கங்களைப்போல் சேர்ந்து கர்ச்சிப்பார்கள்;
சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள்.


39 அவர்கள் கொதித்தெழுந்தபொழுது
நான் அவர்களுக்கு விருந்து அளிப்பேன்;
அவர்கள் மயங்கி மகிழுமாறு
போதையுறும்வரை குடிக்கச் செய்வேன்;
அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்;
துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.


40 செம்மறிக்குட்டிகள், ஆட்டுக்கிடாய்கள்,
வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று,
நான் அவர்களைக் கொலைக் களத்திற்குக் கொண்டுபோவேன்.


41 சேசாக்கு இப்படிப் பிடிபட்டுப் போயிற்றே!
மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம் இப்படிக்
கைப்பற்றப் பட்டுவிட்டதே!
மக்களினங்கள் நடுவே பாபிலோன்
பாழடைந்துபோனது எவ்வாறு?


42 கடலானது பாபிலோன்மீது கொந்தளித்து வந்துள்ளது;
ஆர்ப்பரிக்கும் அலைகளால் அது மூடப்பட்டுவிட்டது.


43 அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன;
அது வறண்ட பாலைநிலமாய் மாறிவிட்டது;
அந்நாட்டில் குடியிருப்போர் யாரும் இல்லை;
எவரும் அதனைக் கடந்து செல்லமாட்டார்.


44 நான் பாபிலோனில் பேலைத் தண்டிப்பேன்;
அது விழுங்கினதை அதன் வாயினின்று கக்கச்செய்வேன்;
மக்களினங்கள் இனி ஒருபோதும் அங்குச் செல்லமாட்டா;
பாபிலோன் மதிலும் தரைமட்டமாக்கப்படும்.


45 என் மக்களே, அதனின்று வெளியேறுங்கள்;
ஆண்டவரின் வெஞ்சினத்தினின்று
ஒவ்வொருவனும் தன் உயிரைக் காத்துக்கொள்ளட்டும்.


46 உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்;
நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக் கலங்காதீர்கள்;
ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்;
மறு ஆண்டில் மற்றொரு வதந்தி உருவெடுக்கும்;
நாட்டில் வன்முறை மலியும்;
ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய் எழுவான்.


47 எனவே நாள்கள் வருகின்றன.
அப்பொழுது நான் பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன்.
அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்;
கொலையுண்டோர் அனைவரும் அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர்.


48 விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அனைத்தும்
பாபிலோனைக் குறித்து மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்;
வடக்கினின்று 'அழிப்போர்' அதை எதிர்த்து வருவர்,
என்கிறார் ஆண்டவர். [4]


49 பாபிலோனை முன்னிட்டு மண்ணுலகு எங்கும்
மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்;
இஸ்ரயேலில் கொலையுண்டோரை முன்னிட்டு
இப்போது பாபிலோன் வீழ்ச்சியுற வேண்டும். [5]


50 வாளுக்குத் தப்பியவர்களே,
போய்விடுங்கள், நிற்காதீர்கள்;
தொலையிலிருந்து ஆண்டவரை நினைவுகூருங்கள்;
உங்கள் இதயத்தில் எருசலேம் இடம்பெறட்டும்.


51 பழிமொழி கேட்டதால் நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்;
ஆண்டவரது இல்லத்தின் திருஇடங்களுக்குள்
அன்னியர் நுழைந்துவிட்டதால்,
மானக்கேடு எங்கள் முகங்களை மூடிக்கொண்டது.


52 ஆகவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்.
நான் அதன் சிலைகளைத் தண்டிப்பேன்;
அந்நாடு எங்கணும் காயம்பட்டோர் குமுறியழுவர்.


53 பாபிலோன் வானம்வரை தன்னை உயர்த்திக் கொண்டாலும்,
தன் உயர்ந்த கோட்டை கொத்தளங்களை
வலுப்படுத்திக் கொண்டாலும்,
அழிப்போரை நான் அதன் மீது அனுப்புவேன்,
என்கிறார் ஆண்டவர்.


54 பாபிலோனிலிருந்து கூக்குரல் கேட்கிறது;
கல்தேயரின் நாட்டிலிருந்து பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.


55 ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்;
அதன் பெரும் ஆரவாரத்தை அடக்குகிறார்;
அவர்களின் அலைகள் பெரும் வெள்ளம்போல் முழங்கும்.
அவர்கள் உரத்த குரலில் ஆரவாரம் செய்வர்.


56 'அழிப்போன்' பாபிலோன் மீதே வந்துவிட்டான்.
அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள்.
அவர்கள் அம்புகள் முறித்தெறியப்பட்டன.
ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்;
அவர் திண்ணமாய்ப் பதிலடி கொடுப்பார்.


57 அதன் தலைவர்கள், ஞானிகள், ஆளுநர்கள்,
படைத்தலைவர்கள், படைவீரர்கள் ஆகிய எல்லாரையும்
நான் குடிவெறி கொள்ளச்செய்வேன்.
அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்;
துயில் எழவே மாட்டார்கள், என்கிறார்
'படைகளின் ஆண்டவர்' என்னும் பெயர் கொண்ட மன்னர்.


58 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
பாபிலோனின் அகன்ற மதில்கள்
முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்;
அதன் உயர்ந்த வாயில்கள் தீக்கிரையாகும்;
மக்களின் உழைப்பு வீணாகும்;
மக்களினங்களின் முயற்சிகள் தீயோடு தீயாகும்.


59 யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில்,
மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும்
அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா
செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது,
இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை:
60 பாபிலோன் மேல் வரவிருந்த
தண்டனைகள் அனைத்தையும்,
அதாவது பாபிலோன் மேல் குறித்து
மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும்
எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார்.
61 எரேமியா செராயாவிடம் கூறியது:
நீ பாபிலோனை அடைந்தபின்,
இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி.
62 'ஆண்டவரே, மனிதரோ விலங்கோ
எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு
நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்' எனச் சொல்.
63 இச்சுருளை வாசித்து முடித்த பின்னர்,
அதை ஒரு கல்லில் கட்டி, யூப்பிரத்தீசு நடுவே எறிந்துவிடு.
64 'நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர்,
அது மீண்டும் தலைதூக்க முடியாமல்,
இவ்வாறே மூழ்கிப்போகும்' என்று சொல்.


எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும். [6] [7]


குறிப்புகள்

[1] 51:7 = திவெ 17:2-4; 18:3.
[2] 51:9 = திவெ 18:5.
[3] 51:13 = திவெ 17:1.
[4] 51:48 = திவெ 18:20.
[5] 51:49 = திவெ 18:24.
[6] 51:63-64 = திவெ 18:21.
[7] 50:1-51:64 = எசா 13:1; 14:23; 47:1-15.


அதிகாரம் 52 தொகு

எருசலேமின் வீழ்ச்சி தொகு

(2 அர 24:8-25:7)


1 செதேக்கியா அரசனானபோது
அவனுக்கு வயது இருபத்தொன்று.
அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள்
அமுற்றாள் என்பவரே அவன் தாய்.
2 யோயாக்கிம் செய்தது போல,
செதேக்கியாவும் ஆண்டவரின் பார்வையில்
தீயதெனப்பட்ட அனைத்தையும் செய்தான்.
3 ஆண்டவர் எருசலேமையும் யூதாவையும்
தம் முன்னிலையினின்று தள்ளிவிடும் அளவுக்கு
அவற்றின்மீது சினம் கொண்டார்;
செதேக்கியா பாபிலோனிய மன்னனுக்கு
எதிராகக் கிளர்ச்சி செய்தான்.


4 அவனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு,
பத்தாம் மாதம், பத்தாம் நாளில்,
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
தன் எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து,
பாளையம் இறங்கி, அதைச் சுற்றிலும்
முற்றுகைத் தளம் எழுப்பினான். [1]
5 இவ்வாறு, அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற
பதினொன்றாம் ஆண்டு வரை,
நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.
6 நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் பஞ்சம் கடுமை ஆயிற்று.
நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.
7 அப்பொழுது நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது.
போர்வீரர் அனைவரும் அரசப் பூங்காவின்
இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக
இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி,
அராபாவை நோக்கித் தப்பியோடினர்.
கல்தேயரோ நகரைச் சுற்றி
முற்றுகையிட்டவண்ணம் இருந்தனர். [2]
8 கல்தேயப் படையினர் அரசன் செதேக்கியாவைப்
பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்;
அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று.
9 அவர்கள் அரசனைப் பிடித்து,
ஆமாத்து நாட்டின் இரிப்பலாவில் இருந்த
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள்.
மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.
10 பாபிலோனிய மன்னன் இரிப்லாவில்
செதேக்கியாவின் புதல்வர்களை
அவன் கண் முன்னே கொன்றான்;
மேலும், யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான்.
11 பாபிலோனிய மன்னன்
செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின்,
விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்;
அவன் சாகும்வரை அவனைச் சிறையில் அடைத்தான். [3]

திருக்கோவில் அழிவுறுதல் தொகு

(2 அர 25:8-17)


12 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற
பத்தொன்பதாம் ஆண்டு,
ஐந்தாம் மாதம், பத்தாம் நாளன்று,
அவனுக்குப் பணிசெய்து வந்த மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான்
எருசலேமுக்குள் நுழைந்தான்.
13 ஆண்டவரின் இல்லத்தையும் அரச அரண்மனையையும்
எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும்
அவன் தீக்கிரையாக்கினான்;
பெரிய வீடுகளை எல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கினான். [4]
14 மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்த
கல்தேயப் படையினர் அனைவரும்
எருசலேமைச் சுற்றிலும் இருந்த
மதில்களை எல்லாம் தகர்த்தெறிந்தனர்.
15 மெய்க்காப்பாளர் தலைவர் நெபுசரதான்
ஏழை மக்களுள் சிலரையும்,
நகரில் எஞ்கியிருந்த மக்களையும்,
பாபிலோனிய மன்னிடம் சரணடைந்திருந்தவர்களையும்,
விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடுகடத்தினான்.
16 ஆனால் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான்
திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும்
கவனிக்கும் பொருட்டு
நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.


17 ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத் தூண்களையும்
தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும்
கல்தேயர் தூள்தூளாக்கி,
வெண்கலத்தை எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.
18 சாம்பல்சட்டிகள், அள்ளு கருவிகள்,
அணைப்பான்கள், பலிக் கிண்ணங்கள்,
தூபக்கலசங்கள், திருப் பணிக்குப் பயன்பட்ட
வெண்கலப் பாத்திரங்கள்
ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.
19 மேலும் பொன், வெள்ளியாலான கிண்ணங்கள்,
நெருப்புச் சட்டிகள், பலிக்கிண்ணங்கள்,
சாம்பல் சட்டிகள், விளக்குத் தண்டுகள்,
தூபக்கலசங்கள், நீர்மப்படையல் கிண்ணங்கள்
ஆகிய எல்லாவற்றையும்
மெய்காப்பாளர் தலைவன் எடுத்துச் சென்றான்.
20 சாலமோன் அரசர் ஆண்டவர் இல்லத்திற்கென்று செய்திருந்த
இரு தூண்கள், வெண்கலக் கடல்,
அதன் அடியில் இருந்த பன்னிரு வெண்கலக் காளைகள்,
தள்ளுவண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்து மாளாது.
21 தூண் ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்;
சுற்றளவு பன்னிரண்டு முழம்;
வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை.
உள்ளே கூடாய் இருந்தது.
22 தூணின் உச்சியில் ஐந்து முழ உயரமுள்ள
வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது.
போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலும்
மாதுளம்பழ வடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன.
மாதுளம்பழ வடிவங்கள் கொண்ட மறு தூணும்
அவ்வாறே செய்யப்பட்டிருந்தது.
23 வலைப் பின்னலைச் சுற்றிலும் அமைக்கப் பெற்றிருந்த
மொத்தம் நூறு மாதுளம் பழ வடிவங்களுள்,
தொண்ணூற்றாறு பக்கவாட்டில் தெரிந்தன. [5]


(2 அர 25:18-21, 27-30)


24 மெய்க்காப்பாளர் தலைவன்,
தலைமைக் குரு செராயாவையையும்
துணைக் குரு செப்பனியாவையும்
வாயிற்காவலர் மூவரையும் சிறைப்பிடித்தான்.
25 போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும்,
நகரில் இருந்த அரசவையோருள் எழுவரையும்,
படைத் தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும்,
நகருள் கண்ட பொது மக்களுள் அறுபது பேரையும்
அவன் நகரினின்று கடத்தினான்.
26 மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதோன்
இவர்களைப் பிடித்து,
இரிப்லாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான்.
27 ஆமாத்து நாட்டின் இரிப்லாவில்
பாபிலோனிய மன்னன் இவர்களை வதைத்துக் கொன்றான்.
இவ்வாறு யூதா மக்கள்
தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.


28 நெபுகத்னேசர் நாடுகடத்திய மக்களின் எண்ணிக்கை வருமாறு:
அவன் ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில்
யூதா நாட்டினர் மூவாயிரத்து இருபத்து மூன்று பேர்;
29 அவன் பதினெட்டாம் ஆண்டில்
எருசலேமினின்று நாடுகடத்தப்பட்டோர்
எண்ணூற்று முப்பத்திரண்டு பேர்;
30 அவன் இருபத்து மூன்றாம் ஆண்டில்
மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நாடுகடத்திய
யூதா நாட்டினர் எழுநூற்று நாற்பத்தைந்து பேர்.
ஆக, நாடு கடத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை
நாலாயிரத்து அறுநூறு.


31 யூதாவின் அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின்
முப்பத்தேழாம் ஆண்டு
பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் நாளன்று,
அதாவது பாபிலோனிய மன்னன் எவில்மெரதாக்கு
ஆட்சியேற்ற ஆண்டில்,
அவன் யூதாவின் அரசன் யோயாக்கினைத்
தலைநிமிரச் செய்து,
சிறையினின்று விடுவித்தான்.
32 அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசி,
பாபிலோனில் தன்னோடு இருந்த அரசர்களுக்கு
இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான்.
33 எனவே யோயாக்கின்
தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்;
தன் வாழ்நாள் எல்லாம்
அரசனுடன் தவறாது விருந்துண்டுவந்தான்.
34 அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக,
அவன் சாகுமட்டும்,
அதாவது அவன் வாழ்நாள் முழுவதும்,
பாபிலோனிய மன்னன் அவனுக்கு உதவித் தொகையை
ஒவ்வொரு நாளும் ஒழுங்காகக் கொடுத்து வந்தான்.


குறிப்புகள்

[1] 52:4 எசே 24:2.
[2] 52:7 = எசே 33:21.
[3] 52:11 = எசே 12:13.
[4] 52:13 = 1 அர 9:8.
[5] 52:17-23 = 1 அர 7:15-47.


(எரேமியா நூல் நிறைவுற்றது)



(தொடர்ச்சி): புலம்பல்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை