திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

"உங்களுக்கு என் மீது அச்சமில்லையா? என்கிறார் ஆண்டவர்...கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன். இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு, அதனைக் கடக்க முடியாது. அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்; எனினும் அதன்மேல் வெற்றி கொள்ள முடியாது" - எரேமியா 5:22.

அதிகாரம் 5 தொகு

எருசலேம் படையெடுப்புக்கான காரணங்கள் தொகு


1 நீதியைக் கடைப்பிடித்து
உண்மையை நாடும் ஒரு மனிதரைக்
கண்டுபிடிக்க முடியுமாவென
எருசலேமின் தெருக்களில் சுற்றிப் பார்த்துத் தெரிந்துகொள்;
அவளுடைய பொது இடங்களில் கவனமாய்த் தேடிப்பார்;
கண்டுபிடித்தால், அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.


2 வாழும் ஆண்டவர் மேல் அவர்கள் ஆணையிடலாம்;
ஆனால் அது பொய்யாணையே.


3 ஆண்டவரே,
உம் கண்கள் பற்றுறுதியை அன்றோ நோக்குகின்றன!
நீர் அவர்களை நொறுக்கினீர்;
அவர்களோ வேதனையை உணரவில்லை;
நீர் அவர்களை அழித்தீர்;
அவர்களோ திருந்த மறுத்தனர்;
அவர்கள் தங்கள் முகத்தைப்
பாறையினும் கடியதாக இறுக்கிக்கொண்டனர்.
என்னிடம் திரும்பிவர மறுத்தனர்.


4 நான் 'அவர்கள் தாழ்நிலையில் உள்ளவர்கள்;
அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்' என எண்ணினேன்;
ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும்,
தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறியாதிருக்கின்றார்கள்.


5 நான் உயர் நிலையில் உள்ளவர்களிடம் போய்,
அவர்களிடம் பேசுவேன்.
ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும்,
தம் கடவுளின் நெறிமுறைகளையும்
அறிந்தவர்களாய் இருக்கிறார்கள் என நினைத்தேன்.
ஆனால், அவர்களும் நுகத்தை முறித்தார்கள்;
தளைகளை அறுத்தார்கள்.


6 எனவே காட்டுச் சிங்கம் அவர்களைக் கொல்லும்,
பாலைநிலத்து ஓநாய் அவர்களை அழிக்கும்,
சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல் கண்வைத்திருக்கும்;
அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும்
பீறிக் கிழித்தெறியப்படுவர்.
ஏனெனில், அவர்கள் வன்செயல்கள் பல செய்தனர்;
என்னை விட்டுப் பன்முறை விலகிச் சென்றனர்.


7 நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்?
உன் மக்கள் என்னைப் புறக்கணித்தார்கள்;
தெய்வங்கள் அல்லாதவைமீது ஆணையிட்டார்கள்;
அவர்கள் உண்டு நிறைவடையுமாறு செய்தேன்;
அவர்களோ விபசாரம் பண்ணினார்கள்;
விலைமாதர் வீட்டில் கூடினார்கள்;


8 தின்று கொழுத்து மோக வெறி கொண்ட குதிரைகள்போல்,
ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவன் மனைவியை
நோக்கிக் கனைக்கிறான்.


9 இவற்றிற்காக நான் தண்டிக்க மாட்டேனா?
என்கிறார் ஆண்டவர்.
இத்தகைய மக்களை நான் பழி வாங்காமல் இருப்பேனா?


10 திராட்சைத் தோட்டச் சுவர்கள் மீது ஏறி அழியுங்கள்;
எனினும் முற்றிலும் அழிக்க வேண்டாம்.
அதன் படர்கொடிகளை ஒடித்தெறியுங்கள்.
அவை ஆண்டவருடையவை அல்ல.


11 ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும்
எனக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர்,
என்கிறார் ஆண்டவர்.


12 அவர்கள் ஆண்டவரைக் குறித்துப் பொய்யாகச் சொன்னது:
"அவர் ஒன்றும் செய்யமாட்டார்;
நமக்குத் தீமை எதுவும் வராது;
வாளையும் பஞ்சத்தையும் நாம் காணப்போதில்லை. "


13 இறைவாக்கினர் பேசுவதெல்லாம்
காற்றோடு காற்றாய்ப் போகும்.
இறைவாக்கு அவர்களிடம் இல்லை;
அவர்கள் கூறியவாறு அவர்களுக்கே நிகழும்.

வரப்போகும் எதிரிகள் தொகு


14 ஆகவே படைகளின் கடவுளாகிய ஆண்டவர்
இவ்வாறு கூறுகிறார்:
"அவர்கள் இப்படிப் பேசியதால்
நான் உன் வாயில் வைக்கும் என் சொற்கள் நெருப்பாகும்.
உன் வாயில் வைத்த அவை
மரக்கட்டைகளாகிய இம்மக்களை எரித்துவிடும்.


15 இஸ்ரயேல் வீட்டாரே,
இதோ! தொலையிலிருந்து உங்களுக்கு எதிராக
ஓரினத்தை அழைத்து வருவேன், என்கிறார் ஆண்டவர்.
அது எதையும் தாங்கும் இனம்;
தொன்று தொட்டு நிலைத்து நிற்கும் இனம்.
அதன் மொழி உனக்குப் புரியாது;
அவர்கள் பேசுவது உனக்குப் புரியாது.


16 அவர்களது அம்புக் கூடு திறந்த கல்லறை போன்றது.
அவர்கள் அனைவரும் வலிமை வாய்ந்தவர்கள்.


17 அவர்கள் உன் விளைச்சலையும்
உணவையும் விழுங்கிவிடுவார்கள்;
புதல்வர், புதல்வியரை விழுங்கிவிடுவார்கள்;
உன் ஆடு மாடுகளை விழுங்கிவிடுவார்கள்;
உன் திராட்சைக் கொடிகளையும்
அத்தி மரங்களையும் விழுங்கிவிடுவார்கள்;
நீ நம்பியிருக்கும் உன் அரண்சூழ் நகர்களை
வாளால் அழிப்பார்கள்.


18 அந்நாள்களில்கூட நான் உங்களை
முற்றும் அழிக்கமாட்டேன்,"
என்கிறார் ஆண்டவர்.
19 "எங்கள் கடவுளாகிய ஆண்டவர்
எங்களுக்கு இவற்றை எல்லாம் ஏன் செய்தார்?" என
அவர்கள் கேட்கும்போது,
நீ அவர்களிடம்,
"நீங்கள் என்னைப் புறக்கணித்து
வேற்றுத் தெய்வங்களுக்கு உங்கள் நாட்டில்
ஊழியம் செய்ததுபோல்
உங்களுக்கு உரிமை இல்லாத நாட்டில்
வேற்று நாட்டாருக்கு நீங்கள்
ஊழியம் செய்வீர்கள்" என்று சொல்.

இறைவனின் எச்சரிக்கை தொகு


20 யாக்கோபின் வீட்டாருக்கு இதைப் பறைசாற்றுங்கள்;
யூதாவின் வீட்டாருக்கு அறிவியுங்கள்.


21 கண்ணிருந்தும் காணாத,
காதிருந்தும் கேளாத
மதிகெட்ட, இதயமற்ற மக்களே, கேளுங்கள்; [1]


22 உங்களுக்கு என் மீது அச்சமில்லையா?
என்கிறார் ஆண்டவர்.
என் முன்னிலையில் நீங்கள் நடுங்க வேண்டாமா?
கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன்.
இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு,
அதனைக் கடக்க முடியாது.
அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்;
எனினும் அதன்மேல் வெற்றி கொள்ள முடியாது.
அவைகள் சீறி முழங்கலாம்;
எனினும் அதனை மீற முடியாது. [2]


23 இம்மக்களோ கட்டுக்கடங்காதவர்,
பிடிவாத குணத்தினர்,
என்னை விட்டு விலகிச் சென்றனர்.


24 'தக்க காலத்தில் முன் மாரி,
பின் மாரியைத் தருபவரும்,
விளைச்சலுக்காகக் குறிக்கப்பட்ட வாரங்களை
நமக்காகக் காத்து வருபவருமான
நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவோம்'
என்னும் எண்ணம் அவர்கள் உள்ளத்தில் எழவில்லை.


25 உங்கள் குற்றங்கள் இவற்றை எல்லாம் தடுத்தன;
உங்கள் பாவங்களே உங்களுக்கு
நன்மை வராமலிருக்கச் செய்தன.


26 ஏனெனில், என் மக்களிடையே
தீயோர் காணப்படுகின்றனர்;
வேடர் பதுங்கியிருப்பதுபோல்
அவர்கள் மறைந்து கண்ணி வைத்து
மனிதர்களைப் பிடிக்கின்றனர்.


27 பறவைகளால் கூண்டு நிறைந்திருப்பது போல,
அவர்களின் வீடுகள் சூழ்ச்சிவழி கிடைத்த
பொருள்களினால் நிறைந்துள்ளன.
இவ்வாறு அவர்கள் பெரியவர்களும்
செல்வர்களும் ஆனார்கள்.


28 அவர்கள் கொழுத்துத்
தளதளவென்றிருக்கின்றார்கள்;
அவர்களின் தீச்செயல்களுக்குக் கணக்கில்லை;
வழக்குகளை நீதியுடன் விசாரிப்பதில்லை;
அனாதைகள் வளம்பெறும் வகையில்
அவர்கள் வழக்கை விசாரிப்பதில்லை.
ஏழைகளின் உரிமைகளை நிலைநாட்டுவதுமில்லை.


29 இவற்றிற்காக நான் இவர்களைத் தண்டிக்க வேண்டாமா?
என்கிறார் ஆண்டவர்.
இத்தகைய மக்களினத்தை நான் பழிவாங்காமல் விடுவேனா?


30 திகைப்பும் திகிலும் ஊட்டும்
நிகழ்ச்சி நாட்டில் நடக்கின்றது.


31 இறைவாக்கினர் பொய்யை இறைவாக்காக உரைக்கின்றனர்;
குருக்கள் தங்கள் விருப்பப்படியே அதிகாரம் செலுத்துகின்றனர்;
இதையே என் மக்களும் விரும்புகின்றனர்;
ஆனால் முடிவில் என்ன செய்வீர்கள்?


குறிப்புகள்

[1] 5:21 = எசா 6:9-10; எசே 12:2; மாற் 8:18.
[2] 5:22 = யோபு 38:8-11.


அதிகாரம் 6 தொகு

எருசலேமைச் சுற்றிலும் எதிரிகள் தொகு


1 பென்யமின் மக்களே!
எருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்;
தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்;
பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்;
ஏனெனில் வடக்கிலிருந்து
தீமையும் பேரழிவும் வருகின்றன.


2 மகள் சீயோனை
வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன். [1]


3 ஆயர்கள் தங்கள் மந்தையோடு
அவளிடம் வருவார்கள்;
அவளைச் சுற்றிலும் கூடாரங்கள் அடிப்பார்கள்;
அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.


4 "அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்;
எழுந்திருங்கள்;
நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்;
ஐயோ! பொழுது சாய்கின்றதே!
மாலை நேரத்து நிழல்கள் நீள்கின்றனவே!


5 எழுந்திருங்கள்;
இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்;
அவள் அரண்மனைகளை அழிப்போம்" என்பார்கள்.


6 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
அவளுடைய மரங்களை வெட்டுங்கள்;
எருசலேமுக்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்புங்கள்;
அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்;
அவளிடம் காணப்படுவது அனைத்தும் கொடுமையே.


7 கேணியில் நீர் சுரந்து கொண்டிருப்பது போல்
அவள் தீமைகளைச் சுரந்து கொண்டிருக்கின்றாள்.
வன்முறை, அழிவு என்பதே அவளிடம் எழும் குரல்;
நோயும் காயமுமே என்றும் என் கண்முன் உள்ளன.


8 எருசலேமே, எச்சரிக்கையாய் இரு;
இல்லையேல், நான் உன்னைவிட்டு அகன்று போவேன்;
உன்னை மனிதர் வாழாப் பாழ்நிலம் ஆக்குவேன்.


9 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
திராட்சைக் கொடிகளில் தப்புப் பழங்களை
ஒன்றும் விடாது பறித்துச் சேர்ப்பது போல,
இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச்சேர்.
திராட்சைத் தோட்டக்காரரைப்போல்
கிளைகளிடையே உன் கையை விட்டுப் பார்.


10 நான் யாரிடம் பேசுவேன்?
யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்?
யார் செவி கொடுப்பார்?
அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை;
அவர்களால் செவிகொடுக்க முடியாது;
ஆண்டவரின் வாக்கு அவர்களுக்குப்
பழிச்சொல் ஆயிற்று;
அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை.


11 ஆண்டவரின் சீற்றம் என்னில் நிறைந்துள்ளது;
அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்;
ஆண்டவர் கூறுவது:
தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும்
ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும்
சினத்தைக் கொட்டு.
கணவனும் மனைவியும்,
முதியோரும் வயது நிறைந்தோரும் பிடிபடுவர்.


12 அவர்களுடைய வீடுகளையும் நிலங்களையும்
மனைவியரையும் பிறர் கைப்பற்றுவர்;
ஏனெனில், நாட்டில் குடியிருப்போருக்கு எதிராய்
என் கையை நீட்டப்போகிறேன்.


13 ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை
அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்;
இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை
அனைவரும் ஏமாற்றுவதையே
தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.


14 அமைதியே இல்லாதபொழுது,
'அமைதி, அமைதி' என்று கூறி
என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை
மேலோட்டமாகவே குணப்படுத்தினர். [2]


15 அருவருப்பானதைச் செய்தபோது
அவர்கள் வெட்கமடைந்தார்களா?
அப்போதுகூட அவர்கள் வெட்கமடையவில்லை;
நாணம் என்பதே என்னவென்று
அவர்களுக்குத் தெரியாது;
எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு
அவர்களும் வீழ்வர்;
நான் அவர்களைத் தண்டிக்கும்போது
அவர்கள் வீழ்த்தப்படுவர்,
என்கிறார் ஆண்டவர். [3]


16 ஆண்டவர் கூறுவது இதுவே:
சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்;
தொன்மையான பாதைகள் எவை?
நல்ல வழி எது? என்று கேளுங்கள்;
அதில் செல்லுங்கள்.
அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும்.
அவர்களோ, 'அவ்வழியே செல்ல மாட்டோம்' என்றார்கள். [4]


17 நான் உங்களுக்குக் காவலரை நியமித்தேன்.
'எக்காளக் குரலுக்குச் செவி கொடுங்கள்' என்றேன்.
அவர்களோ, 'செவிசொடுக்க மாட்டோம்' என்றார்கள்.


18 எனவே, நாடுகளே கேளுங்கள்;
மக்கள் கூட்டத்தாரே,
அவர்களுக்கு என்ன நேரப்போகிறது என்று பாருங்கள்.


19 நிலமே, நீயும் கேள்;
இதோ! இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன்.
அவர்களின் தீய எண்ணங்களின்
விளைவே இத்தீமை.
ஏனெனில், அவர்கள் என் சொற்களுக்குச்
செவிசாய்க்கவில்லை;
என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.


20 சேபா நாட்டுத் தூபமும்
தூரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு?
உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல.
உங்களின் மற்றைய பலிகளும்
எனக்கு உவகை தருவதில்லை.


21 ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ இம் மக்களுக்கு எதிராகத்
தடைக்கற்களை வைக்கப்போகிறேன்.
தந்தையரும் தனயரும் ஒன்றாகத் தடுக்கி விழுவர்;
அடுத்திருப்பாரும் நண்பரும் அழிந்து போவர்.


22 ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ! வடக்கு நாட்டினின்று ஓர் இனம் வருகின்றது;
மண்ணுலகின் கடை எல்லைகளினின்று
பெரிய நாடு ஒன்று கிளர்ந்து எழுகின்றது.


23 அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்;
அவர்கள் கொடியவர்; இரக்கமற்றவர்;
அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது;
மகளே சீயோன்!
அவர்கள் போருக்கு அணிவகுத்து
குதிரைகள் மீது வருகின்றார்கள்;
சவாரி செய்துகொண்டு உனக்கெதிராய் வருகின்றார்கள்;


24 "அவர்களைப் பற்றிய செய்தியை
நாம் கேள்வியுற்றபோது
நம் கைகள் தளர்ந்து போயின;
கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது;
பேறுகாலப் பெண்ணைப் போல்
நாம் தவிக்கின்றோம்.


25 வயல்வெளிக்குப் போகவேண்டாம்;
சாலைகளில் செல்ல வேண்டாம்;
ஏனெனில், எதிரியின் வாள் எங்கும் உள்ளது;
சுற்றிலும் ஒரே திகில்.


26 மகளாகிய என் மக்களே!
சாக்கு உடை உடுத்துங்கள்;
சாம்பலில் புரளுங்கள்;
இறந்த ஒரே பிள்ளைக்காகத்
துயருற்று அழுவது போல்,
மனமுடைந்து அழுது புலம்புங்கள்.
ஏனெனில், அழிப்பவன் திடீரென
நமக்கெதிராய் வருவான்."


27 நான் உன்னை என் மக்களுக்குள்
மதிப்பீடு செய்பவனாகவும்,
ஆய்வாளனாகவும் [5] ஏற்படுத்தினேன்;
நீ அவர்களின் வழிகளை அறிந்து மதிப்பீடு செய்வாய்.


28 அவர்கள் எல்லாரும் அடங்காத கலகக்காரர்கள்;
பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்;
அவர்கள் யாவரும் வெண்கலத்தையும்
இரும்பையும் போன்றவர்கள்;
அவர்களின் செயல்கள் கறைபட்டவை.


29 துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன;
காரீயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது.
தூய்மைப்படுத்தும் வேலை
தொடர்ந்து நடப்பதில் பயனில்லை;
ஏனெனில், தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.


30 அவர்கள் 'தள்ளுபடியான வெள்ளி'
என்று அழைக்கப்படுவார்கள்.
ஏனெனில், ஆண்டவர் அவர்களைப்
புறக்கணித்துள்ளார்.


குறிப்புகள்

[1] 6:2 "மகள் சீயோனை வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்"
என்பதன் வேறுபாடம்
"வளமான பசும்புல் தரையாகிய
மகள் சீயோனைஅழிப்பேன்".
[2] 6:14 = எசே 13:10.
[3] 6:12-15 = எரே 8:10-12.
[4] 6:16 = மத் 11:29.
[5] 6:27 "ஆய்வாளனாகவும்" என்பது "அரணாகவும்" எனவும் பொருள்படும்.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை