திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஒசேயா/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

"அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது. நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான்." - ஒசேயா 14:4-5


அதிகாரம் 13 தொகு

சிலைவழிபாட்டிற்கு வரும் தண்டனைத் தீர்ப்பு தொகு


1 எப்ராயிம் பேசியபோது ஏனையோர் நடுங்கினர்;
இஸ்ரயேலில் அவன்மிக உயர்ந்திருந்தான்;
ஆனால், பாகாலை வழிபட்ட குற்றத்திற்காய் மடிந்தான்.


2 இப்போதும், அவர்கள் பாவத்தின்மேல் பாவம் செய்கிறார்கள்;
சிலைகளைத் தங்களுக்கென வார்த்துக் கொள்கிறார்கள்;
அவர்களுடைய வெள்ளியில் செய்யப்பட்ட சிலைகள் அவை;
அவை யாவும் தட்டானின் கைவேலைகளே;
"இவற்றுக்குப் பலியிடுங்கள்" [1] என்கிறார்கள் அவர்கள்;
மனிதர் கன்றுக்குட்டிகளை முத்தமிடுகின்றார்கள்.


3 ஆதலால் அவர்கள் காலையில் காணும் மேகம்போலும்,
விரைவில் உலர்ந்து போகும் பனித்துளி போலும்,
சுழற்காற்றில் சிக்கிய களத்துத் துரும்பு போலும்
பலகணி வழியாய் வெளிப்பட்ட புகைபோலும் ஆவார்கள்.


4 எகிப்து நாட்டினின்று உன்னை விடுவித்த நாள் முதல்
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;
என்னைத் தவிர வேறு கடவுளை நீ அறியாய்;
என்னையன்றி வேறு மீட்பரும் இல்லை.


5 வறண்ட நிலமாகிய பாலைவெளியில்
உன்னை அறிந்து ஆதரித்தவர் நானே;


6 வளமான மேய்ச்சல் கிடைத்தபடியால்
அவர்கள் மன நிறைவுற்றார்கள்;
மன நிறைவடைந்ததும் செருக்குற்று என்னை மறந்து போனார்கள். [2]


7 ஆதலால் நான் அவர்களுக்கு ஒரு சிங்கம் போலிருப்பேன்;
வேங்கைப்போலப் பாயுமாறு வழியோரத்தில் மறைந்திருப்பேன்.


8 குட்டியைப் பறிகொடுத்த பெண் கரடிபோல்
அவர்கள்மேல் பாய்ந்து அவர்கள் நெஞ்சைக் கிழிப்பேன்;
சிங்கத்தைப் போல் அங்கேயே அவர்களைத் தின்றொழிப்பேன்;
காட்டுவிலங்கு அவர்களைக் கிழித்தெறியும்.


9 இஸ்ரயேலே, உன்னை நான் அழிக்கப் போகின்றேன்;
உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்? [3]


10 'எனக்கு அரசன் வேண்டும், தலைவர்கள் வேண்டும்'
என்று என்னிடம் கேட்டாய்.
உன்னை மீட்கும் அரசன் எங்கே? [4] [5]
உன் நகர் அனைத்திலும் உள்ள தலைவர்கள் எங்கே?


11 வேண்டா வெறுப்போடு உனக்கு நான் ஓர் அரசனைத் தந்தேன்;
என் சினத்தில் நான் அவனை அகற்றிவிட்டேன். [6]

அழிவு வருவது திண்ணம் தொகு


12 எப்ராயிமின் தீச்செயல் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது;
அவனுடைய பாவம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.


13 அவனுக்கான பேறுகால வேதனை வந்தாயிற்று;
ஆனால், அவன் ஓர் அறிவற்ற பிள்ளை;
பிறக்கும் நேரம் வந்து விட்டது;
ஆனால், கருப்பையை விட்டு வெளியேற மறுக்கிறான்.


14 பாதாளத்தின் பிடியினின்று அவர்களை விடுவிப்பேனோ?
சாவிலிருந்து அவர்களை மீட்பேனோ?
சாவே! உன் கொள்ளை நோய்கள் எங்கே?
பாதாளமே! உன் அழிவு வேலை எங்கே?
தற்போது இரக்கம் என்னிடம் இல்லை. [7]


15 எப்ராயிம் தன் சகோதரருள் கனி தரும் மரம் போலிருக்கலாம்;
ஆயினும் ஆண்டவரின் மூச்சாகிய கீழைக்காற்று
பாலை நிலத்திலிருந்து கிளம்பி வரும்;
வந்து அவனுடைய நீரோடைகளையும்,
நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும்.
அவனது கருவூலத்திலிருந்து விலையுயர்ந்த
பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போகும்.


16 சமாரியா தன் கடவுளை எதிர்த்துக் கலகமூட்டிற்று;
அது தன் குற்றப் பழியைச் சுமக்கும்;
அதன் குடிமக்கள் வாளால் மடிவார்கள்,
அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படுவார்கள்;
அவர்களுடைய கர்ப்பவதிகள் கிழித்தெறியப்படுவார்கள்.


குறிப்புகள்

[1] 13:2 - "பலிகளுடைய" என்பது எபிரேய பாடம்.
[2] 13:5-6 = இச 8:11-17.
[3] 13:9 - 'உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?" என்பதற்கு
"என்னில் உனக்கு உண்டு" என்பது எபிரேய பாடம்.
[4] 13:10 = "எங்கே?" என்பதற்கு "நானே" என்பது எபிரேய பாடம்.
[5] 13:10 = 1 சாமு 8:5-6.
[6] 13:11 = 1 சாமு 10:17-24; 15:26.
[7] 13:14 = 1 கொரி 15:55.


அதிகாரம் 14 தொகு

மன மாற்றத்திற்கு அழைப்பு தொகு


1 இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா;
நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்.


2 இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து
இவ்வாறு சொல்லுங்கள்:
"தீவினை அனைத்தையும் அகற்றியருளும்,
நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்;
நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்;


3 அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்;
குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்;
எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி,
'எங்கள் கடவுளே!' என்று இனிச் சொல்லமாட்டோம்;
திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்" எனச் சொல்லுங்கள்.


4 அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்;
அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன்.
அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது.


5 நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்;
அவன் லீலிபோல் மலருவான்;
லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான்.


6 அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்;
அவன் பொலிவு ஒலிவமரம் போல் இருக்கும்;
லெபனோனைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.


7 அவர்கள் திரும்பிவந்து என் [*] நிழலில் குடியிருப்பார்கள்;
கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள்.
திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள்.
லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும்.


8 இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு?
நானே அவனுக்குச் செவி சாய்த்து,
அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்;
நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன்.
உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும்.


9 ஞானம் நிறைந்தவன் எவனோ,
அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்;
பகுத்தறிவு உள்ளவன் எவனோ,
அவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்;
ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை;
நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்;
மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.


குறிப்பு

[*] 14:7 - "அவர்" என்பது எபிரேய பாடம்.


(ஒசேயா நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): யோவேல்:அதிகாரங்கள் 1 முதல் 3 வரை