திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஒசேயா/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

"ஏனெனில், நான் எப்ராயிமுக்குச் சிங்கத்தைப் போலவும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக் குட்டியைப்போலவும் இருப்பேன்; நான், நானே அவர்களைக் கவ்விப் பிடிப்பேன்; தூக்கிக்கொண்டு போவேன்; விடுவிப்பவன் எவனுமே இரான்." - ஒசேயா 6:14


அதிகாரம் 5 தொகு

குருக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும்
எதிரான குற்றச்சாட்டு
தொகு


1 குருக்களே, இதைக் கேளுங்கள்;
இஸ்ரயேல் குடும்பத்தாரே, கவனியுங்கள்;
அரசனின் வீட்டாரே, செவி கொடுங்கள்;
உங்களுக்கு எதிராகவே தீர்ப்புத் தரப்படுகின்றது;
நீங்கள் மிஸ்பாவில் ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்;
தாபோர்மீது விரிக்கப்பட்ட வலையுமாயிருக்கின்றீர்கள்.


2 வஞ்சகர்கள் கொலைத் தொழிலில் ஆழ்ந்துள்ளார்கள்;
அவர்கள் அனைவரையும் தண்டிப்பேன்.


3 எப்ராயிமை நான் அறிந்திருக்கிறேன்;
இஸ்ரயேல் எனக்கு மறைவானதன்று;
எப்ராயிமே! நீ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறாய்;
இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கின்றது;


4 அவர்களுடைய கடவுளிடம் திரும்பிவர
அவர்களின் செயல்கள் விடுவதில்லை;
ஏனெனில், விபசாரப் புத்தி அவர்களை ஆட்கொண்டுள்ளது;
ஆண்டவரைப்பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.


5 இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று கூறும்;
இஸ்ரயேலும் எப்ராயிமும் தங்கள் தீச்செயலால் இடறிவிழுவார்கள்;
யூதாவும் அவர்களோடு இடறிவிழுவான்.


6 தங்கள் ஆடு மாடுகளோடு அவர்கள் ஆண்டவரைத் தேடிப் போவார்கள்;
ஆனால் அவரைக் காணமாட்டார்கள்;
அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.


7 ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்;
ஏனெனில் அன்னியப் பிள்ளைகளைப் பெற்றார்கள்;
இப்பொழுதே அவர்களையும் அவர்கள் நிலங்களையும்
அமாவாசை விழுங்கப் போகிறது.


8 கிபயாவில் கொம்பு ஊதுங்கள்;
இராமாவில் எக்காளம் முழக்குங்கள்;
பெத்தாவேனில் போர்க்குரல் எழுப்புங்கள்;
பென்யமின்! உன்னைப் பின் தொடருகின்றார்கள்.


9 தண்டனை வழங்கப்படும் நாளில் எப்ராயிம் பாழாவான்;
இஸ்ரயேலின் குலங்களுக்கு உறுதியாய் நேரிடப் போவதையே அறிவிக்கின்றேன்.


10 யூதாவின் தலைவர்கள் எல்லைக்கல்லைத் தள்ளி வைக்கிறவர்களுக்கு ஒப்பாவார்கள்;
அவர்கள்மேல் என் கோபத்தை
வெள்ளப்பெருக்கைப்போல் கொட்டித் தீர்ப்பேன்.


11 எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்;
தண்டனைத் தீர்ப்பால் நொறுக்கப்படுகின்றான்;
அவன் வீணான கட்டளைகளைப் பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.


12 ஆகையால் எப்ராயிமுக்கு நான் விட்டில்போல் இருக்கின்றேன்;
யூதாவின் வீட்டாருக்குப் புற்றுநோய்போல் இருக்கின்றேன்.

வேற்று நாட்டுடன் செய்த மதியீனமான உடன்படிக்கை தொகு


13 எப்ராயிம் தன் பிணியைக் கண்டுகொண்டான்;
யூதா தன் காயத்தை உணர்ந்து கொண்டான்;
எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி,
யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான்.
ஆனால், உங்களைக் குணமாக்கவோ,
உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.


14 ஏனெனில், நான் எப்ராயிமுக்குச் சிங்கத்தைப் போலவும்,
யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக் குட்டியைப்போலவும் இருப்பேன்;
நான், நானே அவர்களைக் கவ்விப் பிடிப்பேன்;
தூக்கிக்கொண்டு போவேன்; விடுவிப்பவன் எவனுமே இரான்.
15 தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று, என்னைத் தேடி வரும்வரை,
நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன்.
தங்கள் துன்பத்திலே அவர்கள் என்னைத் தேடுவார்கள்.


அதிகாரம் 6 தொகு

இஸ்ரயேலரின் போலி மனமாற்றம் தொகு


1 "வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்;
நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்;
நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.


2 இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்;
மூன்றாம் நாளில் நம்மை எழுப்பி விடுவார்;
அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.


3 நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக;
அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது;
மழைபோலவும், நிலத்தை நனைக்கும்
இளவேனிற்கால மாரிபோலவும் அவர் நம்மிடம் வருவார்" என்கிறார்கள்.


4 எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்?
யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்?
உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும்
கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே!


5 அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்;
என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்று விட்டேன்;
எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது.


6 உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல,
இரக்கத்தையே விரும்புகின்றேன்;
எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன். [1]


7 அவர்களோ ஆதாம் [2] என்ற இடத்தில் உடன்படிக்கையை மீறினார்கள்;
அங்கே எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்.


8 கிலயாது கொடியோர் நிறைந்த நகர்; அதில் இரத்தக்கறை படிந்துள்ளது.


9 கொள்ளையர் கூட்டம் வழிப்போக்கருக்காகக் காத்திருப்பது போல்
குருக்களின் கூட்டம் செக்கேமுக்குப் போகிற வழியில்
காத்திருந்து கொலை செய்கின்றது; கொடுமையன்றோ அவர்கள் செய்வது!


10 இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் மிகக் கொடிய
செயலொன்றை நான் கண்டேன்;
அங்கே எப்ராயிமின் வேசித்தனம் இருந்தது,
இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருந்தது.


11 யூதாவே! உனக்கும் அறுவடைக்காலம் ஒன்று குறிக்கப்பட்டிருக்கின்றது.
நான் என் மக்களை நன்னிலைக்குத் திரும்பக் கொணரும் போது,


குறிப்புகள்

[1] 6:6 = மத் 9:13; 12:7.
[2] 6:7 - "ஆதாமைப்போல்" என்பது எபிரேய பாடம்.


(தொடர்ச்சி): ஒசேயா:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை