திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

சாமுவேல் இறைவாக்கினர் சவுலை ஆசீர்வதிக்கிறார். ஆங்கில விவிலிய ஓவியம். ஓவியர்: குஸ்தாவ் டொரே (1832–1883)


அதிகாரம் 9 தொகு

சவுல் சாமுவேலைச் சந்தித்தல் தொகு


1 பென்மியன் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்மியனின் அபியாவுக்குப் பிறந்த பெக்கோரத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குப் பிறந்தவர்.
2 அவருக்குச் சவுல் என்ற ஓர் இளமையும் அழகும் கொண்ட மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவர் எவரும் இலர். மற்ற அனைவரையும் விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர்.


3 சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, "பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேடிப்போ" என்றார்.
4 அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார்; அவற்றைக் காணவில்லை; சாலிம் நாட்டு வழியே சென்றார். அங்கும் அவை இல்லை. பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார், அங்கும் அவை தென்படவில்லை.
5 பிறகு அவர்கள் சூபு நாட்டுக்கு வந்தபோது, சவுல் தம் பணியாளிடம், "வா, நாம் திரும்பிச் செல்வோம். ஏனெனில் என் தந்தை கழுதைகளை மறந்துவிட்டு நம்மைப்பற்றிக் கவலைக் கொள்வார்."


6 அதற்குப் பணியாள் "இதோ, இந்நகரிலே கடவுளின் அடியவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெருமதிப்புக்கு உரியவர். அவர் சொல்வதெல்லாம் அப்படியே நிகழ்கிறது. ஆகவே நாம் அங்கே செல்வோம். ஒருவேளை நாம் செல்ல வேண்டிய வழி எதுவென்று அவர் நமக்கு எடுத்துரைப்பார்" என்றான்.
7 சவுல் தம் பணியாளிடம், "சரி, செல்வோம்; ஆனால் அவருக்கு நாம் என்ன கொடுப்போம்? ஏனெனில் நம் பைகளிலிருந்த அப்பம் தீர்ந்து விட்டது. கடவுளின் அடியவருக்கு அன்பளிப்புத் தர எதுவும் இல்லையே! என்ன செய்வோம்?" என்றார்.
8 பணியாள் சவுலை நோக்கி, "இதோ! என் கையில் இன்னும் மூன்று கிராம் அளவுள்ள வெள்ளி இருக்கிறது. அதைக் கடவுளின் அடியாருக்குத் தருவேன், அவர் நம் வழியை நமக்கு எடுத்துரைப்பார்" என்றான்.


9 அக்காலத்தில் இஸ்ரயேலில், கடவுளின் திருவுளத்தை நாடிச் செல்வோர் 'வாருங்கள், திருக்காட்சியாளரிடம் செல்வோம்' என்பர்; ஏனெனில் இன்றைய இறைவாக்கினர் அன்று 'திருக்காட்சியாளர்' என்று அழைக்கப்பட்டார்.
10 சவுல் தம் பணியாளிடம், "நீ சொன்னது சரியே, வா செல்வோம்" என்றார். அவர்கள் கடவுளின் அடியவர் இருந்த நகருக்குள் சென்றனர்.


11 அவர்கள் நகரில் மேட்டில் ஏறிக் கொண்டிருந்தபோது, இளம் பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதைக் கண்டு, அவர்களிடம், "திருக்காட்சியாளர் இங்கே இருக்கிறாரா?" என்று கேட்டனர்.
12 அதற்கு அவர்கள், "ஆம், உங்களுக்கு முன்பே வந்துவிட்டார். விரைந்து செல்லுங்கள். இன்று அவர் நகருக்குள் வந்துள்ளார். இன்று தொழுகை மேட்டில் மக்களுக்காகப் பலி செலுத்தப்படுகிறது.
13 நீங்கள் நகருக்குள் நுழையும் போது, உண்பதற்காக அவர் தொழுகைமேட்டிற்கு ஏறிச் செல்வதற்கு முன்பே அவரை நீங்கள் காண்பீர்கள். ஏனெனில் அவர் சென்று பலிக்கு ஆசி வழங்கும் வரை மக்கள் உண்ண மாட்டார்கள்; பிறகுதான் அழைக்கப்பட்டோர் உண்பர். உடனே சென்றால் இப்போதே நீங்கள் அவரைக் காணலாம்" என்றனர்.
14 அவ்வாறே அவர்கள் நகருக்குள் சென்றார்கள். அவர்கள் நகரின் மையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, தொழுகை மேட்டுக்கு வந்துகொண்டிருந்த சாமுவேல் அவர்களுக்கு எதிரே வந்தார்.


15 சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே சாமுவேல் செவியில் விழும்படி ஆண்டவர் வெளிப்படுத்தியிருந்தது:
16 "நாளை இந்நேரம் பென்யமின் நாட்டினன் ஒருவனை உன்னிடம் அனுப்புவேன். என் மக்களான இஸ்ரயேலின் தலைவனாக அவனை நீ திருப்பொழிவு செய். பெலிஸ்தியரின் கையினின்று அவன் என் மக்களை விடுவிப்பான். என் மக்களை நான் கண்ணோக்கினேன். அவர்களின் கூக்குரல் என்னிடம் வந்துள்ளது".
17 சாமுவேல் சவுலை கண்டதும், ஆண்டவர் அவரிடம் "இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான்" என்றார்.


18 சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, "திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும்" என்று கேட்டார். 19 சாமுவேல் சவுலுக்குக் கூறியது: "நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்.
20 மூன்று நாளுக்குமுன் காணாமற் போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவை அகப்பட்டுவிட்டன. இஸ்ரயேலின் முழு விருப்பமும் யார் மீது? உன் மீதும் உன் தந்தையின் வீட்டார் அனைவர் மீதும் அன்றோ?"
21 சவுல் மறுமொழியாகக் கூறியது: "இஸ்ரயேலில் மிகச் சிறிதான பென்யமின் குலத்தைச் சார்ந்தவனன்றோ நான்? பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறதன்றோ! பின்பு, நீர் ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகிறீர்?"


22 பின்னர், சாமுவேல் சவுலையும் அவருடைய பணியாளையும் உணவறைக்குக் கூட்டிவந்து, அழைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ முப்பது ஆள்களுள் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தார்.
23 மேலும் சாமுவேல் சமையல்காரனை நோக்கி, "நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப்படுத்தச் சொல்லியிருந்தேனே, அதைக் கொண்டு வந்து வை" என்றார்.
24 சமையல்காரன் ஒரு தொடையை அதன் மேற்பாதியோடு எடுத்து வந்து சவுலுக்குமுன் வைத்தான். அப்போது சாமுவேல் "இதோ! உனக்கு முன்பாக வைத்திருப்பதைச் சாப்பிடு. நான் மக்களை விருந்துக்கு அழைத்தது முதல், இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது" என்றார். அன்று சவுல் சாமுவேலுடன் உண்டார்.
25 பிறகு அவர்கள் தொழுகை மேட்டிலிருந்து இறங்கி நகருக்கு வந்தனர். சாமுவேல் சவுலுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்.

சாமுவேல் சவுலை அரசராய் திருநிலைப்படுத்தல் தொகு


26 அவர்கள் வைகறையில் துயில் எழுந்தனர். சாமுவேல் மாடியில் இருந்த சவுலை அழைத்து, "எழுந்திரு நான் உன்னை அனுப்பிவிடுகிறேன்" என்றார். சவுல் எழுந்தார். பின் அவரும் சாமுவேலும் இருவருமாக வெளியே சென்றனர்.
27 அவர்கள் நகரில் எல்லை வரை வந்த போது, சாமுவேல் சவுலை நோக்கி, "பணியாளை நமக்குமுன் நடந்து போகச் சொல்" என்றார். அவ்வாறே அவனும் முன்னே நடந்து சென்றான். அப்பொழுது சாமுவேல் சவுலிடம், "நீ சற்று நில். கடவுளின் வார்த்தையை நான் உனக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

அதிகாரம் 10 தொகு


1 அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து, அவரை முத்தமிட்டுக் கூறியது: "ஆண்டவர் தம் உரிமைச் சொத்துக்குத் தலைவனாக இருக்கும்படி உன்னைத் திருப்பொழிவு செய்துள்ளார் அன்றோ?
2 இன்று நீ என்னைவிட்டுச் செல்லும்போது பென்யமின் எல்லையாம் செல்குவில் ராகேலின் கல்லறையருகே இரு மனிதரைக் காண்பாய். அவர்கள் உன்னிடம் 'நீங்கள் தேடிப்போன கழுதைகள் அகப்பட்டுவிட்டன; இதோ உன் தந்தை தம் கழுதைகளைப் பற்றிக் கவலையை விட்டு உனக்காக ஏங்கி 'என் மகனுக்காக என் செய்வேன்?' என்று கூறிக் கொண்டிருக்கிறார்' என்று சொல்வார்கள்.
3 நீ அங்கிருந்து மேலும் கடந்து சென்று தாபோரிலுள்ள கருவாலி மரத்தை அடைவாய். அங்குக் கடவுளை வழிபட பெத்தேலுக்குச் செல்லும் மூன்று மனிதர்கள் உன்னைச் சந்திப்பார்கள். ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும் இன்னொருவன் ஒரு மூன்று அப்பங்களையும், வேறொருவன் ஒரு தோற்பை திராட்சை இரசத்தையும் கொண்டிருப்பார்கள்.
4 அவர்கள் உன் நலம் கேட்டு, உன்னிடம் இரண்டு அப்பங்களைத் தர, அவர்கள் கைகளினின்று நீயும் பெற்றுக் கொள்வாய்.
5 அதன் பிறகு பெலிஸ்தியரின் எல்லைக் காவல் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்வாய். அங்கு நகருக்குள் நுழையும்போது தொழுகை மேட்டிலிருந்து இறங்கிவரும் ஒர் இறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அவர்களுக்கு முன்பாக யாழும், மேளமும், நாதசுரமும், சுரமண்டலமும் செல்லும். அவர்கள் பரவரமடைந்து பேசுவர்.
6 பிறகு ஆண்டவரின் ஆவி உன் மேல் வலிமையோடு வரும். நீயும் அவர்களோடு பரவசமடைந்து பேசுவாய். நீயும் வேறு மனிதனாய் மாற்றப்படுவாய்.
7 இந்த அறிகுறிகள் உனக்கு நேரிடும் போது, உன் கைக்கு வந்ததை நீ செய்து கொள். ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.
8 பிறகு நீ எனக்கு முன்பாகக் கில்காலுக்கு இறங்கிச் செல். எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பதற்காக நான் உன்னிடம் வருவேன். நான் உன்னிடம் வந்து நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்கும் வரை ஏழு நாள்கள் காத்திரு."


9 சவுல் சாமுவேலை விட்டுத் திரும்பியபொழுது, கடவுள் அவரின் உள்ளத்தை மாற்றினார். அன்றே இந்த எல்லா அறிகுறிகளும் நிறைவேறின.
10 அவர்கள் அந்த மலையை அடைந்த போது, இறைவாக்கினர் குழு அவரை எதிர் கொண்டது. கடவுளின் ஆவி அவரை வலிமையோடு ஆட்கொள்ள, அவர் அவர்கள் நடுவே பரவசம் அடைந்து பேசினார்.
11 அவரை ஏற்கெனவே அறிந்தவர்கள் அவர் இறைவாக்கினரோடு பரவசமடைந்து பேசுவதைக் கண்டார்கள். மக்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, "கீசின் மகனுக்கு என்ன நேரிட்டது? சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?" என்று கேட்டுக் கொண்டனர்.
12 அதற்கு அங்கிருந்தவருள் ஒருவன், "இவர்கள் தந்தை யார்?" என்று கேட்டான். ஆகவே, "சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?" என்ற பழமொழி உருவாயிற்று. [*]
13 அவர் பரவசமடைந்து பேசி முடித்தபின் தொழுகை மேட்டுக்கு வந்தார்.


14 அப்போது சவுலின் சிற்றப்பன், சவுலையும் அவர் வேலைக்காரனையும் நோக்கி, "நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்?" என்று வினவ, அவர், "நாங்கள் கழுதைகளைத் தேடிச் சென்றோம். அவை கிடைக்கவில்லை. எனவே சாமுவேலிடம் சென்றோம்" என்று சொன்னார்.
15 சவுலின் சிற்றப்பன், "சாமுவேல் உனக்குக் கூறியதைத் தயைகூர்ந்து எனக்குச் சொல்" என்றார்.
16 சவுல் தம் சிற்றப்பனிடம், "கழுதைகள் அகப்பட்டனவென்று அவர் எங்களுக்கு உறுதியாகச் சொன்னார்" என்றார். ஆனால் அரசு பற்றி சாமுவேல் சொன்ன செய்தியை அவருக்குச் சொல்லவில்லை.

சவுல் அரசராய் ஏற்படுத்தப்படல் தொகு


17 சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் அழைத்தார்.
18 பின்னர் அவர் இஸ்ரயேல் மக்களை நோக்கிக் கூறியது: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'நான் இஸ்ரயேலை எகிப்தினின்று கொண்டு வந்தேன். எகிப்தியர் கையினின்றும் உங்களைத் துன்புறுத்திய அனைத்து அரசுகளின் கைகளினின்றும் நான் உங்களை விடுவித்தேன்.
19 நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை இன்று புறக்கணித்து விட்டு, 'எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும்' என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்.'"


20 பிறகு சாமுவேல் அனைத்து இஸ்ரயேல் குலங்களையும் ஒருங்கே கொண்டு வர, பென்யமின் குலத்தின் மீது சீட்டு விழுந்தது.
21 பென்யமின் குலத்ததை அதன் குடும்பங்கள் வாரியாக ஒருங்கே கொண்டு வர, மதிரி குடும்பத்தின்மீதும் பிறகு கீசின் மகன் சவுலின் மீதும் சீட்டு விழுந்தது. அவரைத் தேடியபோது, அவரைக் காணவில்லை.
22 "ஆள் இங்கே வந்துவிட்டானா?" என்று அவர்கள் ஆண்டவரை வினவ, ஆண்டவர் "ஆம்! அவன் பொருட் குவியலிடையே ஒளிந்துள்ளான்" என்று கூறினார்.


23 அவர்கள் ஓடிச்சென்று அங்கிருந்து அவரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். மக்கள் நடுவே நின்றபோது அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார். மக்கள் அனைவரும் அவர் தோளுயரமே இருந்தார்கள்.
24 சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி, "ஆண்டவர் தேர்ந்தெடுத்தவரைப் பாருங்கள். மக்கள் அனைவரிலும் அவரைப்போல் வேறெவரும் உண்டோ?" என்றார். அப்போது மக்கள் அனைவரும் 'அரசர் நீடூழி வாழ்க!' என்று ஆர்ப்பரித்தனர்.


25 சாமுவேல் அரசின் சட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து, அதை ஓர் ஏட்டில் எழுதி, ஆண்டவர் திருமுன் வைத்தார். பிறகு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்தார்.
26 சவுலும் கிபயாவிலிருந்த தம் வீட்டிற்குச் சென்றார். கடவுளால் தூண்டப்பட்ட வீரர்கள் அவரோடு சென்றார்கள்.
27 ஆனால் தீயோர் சிலர், "இவன் நம்மை எவ்வாறு மீட்க முடியும்?" என்று கூறி, அவரைப் புறக்கணித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு எதுவும் தரவில்லை. அவரோ அமைதியாக இருந்தார்.

குறிப்பு

[*] 10:12 = 1 சாமு 19:23-24.

(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை