திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 3 முதல் 4 வரை

தாவீது அரசர் திருப்பாடல்களைக் கூற எழுத்தர் பதிவு செய்தல். விவிலியச் சுவடியின் பளிங்கு மேல் பொதியம். காலம்: சுமார் 11ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: லூவர், ஃபிரான்சு.

திருப்பாடல்கள் தொகு

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 3 முதல் 4 வரை

திருப்பாடல் 3 தொகு

காலை மன்றாட்டு தொகு

(தாவீதின் புகழ்ப்பா; தம் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிய போது அவர் பாடியது) [*]


1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்!
என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்!


2 'கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்' என்று
என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். (சேலா)


3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்;
நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.


4 நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்;
அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். (சேலா)


5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;
ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.


6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு
நான் அஞ்சமாட்டேன்.


7 ஆண்டவரே, எழுந்தருளும்;
என் கடவுளே, என்னை மீட்டருளும்;
என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்!
பொல்லாரின் பல்லை உடையும்!


8 விடுதலை அளிப்பவர் ஆண்டவர்;
அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! (சேலா)


குறிப்பு

[*] 3 தலைப்பு = 2 சாமு 15:13-17:22.


திருப்பாடல் 4 தொகு

மாலை மன்றாட்டு தொகு

(பாடகர் தலைவர்க்கு; நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் புகழ்ப்பா)


1 எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே,
நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்;
நான் நெருக்கடியில் இருந்தபோது,
நீர் எனக்குத் துணைபுரிந்தீர்;
இப்போதும் எனக்கு இரங்கி,
என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;


2 மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு
இழுக்கைக் கொண்டு வருவீர்கள்?
எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப்
பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)


3 ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்;
நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்;
- இதை அறிந்துகொள்ளுங்கள்.


4 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்;
படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி
அமைதியாயிருங்கள். (சேலா) [*]


5 முறையான பலிகளைச் செலுத்துங்கள்;
ஆண்டவரை நம்புங்கள்.


6 'நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?" எனக் கேட்பவர் பலர்.
ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.


7 தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட
மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.


8 இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்;
ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்
நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.


குறிப்பு

[*] 4:4 = எபே 4:26.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 5 முதல் 6 வரை