திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 93 முதல் 94 வரை

"அருமைமிகு அரசிள மகளிர்.உம்மை எதிர்கொள்வர்" (திருப்பாடல்கள் 45:9). தாவீது கிறித்துவுக்கும் திருச்சபைக்கும் திருமணம் நிகழ்வதை முன்னறிவிக்கிறார். மூலம்: "தெ பெர்ரி திருப்பாடல்கள் ஓவிய நூல்". 15ஆம் நூற்றாண்டு. பிரான்சு.

திருப்பாடல்கள் தொகு

நான்காம் பகுதி (90-106)
திருப்பாடல்கள் 93 முதல் 94 வரை

திருப்பாடல் 93 தொகு

கடவுளின் அரசாட்சி தொகு


1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்;
ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்;
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்;
அது அசைவுறாது.


2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றள்ளது;
நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர்.


3 ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன;
ஆறுகள் இரைச்சலிட்டன;
ஆறுகள் ஆரவாரம் செய்தன.


4 பெருவெள்ளத்தின் இரைச்சலையும்
கடலின் ஆற்றல்மிகு பேரலைகளையும்விட
ஆண்டவர் வலிமை மிக்கவர்;
அவரே உன்னதத்தில் உயர்ந்தவர்.


5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை;
ஆண்டவரே!
என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்.


திருப்பாடல் 94 தொகு

ஆண்டவரே அனைவரின் நீதிபதி தொகு


1 அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா! ஆண்டவரே!
அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா, ஒளிர்ந்திடும்! [*]


2 உலகின் நீதிபதியே, எழுந்தருளும்;
செருக்குற்றோர்க்கு உரிய தண்டனையை அளியும்.


3 எத்துணைக் காலம், ஆண்டவரே!
எத்துணைக் காலம் பொல்லார் அக்களிப்பர்?


4 அவர்கள் இறுமாப்புடன் பேசுகின்றனர்;
தீமைசெய்வோர் அனைவரும் வீம்பு பேசுகின்றனர்.


5 ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்;
உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.


6 கைம்பெண்டிரையும் அன்னியரையும்
அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்;
திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர்.


7 'ஆண்டவர் இதைக் கண்டுகொள்வதில்லை;
யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை' என்கின்றனர்.


8 மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்;
மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்?


9 செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ?
கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?


10 மக்களினங்களைக் கண்டிப்பவர்,
மானிடருக்கு அறிவூட்டுபவர்
தண்டியாமல் இருப்பாரோ?


11 மானிடரின் எண்ணங்கள் வீணானவை;
இதனை ஆண்டவர் அறிவார்.


12 ஆண்டவரே! நீர் கண்டித்து
உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர்
பேறுபெற்றோர்;


13 அவர்களின் துன்ப நாள்களில்
அவர்களுக்கு அமைதி அளிப்பீர்.
பொல்லார்க்குக் குழி வெட்டப்படும்.


14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்;
தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார்.


15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்;
நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர்.


16 என் சார்பில் பொல்லார்க்கு எதிராக எழுபவர் எவர்?
என் சார்பில் தீமை செய்வோர்க்கு எதிராக நிற்பவர் எவர்?


17 ஆண்டவர் எனக்குத் துணை நிற்காதிருந்தால்,
என் உயிர் விரைவில் மௌன உலகிற்குச் சென்றிருக்கும்!


18 'என் அடி சறுக்குகின்றது' என்று நான் சொன்னபோது,
ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று.


19 என் மனத்தில் கவலைகள் பெருகும்போது,
என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.


20 சட்டத்திற்குப் புறம்பாகத்
தீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர்
உம்மோடு ஒன்றாக இணைந்திருக்க முடியுமோ?


21 நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க
அவர்கள் இணைகின்றனர்;
மாசற்றோர்க்குக் கொலைத்தீர்ப்பு அளிக்கின்றனர்.


22 ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்;
என் கடவுள் எனக்குப் புகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார்.


23 அவர்கள் இழைத்த தீங்கை
அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்;
அவர்கள் செய்த தீமையின் பொருட்டு அவர்களை அழிப்பார்;
நம் கடவுளாம் ஆண்டவர் அவர்களை அழித்தே தீர்வார்.


குறிப்பு

[*] 94:1 1 கொரி 3:20.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 95 முதல் 96 வரை