திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

யாக்கோபு கிணற்றருகில் ராகேலைச் சந்திக்கிறார் (தொநூ 29). ஓவியர்: வில்லியம் டைஸ் (1806-1864).

அதிகாரம் 29 தொகு

லாபான் வீட்டை யாக்கோபு வந்தடைதல் தொகு


1 யாக்கோபு கீழ்த்திசை மக்களின் நாட்டை நோக்கிக்
காலெடுத்து வைத்துப் பயணமானார்.
2 இதோ! வயல்வெளியில் ஒரு கிணற்றையும்,
அதன் அருகே கிடை போட்டிருந்த ஆட்டுமந்தைகள் மூன்றையும் கண்டார்.
அந்தக் கிணற்றிலிருந்துதான் மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டப்படும்.
அதன் வாய் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.
3 மந்தைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபின்
இடையர்கள் கல்லைப் புரட்டி,
அவை குடித்து முடிந்ததும்,
மறுபடியும் கல்லைக் கிணற்று வாயின்மேல் தூக்கிவைப்பது வழக்கம்.


4 யாக்கோபு இடையர்களை நோக்கி,
'சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என,
அவர்கள்: 'நாங்கள் காரானிலிருந்து வருகிறோம்' என்றார்கள்.
5 மீண்டும் அவர்:
'நாகோரின் பேரன் லாபானை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்க,
அவர்கள், 'அவரை எங்களுக்குத் தெரியும்' என்றார்கள்.
6 'அவர் நலம்தானா?' என்று யாக்கோபு கேட்க,
அவர்கள் 'ஆம், அவர் நலமே.
இதோ! அவர் மகள் ராகேல்
தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள்' என்றார்கள்.
7 அப்பொழுது யாக்கோபு,
'பொழுது சாய இன்னும் வெகுநேரம் இருக்கிறது!
மந்தைகளை ஒன்றுசேர்ப்பதற்கு நேரம் ஆகவில்லை.
ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி,
மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லுங்கள்' என்றார்.
8 அதற்கு அவர்கள், 'நாங்கள் அப்படிச் செய்யக்கூடாது.
ஏனெனில், எல்லா மந்தைகளையும் ஒன்றுசேர்த்த பின்னரே
கிணற்று வாயினின்று கல் புரட்டப்படும்.
அப்பொழுதுதான் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்' என்று சொன்னார்கள்.
9 இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில்
ஆடு மேய்ப்பவளான ராகேல்
தன் தந்தையின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
10 ராகேல் தன் தாய்மாமன் லாபானின் மகள் என்றும்
ஆடுகள் அவனுடையவை என்றும் யாக்கோபு கண்டார்;
எனவே கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டித்
தன் தாய்மாமன் லாபானின் மந்தைக்குத் தண்ணீர் காட்டினார்;
11 பின் ராகேலை முத்தமிட்டுக்
கதறி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
12 பின்பு தாம் அவள் தந்தைக்கு உறவினர் என்றும்
ரெபேக்காவின் மகன் என்றும் அவளுக்குத் தெரிவிக்க,
உடனே அவள் ஓடிப்போய்த் தன் தந்தையிடம் சொன்னாள்.
13 தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன்
லாபான் அவருக்கு எதிர்கொண்டோடி,
அவரை அரவணைத்து முத்தமிட்டுத்
தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு யாக்கோபு தமக்கு நேர்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தார்.
14 லாபான் அவரிடம்,
'நீ என் எலும்பும் சதையுமல்லவா?' என்றான்.
அவனுடன் அவர் ஒரு மாத காலம் தங்கியிருந்தார்.

யாக்கோபு லேயாவையும் ராகேலையும் மணந்து கொள்ளல் தொகு


15 அதன்பின் லாபான் யாக்கோபை நோக்கி,
"நீ என் உறவினன் என்பதற்காக
ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா?
சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல்" என்றான்.
16 லாபானுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர்.
மூத்தவள் பெயர் லேயா; இளையவள் பெயர் ராகேல்.
17 ஆனால் லேயா மங்கிய பார்வை உடையவள்.
ராகேலோ வடிவழகும் எழில் தோற்றமும் உள்ளவள்.
18 யாக்கோபு ராகேலை விரும்பினார்.
எனவே அவர்,
"உம் இளைய மகள் ராகேலுக்காக
ஏழு ஆண்டுகள் உம்மிடம் வேலை செய்கிறேன்" என்றார்.
19 அதற்கு லாபான்,
"அவளை அன்னியன் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட,
உனக்குக் கொடுப்பதே மேல். என்னோடு தங்கியிரு" என்றான்.
20 அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் ராகேலை முன்னிட்டு வேலை செய்தார்.
ஆனால் அவர் அவள்மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால்
அது அவருக்குச் சில நாட்களாகவே தோன்றியது.


21 பின் யாக்கோபு லாபானை நோக்கி:
"நான் என் மனைவியோடு சேரும்பொருட்டு,
அவளை எனக்குத் தாரும்.
என் ஒப்பந்த நாள்கள் நிறைவெய்திவிட்டன" என்றார்.
22 ஆகவே லாபான் அவ்வூர் மக்கள் அனைவரையும் அழைத்துத்
திருமண விருந்தளித்தான்.
23 ஆனால், மாலையானதும் அவன் தன் மகள் லேயாவை
அழைத்துக் கொண்டுபோய் யாக்கோபிடம் விட,
அவர் அவளுடன் உறவு கொண்டார்.
24 லாபான் தன் மகள் லேயாவுக்குப் பணிபுரியத்
தன் பணிப்பெண் சில்பாவைக் கொடுத்தான்.
25 அதிகாலையில் அந்தப் பெண் லேயா என்று கண்டு,
யாக்கோபு லாபானை நோக்கி:
"நீர் எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்?
ராகேலுக்காக அல்லவா நான் உம்மிடம் வேலைசெய்தேன்?
என்னை ஏமாற்றியது ஏன்?' என்றார்.
26 அதற்கு லாபான்:
"மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கமில்லை.
27 ஆகையால் நீ இவளோடு ஏழு நாள்களைக் கழி.
இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால்
அவளையும் உனக்குக் கொடுப்பேன்" என்றான்.
28 அவ்வாறே யாக்கோபு லேயாவுடன் ஏழு நாள்களைக் கழித்தார்.
அதன் பின் லாபான் தன் மகள் ராகேலை அவருக்கு மனைவியாகக் கொடுத்தான்.
29 லாபான் தன் மகள் ராகேலுக்குப் பணிபுரியத்
தன் பணிப்பெண் பில்காவைக் கொடுத்தான்.
30 யாக்கோபு ராகேலுடன் கூடிவாழ்ந்தார்.
அவளை லேயாவைவிட அதிகம் நேசித்தார்.
லாபானிடம் மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்தார்.

யாக்கோபின் புதல்வர்கள் தொகு


31 இப்படியிருக்க லேயா வெறுப்புக்குள்ளானதை ஆண்டவர் கண்டு
அவருக்குத் தாய்மைப்பேறு அருளினார்.
ராகேலோ மலடியாகவே இருந்தார்.
32 லேயா கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
'ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இப்பொழுது என் கணவர் என்மீது அன்புகூர்வார் என்பது உறுதி' என்று கூறி,
அவனுக்கு 'ரூபன்' [1] என்று பெயரிட்டார்.
33 மீண்டும் அவர் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
'நான் வெறுப்புக்குள்ளானேன் என்பதை ஆண்டவர் கேட்டு,
இவனையும் எனக்குத் தந்தருளினார்' என்று சொல்லி,
அவனுக்குச் 'சிமியோன்' [2] என்று பெயரிட்டார்.
34 அவர் மீண்டும் கருவுற்று இன்னொரு மகனைப் பெற்றெடுத்தார்.
'இப்பொழுது என் கணவர் என்னோடு இணைந்திருப்பார் என்பது உறுதி.
ஏனெனில் நான் அவருக்கு மூன்று புதல்வரைப் பெற்றெடுத்துள்ளேன்'
என்று கூறி அவனுக்கு 'லேவி' [3] என்று பெயரிட்டார்.
35 அவர் மீண்டும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
'இப்போது ஆண்டவரை நான் மாட்சிப்படுத்துவேன்',
என்று சொல்லி அவனுக்கு 'யூதா' [4] என்று பெயரிட்டார்.
அதன்பின் அவருக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.


குறிப்புகள்

[1] 29:32 எபிரேயத்தில், 'இதோ ஒரு மகன்' என்பதும், 'என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' என்பதும் பொருள்.
[2] 29:33 எபிரேயத்தில், 'கேட்டல்' என்பது பொருள்.
[3] 29:34 எபிரேயத்தில், 'இணைதல்' என்பது பொருள்.
[4] 29:35 எபிரேயத்தில், 'மாட்சிமை' என்பது பொருள்.


அதிகாரம் 30 தொகு


1 தாம் யாக்கோபுக்குப் பிள்ளை பெறவில்லையே என்று
ராகேல் தம் சகோதரியின் மேல் பொறாமை கொண்டார்.
அவர் தம் கணவனை நோக்கி,
'நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும்.
இல்லையேல் செத்துப் போவேன்' என்றார்.
2 யாக்கோபு அவர் மீது சினம் கொண்டு,
'நான் என்ன கடவுளா?
அவரல்லவா உனக்குத் தாய்மைப் பேறு தராதிருக்கிறார்' என்றார்.
3 அப்பொழுது ராகேல்
'இதோ என் பணிப்பெண் பில்கா.
நீர் அவளோடு கூடி வாழ்வீர்.
அவள் எனக்காக பிள்ளை பெற்று என் மடியில் வைக்க,
நானும் அவள் மூலம் பிள்ளைப் பேறு பெறுவேன்' என்றார்.
4 பின்பு அவர் அவருக்குத் தம் பணிப்பெண் பில்காவை மனைவியாகக் கொடுக்க,
அவரும் அவளுடன் கூடி வாழ்ந்தார்.
5 பில்கா கருவுற்று யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
6 ராகேல், 'ஆண்டவர் எனக்கு நீதி வழங்கி,
என் மன்றாட்டைக் கேட்டருளி, எனக்கு ஒரு மகனைத் தந்தார்' என்று சொல்லி
அவனுக்குத் 'தாண்' [1] என்னும் பெயரிட்டார்.
7 பில்கா மீண்டும் கருவுற்று மற்றொரு மகனைப் பெற்றாள்.
8 ராகேல், 'நான் என் சகோதரியோடு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு
வெற்றிகொண்டேன்' என்று கூறி அவனுக்கு 'நப்தலி' [2] என்று பெயரிட்டார்.
9 லேயா தமக்குப் பிள்ளைப்பேறு நின்றுவிட்டதென்று கண்டு,
தம் பணிப்பெண் சில்பாவை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தார்.
10 லேயாவின் பணிப்பெண் சில்பா யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
11 லேயா, 'நான் நற்பேறு பெற்றுள்ளேன்'
என்று சொல்லி அவனுக்குக் 'காத்து' [3] என்று பெயரிட்டார்.
12 லேயாவின் பணிப்பெண் சில்பா
மீண்டும் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
13 லேயா, 'எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி!
பெண்டிர் என்னை மகிழ்ச்சி பெற்றவள் என்பர்' என்று சொல்லி,
அவனுக்கு 'ஆசேர்' [4] என்று பெயரிட்டார்.


14 கோதுமை அறுவடைக் காலத்தில்
ரூபன் வயல்வெளியில் தூதாயிம் கனிகளைக் கண்டு,
அவற்றைத் தன் தாய் லேயாவிடம் கொண்டுவந்து கொடுத்தான்.
ராகேல் அவரிடம்,
'உன் மகன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளில்
எனக்கும் கொஞ்சம் கொடு' என்று கேட்டார்.
15 அதற்கு அவர்,
'என் கணவனை நீ பறித்துக் கொண்டது போதாதா?
என் மகன் கொண்டு வந்த கனிகளையும் பறித்துக் கொள்வாயோ?' என்றார்.
அப்பொழுது ராகேல்,
'சரி, உன் மகன் கொண்டு வந்த தூதாயிம் கனிகளுக்குப் பதிலாக
அவர் இன்றிரவு உன்னோடு கூடியிருக்கட்டும்' என்றார்.
16 மாலை வேளையில் யாக்கோபு வயல் வெளியினின்று திரும்பி வரும்போதே,
லேயா அவருக்கு எதிர்கொண்டுபோய்,
'நீர் என்னோடு கூடியிருக்க வேண்டும்.
ஏனெனில், என் மகன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளை ஈடாகக் கொடுத்து
நான் உம்மை வாங்கிக்கொண்டேன்' என்றார்.
அவர் அன்றிரவு அவரோடு கூடியிருந்தார்.
17 கடவுள் லேயாவுக்குச் செவிசாய்த்தார்.
அவர் கருத்தாங்கி யாக்கோபுக்கு ஐந்தாம் மகனைப் பெற்றெடுத்தார்.
18 'நான் என் பணிப்பெண்ணை என் கணவருக்குக் கொடுத்ததற்காகக்
கடவுள் எனக்கு ஈடுசெய்துள்ளார்' என்று சொல்லி வ்அவனுக்கு 'இசக்கார்' [5]என்று பெயரிட்டார்.
19 மீண்டும் லேயா கருத்தாங்கி ஆறாம் மகனைப் பெற்றெடுத்தார்.
20 லேயா, 'கடவுள் எனக்கு ஒரு சிறந்த கொடை கொடுத்துள்ளார்.
இனிமேல் என் கணவர் என்னைப் பெருமையாக நடத்துவார்.
ஏனெனில், நான் அவருக்கு ஆறு புதல்வரைப் பெற்றிருக்கிறேன்'
என்று கூறி அவனுக்குச் 'செபுலோன்' [6] என்று பெயரிட்டார்.
21 பிறகு அவர் ஒரு பெண்மகவைப் பெற்று,
அவளுக்குத் 'தீனா' என்று பெயரிட்டார்.


22 பின்பு கடவுள் ராகேலை நினைவுகூர்ந்தார்.
அவர் அவருக்குச் செவிசாய்த்துத் தாய்மைப்பேறு அருளினார்.
23 அவரும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்து
'கடவுள் என் இழிவைப் போக்கினார்' என்றார்.
24 மேலும் அவர்,
'ஆண்டவர் இன்னொரு மகனையும் எனக்குச் சேர்த்துத் தருவாராக' என்று கூறி,
அவனுக்கு 'யோசேப்பு' [7] என்று பெயரிட்டார்.

யாக்கோபின் உடைமைகள் தொகு


25 ராகேல் யோசேப்பைப் பெற்றெடுத்த பின்
யாக்கோபு லாபானை நோக்கி,
"என் சொந்த இடத்திற்கும் நாட்டிற்கும் திரும்பிப்போக
என்னை அனுப்பி வைப்பீராக!
26 என் மனைவியரையும் என் பிள்ளைகளையும்
எனக்குத் தந்து என்னைப் போகவிடும்.
அவர்களுக்காக நான் உம்மிடம் வேலை செய்துள்ளேன்.
நான் உமக்குச் செய்துள்ள வேலை இன்னதென்று உமக்குத் தெரியும்" என்றார்.
27 லாபான் அவரை நோக்கி,
"உமக்குத் தடையேதும் இல்லையெனில் தயவுகூர்ந்து இங்கேயே தங்கிவிடும்.
'உம் பொருட்டு ஆண்டவர் எனக்கு ஆசி வழங்கியிருக்கிறார்'
என்பதைக் குறிபார்த்து அறிந்து கொண்டேன்.
28 உமக்குரிய கூலியைக் குறிப்பிடும்.
நான் அதைக் கொடுத்து விடுகிறேன்" என்றான்.
29 அதற்கு அவர்,
"நான் உம்மிடம் எவ்வளவு வேலை செய்துள்ளேன் என்பதையும்
உம் மந்தை என்னிடம் எப்படி இருந்தது என்பதையும் நீர் அறிவீர்.
30 நான் உம்மிடம் வருமுன் உமக்கிருந்தது கொஞ்சமே;
இப்பொழுதோ மிகுதியாகப் பெருகிவிட்டது.
நான் கால்வைக்கும் இடமெல்லாம்
ஆண்டவர் உமக்கு ஆசி வழங்கியிருக்கிறார்.
என் குடும்பத்திற்காக நான் உழைப்பது எப்போது?" என்றார்.
31 அதற்கு லாபான்,
"நான் உமக்கு என்ன தரவேண்டும்?" என,
யாக்கோபு "எனக்கு நீர் ஒன்றும் தர வேண்டியதில்லை.
இந்த ஒன்றை மட்டும் நீர் எனக்குச் செய்தால்,
நான் தொடர்ந்து உம் மந்தையை மேய்த்துப் பாதுகாப்பேன்.
32 உம் மந்தைகளூடே இன்று நான் செல்வேன்.
அவற்றினின்று கலப்பு நிறமோ புள்ளியோ உடைய செம்மறியாடுகளையும்
கறுப்பு நிறம் கொண்ட ஆட்டுக் குட்டிகள் அனைத்தையும்
புள்ளியோ கலப்பு நிறமோ உடைய வெள்ளாடுகளையும்
தனியாகப் பிரித்துக் கொள்வேன்.
இவை எனக்குரிய கூலியாக இருக்கட்டும்.
33 எனக்குரிய பங்கைச் சரிபார்க்க நீர் வரும்போது
என் நேர்மை எனக்குச் சான்று பகர்வதாக!
கலப்பு நிறமோ புள்ளியோ இல்லாத வெள்ளாட்டையோ,
கறுப்பு நிறமற்ற ஆட்டுக் குட்டியையோ நீர் கண்டால்,
அது திருடப்பட்டதாக எண்ணப்படும்" என்றார்.
34 அதற்கு லாபான்,
"நீர் சொன்னபடியே ஆகட்டும்" என்றான்.
35 ஆனால் அன்றே அவன் வரியோ புள்ளியோ உடைய வெள்ளாட்டுக் கிடாய்களையும்,
கலப்பு நிறமோ புள்ளியோ உடைய வெள்ளாடுகள் அனைத்தையும்
வெள்ளைப் புள்ளி கொண்ட எல்லாவற்றையும்,
கறுப்பாய் இருந்த எல்லா ஆட்டுக்குட்டிகளையும் பிரித்துத்
தம் புதல்வரிடம் ஒப்படைத்து,
36 தனக்கும் தன் மந்தைகளை மேய்த்துவந்த யாக்கோபுக்கும் இடையில்
மூன்று நாள் வழித்தூரம் இருக்கும்படியும் செய்துவிட்டான்.


37 அது கண்ட யாக்கோபு புன்னை, வாதுமை,
அர்மோன் என்னும் மரங்களின் பசிய கொப்புகளை வெட்டி,
அவற்றில் இடையிடையே உள்தண்டின் வெள்ளைப்பகுதி தெரியுமாறு உரித்தார்.
38 மேலும் தம் மந்தைகள் தண்ணீர் குடிக்க வரும்போது,
ஆடுகள் அந்த வரியுள்ள கொப்புகளை எதிரில் கண்டு
பொலிந்து சினைப்படும் பொருட்டு,
நீர்த்தொட்டிகளில் அவற்றை அவர் போட்டு வைத்தார்.
39 பொலியும் நேரத்தில் அக்கொப்புகளைக் கண்டு பொலிந்த ஆடுகள்
வரியோ, கலப்பு நிறமோ, புள்ளியோ உடைய குட்டிகளை ஈன்றன.
40 மேலும் யாக்கோபு ஆட்டுக்குட்டிகளைப் பிரித்தெடுத்தார்.
லாபானின் மந்தைகளில் வரியோ கறுப்பு நிறமோ உடைய ஆடுகளை நோக்கி
மந்தையை நிற்கச் செய்தார்.
தமக்குரிய மந்தைகளை லாபானின் மந்தையோடு சேராமல் பிரித்து வைத்தார்.
41 மந்தையின் வலிமையுள்ள ஆடுகள் பொலியும்போது,
மந்தைக்கு எதிரேயிருந்த நீர்த்தொட்டியில் அக்கொப்புகளைப் போட்டார்;
அக்கொப்புகளிடையே அவை பொலிந்தன.
42 வலிமையற்ற ஆடுகளுக்குமுன் கொப்புகளைப் போடவில்லை.
எனவே லாபானின் ஆடுகள் வலுவற்றவையாகவும்
யாக்கோபின் ஆடுகள் வலுவுள்ளவையாகவும் ஆயின.
43 இவ்வாறு யாக்கோபு பெரும் செல்வரானார்.
மந்தைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள்,
ஒட்டகங்கள், கழுதைகள் ஆகியவற்றை அவர் பெருமளவில் கொண்டிருந்தார்.


குறிப்புகள்

[1] 30:6 எபிரேயத்தில், 'நீதி வழங்கினார்' என்பது பொருள்.
[2] 30:8 எபிரேயத்தில், 'போராடினேன்' என்பது பொருள்.
[3] 30:11 எபிரேயத்தில், 'நற்பேறு' என்பது பொருள்.
[4] 30:13 எபிரேயத்தில், 'மகிழ்ச்சி' என்பது பொருள்.
[5] 30:18 எபிரேயத்தில், 'ஈடு' என்பது பொருள்.
[6] 30:20 எபிரேயத்தில், 'பெருமை' என்பது பொருள்.
[7] 30:24 எபிரேயத்தில், 'சேர்த்துத் தருகிறார்' என்பது பொருள்.


(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 31 முதல் 33 வரை