திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 37 முதல் 38 வரை

துன்பத்தில் உழலும் யோபு தம் நண்பர்களோடு உரையாடுகிறார். விவிலிய ஓவியம். கலைஞர்: குஸ்தாவ் டோரே (1832-1883).

யோபு (The Book of Job) தொகு

அதிகாரங்கள் 37 முதல் 38 வரை

அதிகாரம் 37 தொகு


1 இதைக்கண்டு நடுங்குகிறது என் இதயம்;
தன் இடம் பெயர்ந்து அது துடிக்கின்றது.


2 அவரது குரலின் இடியோசையையும்
அவர் வாயினின்று வரும் முழக்கத்தையும்
கவனமுடன் கேளுங்கள்.


3 விசும்பின்கீழ் மின்னலை மிளிரச் செய்கின்றார்;
மண்ணகத்தின் எல்லைவரை செல்ல வைக்கின்றார்.


4 அதனை அடுத்து அதிரும் அவர் குரல்;
பேரொலியில் அவர் முழங்கிடுவாரே;
மின்னலை நிறுத்தார் அவர்தம் குரல் ஒலிக்கையிலே.


5 கடவுள் வியத்தகு முறையில் தம் குரலால் முழங்குகின்றார்;
நம் அறிவுக்கு எட்டாத பெரியனவற்றைச் செய்கின்றார்.


6 ஏனெனில், உறைபனியை 'மண்மிசை விழு' என்பார்;
மாரியையும் பெருமழையையும் 'உரத்துப் பெய்க' என்பார்.


7 எல்லா மனிதரும் அவரது கைத்திறனை அறிய,
எல்லா மாந்தரின் கையையும் கட்டிப்போடுவார்.


8 பின்னர் விலங்கு தன் பொந்தினுள் நுழையும்;
தம் குகைக்குள் அது தங்கும்.


9 அவர்தம் கிடங்கிலிருந்து சுழற்காற்றும்
வாடைக்காற்றிலிருந்து குளிரும் கிளம்பும்.


10 கடவுளின் மூச்சால் பனிக்கட்டி உறையும்;
பரந்த நீர்நிலை உறைந்து போகும்.


11 அவர் முகிலில் நீர்த்துளிகளைத் திணிப்பார்;
கொண்டல் அவர் ஒளியைத் தெறிக்கும்.


12 மேகம் அவரது ஆணைப்படியே சுழன்று ஆடும்;
அவர் ஆணையிடுவதை எல்லாம் மண்மிசை செய்யும்.


13 கண்டிக்கவோ, கருணைக்காட்டவோ
இவற்றை உலகில் அவர் நிகழச்செய்கின்றார்.


14 யோபே! செவிகொடும்;
இறைவனின் வியத்தகு செயல்களை நின்று நிதானித்துக் கவனியும்.


15 கடவுள் எவ்வாறு அவற்றை ஒழுங்குபடுத்துகின்றார் என்றோ,
அவர்தம் முகில்கள் எப்படி மின்னலைத் தெறிக்கின்றன என்றோ அறிவீரா?


16 முகில்கள் எவ்வாறு மிதக்கின்றன என உமக்குத் தெரியுமா?
அவை நிறை அறிவுள்ளவரின் வியத்தகு செயல்கள் அல்லவா!


17 தென்திசைக் காற்றினால் நிலம் இறுக்கப்படுகையில்
உம் உடையின் வெப்பத்தால் நீவிர் புழுங்குகின்றீர்.


18 வார்ப்படக் கண்ணாடியை ஒத்த திண்ணிய விசும்பை
அவரோடு உம்மால் விரிக்கக்கூடுமோ?


19 நாம் அவர்க்கு என்ன சொல்லக்கூடும் என்று கற்பியும்;
இருளின் முகத்தே வகைதெரியாது உழல்கின்றோம்.


20 'நான் பேசுவேன்' என்று எவர் அவரிடம் சொல்வார்?
அவ்வாறு பேசி எவர் அழிய ஆசிப்பார்?


21 காற்று வீசி கார்முகிலைக் கலைத்தபின்
வானில் கதிரவன் ஒளிரும்போது,
மனிதர் அதனைப் பார்க்க ஒண்ணாதே!


22 பொன்னொளி வடதிசையிலிருந்து வரும்;
அஞ்சுதற்குரிய மாட்சி கடவுளிடம் விளங்கும்.


23 எல்லாம் வல்லவரை நாம் கண்டுபிடிக்க முடியாது;
ஆற்றலிலும் நீதியிலும் உயர்ந்தவர் அவரே!
நிறைவான நீதியை மீறுபவர் அல்ல.


24 ஆதலால், மாந்தர் அவர்க்கு அஞ்சுவர்;
எல்லாம் தெரியும் என்போரை அவர் திரும்பியும் பாரார்.

அதிகாரம் 38 தொகு

ஆண்டவரின் முதல் சொற்பொழிவு தொகு


1 ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:


2 அறிவற்ற சொற்களால் என் அறிவுரையை
இருட்டடிப்புச் செய்யும் இவன் யார்?


3 வீரனைப்போல் இடையினை இறுக்கிக்கட்டு;
வினவுவேன் உன்னிடம், விடை எனக்களிப்பாய்.


4 மண்ணகத்திற்கு நான் கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்?
உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா?


5 அதற்கு அளவு குறித்தவர் யார்? உனக்குத்தான் தெரியுமே!
அதன்மேல் நூல் பிடித்து அளந்தவர் யார்?


6 எதன்மேல் அதன் தூண்கள் ஊன்றப்பட்டன?
அல்லது யார் அதன் மூலைக் கல்லை நாட்டியவர்?


7 அப்போது வைகறை விண்மீன்கள் ஒன்றிணைந்து பாடின!
கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்!


8 கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபொழுது
அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?


9 மேகத்தை அதற்கு மேலாடையாக்கி,
காரிருளைப் பொதிதுணியாக்கி,


10 எல்லைகளை நான் அதற்குக் குறித்து
கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி


11 'இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல;
உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!'
என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ? {1]


12 உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா?
வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா?


13 இவ்வாறு, அது வையக விளிம்பைத் தொட்டிழுத்து,
பொல்லாதவரை அதனுளிருந்து உதறித்தள்ளுமே!


14 முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல்
மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.


15 அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்;
அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.


16 கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?
ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?


17 சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ?
இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ?


18 அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா?
அறிவிப்பாய் அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்!


19 ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ!
இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?


20 அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ?
அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ!


21 ஆம், அறிவாய்; அன்றே நீ பிறந்தவனன்றோ!
ஆமாம்; ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!


22 உறைபனிக் கிடங்கினுள்
புகுந்ததுண்டோ?


23 இடுக்கண் வேளைக்கு எனவும்
கடும் போர், சண்டை நாளுக்கு எனவும் அவற்றை நான் சேர்த்து வைத்தேன்.


24 ஒளி தோன்றும் இடத்திற்குப் பாதை எது?
கீழைக்காற்று அவனிமேல் வீசுவது எப்படி?


25 வெள்ளத்திற்குக் கால்வாய் வெட்டியவர் யார்?
இடி மின்னலுக்கு வழி வகுத்தவர் யார்?


26 மனிதர் வாழா மண்ணிலும்
மாந்தர் குடியிராப் பாலையிலும் மழை பெய்வித்துப்


27 பாழ்வெளிக்கும் வறண்ட நிலத்திற்கும் நீர் பாய்ச்சிப்
பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்?


28 மழைக்குத் தந்தை உண்டோ?
பனித்துளிகளைப் பிறப்பிப்பவர் யார்?


29 பனிக்கட்டி யாருடைய உதரத்தில் தோன்றுகின்றது?
வானின் மூடுபனியை ஈன்றெடுப்பவர் யார்?


30 கல்லைப்போல் புனல் கட்டியாகிறது;
ஆழ்கடலின் பரப்பு உறைந்து போகிறது.


31 கார்த்திகை மீனைக் கட்டி விலங்கிடுவாயோ? [2]
மார்கழி மீனின் தலையை அவிழ்த்திடுவாயோ?


32 குறித்த காலத்தில் விடிவெள்ளியைக் கொணர்வாயோ?
வடதிசை விண்மீன் குழுவுக்கு வழி காட்டுவாயோ?


33 வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ?
அதன் ஒழுங்கை நானிலத்தில் நிலைநாட்டிடுவாயோ?


34 முகில்வரை உன் குரலை முழங்கிடுவாயோ?
தண்ணீர்ப் பெருக்கு உன்னை மூடச் செய்வாயோ?


35 'புறப்படுக' என மின்னலுக்கு ஆணையிடுவாயோ?
'இதோ! உள்ளோம்' என அவை உனக்கு இயம்புமோ?


36 நாரைக்கு ஞானத்தை நல்கியவர் யார்?
சேவலுக்கு அறிவைக் கொடுத்தவர் யார்?


37 ஞானத்தால் முகில்களை எண்ணக் கூடியவர் யார்?
வானத்தின் நீர்க்குடங்களைக் கவிழ்ப்பவர் யார்?


38 துகள்களைச் சேர்த்துக் கட்டியாக்குபவர் யார்?
மண்கட்டிகளை ஒட்டிக் கொள்ளச் செய்பவர் யார்?


39 பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ?
அரிமாக் குட்டியின் பசியை ஆற்றுவாயோ?


40 குகைகளில் அவை குறுகி இருக்கையிலே,
குழிகளில் அவை பதுங்கி இருக்கையிலே.


41 காக்கைக் குஞ்சுகள் இறைவனை நோக்கிக் கரையும் போது,
அவை உணவின்றி ஏங்கும்போது,
காகத்திற்கு இரை அளிப்பவர் யார்?


குறிப்புகள்

[1] 38:8-11 = எரே 5:22.
[2] 38:31 = யோபு 9:9; ஆமோ 5:8.


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 39 முதல் 40 வரை