திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/லேவியர் (லேவிய‌ராகமம்)/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

லெனின்கிராது விவிலியச் சுவடி. லேவியர் நூல் பாடம். ஆண்டு: 1008. காப்பிடம்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (முன்னாள் லெனின்கிராது.


அதிகாரம் 11 தொகு

உண்ணத் தக்க விலங்குகள் தொகு

(இச 14:3-21)
1 ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, அவர்களிடம் கூறியது:
2 "நீங்கள் இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது:
உலகில் உள்ள உயிரினங்களில் நீங்கள் உண்ணத்தக்கவை இவைகளே.
3 கால்நடைகளில், குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிற,
விரிசல் குளம்புள்ள, அசைபோடுபவற்றை நீங்கள் உண்ணலாம்.
4 அசைபோடும் கால்நடைக்கு விரிகுளம்பில்லையெனில்,
அதனை நீங்கள் உண்ணலாகாது.
குறிப்பாக ஒட்டகம்; அது அசைபோடும்; ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை;
எனவே அது உங்களுக்குத் தீட்டு.
5 குழிமுயல் அசைபோடும்; ஆனால் அதற்கு விரிகுளம்பு இல்லை;
எனவே அது உங்களுக்குத் தீட்டு.
6 முயல் அசைபோடும்; ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை;
எனவே அது உங்களுக்குத் தீட்டு.
7 பன்றி இரண்டாகப் பிரிந்திருக்கும் விரிகுளம்புடையது;
ஆனால், அது அசைபோடாது; எனவே அது உங்களுக்குத் தீட்டு.
8 இவற்றின் இறைச்சியை உண்ணலாகாது.
இவற்றின் சடலங்களைத் தொடவும் கூடாது.
இவை உங்களுக்குத் தீட்டானவை.


9 நீர்நிலைகளில் இருப்பனவற்றில் நீங்கள் உண்ணத்தக்கவை:
கடல்களும், ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் இருப்பனவற்றில்
துடுப்பும் செதிலுமுள்ளவை அனைத்தும் நீங்கள் உண்ணத்தக்கவை.
10 ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய நீர்நிலைகளில்
செறிந்திருக்கும் உயிரினங்களும்,
துடுப்பும் செதிலும் அற்றவை உங்களுக்கு அருவருப்பு.
11 அவை உங்களுக்கு அருவருப்பு.
அவற்றின் இறைச்சியை உண்ணலாகாது.
அவற்றின் சடலங்களை அருவருப்பாகக் கருதுங்கள்.
12 நீர்வாழ்வனவற்றில் துடுப்பும் செதிலும் அற்றவை யாவும்
உங்களுக்கு அருவருப்பு.


13 பறவைகளிலும் நீங்கள் உண்ணாமல் அருவருக்க வேண்டியவை:
கழுகு, கருடன், கடலூராஞ்சி,
14 பருந்து, வல்லூறு, அதன் இனம்,
15 காகம், அதன் இனம்,
16 தீக்கோழி, கூகை, சம்புகம், சிறுகழுகு, அதன் இனம்,
17 ஆந்தை, சகோரம், கோட்டான்,
18 நாரை, கூழக்கடா, குருகு,
19 கொக்கு, இராசாளி, அதன் இனம்,
புழுக்கொத்தி, வெளவால்.


20 பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் ஊர்வன யாவும்
உங்களுக்கு அருவருப்பு.
21 ஆயினும், நான்கு கால்களால் நடமாடியும்
தரையில் தத்திப் பாயும்படி நெடிய பின்னங்கால்கள் உடையனவற்றை உண்ணலாம்.
22 நீங்கள் உண்ணக்கூடியவை:
தத்துக்கிளி, அதன் இனம்; வெட்டுக்கிளி, அதன் இனம்;
மொட்டை வெட்டுக்கிளி, அதன் இனம்;
சுவர்க்கோழி, அதன் இனம்.
23 பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் மற்ற யாவும்
உங்களுக்கு அருவருப்பு.


24 அவை உங்களுக்குத் தீட்டு,
அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.
25 அவற்றின் சடலத்தை எடுப்போர்
தம் உடைகளைத் துவைக்க வேண்டும்.
மாலைவரை அவர் தீட்டுடையவர்.
26 இரண்டாய்ப் பிரிந்த குளம்புகள் இல்லாமலும்
அசைபோடாமலும் இருக்கும் அனைத்து உயிரினங்களைத்
தொடுகிற எல்லாரும் தீட்டுடையவர்.
27 நான்கு கால் உயிர்களில்
உள்ளங்கால் ஊன்றி நடக்கும் அனைத்தும் உங்களுக்குத் தீட்டு.
28 அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.
அவற்றின் சடலத்தை எடுப்போர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும்.
மாலைவரை அவர் தீட்டுடையவர்.
அவர் உங்களுக்குத் தீட்டு.


29 நிலத்தில் செறிந்திருக்கும் ஊர்வனவற்றில் உங்களுக்குத் தீட்டானவை:
எலி, சுண்டெலி, ஆமை இனம்;
30 உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி.
31 ஊர்வனவற்றில் இவை உங்களுக்குத் தீட்டு.
அவற்றுள் செத்ததைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.
32 அவற்றுள் செத்த ஏதேனும்,
எதன்மேலாவது விழுந்தால் அது தீட்டுப்படும்.
அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும்,
தோலானாலும், கோணிப்பையானாலும்,
வேலைக்கு உதவும் எந்தக் கருவியானாலும்
மாலைவரை அது தண்ணீரில் போடப்பட வேண்டும்.
மாலைவரை அது தீட்டுப்பட்டது. பின்னால் அது தூய்மையாகும்.
33 அவற்றுள் ஏதேனும் மண் பாண்டத்துக்குள் விழுந்தால்
அதனுள் இருக்கும் அனைத்தும் தீட்டுப்பட்டுவிடும்.
எனவே அது உடைக்கப்பட வேண்டும்.
34 உண்ணத்தக்க எந்த உணவிலும்
இப்பாண்டத்துத் தண்ணீர்பட்டால் அது தீட்டு;
அந்தப் பாண்டத்திலிருக்கும் எந்தப் பானமும் தீட்டு.
35 அவற்றின் சடலம் எதன்மீது விழுந்தாலும் அது தீட்டு;
அடுப்போ சமையல் பாண்டமோ எனில்,
அவை உடைக்கப்பட வேண்டும்.
அவை உங்களுக்குத் தீட்டு, ஏனெனில் அவை தீட்டுப்பட்டிருக்கும்.
36 நீரூற்றும் மிகுந்த நீருள்ள கிணறும் எனில்,
அவை தூய்மையாய் இருக்கும்;
ஆனால் அவற்றின் சடலம் தொடும்பகுதி தீட்டுப்பட்டது.
37 விதைக்கிற தானியத்தின் மீது
அவற்றின் சடலம் விழுந்தால் அது தீட்டன்று.
38 தண்ணீர் விடப்பட்ட விதைமேல் விழுந்தால், அது தீட்டாகும்.


39 உங்கள் உணவுப்பொருளான கால்நடை ஒன்று சாக,
அதன் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.
40 அதன் சடலத்தைத் தின்பவர் தம் உடைகளைத் துவைக்கவேண்டும்.
அவர் மாலைவரை தீட்டுடையவர்.
மேலும் அதன் சடலத்தை எடுத்துப் போகிறவரும்
தம் உடைகளைத் துவைக்க வேண்டும்.
அவர் மாலைவரை தீட்டுடையவர்.


41 தரையில் நகர்ந்து செல்லும் ஊர்வன அனைத்தும் அருவருப்பானவை.
அவற்றை உண்ணலாகாது.
42 நிலத்தில் ஊர்வனவற்றையும், வயிற்றால் நகர்வனவற்றையும்,
நான்கு காலால் ஊர்வனவற்றையும்
பல கால்களுள்ள எதனையும் உண்ணலாகாது.
அவை அருவருப்பு.
43 நகருகிற எந்த ஊர்வனவும் உங்களையும் தீட்டுப்படுத்தலாகாது.
அவற்றால் தீட்டுப்படாமல் இருங்கள்.
ஏனெனில் அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
44 நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள்.
எனவே உங்களைத் தூய்மைப்படுத்தி, தூயவராயிருங்கள்.
ஏனெனில், நான் தூயவர்.
நிலத்தில் ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டுப்படுத்தலாகாது. [*]
45 உங்கள் கடவுளாயிருக்குமாறு
உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே!
நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவர்!


46 விலங்கினம், பறவைகள், நீர்வாழும் எல்லா உயிரினங்கள்,
நிலத்தில் நகரும் உயிரினங்கள் ஆகியவை பற்றிய சட்டம் இதுவே.
47 இதனின்று, தீட்டுடையதற்கும் தீட்டற்றதற்கும்,
உண்ணத்தகுந்த உயிரினங்களுக்கும் உண்ணத்தகாத உயிரினங்களுக்கும்
வேறுபாடு தெரிந்துகொள்க!"


குறிப்பு

[*] 11:44 = லேவி 19:2; 1 பேது 1:16.

அதிகாரம் 12 தொகு

பேறுகாலப் பெண்களைத் தூய்மைப்படுத்தல் தொகு


1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது:
ஒருபெண், கருத்தரித்து ஆண் குழந்தைபெற்றால்
ஏழு நாள் விலக்கு நாள்களில் இருப்பதுபோலவே, தீட்டுப்பட்டிருப்பாள்.
3 எட்டாம் நாளன்று அதற்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். [1]
4 தொடர்ந்து வரும் முப்பது நாள்கள்,
அவள் தன் உதிரத்தீட்டு நாள்கள் முடியும்வரை
தூயதான எந்தப் பொருளையும் தொடலாகாது;
தூய தலத்திற்குள் வரலாகாது.


5 அவள் பெண் குழந்தை பெற்றால்,
இரண்டு வாரம் விலக்கு நாள்களில் இருப்பது போலவே, தீட்டாயிருப்பாள்.
பின்னர், அறுபத்தாறுநாள் தன் உதிரத்தீட்டில் இருப்பாள்.
6 குழந்தை பெற்றவள் அது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும்
தூய்மையடையும் காலக்கெடுவிற்குப் பின்னர்,
ஓராண்டு நிறைவுற்ற செம்மறி ஒன்றை எரிபலியாகவும்,
புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறா ஒன்றைப் பாவம்போக்கும் பலியாகவும்
குருவிடம் சந்திப்புக்கூடார நுழைவாயிலுக்குக் கொண்டுவர வேண்டும்.
7 அதனை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து
அவளுக்குக் கறைநீக்கம் செய்வார்.
அவள் தன் உதிர ஊறல் தீட்டிலிருந்து தூய்மையாவாள்.
இது ஆண் அல்லது பெண் குழந்தைபெற்றவருக்கு விதிக்கப்படும் சட்டம்.


8 ஆட்டுக்குட்டி கொண்டுவர வசதி இல்லாதவள்,
இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டு வந்து,
ஒன்றை எரிபலியாகவும், மற்றதைப் பாவம்போக்கும் பலியாகவும் படைத்து,
அவற்றால் குரு அவளுக்குக் கறைநீக்கம் செய்வார்;
அப்போது அவள் தூய்மையாவாள். [2]


குறிப்புகள்

[1] 12:3 = தொநூ 17:12; லூக் 2:21.
[2] 12:8 = லூக் 2:24.


(தொடர்ச்சி): லேவியர்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை