திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/லேவியர் (லேவிய‌ராகமம்)/அதிகாரங்கள் 26 முதல் 27 வரை

யூதர் எக்காளம் ஊதுதல் (லேவி 23:23). 1930களில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

அதிகாரம் 26 தொகு

கீழ்ப்படிதலுக்கான பலன் தொகு

(இச 7:12-24; 28:1-14)


1 நீங்கள் உங்களுக்கு எனச் சிலைகளையும் படிமங்களையும் கல்தூண்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். வணங்குவதற்கெனச் கற்சிலைகளை நாட்டில் நாட்ட வேண்டாம். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! [1]
2 ஓய்வுநாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்திற்கு அஞ்சி வாழ்வீர்களாக! நானே ஆண்டவர்!


3 நீங்கள் என் நியமங்களைக் கவனமாய்க் கைக்கொண்டு, கட்டளைகளை நிறைவேற்றி அவற்றிற்கேற்ப நடந்தால்,
4 ஏற்ற காலத்தில் மழையை நான் பெய்யச் செய்வேன். வயல் தன் பலன்களைத் தரும்; நிலத்தின் மரங்கள் தங்கள் கனிகளைத் தரும்.
5 கதிர் அறுப்பு திராட்சைப்பழ அறுவடைவரை இருக்கும். பழ அறுவடை பயிர் விதைப்புவரை வரும்; நீங்கள் விரும்புவனவற்றை உண்டு நாட்டில் நலமாய் வாழ்வீர்கள். [2]


6 நாட்டிற்கு அமைதி அருள்வேன். அச்சுறுத்துவாரின்றிப் படுத்துக்கொள்வீர்கள். நாட்டில் இராதபடி கொடிய விலங்குகளை ஒழிப்பேன். வாள் உங்கள் நாட்டில் உலவுவதில்லை.
7 உங்கள் எதிரிகளைத் துரத்தியடிப்பீர்கள்; அவர்கள் உங்கள் வாளால் வெட்டுண்டு வீழ்வர்.
8 உங்களில் ஐந்து பேர் நூறுபேரையும், நூறுபேர் பதினாயிரம் பேரையும் துரத்துவீர்கள்; உங்கள் எதிரிகள் உங்கள் முன் வாளால் வெட்டுண்டு அழிவர்.
9 நான் உங்களுக்குக் கருணைக்கண் காட்டி, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களிடமிருக்கும் என் உடன்படிக்கையை நிலைப்படுத்துவேன்.
10 சென்ற ஆண்டின் பழைய தானியத்தை உண்பீர்கள்; புதிய தானியத்தின் வருகையால் பழையது விலக்கப்படும்.
11 என் உறைவிடத்தை உங்கள் நடுவில் நிறுவுவேன். நான் உங்களை வெறுப்பதில்லை.
12 உங்கள் நடுவே நான் உலவுவேன். நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள்! [3]
13 நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாய் இராதபடிக்கு நான் உங்களை அவர்கள் நாட்டிலிருந்து புறப்படச்செய்தேன். உங்கள் நுகத்தடிகளை முறித்து உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே!

கீழ்ப்படியாமைக்கான தண்டனை தொகு

(இச 28:15-68)


14 நீங்கள் என் சொல்லைக் கேளாமல், கட்டளைக்கு ஏற்ப நடக்காமல்,
15 நியமங்களைத் தள்ளிவிட்டு, நீங்கள் என் கட்டளைகளை வெறுத்து, சட்டங்களை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை முறித்துவிட்டால்,
16 திகிலையும் என்புருக்கி நோயையும் காய்ச்சலையும் வரப்பண்ணுவேன். அவை உங்கள் கண்களைப் பூக்கச்செய்து உயிரை உறிஞ்சும். நீங்கள் பயனில்லாமல் விதைவிதைப்பீர்கள்; எதிரிகள் பலனைத் தின்பார்கள்.
17 உங்கள் எதிரிகள் முன்னிலையில் முறியடிக்கப்படுமாறு எனது முகத்தை உங்களுக்கு எதிராகத் திருப்புவேன். உங்கள் பகைவர் உங்களை ஆள்வர். யாரும் துரத்தாமலே நீங்கள் ஓடுவீர்கள்.
18 இதன் பின்னரும் நீங்கள் என் சொல்லைக் கேட்கவில்லையெனில், நான் உங்கள் பாவங்களுக்கு ஏற்ப ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன்.
19 உங்கள் முரட்டுப் பெருமையை அழித்து வானத்தை இரும்பைப் போன்றும் நிலத்தை வெண்கலத்தைப் போன்றும் இறுகச் செய்வேன்.
20 உங்கள் ஆற்றல் வீணாகச் செலவழியும்; நாடு தன் பலனையும், நிலத்தின் மரங்கள் கனிகளையும் கொடா.


21 நீங்கள் என் சொல்லைக் கேட்க மனமற்று, எனக்கு எதிராகச் செயல்பட்டால் உங்கள் தவறுகளுக்குத் தக்க, ஏழு மடங்கு துன்பத்தை உங்கள் மீது வரச்செய்வேன்.
22 உங்களுக்குள் காட்டு விலங்குகளை வரவிடுவேன். அவை உங்கள் பிள்ளைகளை அழிக்கும். உங்கள் ஆடுமாடுகளை அழித்து, உங்களைக் குறைந்துபோகச் செய்யும். உங்கள் பாதைகள் பயன்படுத்துவோரில்லாமல் பாழாகும்.


23 அப்படியும், இந்தத் தண்டனையால் திருந்தாமல், எனக்கு எதிராக நீங்கள் நடந்தால்,
24 நான் உங்களுக்கு எதிராக நின்று, உங்கள் பாவங்களுக்கு ஏற்ப ஏழு மடங்கு தண்டனை வரச்செய்வேன்.
25 உடன்படிக்கையின் நீதியை நிலைநாட்டி, பழிக்குப் பழிவாங்கும் வாளை வரச்செய்வேன். உங்கள் நகர்களுக்குள் நீங்கள் வந்த பின்னர் உங்களுக்குள் கொள்ளை நோயை வரச்செய்வேன்; எதிரிகளிடம் உங்களைக் கையளிப்பேன்.
26 உணவு என்னும் ஆதரவை உங்களிடமிருந்து அகற்றிவிடுவேன். பத்துப்பெண்கள் ஒரே அடுப்பில் அப்பம் சுட்டு அதைச் சமநிறையாகப் பங்கிட்டுப் கொடுப்பர். நீங்கள் உண்டும் நிறைவடையமாட்டீர்கள்.


27 இதற்குப்பின்னும், நீங்கள் என் சொல்லுக்குக் கீழ்ப்படியவில்லை எனில்,
28 நான் பெரும் கோபம் கொண்டு உங்களை எதிர்த்து உங்கள் குற்றங்களுக்காக ஏழுமடங்கு தண்டிப்பேன்.
29 உங்கள் புதல்வர்களின் சதையையும் புதல்வியரின் சதையையும் தின்பீர்கள்.
30 நான் தொழுகை மேடுகளையும் தூபபீடங்களையும் தகர்த்து, உங்கள் சடலங்களை உயிரற்ற தெய்வச் சிலைகள்மீது விழச் செய்வேன். என் உள்ளம் உங்களை வெறுக்கும்.
31 உங்கள் நகர்கள் பாலை நிலமும், உங்கள் புனித இடங்கள் பாழ்நிலமும் ஆகும். உங்கள் பலிகளின் நறுமணம் எனக்கு உவப்பாய் இராது.
32 உங்கள் எதிரிகளே அதிர்ச்சி அடையும் வகையில் அவர்கள் குடியிருக்கும் உங்கள் நாட்டைப் பாழாக்குவேன்.
33 உங்களை உலக மக்களுக்குள்ளே சிதறடித்து, உங்களை உருவின வாளால் துரத்துவேன். உங்கள் நாடு பாழ்நிலமும் உங்கள் நகர் பாலை நிலமும் ஆகும்.
34 நாடு பாழாய்க் கிடக்கும். அப்போது அது தன் ஓய்வாண்டுகளை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும். அது ஓய்வடைந்து தன் ஓய்வை அனுபவித்து முடிக்கும். அப்போது நீங்கள் எதிரிகளின் நாட்டில் இருப்பீர்கள்.
35 நீங்கள் குடியிருந்தபோது அது ஓய்வாண்டுகளிலே ஓய்வற்று இருந்தபடியால், அது பாழாய்க் கிடக்கும் காலங்களில் ஓய்வாயிருக்கும்.


36 உங்கள் எதிரிகளின் நாட்டில் உங்களுள் எஞ்சியிருப்போரின் உள்ளத்தில் நான் சோர்வை ஏற்படுத்துவேன். காற்றில் பறக்கும் இலையின் ஓசைகூட அவர்களை அச்சுறுத்தும். வாளுக்குத் தப்பியோடுவதுபோல ஓடி, யாரும் துரத்தாமலேயே விழுவார்கள்.
37 வாளால் துரத்தப்படுவதுபோல யாரும் துரத்தாமலேயே ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள். உங்கள் எதிரிகளுக்கு முன் உங்களால் நிற்கவும் இயலாது.
38 வேற்றினத்தாரிடையே அழிந்து போவீர்கள். உங்கள் எதிரிகளின் நாடு உங்களை விழுங்கும்.


39 உங்களுள் எஞ்சியிருப்போர் எதிரிகளின் நாடுகளில் தங்கள் குற்றங்களாலும் தங்கள் மூதாதையரின் குற்றங்களாலும் சோர்வுற்று
40 எனக்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களும், அவர்கள் மூதாதையர் செய்த குற்றங்களும்,
41 நான் அவர்களுக்கு எதிராக மாறி அவர்களை அவர்களின் எதிரிகளின் நாட்டிற்கு அனுப்பச்செய்தன. அதனை அவர்கள் அறிக்கையிட்டு, அப்போது அவர்கள் விருத்தசேதனம் அற்ற இதயத்தைத் தாழ்த்தி, குற்றத்திற்குக் கழுவாய் தேடினால்,
42 நான் யாக்கோபுடன் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்த உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையையும் நினைவு கூர்வேன்; நாட்டையும் நினைவுகூர்வேன். [4]
43 அவர்களின் செயலால் வெறுமையாய் விடப்பட்டு, பாழாய்ப்போன நிலம் தனது ஓய்வாண்டுகளை நிறைவாய் அனுபவிக்கும்; என் கட்டளைகளை ஏற்காததாலும் நியமங்களை வெறுத்ததாலும் தங்கள் தங்கள் குற்றங்களுக்கு அவர்கள் கழுவாய் தேடுவர்.
44 ஆயினும், அவர்கள் தங்கள் எதிரிகளின் நாட்டில் இருக்கும்பொழுது, என் உடன்படிக்கை பொருளற்றதாகி விடுமாறு நான் அவர்களை முற்றிலும் அழிக்கவோ புறக்கணிக்கவோ மாட்டேன். ஏனெனில், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்!
45 நான் அவர்களுடைய கடவுளாகிய வேற்றினத்தார் கண்முன்னே எகிப்திலிருந்து அவர்களின் மூதாதையரை அழைத்து வந்து அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்களுக்காக நினைவுகூர்வேன், நானே ஆண்டவர்".
46 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயின் மூலம் அவருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட நியமங்களும் நெறிமுறைச் சட்டங்களும் இவையே!


குறிப்புகள்

[1] 26:1 = விப 20:4; லேவி 19:4; இச 5:8; 16:21-22; 27:1.
[2] 26:3-5 = இச 11:13-15; 28:1-14.
[3] 26:12 = 2 கொரி 6:16.
[4] 26:42 = தொநூ 17:7-8; 26:3-4; 28:13-14.

அதிகாரம் 27 தொகு

ஆண்டவருக்குரிய நேர்ச்சையும் வரியும் தொகு


1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: ஒருவர் யாரையேனும் பொருத்தனையாகச் செலுத்தத் திட்டமிட்டிருந்தால் அவர்கள் உன் மதிப்பின்படி ஆண்டவருக்கு உரியவர்.
3 இருபது வயதிலிருந்து அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்மகனுக்குத் திருக்கோவில் அளவையின்படி அறுநூறு கிராம் [1] வெள்ளி;
4 பெண்ணாய் இருந்தால் முன்னூற்றைம்பது கிராம் [2].
5 ஐந்து வயது முதல் இருபது வயது வரையுள்ள ஆண்பிள்ளைக்கு இருநூற்று முப்பது கிராம் [3], பெண் பிள்ளைக்கு நூற்றுப் பதினைந்து கிராம் [4].
6 ஒரு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளைக்கு அறுபது கிராம் வெள்ளி; பெண்பிள்ளைக்கு முப்பத்தைந்து கிராம் வெள்ளி.
7 அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவரை நூற்று எழுபது கிராம் வெள்ளியாகவும் மூதாட்டியை நூற்றுப் பதினைந்து கிராம் வெள்ளியாகவும் மதிப்பிட வேண்டும்.


8 தம் மதிப்பைச் செலுத்த வாய்ப்பற்ற ஏழை எனில், குரு முன்னிலையில் அவர் வந்து நிற்க, பொருத்தனை செய்தவரின் நிதி நிலைக்கு ஏற்பக் குரு அவரை மதிப்பிடவேண்டும்.


9 ஆண்டவருக்குக் காணிக்கையாக பொருத்தனை செய்தது விலங்கு எனில், அது ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டது ஆகும்.
10 அது மாற்றத் தகுந்தது அன்று. நல்லதுக்குப் பதில் கெட்டதையும் கெட்டதுக்குப் பதில் நல்லதையும் கொடுக்கலாகாது. ஒரு விலங்குக்குப் பதிலாக வேறொரு விலங்கைக் கொடுக்க விரும்பினால், அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டவை ஆகும்.
11 அது பலியுடத் தகுதியற்ற தீட்டான விலங்கு எனில், அதைக் குருமுன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.
12 குரு அதன் தரத்தின் உயர்வு, தாழ்வை மதிப்பிடுவான். அவன் மதிப்பிடுவதே அதன் மதிப்பு ஆகும்.
13 அதனை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒரு பங்கை மிகுதியாகச் செலுத்தவேண்டும்.


14 ஒருவர் நேர்ச்சையாகத் தன் இல்லத்தை ஆண்டவருக்கு நேர்ந்து கொண்டால், குரு அதன் தரத்தின் உயர்வு, தாழ்வை மதிப்பிடுவான். அவன் மதிப்பீடே அதன் மதிப்பு ஆகும்.
15 அதன் உடைமையாளர் அந்த வீட்டை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒருபங்கை மிகுதியாகச் செலுத்த வேண்டும். அது மீண்டும் அவருடையது ஆகும்.


16 ஒருவர் தன் குடும்ப நிலத்தின் பகுதியை நேர்ந்துகொண்டால், அதன் மதிப்பு விதைப்பாட்டிற்கேற்ப இருக்க வேண்டும். ஒரு கலம் [5] பார்லி விதைப்பாடுள்ள வயல் அறுநூறு கிராம் [6] வெள்ளி ஆகும்.
17 யூபிலி ஆண்டில் தம் வயலை நேர்ச்சை செய்தால், நீ மதிக்கிறபடியே அதன் மதிப்பு இருக்கும்.
18 யூபிலி ஆண்டுக்குப் பின்னர் அதை நேர்ந்துகொண்டால், அடுத்த யூபிலி ஆண்டுவரை எஞ்சியுள்ள ஆண்டுகளுக்கு ஏற்ப, அதன் மதிப்பு குருவினால் கணக்கிடப்பட்டு, அதன் உண்மை மதிப்பிலிருந்து குறைக்கப்படும்.
19 வயலை நேர்ச்சையாகச் செலுத்தினவர் அதை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க அது அவருடையது ஆகும்.
20 வயலை மீட்காமல், அதை வேறொருவருக்கு விற்றால், அதனை மீட்க இயலாது.
21 அது யூபிலி ஆண்டில் விடுவிக்கப்படும்போது, ஆண்டவருக்கென நேர்ந்துகொள்ளப்பட்ட நிலமாகக் கருதப்படும்; அது குருவின் உடைமை ஆகும்.


22 ஒருவர், தன் குடும்பச் சொத்து அல்லாத ஒது வயலை வாங்கி அதை ஆண்டவருக்கென நேர்ச்சையாகச் செலுத்தினால்,
23 யூபிலி ஆண்டு மட்டும் அதற்குண்டான மதிப்பிற்கேற்ப, அதன் விலை குருவினால் கணக்கிடப்படும். அந்த மதிப்பு அன்றே ஆண்டவருக்கு நேர்ச்சையாகச் செலுத்தப்படும்.
24 எவரிடமிருந்து அந்த வயலை வாங்கினாரோ, அவருக்கு யூபிலி ஆண்டில் அது திருப்பிக் கொடுக்கப்படும்.


25 மதிப்பீடுகள் அனைத்தும் தூயகத்துச் செக்கேலின்படி கணக்கிட வேண்டும். ஒரு செக்கேல் என்பது பதினொன்றரை கிராம் [7].


26 தலையீற்று ஆண்டவருடையது. அதனை நேர்ச்சையாக்க வேண்டாம்; ஏனெனில் அது, மாடோ ஆடோ, ஆண்டவருக்கு உரியதே.
27 தீட்டான கால்நடையின் முதற்பிறப்பு எனில், அதன் மதிப்பினால் அதனை மீட்டு, அதனுடன் மீண்டும் ஐந்திலொரு பங்கைக் கூட்டிக்கொடுக்க வேண்டும். மீட்கப்படாவிடில் அதன் மதிப்பிற்கேற்ப அதனை விற்றுவிடலாம்.


28 ஒருவர் காணிக்கையாகச் செலுத்திய தனக்குரிய மனிதரையும், விலங்கையும், குடும்ப நிலத்தையும் ஆண்டவருக்கென நேர்ந்துவிட்டால், அவற்றுள் எதையும் விற்கவோ, மீட்டுக் கொள்ளவோ வேண்டாம். நேர்ச்சை அனைத்தும் ஆண்டவருக்கே முற்றிலுமாகப் பிரித்து வைக்கப்பட்டன. [8]
29 சபிக்கப்பட்ட எவரும் மீட்கப்படலாகாது. அவர் கொல்லப்படவேண்டும்.


30 நிலத்தின் தானியங்களிலும், மரங்களின் கனிகளிலும் பத்திலொன்று ஆண்டவருக்குரியது. அது ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டியதே.
31 அவற்றில் எதையேனும் மீட்க விரும்பினால், அதன் மதிப்போடு ஐந்தில் ஒரு பங்கைக் கூடச்செலுத்த வேண்டும்.
32 மேய்ச்சலுக்கு உட்பட்ட ஆடு மாடுகளின் பத்திலொன்று ஆண்டவர்க்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டும்.
33 எது உயர்ந்தது, எது தாழ்ந்தது எனப் பார்க்க வேண்டாம். அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால் அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டும். அவை மீட்கப்படலாகா. [9]
34 இஸ்ரயேலருக்குக் கூறும்படியாக ஆண்டவர் மோசேக்கு சீனாய் மலையில் வழங்கிய கட்டளைகள் இவையே.


குறிப்புகள்

[1] 27:3 'ஐம்பது செக்கேல்' என்பது எபிரேய பாடம்.
[2] 27:4 'முப்பது செக்கேல்' என்பது எபிரேய பாடம்.
[3] 27:5 'இருபது செக்கேல்' என்பது எபிரேய பாடம்.
[4] 27:5 'பத்து செக்கேல்' என்பது எபிரேய பாடம்.
[5] 27:16 'ஒரு கோமர்' என்பது எபிரேய பாடம்.
[6] 27:16 'ஐம்பது செக்கேல்' என்பது எபிரேய பாடம்.
[7] 27:25 'இருபது கேரா' என்பது எபிரேய பாடம்.
[8] 27:28 = எண் 18:14.
[9] 27:30-33 = எண் 18:21; இச 14:22-29.


(லேவியர் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை