திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

இஸ்ரயேலர் செங்கடலைக் கடக்கின்றனர்; எகிப்தியர் நீரில் மூழ்குகின்றனர். ஓவியர்: அந்த்ரேயா ப்ரெவித்தாலி. காலம்: 1515-20. காப்பிடம்: வெனிசு, இத்தாலியா.

அதிகாரம் 13 தொகு

தலைமகன் அர்ப்பணம் தொகு


1 ஆண்டவர் மோசேயை நோக்கி உரைத்தது:
2 "தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்;
இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும்
கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை" என்றார்.[1]

புளிப்பற்ற அப்ப விழா தொகு


3 மோசே மக்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து நீங்கள் வெளியேறிச் சென்ற
இந்நாளை நினைவு கூருங்கள்.
இந்நாளில்தான் ஆண்டவர் தம் கைவன்மையால்
உங்களை இங்கிருந்து வெளியேறவைத்தார். நீங்கள் புளித்த அப்பம் உண்ணலாகாது.
4 ஆபிபு மாதத்தின் இந்த நாளில் நீங்கள் வெளியேறிச் செல்கிறீர்கள்.
5 கானானியர், இத்தியர், எமோரியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டை
ஆண்டவர் உனக்குத் தருவதாக உன் மூதாதையருக்கு வாக்களித்திருந்தார்.
பாலும் தேனும் பொழியும் அந்த நாட்டுக்கு
அவர் உன்னை அழைத்துச் சென்றபின்,
இதே மாதத்தில் நீ இவ்வழிபாட்டைச் செய்வாயாக.
6 ஏழுநாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ணவேண்டும்.
ஏழாம் நாளை 'ஆண்டவரின் விழா'வாகக் கொண்டாட வேண்டும்.
7 ஏழு நாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும்.
புளித்த அப்பம் உன்னிடம் காணப்படக்கூடாது.
உன் எல்லைக்குள் எங்குமே புளித்த மாவு காணப்படக்கூடாது.
8 அந்நாளில் நீ உன் மகனிடம்,
'நான் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது
ஆண்டவர் எனக்குச் செய்ததை முன்னிட்டே இந்த வழிபாடு' என்று சொல்.
9 ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி,
இது உன் கையில் அடையாளமாகவும்,
உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும்.
ஏனெனில் ஆண்டவர் தம் கைவன்மையால்
எகிப்திலிருந்து உன்னை வெளியேறச் செய்தார்.
10 எனவே ஆண்டுதோறும் இந்த நியமத்தை
அதன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும்.

தலைப்பேறு அர்ப்பணம் தொகு


11 உனக்கும் உன் மூதாதையருக்கும் ஆண்டவர் வாக்களித்தபடியே,
அவர் கானானியரின் நாட்டிற்குள்
உன்னை அழைத்துச் சென்று அதை உனக்குக் கொடுக்கும்போது,
12 கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும்
ஆண்டவருக்கென ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும்.
உன் கால் நடைகளில் ஆண் தலையீற்று அனைத்தும் ஆண்டவருக்கே உரியது.[2]
13 ஓர் ஆட்டைக் கொடுத்துக் கழுதையின் ஆண் தலையீற்றை மீட்பாய்;
அதை நீ மீட்கவில்லையெனில் அதன் கழுத்தை முறித்துவிடு.
உன் ஆண் பிள்ளைகளுள் எல்லாத் தலைப்பேற்றையும் நீ மீட்க வேண்டும்.
14 'இதன் பொருள் என்ன' என்று பிற்காலத்தில் உன் மகன் உன்னிடம் கேட்டால்,
நீ அவனை நோக்கி, 'ஆண்டவர் தம் கைவன்மையால்
அடிமை வீடாகிய எகிப்திலிருந்து எம்மை வெளியேறச் செய்தார்.
15 பார்வோன் மனமிறுகி எம்மைப் போகவிட மறுத்தபோது,
எகிப்து நாட்டிலுள்ள மனிதருள் தலைப்பேறு தொடங்கி
கால்நடைகள் தலையீற்று ஈறாக ஆண் தலைப்பிறப்பு அனைத்தையும் ஆண்டவர் சாகடித்தார்.
எனவே கருப்பை திறக்கும் ஆண்பிறப்பு அனைத்தையும்
நான் ஆண்டவருக்குப் பலியிட்டு
என் ஆண்பிள்ளைகளுள் தலைப்பேறு அனைத்தையும் மீட்கிறேன்' என்று சொல்.
16 இது உன் கையில் அடையாளமாகவும்
உன் கண்களுக்கிடையில் சீட்டுப்பட்டமாகவும் அமையட்டும்.
ஏனெனில், தம் கைவன்மையால் ஆண்டவர்
எம்மை எகிப்திலிருந்து வெளியேற வைத்தார்.

மேகத் தூண், நெருப்புத் தூண் தொகு


17 மக்களைப் பார்வோன் அனுப்பியபோது,
பெலிஸ்தியர் நாட்டு நெடுஞ்சாலைதான் நேர்வழி எனினும்,
அதன் வழியாகக் கடவுள் அவர்களை நடத்திச் செல்லவில்லை.
ஏனெனில், "போரைக் கண்டு இம்மக்கள் மனம் தளர்ந்து
எகிப்திற்கே திரும்பிவிடுவார்கள்" என்றார் கடவுள்.
18 கடவுள் மக்களைப் பாலைநிலச் சுற்று வழியாக
செங்கடலுக்குப் போகச் செய்தார்.
இஸ்ரயேல் மக்கள் படை அணிபோல எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றனர்.
19 மேலும் யோசேப்பின் எலும்புகளை மோசே தம்மோடு எடுத்துச் சென்றார்.
ஏனெனில், "கடவுள் உங்களைச் சந்திக்கும்போது
இங்கிருந்து என் எலும்புகளை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்"
என்று யோசேப்பு இஸ்ரயேல் மக்களிடம் கூறி,
அதுபற்றி அவர்களிடம் உறுதிமொழி பெற்றிருந்தார்.[3]
20 அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணமாகிப்
பாலைநிலத்தின் எல்லையோரமாயுள்ள ஏத்தாமில் கூடாரம் அடித்தனர்.
21 ஆண்டவர், பகலில் அவர்களை வழிநடத்த மேகத் தூணிலும்,
இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார்.
பகலிலும் இரவிலும் அவர்கள் பயணம் செய்வதற்காக
அவர் அவர்கள்முன் சென்று கொண்டிருந்தார்.
22 பகலில் மேகத் தூணும் இரவில் நெருப்புத் தூணும்
மக்களைவிட்டு அகலவேயில்லை.


குறிப்புகள்

[1] 13:2 = எண் 3:13; லூக் 2:23.
[2] 13:12 = விப 34:19-20; லூக் 2:23.
[3] 13:19 = தொநூ 50:25; யோசு 24:32.


அதிகாரம் 14 தொகு

செங்கடலைக் கடத்தல் தொகு


1 ஆண்டவர் மோசேயிடம்,
2 "இஸ்ரயேல் மக்கள் திரும்பிச் சென்று மிக்தோலுக்கும்
பாகால் செபோனின் அருகிலுள்ள கடலுக்கும் இடையே அமைந்த
பிககிரோத்துக்கு எதிரே கடல் அருகில் பாளையம் இறங்கும்படி அவர்களிடம் சொல்.
3 பார்வோன் இஸ்ரயேல் மக்களைக் குறித்து,
பாலைநிலம் குறுக்கிட்டதால் அவர்கள் இன்னும் நாட்டிற்குள்ளேயே
அலைந்து கொண்டிருப்பார்கள் என்று கருதுவான்.
4 பார்வோனின் மனத்தை நான் இறுகிப்போகச் செய்வேன்;
அவனும் அவர்களைத் துரத்திக்கொண்டே வருவான்.
அப்போது பார்வோனையும் அவன் படைகளையும் வென்று நான் மாட்சியுறுவேன்.
நானே ஆண்டவர் என எகிப்தியரும் உணர்ந்து கொள்வர்" என்று கூறினார்.
அவர்களும் அவ்வாறே செயல்பட்டனர்.
5 மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என எகிப்திய மன்னனுக்கு அறிவிக்கப்பட்டபோது,
பார்வோனின் மனமும் அவன் அலுவலர் மனமும்
இம்மக்களைப் பொறுத்தமட்டில் மாற்றம் கண்டது.
"நாம் இப்படிச் செய்து விட்டோமே!
நமக்கு ஊழியம் செய்த இஸ்ரயேலரை
ஏன்தான் அனுப்பிவிட்டோம்?" என்று அவர்கள் பேசிக்கொண்டனர்.
6 எனவே அவன் தன் தேரைப் பூட்டித்
தன் ஆள்களையும் கூட்டிக்கொண்டு கிளம்பினான்.
7 தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களையும்,
மற்றும் எகிப்திலிருந்த எல்லாத் தேர்களையும்,
அவற்றின் படைத்தலைவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டான்.
8 ஆண்டவர் எகிப்திய மன்னனாகிய பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்தார்;
அவனும் இஸ்ரயேல் மக்களைத் துரத்திச் சென்றான்.
இஸ்ரயேல் மக்களோ வெற்றிக்கை உயர்த்தியவாறு சென்றுகொண்டிருந்தனர்.
9 பார்வோனின் குதிரைகள், தேர்கள்,
குதிரைவீரர்கள், படை ஆகிய இவை அனைத்தோடும்
எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்று
பாகால் செபோனுக்கு எதிரேயுள்ள பிககிரோத்தின் எதிரே
கடலின் அருகில் பாளையம் இறங்கியிருந்த அவர்களை நெருங்கினர்.


10 பார்வோன் நெருங்கி வந்து கொண்டிருக்க,
இஸ்ரயேல் மக்களும் தம் கண்களை உயர்த்தி
எகிப்தியர் தங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.
பெரிதும் அச்சமுற்றவராய் இஸ்ரயேல் மக்கள்
ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர்.
11 அவர்கள் மோசேயை நோக்கி,
"எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப்
பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்?
எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே!
12 'எங்களை விட்டுவிடும்; நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம்'
என்பதுதானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை!
ஏனெனில் பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட,
எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்" என்றனர்.
13 மோசே மக்களை நோக்கி,
"அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்!
இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும்
விடுதலைச் செயலைப் பாருங்கள்.
இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை.
14 ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்;
நீங்கள் அமைதியாயிருங்கள்" என்றார்.


15 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"ஏன் என்னை நோக்கி அழவேண்டும்?
முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்.
16 கோலை உயர்த்திப் பிடித்தவாறு
உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு.
இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்.
17 நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன்.
அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள்.
அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள்,
குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன்.
18 பார்வோனையும் அவன் தேர்களையும்
குதிரைவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது,
'நானே ஆண்டவர்' என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்" என்றார்.


19 இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர்
இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார்.
மேகத்தூணும் இடம்பெயர்ந்து
முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது.
20 அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும்
இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது.
அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும்
இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது;
இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.


21 மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே,
ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து
கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார்.
நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.
22 வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள்
அவர்களுக்குச் சுவராக விளங்க
இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.[*]
23 எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர்.
பார்வோனின் குதிரைகள், தேர்கள்,
குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர்.
24 பொழுது புலரும் முன்,
நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர்
எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து
அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார்.
25 அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால்,
தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று.
அப்போது எகிப்தியர்,
"இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம்.
ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று
எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்" என்றனர்.


26 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும்
திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு" என்றார்.
27 மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே,
காலையில் விடியும் நேரத்தில்
கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது.
அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில்
ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார்.
28 திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள்
மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற
பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது.
அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை.
29 ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர்.
நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது.
30 இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று
இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார்.
கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர்.
31 எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச்
செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர்.
மேலும் அவர்கள் ஆண்டவரிடமும்
அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.


குறிப்பு

[*] 14:22 =1 கொரி 10:1-2; எபி 11:29.


(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை