திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 24 முதல் 25 வரை


அதிகாரம் 24 தொகு

உடன்படிக்கை தொகு


1 ஆண்டவர் மோசேயிடம்,
"ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோருடனும்,
இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களுடனும்
ஆண்டவரிடமாய் ஏறிவாருங்கள்;
தொலையில் நின்று தொழுதுகொள்ளுங்கள்.
2 மோசே மட்டும் ஆண்டவர் அருகில் வரலாம்;
ஏனையோர் அருகில் வரலாகாது;
மக்கள் அவரோடு மலை மேலேறி வரக்கூடாது" என்று கூறினார்.


3 எனவே, மோசே மக்களிடம் வந்து
ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும்
விதிமுறைகளையும் அறிவித்தார்.
மக்கள் அனைவரும் ஒரே குரலாக:
"ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும்
நாங்கள் செயல்படுத்துவோம்" என்று விடையளித்தனர்.
4 மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார்.
அதிகாலையில் அவர் எழுந்து
மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும்,
இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப்
பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார்.
5 அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க,
அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர்.
மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர்.
6 மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக்
கலங்களில் விட்டு வைத்தார்.
மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார்.
7 அவர் உடன்படிக்கையின் ஏட்டை எடுத்து
மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார்.
அவர்கள், "ஆண்டவர் கூறிய அனைத்தையும்
நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்" என்றனர்.
8 அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து,
"இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க,
ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ" என்றார். [1]


9 பின்னர் மோசே, ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோரும்
இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களும் மேலேறிச் சென்று,
10 இஸ்ரயேலின் கடவுளைக் கண்டார்கள்.
அவர் பாதங்களின் கீழுள்ள தளம்
நீல மணிக்கல் இழைத்த வேலைப்பாடு போன்றும்,
தெள்ளிய வான்வெளி போன்றும் இருந்தது.
11 இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் மேல் அவர் கைவைக்கவில்லை.
அவர்கள் கடவுளைக் கண்டனர்; உண்டு குடித்தனர்.

சீனாய் மலைமேல் மோசே தொகு


12 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"என்னிடம் மலைமேல் ஏறிவந்து இங்கேயே இரு.
அவர்களுக்குக் கற்பிக்க நான் எழுதியுள்ள சட்டதிட்டங்கள் அடங்கிய
கற்பலகைகளை உன்னிடம் அளிப்பேன்" என்றார்.
13 மோசே தம் துணையாளர் யோசுவாவுடன் எழுந்து சென்றார்.
பின் மோசே கடவுளின் மலையின்மேல் ஏறிச் செல்கையில்,
14 அவர் பெரியோர்களை நோக்கி,
"நாங்கள் உங்களிடம் திரும்பி வரும்வரை
நீங்கள் இவ்விடத்திலேயே எங்களுக்காகக் காத்திருங்கள்.
இதோ ஆரோனும், கூரும் உங்களோடு இருக்கிறார்கள்.
வழக்கு ஏதுமிருப்பவன் அவர்களை அணுகட்டும்" என்றார்.


15 பின்னர் மோசே மலைமேல் ஏறிச்செல்ல,
ஒரு மேகம் மலையை மூடிற்று.
16 ஆண்டவரின் மாட்சி சீனாய் மலைமேல் தங்கிற்று.
மேகம் மலையை ஆறுநாள்களாக மூடியிருந்தது.
ஏழாம் நாள் அவர் மேகத்தின் நடுவினின்று மோசேயை அழைத்தார்.
17 மலை உச்சியில் ஆண்டவரது மாட்சியின் காட்சி,
பற்றியெரியும் நெருப்புப்போன்று இஸ்ரயேல் மக்களின் கண்களுக்குத் தெரிந்தது.
18 மோசே மேகத்தின் இடையே புகுந்து,
மலைமேல் ஏறிச் சென்றார்.
மோசே மலையில் நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தார். [2]


குறிப்புகள்

[1] 24:8 = மத் 26:28; மாற் 14:24; லூக் 22:20; 1 கொரி 11:25; எபி 9:19-20; 10:29.
[2] 20:18 = இச 9:9.


அதிகாரம் 25 தொகு

திருத்தலத்திற்கான காணிக்கை தொகு

(விப 35:4-9)


1 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
2 இஸ்ரயேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு.
தன்னார்வம் கொண்ட ஒவ்வொருவரிடமிருந்தும்
நீங்கள் எனக்காகக் காணிக்கை பெற்றுக்கொள்ளுங்கள்.
3 நீங்கள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காணிக்கைகளாவன:
பொன், வெள்ளி, வெண்கலம்;
4 நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல்;
மெல்லிய நார்ப்பட்டு; வெள்ளாட்டு உரோமம்;
5 செந்நிறமாகப் பதனிட்ட ஆட்டுக்கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள்;
சித்திம் மரம்;
6 விளக்குக்கான எண்ணெய்;
திருப்பொழிவு எண்ணெய்க்கும் தூபத்துக்கும் தேவையான நறுமண வகைகள்;
7 ஏப்போதுக்கும் மார்புப் பட்டைக்கும் தேவையான
பன்னிற மணிவகைக் கற்கள், பதித்து வைக்கும் கற்கள்.
8 நான் அவர்கள் நடுவில் தங்குவதற்கென ஒரு தூயகம் அமைக்கப்படட்டும்.
9 திருஉறைவிட அமைப்பையும் அதன்
அனைத்துப் பொருள்களின் அமைப்பையும்
நான் உனக்குச் சொல்லிக் காட்டுகிறபடியெல்லாம் செய்யுங்கள்.

உடன்படிக்கைப் பேழை தொகு

(விப 37:1-9)


10 சித்திம் மரத்தால் அவர்கள் ஒரு பேழை செய்யட்டும்.
அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம்,
உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.
11 அதன் மேலெங்கும் பசும்பொன்னால் மூடுவாய்.
உள்ளும்புறமும் வேய்ந்திடுவாய்.
அதைச் சுற்றிலும் ஒரு பொன்தோரணம் பொருத்திடுவாய்.
12 நான்கு பொன் வளையங்களை வார்த்து,
இரு வளையங்களை ஒரு பக்கத்திலும்
இரு வளையங்களை மறுபக்கத்திலுமாக
அதன் நான்கு கால்களோடும் பொருத்துவாய்.
13 சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து
அவற்றையும் பொன்னால் மூடுவாய்.
14 பேழையைத் தூக்கிச்செல்லும்படி
பேழையின் பக்கங்களிலுள்ள வளையங்களில்
தண்டுகளை மாட்டிவைப்பாய்.
15 தண்டுகள் பேழையிலுள்ள வளையங்களில் மாட்டப்பட்டிருக்கட்டும்.
அங்கிருந்து அவை கழற்றப்படலாகாது.
16 நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளைப்
பேழையினுள் வைப்பாய்.


17 மேலும் பசும்பொன்னால்
இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய்.
அதன் நீளம் இரண்டரை முழம்,
அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும். [1]
18 இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்;
இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும்
அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.
19 ஒரு புறத்தில், ஒரு கெருபும்,
மறுபுறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும்.
இரக்கத்தின் இருக்கையோடு இணைந்ததாக
அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளைச் செய்துவை.
20 அக்கெருபுகள், தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும்,
இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும், இருக்கட்டும்.
கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும்,
இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் விளங்கட்டும்.
21 பேழைமேல் இரக்கத்தின் இருக்கையைப் பொருத்து.
பேழையினுள் நான் உனக்களிக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளை வைப்பாய்.
22 அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்.
உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த
இரக்கத்தின் இருக்கையில்
இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி,
இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.

அப்ப மேசை தொகு

(விப 37:10-16)


23 சித்திம் மரத்தால் ஒரு மேசை செய்.
அதன் நீளம் இரண்டு முழம், அகலம் ஒரு முழம்,
உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.
24 அதனைப் பசும்பொன்னால் பொதிந்து
சுற்றிலும் ஒரு பொன் தோரணம் செய்து வைப்பாய்.
25 மேலும் நான்கு விரல்கடை [2] அளவில் அதற்குச் சுற்றுச்சட்டம் அமைத்து,
சட்டத்தைச் சுற்றிலும் பொன்தோரணம் செய்து வைப்பாய்.
26 அதற்கு நான்கு பொன் வளையங்கள் செய்து,
நான்கு மூலைகளிலும் நான்கு கால்களில் இணைத்துவிடு.
27 மேசையைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத்
தாங்கும் வளையங்கள் சட்டத்தின் அருகில் கிடக்கட்டும்.
28 சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து,
அவற்றையும் பொன்னால் பொதிவாய்.
இவைகளைக் கொண்டே மேசை தூக்கிச் செல்லப்பட வேண்டும்.
29 அதற்குரிய தட்டுகள், கிண்ணங்கள்,
சாடிகள், நீர்ம பலிக்கான குவளைகள்
ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
பசும் பொன்னால் அவற்றைச் செய்க.
30 என்முன் இம்மேசைமேல் எப்பொழுதும்
'திருமுன்னிலை அப்பம்' வைப்பாயாக! [3]

விளக்குத் தண்டு தொகு

(விப 37:17-24)


31 பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்வாய்.
அடிப்பு வேலையுடன் விளக்குத் தண்டை அமைப்பாய்.
அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள்,
குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக விளங்கட்டும்.
32 விளக்குத்தண்டின் ஒரு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளும்,
விளக்குத்தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக,
அதன் பக்கங்களில் ஆறு கிளைகள் செல்லும்.
33 ஒரு கிளையில் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள்
தம்தம் குமிழுடனும் மலருடனும் சேர்ந்து அமையும்.
மறுகிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள்
தம்தம் குமிழுடனும் மலருடனும் அமையும்.
இவ்வாறே விளக்குத்தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் இருக்கட்டும்.
34 ஆனால், விளக்குத் தண்டுக்கு நேர் மேலே
வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள்
தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் அமையும்.
35 முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ்,
இடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ்,
கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ்
என்று விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும்
ஆறு கிளைகளுக்கும் அமையும்.
36 அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தவையாயும்
பசும்பொன் அடிப்பு வேலையுடன் அமைந்தவையாயும் இருக்கும்.
37 அதற்காக ஏழு அகல்கள் செய்வாய்;
முன் பக்கமாக ஒளிவீசும் முறையில் அவற்றை ஏற்றிவைப்பாய்.
38 அதன் அணைப்பான்களும், நெருப்புத் தட்டுகளும்
பசும்பொன்னாலேயே ஆக்கப்படவேண்டும்.
39 அதனையும் எல்லாத் துணைக்கலன்களையும்
ஒரு தாலந்து பசும்சொன்னால் செய்து முடிப்பாய்.
40 மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி
நீ இவற்றைச் செய்யுமாறு கவனித்துக் கொள். [4]


குறிப்புகள்

[1] 25:17 = எபி 9:5.
[2] 25:25 'தோப்பகு' என்பது எபிரேய பாடம்.
[3] 25:30 = லேவி 24:5-8.
[4] 25:40 = திப 7:44; எபி 8:5.


(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 26 முதல் 27 வரை