திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 28 முதல் 29 வரை

யூத தலைமைக் குருவும், லேவியரும். விவிலியப் படம் (விப 28). ஓவியம் எழுதப்பட்ட காலம்: 1861-1880.


அதிகாரம் 28 தொகு

குருக்களின் உடைகள் தொகு

(விப 39:1-7)


1 எனக்குக் குருத்துவப்பணி புரிவதற்காக உன் சகோதரன் ஆரோனையும்
அவன் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோரையும்
இஸ்ரயேல் மக்கள் நடுவிலிருந்து அழைத்துவா.
2 உன் சகோதரன் ஆரோனுக்காக மாண்பும்,
அழகும் பொருந்திய திருவுடைகள் செய்வாய்.
3 திறமையால் நான் நிரப்பியுள்ள வல்லுநர்கள் எல்லாரிடமும் சொல்;
எனக்குக் குருத்துவப்பணி புரியுமாறு ஆரோனைத் திருநிலைப்படுத்துவதற்காக
அவர்கள் திருவுடைகள் செய்வார்கள்.
4 செய்யப்பட வேண்டிய உடைகளாவன:
மார்புப்பட்டை, ஏப்போது, அங்கி, கோடிட்ட உள்ளாடை,
தலைப்பாகை, இடைக்கச்சை ஆகியவை.
இவ்வாறே, எனக்குக் குருத்துவப்பணி புரியும்படி
உன் சகோதரன் ஆரோனுக்காகவும் அவன் புதல்வர்களுக்காகவும்
திருவுடைகள் செய்யப்படட்டும்.
5 பொன்னையும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி,


6 பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும்
கைதேர்ந்த வேலைப்பாடுடன் ஏப்போதை அமைக்கட்டும்.
7 அதற்கு இரு தோள்பட்டைகள் செய்து
அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் அதை இணைத்துவிடு.
8 ஏப்போதை இணைக்கும் தோள்பட்டை, அதன் ஒரு பகுதியாகவும்,
அதைப் போலவே பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பெறும்.
9 பன்னிற மணிக்கற்கள் இரண்டு எடுத்து
அவற்றின்மேல் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைப் பொறித்துவைப்பாய்.
10 அறுவர் பெயர்களை ஒரு கல்லிலும்
ஏனைய அறுவர் பெயர்களை இரண்டாம் கல்லிலுமாக
அவர்களது பிறப்பு வரிசைப்படியே அவற்றில் பொறித்துவிடு.
11 கல்வேலைப்பாடாயும், முத்திரைவெட்டுப்போன்றும்,
இஸ்ரயேல் புதல்வர் பெயர்களை இரண்டு கற்களிலும் பொறித்து,
அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்து வைப்பாய்.
12 இவ்விரு கற்களையும் ஏப்போதின் தோள்பட்டையில் பொருத்திவிடு.
இவை இஸ்ரயேல் மக்களின் நினைவுக் கற்களாகும்.
ஆரோன் அவர்கள் பெயர்களைத் தம் இரு தோள்களிலும்
ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாகத் தாங்கி நிற்பான்.
13 பொன் வேலைப்பாட்டுடன் பதக்கங்கள் செய்.
14 பின்னர், பசும் பொன்னால் பின்னல் வடிவில் இரு சங்கிலிகள் செய்து,
சங்கிலிகளைப் பதக்கங்களில் பொருத்துவாய்.

மார்புப் பட்டை தொகு

(விப 39:8-21)


15 தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டை, ஏப்போது போலவே,
கலை வேலைப்பாட்டுடன் அமையவேண்டும்.
அதைப் பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்வாய்.
16 அது இரண்டாக மடிந்ததாயும்,
நீளம் ஒரு சாண், [1] அகலம் ஒரு சாண் என்று
சதுர வடிவமானதாயும் இருக்க வேண்டும்.
17 அதை நிரப்புமாறு அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதிப்பாய்.
முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம்;
18 இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்;
19 மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்;
20 நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல் -
இவை யாயும் பொன்னிழைப் பின் புலத்தில் பதிக்கப்படட்டும்.
21 இந்தக் கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப்
பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும்.
அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம்,
பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு பெயர்களும் பொறிக்கப்பட்டு
முத்திரைபோல் விளங்கும்.
22 மார்புப் பட்டைமேல் பொருத்த,
பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப்
பசும்பொன்னால் செய்யவேண்டும்.
23 மார்புப் பட்டைக்காக இரு பொன் வளையங்களைச் செய்து,
அந்த இரு வளையங்களையும்
மார்புப்பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்துவாய்.
24 இரு பொன் சங்கிலிகளையும்
மார்புப் பட்டையின் மூலைகளிலுள்ள இரு வளையங்களில் மாட்டிவிடு.
25 சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும்
இரு பதக்கங்களில் மாட்டுவாய்.
இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, முன்புறமாய்ப் பொருத்துவாய்.
26 இரு பொன் வளையங்கள் செய்து,
அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில்
உட்புற ஓரங்களில் ஏப்போதை அடுத்து இணைப்பாய்.
27 மேலும் இரு பொன் வளையங்கள் செய்து,
அவற்றை ஏப்போதின் இரு தோள் பட்டைகளின் முன்பக்கம்
கீழ்ப்பகுதியில் அது இணையுமிடத்தில்,
ஏப்போதின் பின்னலழகுக் கச்சைக்கு மேலே கோர்த்துவிடு.
28 பின்னர் மார்புப் பட்டையின் வளையங்களை ஏப்போதின் வளையங்களோடு,
நீல நாடாவால் இணைத்துக் கட்டு.
இவ்வாறு மார்புப்பட்டை ஏப்போதின் பின்னலழகுக் கச்சையிலிருந்து அகலாமலும்
ஏப்போதின் மேல் படிந்தும் நிற்கும்.
29 ஆரோன் திருத்தலத்திற்குள் செல்கையில்,
தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையின் மேலுள்ள
இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைத்
தன் நெஞ்சின் மேல் தாங்கி நிற்பான்.
அவை ஆண்டவர் திருமுன் நீங்காத நினைவுச் சின்னமாகத் திகழும்.
30 தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையில்,
ஊரிமையும் [2] தும்மிமையும் [3] இட்டு வைப்பாய்.
ஆரோன் ஆண்டவர் திருமுன் செல்கையில்,
அவையும் அவன் நெஞ்சின்மேல் கிடக்கும்.
இவ்வாறு ஆரோன், ஆண்டவர் திருமுன் செல்லும்போதெல்லாம்
இஸ்ரயேல் மக்களுக்கான தீர்ப்பைத் தம் நெஞ்சின்மேல் தாங்கி நிற்பான். [4]

குருக்களின் பிற உடைகள் தொகு

(விப 39:22-31)


31 ஏப்போதின் அங்கி முழுவதும் நீல நிறத்தில் செய்வாய்.
32 அதில் தலை நுழைய ஒரு திறப்பும்,
அதனைச் சுற்றி, மேலாடைகளின் திறப்பில் அமைவது போன்று,
நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரையும், அமைந்திருக்கட்டும்.
ஆக, அது கிழியாதிருக்கும்.
33 அதன் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்பட்டாலும் மாதுளைத் தொங்கலும்,
சுற்றிலும் அதனிடையே பொன்மணிகளும் பொருத்துவாய்.
34 ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல்,
பின்னும் ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று
அங்கியின் விளிம்பெங்கும் அமைத்திடு.
35 திருப்பணி புரிகையில் ஆரோன் இதனை அணிந்திருக்க வேண்டும்.
இதனால் அவன் ஆண்டவர் திருமுன் தூயகத்தில்
நுழைகையிலும் வெளி வருகையிலும் அதன் ஒலி கேட்கும்.
இல்லையெனில் அவன் சாவான்.


36 பசும் பொன்னால் ஒரு பட்டம் செய்து,
அதன் மேல் "ஆண்டவருக்கு அர்ப்பணம்" என்று
முத்திரைபோல் பொறித்து வைத்து,
37 அதனை ஒரு நீல நாடாவால் தலைப்பாகைமேல் இணைத்துக்கட்டு;
தலைப்பாகையின் முன்புறம் அது நிற்கும்.
38 அது ஆரோனின் நெற்றிமேல் நிற்கட்டும்.
இஸ்ரயேல் மக்களைப் புனிதமாக்கும் திருப்பொருள்கள்,
அவர்கள் அளிக்கும் புனிதப் படையல்கள்
ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளை ஆரோன் சுமந்து கொள்ளவும்,
இதனால் யாவும் ஆண்டவர் திருமுன் ஏற்கப் பெறவும்,
அது எப்போதும் அவன் நெற்றிமேல் நிற்கட்டும்.


39 மேலும் மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி செய்யவேண்டும்.
தலைப்பாகையையும் மெல்லிய நார்ப்பட்டால் நெய்வாய்.
பின்னல் வேலைப்பாட்டுடன் ஓர் இடைக்கச்சையையும் செய்வாய்.


40 ஆரோனின் புதல்வர்களுக்குத் தேவையான அங்கிகளும்,
இடைக் கச்சைகளும், தலைப்பாகைகளும்
மாண்பும் அழகும் பொருந்தியனவாய் செய்யப்படட்டும்.
41 இவற்றால் உன் சகோதரன் ஆரோனையும்
அவன் புதல்வர்களையும் நீ உடுத்துவாய்.
அவர்களுக்கு அருள்பொழிவு செய்து,
அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணிப்பாய்.
அவர்கள் எனக்குக் குருத்துவப்பணி புரிவார்கள்.
42 அவர்களின் பிறந்தமேனி மறைவதற்காக
இடுப்பு முதல் தொடைகள் வரை நீண்டிருக்கும் அளவில்
மெல்லிய நார்ப்பட்டால் கால்சட்டைகள் செய்வர்.
43 சந்திப்புக் கூடாரத்திற்குப் போகும்போதும்,
தூயதலத்தில் பணிபுரியுமாறு பலிபீடத்தை அணுகும்போதும்,
ஆரோனும் அவன் புதல்வர்களும் இவற்றை அணிந்திருப்பார்கள்.
இல்லாவிடில், அவர்கள் குற்றத்துக்குள்ளாகிச் சாவார்கள்.
அவனுக்கும், அவனுக்குப்பின் அவன் வழிமரபினர்க்கும், மாறாத கட்டளை இது.


குறிப்புகள்

[1] 28:16 'செரத்து' என்பது எபிரேய பாடம்.
[2][3] 28:30 'ஊரிம்', 'தும்மிம்' என்பவை கடவுளின் திருவுளத்தை அறிவதற்குக் குருக்கள் பயன்படுத்தும் இரு பொருள்கள்.
[4] 28:30 = எண் 27:21; இச 33:8; எஸ்ரா 2:63; நெகெ 7:65.


அதிகாரம் 29 தொகு

ஆரோனையும் அவன் புதல்வர்களையும் திருநிலைப்படுத்தும் முறை தொகு

(லேவி 8:1-36)


1 எனக்குக் குருத்துவப் பணி புரிய
நீ அவர்களைத் திருநிலைப்படுத்துவதற்காக
அவர்களுக்கு இவ்வாறுசெய்.
ஓர் இளங்காளையையும் குறைபாடற்ற இரு செம்மறிக்கிடாய்களையும் தேர்ந்தெடு.
2 சிறந்த கோதுமை மாவினால் புளிப்பற்ற அப்பம்,
எண்ணெயில் பிசைந்த புளிப்பற்ற நெய்யப்பம்,
எண்ணெய் தோய்ந்த புளிப்பற்ற மெல்லிய அடைகள் ஆகியவற்றைச் செய்து,
3 ஒரு கூடையில் இட்டு, கூடையோடு அவற்றை எடுத்துவா.
மேலும் அந்தக் காளையையும் இரு செம்மறிக்கிடாய்களையும் கொண்டு வா.
4 சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில்
ஆரோனையும் அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து,
அவர்களைத் தண்ணீரால் கழுவு.
5 உடைகளை எடுத்து வந்து கோடிட்ட உள்ளாடை, ஏப்போதின் அங்கி,
ஏப்போது, மார்புப்பட்டை இவற்றை ஆரோனுக்கு அணிவித்து
ஏப்போதின் கைவண்ணமிக்க கச்சையால் கட்டுவாய்.
6 அவன் தலைமேல் தலைப்பாகையை வைத்து
அதன் மேல் புனித மணிமுடியையும் வை.
7 திருப்பொழிவு எண்ணெயை எடுத்துவந்து,
அவன் தலைமேல் ஊற்றி அவனுக்கு அருள்பொழிவு செய்.
8 அவன் புதல்வரையும் கூட்டி வந்து,
அவர்களுக்கும் ஆடைகள் அணிவிப்பாய்.
9 ஆரோனுக்கும், அவன் புதல்வருக்கும் இடைக்கச்சைகள் கட்டி,
அவர்களுக்கும் தலைப்பாகைகள் அணிவி.
குருத்துவப்பணி என்றுமுள்ள நியமமாக அவர்களோடு இருக்கும்.
இவ்வாறாக ஆரோனையும் அவன் புதல்வரையும் திருநிலைப்படுத்துவாய்.


10 பின்னர் சந்திப்புக் கூடாரத்தின் முன் காளையைக் கொண்டு வருவாய்.
ஆரோனும் அவன் புதல்வரும் தங்கள் கைகளைக்
காளையின் தலைமேல் வைத்தபின்,
11 அக்காளையைச் சந்திப்புக் கூடார வாயிலில்
ஆண்டவர் திருமுன் அடிப்பாய்.
12 காளையின் இரத்தத்தை எடுத்து,
பலிபீடத்தின் கொம்புகளில் உன் விரலால் பூசியபின்,
மீதி இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடு.
13 குடல்களைச் சுற்றி அமைந்த அனைத்துக் கொழுப்பு,
இரு சிறுநீரகங்கள், அவற்றின் மேலுள்ள கொழுப்பு
ஆகியவற்றை எடுத்துப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்துப் போடுவாய்.
14 காளையின் சதை, அதன் தோல்,
அதன் சாணம் இவற்றைப் பாளையத்திற்கு வெளியே நெருப்பால் எரித்துவிடு.
இது ஒரு பாவம்போக்கும் பலி!


15 பின்னர், செம்மறிக்கிடாய் ஒன்றினைக் கொண்டுவா.
ஆரோனும் அவன் புதல்வரும் அந்தச் செம்மறிக்கிடாயின்
தலைமேல் தம் கைகளை வைப்பர்.
16 அந்தச் செம்மறிக்கிடாயைகக் கொன்று
அதன் இரத்தத்தை எடுத்துப் பலிபீடத்தைச் சுற்றிலும் அதன்மீது தெளிப்பாய்.
17 செம்மறிக்கிடாயைப் பகுதி பகுதியாக வெட்டு.
அதன் குடலையும் அதன் கால்களையும் கழுவு.
அவற்றை ஆட்டின் பகுதிகளோடும் தலையோடும் வைத்து,
18 செம்மறியாடு முழுவதையும் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்துவிடு.
இது ஆண்டவருக்கு எரிபலி ஆகும்.
இது ஆண்டவருக்கு இனிய நறுமண மிக்க நெருப்புப்பலி ஆகும். [1]
19 இரண்டாவது செம்மறிக்கிடாயையும் கொண்டுவா.
அச்செம்மறியின் தலைமேல் ஆரோனும் அவன் புதல்வரும் கைகளை வைக்கட்டும்.
20 அந்தச் செம்மறிக்கிடாயையும் வெட்டு.
அதன் இரத்தத்தை எடுத்து ஆரோனின் வலக்காது நுனியிலும்,
அவன் புதல்வரின் வலக்காது நுனியிலும்
அவர்கள் வலக்கை பெருவிரலிலும்,
அவர்கள் வலக்கால் பெருவிரலிலும் தொட்டு வைத்தபின்,
எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் அதன்மீது தெளித்துவிடு.
21 பலிபீடத்தின் மீதுள்ள இரத்தத்திலும்
திருப்பொழிவு எண்ணெயிலும் சிறிது எடுத்து,
அவற்றை ஆரோன், அவன் உடைகள்,
அவன் புதல்வர்கள், அவர்களின் உடைகள் மீது தெளிப்பாய்.
இதனால் அவன் அவனுடைய உடைகளோடும்,
அவன் புதல்வர்கள் அவர்களுடைய உடைகளோடும் புனிதம் பெறுவர்.


22 செம்மறிக்கிடாயின் கொழுப்பு, கொழுப்பு வால்,
குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பு, இரு சிறுநீரகங்கள்,
அவற்றின் மேலுள்ள கொழுப்பு,
வலப்பக்க முன்னந்தொடை ஆகியவற்றை எடுத்துக்கொள்.
ஏனெனில் இது திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக் கிடாய்.
23 மேலும் ஓர் அப்பம், ஒரு நெய்யப்பம்,
ஒரு மெல்லிய அடை ஆகியவற்றை
ஆண்டவர் திருமுன் உள்ள புளிப்பற்ற அப்பக் கூடையிலிருந்து எடுத்து,
24 இவை யாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும்
அவன் புதல்வரின் உள்ளங்கைகளிலும் வைத்து,
அவற்றை ஆண்டவர் திருமுன் ஆரத்திப் பலியாக உயர்த்துவாய்.
25 பின் அவற்றை அவர்கள் கையிலிருந்து எடுத்து
எரிபலியோடு சேர்த்து
ஆண்டவருக்கு இனிய நறுமணமாகப் பலிபீடத்தின் மேல் எரித்துவிடு.
இது ஆண்டவருக்கு நெருப்புப் பலி.


26 ஆரோனின் திருநிலைப்பாட்டிற்கான
செம்மறியின் மார்புக்கண்டத்தை எடுத்து,
அதனை ஆரத்திப் பலியாய் ஆண்டவர் திருமுன் உயர்த்துவாய்.
அது உனக்குரிய பங்காக அமையும்.
27 ஆரோனுடையவும் அவன் புதல்வருடையவும் திருநிலைப்பாட்டிற்கான
செம்மறிக்கிடாயிலிருந்து எடுக்கப்பட்டு
ஆரத்திப் பலியாக்கப்பட்ட மார்புக் கண்டத்தையும்,
ஆரத்தியாக உயர்த்தி குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்கான சந்தையும் நீ புனிதப்படுத்து.
28 இது ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும்
இஸ்ரயேல் மக்களிடமிருந்து வரும் என்றுமுள்ள உரிமைப்பங்காக விளங்கும்.
ஏனெனில், இது குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்கு.
இது இஸ்ரயேல் மக்களின் நல்லுறவுப் பலிகளிலிருந்து
குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்காகும்.
ஏனெனில், இது அவர்கள் அளிக்கும் ஆண்டவருக்கான பங்கு.
29 ஆரோனுக்குப்பின் திருவுடைகள் அவன் புதல்வரைச் சேரும்.
அவர்கள் அருள்பொழிவு பெறும் போதும்
திருநிலைப்படுத்தப்படும் போதும்
அவற்றை அணிந்திருக்க வேண்டும்.
30 அவனுக்குப் பதிலாக புதல்வர்களுள் குருவாகிறவன்
சந்திப்புக் கூடாரத்தில் உள்ள தூயகத்தில் பணிபுரிய வருகையில்
அவற்றை ஏழு நாள்கள் அணிந்திருப்பான்.


31 திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாயைக் கொண்டுவந்து,
அதன் இறைச்சியை ஒரு புனிதமான இடத்தில் கொதித்து வேகவைப்பாய்.
32 ஆரோனும் அவன் புதல்வர்களும் செம்மறிக்கிடாயின் கறியையும்,
கூடையிலுள்ள அப்பத்தையும்
சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின்கண் உண்பார்கள்.
33 அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணம் செய்யும்போது
பாவக்கழுவாய்க்காகப் பயன்பட்டவற்றை அவர்கள் உண்பார்கள்.
அன்னியரோ அவற்றை உண்ணலாகாது.
ஏனெனில் அவை புனிதமானவை.
34 திருநிலைப்பாட்டிற்கான கறியோ அப்பமோ காலைவரை எஞ்சியிருந்தால்,
எஞ்சியுள்ளதை நெருப்பில் சுட்டெரித்துவிடு.
அது உண்ணப்படல் ஆகாது.
ஏனெனில், அது புனிதமானது.


35 நான் உனக்குக் கட்டளையிட்டபடி
நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் செய்.
ஏழு நாள்கள் நீ அவர்களைத் திருநிலைப்படுத்துவாய்.
36 பாவக் கழுவாய்க்கென்று ஒவ்வொரு நாளும்,
நீ ஒரு காளையைப் பாவம்போக்கும் பலியாக ஒப்புக்கொடு,
இவ்வாறு பாவக்கழுவாய் செய்து பலிபீடத்தைத் தூய்மைப்படுத்துவாய்.
அதனை அர்ப்பணிப்பதற்காகத் திருப்பொழிவு செய்வாய்.
37 ஏழு நாள்கள் பலிபீடத்திற்கென்று பாவக்கழுவாய் செய்து,
அதனை அர்ப்பணம் செய்.
பலிபீடம் தூய்மைமிக்கதாகும்.
பலிபீடத்தைத் தொடுவதெல்லாம் புனிதம் பெறும்.

அன்றாட வழிபாடு தொகு

(எண் 28:1-8)


38 ஒரு வயது செம்மறிக்குட்டிகளை நாளுக்கு இரண்டு வீதம்,
எந்நாளும் நீ பலிபீடத்தில் பலியிடுவாய்.
39 ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியைக் காலையிலும்,
இரண்டாவது செம்மறி ஆட்டுக்குட்டியை மாலை மங்கும் வேளையிலும் பலியிடு.
40 இரண்டு படி [2] அளவில் பத்தில் ஒரு அளவு
மெல்லிய மாவை ஆட்டிப்பிழிந்த
கால் கலயம் [3] அளவு எண்ணெயில் கலந்து அதையும்,
நீர்மப்படையலாகக் கால் கலயம் அளவு திராட்சைப்பழ இரசத்தையும்
ஒரு செம்மறிக்குட்டியோடு படைப்பாய்.
41 மாலைமங்கும் வேளையில் மற்றச் செம்மறிக்குட்டியைப் பலியிடுவாய்.
காலையில் செய்தது போலவே,
உணவுக் காணிக்கைகளோடு நீர்மப்படையலையும் சேர்த்து
ஆண்டவருக்கு இனிய நறுமணமாக நெருப்புப் பலியாக்குவாய்.
42 நான் உங்களைச் சந்தித்து உன்னிடம் பேசுகின்ற
சந்திப்புக் கூடார நுழைவாயிலில்,
அது உங்கள் தலைமுறைதோறும்
என்றுமுள்ள எரிபலியாக ஆண்டவர் திருமுன் நடந்தேறட்டும்.
43 நான் அங்கு இஸ்ரயேல் மக்களைச் சந்திப்பேன்.
அந்த இடம் என் மாட்சியால் புனிதம் பெறும்.
44 நான் சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் புனிதப்படுத்துவேன்.
எனக்குக் குருத்துவப்பணி புரிய நான் ஆரோனையும்
அவன் புதல்வரையும் புனிதப்படுத்துவேன்.
45 நான் இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன்;
அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்.
46 அவர்களிடையே குடியிருப்பதற்காக
எகிப்து நாட்டினின்று அவர்களை நடத்திவந்த
அவர்களின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை
அவர்கள் உணர்ந்து கொள்வர்.
ஆம், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 29:18 எபே 5:2; பிலி 4:18.
[2] 29:40 'இசரேன்' என்பது எபிரேய பாடம்.
[3] 29:40 'கீன்' என்பது எபிரேய பாடம்.


(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 30 முதல் 31 வரை