திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 36 முதல் 37 வரை

யூத வழிபாட்டுக்கான விளக்குத் தண்டு. மாதிரி. (விப 37:17-24). எருசலேம்.


விடுதலைப் பயணம் (The Book of Exodus) தொகு

அதிகாரங்கள் 36 முதல் 37 வரை

அதிகாரம் 36 தொகு


1 "பெட்சலேலும் ஒகொலியாபும்
மேலும் தூயக அமைப்பு வேலையனைத்தையும் செய்யத் தெரியுமாறு
ஆண்டவரிடமிருந்து அறிவுக் கூர்மையும்
தொழில்திறமையும் பெற்றிருந்த கலைஞர் யாவரும்,
ஆண்டவர் கட்டளையிட்டபடி வேலை செய்யட்டும்."

மக்களின் தாராள கணிக்கைகள் தொகு


2 அவ்வாறே மோசே பெட்சலேலையும், ஒகொலியாபையும்,
ஆண்டவரிடமிருந்து அறிவுக்கூர்மை பெற்றவரும்
உள்ளார்வம் உடையவருமான கலைஞர் அனைவரையும்
வேலையில் ஈடுபடுமாறு அழைத்தார்.
3 தூயக வேலைக்கென்று இஸ்ரயேல் மக்கள் கொண்டு வந்த
காணிக்கைகள் யாவற்றையும்
இவர்கள் மோசே முன்னிலையிலிருந்து எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து தன்னார்வக் காணிக்கைகள்
காலைதோறும் வந்தவண்ணமாயிருந்தன.
4 தூயக வேலைகளில் ஈடுபட்டிருந்த கலைஞர்
தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து,
5 மோசேயை நோக்கி,
"மக்கள் கொண்டு வருவது ஆண்டவர் கட்டளையிட்ட வேலைக்கும்
அதிகமாகவே உள்ளது" என்று அறிவித்தனர்.
6 அப்போது மோசே,
"ஆணோ பெண்ணோ யாராயினும் இனிமேல்
தூயகத்துக்காகக் காணிக்கை கொண்டுவர வேண்டாம்" என்று
ஒரு கட்டளை பிறப்பிக்க, அது பாளையம் எங்கும் அறிவிக்கப்பட்டது.
எனவே மக்கள் எதையுமே கொண்டு வருவதை நிறுத்திவிட்டனர்.
7 ஏற்கெனவே சேகரித்தது,
செய்ய வேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமானதாயும்
தேவைக்கு மிஞ்சியும் இருந்தது.

கூடாரம் செய்தல் தொகு

(விப 26:1-37)


8 பணியாளருள் கலைத்திறமைமிக்கோர் அனைவரும் ஒன்று சேர்ந்து
திருஉறைவிடத்தைப் பத்துத் திரைகளால் அமைத்தனர்.
அவை முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும்,
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும்,
கலைத் திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் இருந்தன.
9 திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும்.
ஒரு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்கும் இருக்கும்.


10 இவற்றுள் ஐந்து திரைகள் ஒன்றாகவும்,
ஏனைய ஐந்து திரைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டன.
11 பின்னர் அவர் முதல் தொகுப்பின் விளிம்பில்
நீலவண்ணத் துணி வளையங்களை அமைத்தார்.
அடுத்த தொகுப்பின் இறுதி விளிம்பிலும் அவ்வாறே செய்தார்.
12 முதல் திரைத்தொகுப்பில் அவர் அமைத்த வளையங்களை ஐம்பது.
மற்றத் திரைத்தொகுப்பின் விளிம்பில் அமைத்த வளையங்கள் ஐம்பது.
அவ்வளையங்கள் எதிரெதிரே இருந்தன.
13 பொன்னால் ஐம்பது கொக்கிகள் செய்து,
அந்தக் கொக்கிகளால் அவர் திரைகளை
ஒன்றோடொன்று இணைத்தார்.
இவ்வாறு ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமைந்தது.


14 திருஉறைவிடத்தில் மேலே கூடாரம் அமைப்பதற்கு
வெள்ளாட்டு மயிரால் மூடுதிரைகள் செய்தார்.
பதினொரு மூடுதிரைகள் செய்தார்.
15 ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழமும்
அகலம் நான்கு முழமும் ஆகும்.
பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றேயாம்.
16 இவற்றுள் ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும்,
மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்தார்.
17 முதல் மூடுதிரைத் தொகுப்பின் ஓரத்தில்
ஐம்பது வளையங்களை அமைத்தார்.
அவ்வாறே ஐம்பது வளையங்களை
அடுத்த திரைத் தொகுப்பின் ஓரத்திலும் அமைத்தார்.
18 ஒரே கூடாரமாக ஒன்றிணைத்து அமைக்க
ஐம்பது வெண்கல கொக்கிகள் செய்தார்.
19 மேலும் செந்நிறமாகப் பதனிட்ட
செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும்,
வெள்ளாட்டுத் தோல்களாலும்,
கூடாரத்துக்கு ஒரு மேல்விரிப்பு செய்தார்.


20 திருஉறைவிடத்திற்கான செங்குத்தாய் நிற்கும் சட்டங்களை
அவர் சித்திம் மரத்தால் செய்தார்.
21 ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழமும்
அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.
22 சட்டம் ஒவ்வொன்றைப் பொருத்த இரு கொளுத்துகள் வீதம்
திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களுக்கும் செய்தார்.
23 திருஉறைவிடத்திற்காகச் சட்டங்களை அவர் செய்த முறை:
தெற்கே தென்திசை நோக்கி நிற்கச் செய்யப்பட்டவை இருபது சட்டங்கள்.
24 ஒரு சட்டத்துக்குக் கீழே,
இரு கொளுத்துகளுக்கு இரு பாதப்பொருத்துகள்;
அடுத்த சட்டத்துக்குக் கீழே
இரு கொளுத்துகளுக்கு இரு பாதப்பொருத்துகள்.
இவ்வாறு இருபது சட்டங்களுக்கும் கீழே
அவர் நாற்பது வெள்ளிப் பாதப்பொருத்துகளை அமைத்தார்.
25 திருஉறைவிடத்தின் இரண்டாம் பக்கமாகிய
வடதிசைக்கான சட்டங்கள் இருபது செய்தார்.
26 ஒரு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருத்துகள்,
மறு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருத்துகள் என்று
நாற்பது வெள்ளி பாதப்பொருத்துகள் செய்யப்பட்டன.
27 திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்றிசைக்காக
ஆறு சட்டங்கள் செய்தார்.
28 அத்துடன் திருஉறைவிடத்தின் பின்புற மூலைகளுக்காக
இரண்டு சட்டங்களைச் செய்தார்.
29 அவற்றுள் ஒவ்வொன்றும் கீழிருந்து மேலே
முதல் வளையம் வரைக்கும்
இரட்டைக் கனமாக அமைக்கப்பட்டன.
இவ்வாறே இரண்டு மூலைகளும் அமைக்கப்பட்டன.
30 ஒவ்வொரு சட்டத்தின் அடியிலும்
இரண்டு பாதப்பொருத்துகள் வீதம் எட்டுச் சட்டங்களுக்கும்
அவற்றிற்காகப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகளும் இருந்தன.


31 சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்களையும் செய்தார்;
திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்களின் மேலே பொருத்த ஐந்து;
32 திருஉறைவிடத்தின் மறுபுறச் சட்டங்கள் மேலே பொருத்த
குறுக்குச் சட்டங்கள் ஐந்து;
மேற்கே திருஉறைவிடத்தின் பின்புறச் சட்டங்கள் மேலே பொருத்த
குறுக்குச் சட்டங்கள் ஐந்து.
33 நடுவிலுள்ள குறுக்குச்சட்டம்
சட்டங்களுக்குச் சரிபாதியில்
ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செலுத்தப்பட்டது.
34 அவர் சட்டங்களைப் பொன்னால் பொதிந்தார்.
அதிலுள்ள குறுக்குச் சட்டங்களைச் செருகுவதற்கான
வளையங்களையும் பொன்னால் செய்தார்.
குறுக்குச் சட்டங்களையும் பொன்னால் பொதிந்தார்.
35 மேலும் அவர் ஒரு தொங்கு திரை செய்தார்.
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும்
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும்
கலைத்திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் அதைச் செய்தார்.
36 அதற்காகச் சித்திம் மரத்தால் நான்கு தூண்கள் செய்தார்.
அவற்றைப் பொன்னால் பொதிந்து
பொன் கொக்கிகளையும் பொருத்திவிட்டார்.
அவற்றிற்காக நான்கு வெள்ளிப் பாதப்பொருத்துகளை வார்த்தார்.
37 கூடாரத்தின் நுழை வாயிலுக்காக அவர் ஒரு தொங்கு திரை செய்தார்.
அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலும்
முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டும்
பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது.
38 ஐந்து தூண்களையும், அவற்றின் வளைவு ஆணிகளையும் செய்தார்.
அவற்றின் பொதிகைகளையும் பூண்களையும்
பொன்னால் பொதிந்தார்.
ஐந்து பாதப்பொருத்துகளை வெண்கலத்தால் செய்தார்.


அதிகாரம் 37 தொகு

உடன்படிக்கைப் பேழை செய்தல் தொகு

(விப 25:10-12)


1 பெட்சலேல் சித்திம் மரத்தால் ஒரு பேழை செய்தார்.
அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம்,
உயரம் ஒன்றரை முழம்.
2 அவர் அதன் உள்ளும் புறமும் பசும்பொன்னால் வேய்ந்தார்;
அதைச் சுற்றிலும் பொன்தோரணம் பொருத்தினார்.
3 அவர் இரு வளையங்களை ஒரு பக்கத்திற்கும்,
இரு வளையங்களை மறு பக்கத்திற்குமாக,
அதன் நான்கு கால்களுக்காகவும்
நான்கு பொன் வளையங்களை வார்த்தார்.
4 அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து
அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.
5 அவர் பேழையைத் தூக்கிச் செல்லும்படி,
தண்டுகளைப் பேழையின் பக்கங்களிலுள்ள
வளையங்களில் செருகிவிட்டார்.
6 அவர் பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கையைச் செய்தார்.
அதன் நீளம் இரண்டரை முழமும் அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.
7 அவர் இரு பொன் கெருபுகளைச் செய்தார்;
இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும்
அவற்றை அடிப்பு வேலையாகச் செய்தார்.
8 ஒரு புறத்தில் ஒரு கெருபும்,
வ்மறுபுறத்தில் இன்னொரு கெருபுமாக
இரக்கத்தின் இருக்கையோடு இணைந்தனவாக,
அதன் இரண்டு பக்கங்களிலும் கெருபுகள் செய்யப்பட்டன.
9 கெருபுகள் தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும்,
இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும் இருந்தன.
கெருபுகளின் முகங்கள் ஒன்றை ஒன்று நோக்கியவாறும்,
இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் இருந்தன.

அப்ப மேசை செய்தல் தொகு

(விப 25:23-30)


10 அவர் சித்திம் மரத்தால் மேசையொன்று செய்தார்.
அதன் நீளம் இரண்டு முழம்; அகலம் ஒரு முழம்;
உயரம் ஒன்றரை முழம்.
11 அவர் அதனைப் பசும்பொன்னால் பொதிந்து
சுற்றிலும் ஒரு பொன் தோரணம் செய்து வைத்தார்.
12 அவர் கையகல அளவில் அதற்குச் சுற்றுச் சட்டம் அமைத்து
அச்சட்டத்தைச் சுற்றிலும் பொன்தோரணம் செய்து வைத்தார்.
13 அவர் அதற்கு நான்கு பொன்வளையங்கள் செய்து
அவ்வளையங்களை நான்கு மூலைகளிலும்
நான்கு கால்களில் பொருத்தினார்.
14 மேசையைத் தூக்கிச்செல்லும் தண்டுகள் தாங்கும் இவ்வளையங்கள்
சட்டத்தின் அருகில் இருந்தன.
15 மேசையைத் தூக்கிச் செல்வதற்கான தண்டுகளைச்
சித்திம் மரத்தால் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.
16 மேசைமேல் இடம்பெறும் துணைக்கலன்களான தட்டுகள்,
கிண்ணங்கள், சாடிகள், நீர்மப் படையலுக்கான குவளைகள்
ஆகியவற்றையும் பசும்பொன்னால் செய்தார்.

விளக்குத் தண்டு செய்தல் தொகு

(விப 25:31-40)


17 பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்தார்.
அதை அடிப்பு வேலையாகச் செய்தார்.
அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள்,
குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக இருந்தன.
18 விளக்குத் தண்டின் ஒரு பக்கத்தில் இருந்து மூன்று கிளைகளும்,
விளக்குத் தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக
அதன் பக்கங்களில் ஆறு கிளைகள் பிரிந்து சென்றன.
19 ஒரு கிளையில், வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள்
தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன.
மறு கிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள்
தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன.
இவ்வாறே விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும்
ஆறு கிளைகளும் அமைந்தன.
20 விளக்குத் தண்டுக்கு நேர் மேலே,
வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள்
தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் இருந்தன.
21 முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ்,
இடை இருகிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ்,
கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ் என்று
அதிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.
22 அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தனவாயும்,
பசும்பொன் அடிப்பு வேலையுடன் செய்யப்பட்டனவாயும் இருந்தன.
23 அதன் ஏழு அகல்கள், அணைப்பான்கள்,
நெருப்புத் தட்டுகள் ஆகியவை பசும்பொன்னால் செய்யப்பட்டன.
24 அவர் அதனையும் அதன் எல்லாத் துணைக்கலன்களையும்
ஒரு தாலந்து பசும்பொன்னால் செய்தார்.

தூபபீடம் செய்தல் தொகு

(விப 30:1-5)


25 அவர் சித்திம் மரத்தால் தூபபீடம் செய்தார்.
அது நீளம் ஒரு முழமும் அகலம் ஒரு முழமுமாக
சதுரவடிவமாயிருந்தது.
அதன் உயரமோ இரண்டு முழம்.
அதன் கொம்புகள் அதனுடன் ஒன்றிணைந்திருந்தன.
26 அவர் அதன்மேல் பாகம், அதன் பக்கங்கள்,
அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து
சுற்றிலும் தங்கத் தோரணம் பொருத்தினார்.
27 அதைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்க
அதன் தோரணத்துக்குக் கீழே இரு மூலைகளிலும்
இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் அவர் பொருத்தினார்.
28 சித்திம் மரத்தால் அவர் தண்டுகள் செய்து
அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.

திருப்பொழிவு எண்ணெயும் நறுமணத் தூபமும் தயாரித்தல் தொகு

(விப 30:22-38)


29 அவர் தூய திருப்பொழிவு எண்ணெயையும்
திறமை வாய்ந்த பரிமளத்தயாரிப்பாளன் செய்வது போல் செய்யப்பட்டதும்
கலப்பற்றதுமான நறுமணத் தூபத்தையும் தயாரித்தார்.


(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 38 முதல் 40 வரை