திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/உரோமையர்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

"பிசைந்த மாவில் முதலில் ஒருபிடி எடுத்துக் கடவுளுக்கு அர்ப்பணித்தால் அம்மாவு முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டதாகிறது. அவ்வாறே மரத்தின் வேர் அர்ப்பணிக்கப்பட்டால் அதன் கிளைகளும் அர்ப்பணிக்கப்பட்டவையாகும். நல்ல ஒலிவ மரம் ஒன்றின் கிளைகள் சில தறிக்கப்பட்டு, அந்த ஒலிவ மரத்தில் காட்டொலிவ மரக்கிளை ஒன்று ஒட்டப்பட்டால், அது மரத்தின் செழுமையான வேரிலிருந்து ஊட்டம் பெறுகிறது. அந்தக் கிளை தறிக்கப்பட்ட கிளைகளைவிடத் தன்னைப் பெருமையாகக் கருதலாமா? அந்தக் காட்டொலிவ மரக்கிளை நீங்களே. அப்படியே நீங்கள் உங்களைப் பெருமையாகக் கருதினாலும், நீங்கள் வேரைத் தாங்கவில்லை; வேர்தான் உங்களைத் தாங்குகிறது என்பதை மறவாதீர்கள்."- உரோமையர் 11:16-18

அதிகாரம் 11 தொகு

இஸ்ரயேலருள் எஞ்சினோர் தொகு


1 அப்படியானால் கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார் என்று சொல்லலாமா?
ஒருபோதும் இல்லை.
நானும் ஓர் இஸ்ரயேலன், ஆபிரகாமின் வழிமரபினன்,
பென்யமின் குலத்தினன். [1]
2 தாம் முன்பே தேர்ந்து கொண்ட மக்களைக் கடவுள் தள்ளி விடவில்லை.
இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகக் கடவுளிடம் எலியா
முறையீடு செய்தது பற்றிய மறைநூல் பகுதி உங்களுக்குத் தெரியாதா?


3 "ஆண்டவரே, உம் இறைவாக்கினரை


வாளால் கொன்றுவிட்டனர்;
உம் பலிபீடங்களைத் தகர்த்துவிட்டனர்;
நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க,


என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்"


என்றார். [2]
4 ஆனால், அவருக்குக் கிடைத்த இறைமொழி என்ன?


"பாகாலுக்கு மண்டியிடாதவர்களாகிய


ஏழாயிரம் பேரை மட்டும்


எனக்கென்று விட்டு வைத்துள்ளேன்"


என்பதாம். [3]
5 அதுபோல இக்காலத்திலும் சிலர் எஞ்சியிருக்கின்றனர்.
இவர்கள் இறையருளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
6 இவர்கள் அருளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயின்,
செயல்களை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது பொருள்.
இல்லையேல் அருள் என்பதற்குப் பொருளே இல்லை.


7 அப்படியானால் என்ன?
தாங்கள் தேடியதை இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் அடைந்து கொள்ளவில்லை.
அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டோர் சிலரே அடைந்தனர்;
எஞ்சியோர்களுடைய மனமோ மழுங்கிப் போயிற்று.


8 "ஆழ்ந்த தூக்கம் தரும் ஆவியை


ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்;
காண்கின்ற கண்களையும் கேட்கின்ற செவிகளையும்


இந்நாள்வரை ஆண்டவர் உங்களுக்குத் தரவில்லை"


என்று மறைநூலில் எழுதியுள்ளது. [4]


9 "அவர்களுடைய விருந்துகள்


அவர்களுக்குக் கண்ணியாகவும் பொறியாகவும்
தடைக்கல்லாகவும் தண்டனையாகவும் ஆகட்டும்.
10 அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளி இழக்கட்டும்;


அவர்களின் முதுகு கூன்விழுந்தே இருக்கட்டும்"


என்று தாவீதும் கூறுகின்றார். [5]

பிற இனத்தாரின் மீட்பு தொகு


11 அப்படியானால், அவர்கள் தடுமாறியது அழிந்து போவதற்கா?
ஒருபோதும் இல்லை.
அவர்கள் தவறு செய்ததால் யூதரல்லாதாருக்கு மீட்புக் கிடைத்தது.
அவர்களிடம் பொறாமையைத் தூண்டிவிடவே இவ்வாறு ஆயிற்று.
12 அவர்கள் தவறியதால் உலகம் அருள்வளமுற்றது;
அவர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர்;
அப்படியென்றால், எல்லா யூதர்களும் நற்செய்தியை ஏற்கும்போது
அருள்வளம் இன்னும் மிகுதியாகும் அன்றோ?


13 பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்:
உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான்
என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன்.
14 இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு
அவர்களுள் சிலரையேனும் மீட்கமுடியும் என நம்புகிறேன்.
15 யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால்,
அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது எப்படி இருக்கும்!
இறந்தோர் உயிர்பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா?


16 பிசைந்த மாவில் முதலில் ஒருபிடி எடுத்துக் கடவுளுக்கு அர்ப்பணித்தால்
அம்மாவு முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டதாகிறது.
அவ்வாறே மரத்தின் வேர் அர்ப்பணிக்கப்பட்டால்
அதன் கிளைகளும் அர்ப்பணிக்கப்பட்டவையாகும்.
17 நல்ல ஒலிவ மரம் ஒன்றின் கிளைகள் சில தறிக்கப்பட்டு,
அந்த ஒலிவ மரத்தில் காட்டொலிவ மரக்கிளை ஒன்று ஒட்டப்பட்டால்,
அது மரத்தின் செழுமையான வேரிலிருந்து ஊட்டம் பெறுகிறது.
18 அந்தக் கிளை தறிக்கப்பட்ட கிளைகளைவிடத்
தன்னைப் பெருமையாகக் கருதலாமா?
அந்தக் காட்டொலிவ மரக்கிளை நீங்களே.
அப்படியே நீங்கள் உங்களைப் பெருமையாகக் கருதினாலும்,
நீங்கள் வேரைத் தாங்கவில்லை;
வேர்தான் உங்களைத் தாங்குகிறது என்பதை மறவாதீர்கள்.


19 "நாங்கள் ஒட்டப்படுவதற்கே கிளைகள் தறிக்கப்பட்டன"
என நீங்கள் சொல்லலாம்.
20 சரிதான்; அவர்கள் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளாததால் தறிக்கப்பட்டார்கள்;
நீங்களோ நம்பிக்கையின் காரணமாய் நிலைத்து நிற்கிறீர்கள்.
ஆகையால் உங்களுக்கு இருக்க வேண்டியது
உயர்வு மனப்பான்மை அல்ல, அச்ச உணர்வே.
21 ஏனெனில், இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே
கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால்,
ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா? [6]
22 இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள்.
தவறி விழுந்தவர்களின் மேல் கண்டிப்பும்
உங்கள்மேல் பரிவும் அவர் காட்டுகிறார்.
நீங்கள் அவருடைய பரிவைப் பெறுபவர்களாக வாழாவிட்டால்
நீங்களும் தறிக்கப்படுவீர்கள்.
23 யூதர்களைப் பொறுத்தமட்டில்,
அவர்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிராத நிலையிலிருந்து மாறினால்,
அவர்களும் ஒட்டப்படுவார்கள்.
அவர்களைத் திரும்பவும் ஒட்டுவதற்குக் கடவுள் வல்லவர்.
24 ஏனெனில், காட்டொலிவ மரத்தில் இயற்கையாய் வளர்ந்த நீங்கள் வெட்டப்பட்டு,
இயற்கைக்கு மாறாக நல்ல ஒலிவமரத்தில் ஒட்டுப்போடப்பட்டீர்களானால்,
இயற்கைக் கிளைகளான அவர்களைத் தாய் மரத்தில் ஒட்டுப்போடுவது எத்துணை எளிது.

இஸ்ரயேலர் இழந்த நிலையை மீண்டும் அடைதல் தொகு


25 சகோதர சகோதரிகளே,
நீங்கள் அறிவாளிகள் எனக் கருதாதவாறு
மறைபொருள் ஒன்றை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.
அதாவது, பிற இனத்தார் முழுமையாக
இறைவனிடம் வந்து சேரும் வரையில்தான்
இஸ்ரயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.
26-27 பின்னர், இஸ்ரயேல் இனம் முழுவதும் மீட்கப்படும்;


"சீயோனிலிருந்து அவர் மீட்பராக வருவார்;


யாக்கோபில் தீயதனைத்தையும் போக்கிடுவார்.
நான் அவர்களுடைய பாவங்களை அகற்றிவிடுவேன்;


அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே"


என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! [7] [8]
28 நற்செய்தியை ஏற்றுக் கொள்ளாததால்
அவர்கள் கடவுளுக்குப் பகைவர்கள் ஆயினர்;
அதுவும் உங்களுக்கு நன்மையாய் அமைந்தது.
ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயிருப்பதால்
அவர்களுடைய மூதாதையரை முன்னிட்டு
அவரது அன்புக்கு உரியவர்கள் ஆனார்கள்.
29 ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும்
கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை.
30 ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்;
இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால்,
நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்.
31 அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்;
அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்;
ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்;
அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது.
32 ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே
கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.
33 கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது!
அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை!
அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை!
அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! [9]


34 "ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்?


அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? [10]
35 தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என


முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?"


36 அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன;
அவராலேயே உண்டாயின;
அவருக்காவே இருக்கின்றன,
அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென். [11]


குறிப்புகள்

[1] 11:1 = திபா 94:14; பிலி 3:5.
[2] 11:3 = 1 அர 19:10,14.
[3] 11:4 = 1 அர 19:18.
[4] 11:8 = இச 29:4; எசா 29:10.
[5] 11:9,10 = திபா 69:22,23.
[6] 11:21 = எரே 49:12.
[7] 11:26 = எசா 59:20.
[8] 11:27 = எசா 27:9; எரே 31:33,34.
[9] 11:33 = திபா 139:17,18; எசா 55:8.
[10] 11:34 = எசா 40:13.
[11] 11:36 = 1 கொரி 8:6; 11:12.


அதிகாரம் 12 தொகு

6. கிறிஸ்தவ வாழ்வு தொகு


1 சகோதர சகோதரிகளே,
கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்:
கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.
இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.
2 இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள்.
மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக!
அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள்.
எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும்
உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். [1]
3 இறையருள் பெற்றவன் என்னும் முறையில்
உங்களுள் ஒவ்வொருவருக்கும் நான் கூறுவது:
உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது;
அவரவருக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த
நம்பிக்கையின் அளவுக்கேற்ப ஒவ்வொருவரும் தம்மை மதித்துக் கொள்ளட்டும்.
4 ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள;
அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை.
5 அது போலவே, நாம் பலராயிருந்தாலும்
கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்;
ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம். [2]
6 ஆயினும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப
வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம்.
இறைவாக்குரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால்
நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும்.
7 தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால்
அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும்.
8 கற்றுக் கொடுப்போர் கற்றுக் கொடுப்பதிலும்,
ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும்,
தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும்,
தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும்,
இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முகமலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும்
தாம் பெற்ற அருள்கொடைகளைப் பயன்படுத்த வேண்டும். [3]

கிறிஸ்தவ வாழ்க்கைக்குரிய ஒழுங்குகள் தொகு


9 உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக!
தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள்.
10 உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர்
உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்;
பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்.
11 விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும்
ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்.
12 எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்;
துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்;
இறைவேண்டலில் நிலைத்திருங்கள்.
13 வறுமையுற்ற இறைமக்களோடு
உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்;
விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.
14 உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்;
ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். [4]
15 மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்.
16 நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்;
உயர்வுமனப்பான்மை கொள்ளாமல்
தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.
நீங்கள் உங்களையே அறிவாளிகளெனக் கருதிப்
பெருமிதம் கொள்ள வேண்டாம். [5]
17 தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்;
எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள். [6]
18 இயலுமானால், உங்களால் முடிந்தவரை
எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள். [7]
19 அன்பார்ந்தவர்களே! பழிவாங்காதீர்கள்;
அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள்.
ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு,


"பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும்
எனக்கு உரியன"


என்கிறார் ஆண்டவர்.
20 நீயோ,


"உன் எதிரி பசியாய் இருந்தால்,


அவனுக்கு உணவு கொடு;
அவன் தாகத்தோடு இருந்தால்,
அவன் குடிக்கக் கொடு.
இவ்வாறு செய்வதால்,


அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்." [8]


21 தீமை உங்களை வெல்லவிடாதீர்கள்,
நன்மையால் தீமையை வெல்லுங்கள்!


குறிப்புகள்

[1] 12:2 = எபே 4:23.
[2] 12:4,5 = 1 கொரி 12:12.
[3] 12:6-8 = 1 கொரி 12:4-11.
[4] 12:14 = மத் 5:44; லூக் 6:28.
[5] 12:16 = நீமொ 3:7; 26:12.
[6] 12:17 = நீமொ 20:22.
[7] 12:18 = மாற் 9:50; இச 12:19; 32:35.
[8] 12:20 = நீமொ 25:21.


(தொடர்ச்சி):உரோமையர்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை