திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

"உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்." (1 கொரிந்தியர் 6:19-20)

அதிகாரம் 5 தொகு

3. கூடா ஒழுக்கமும் குடும்ப ஒழுக்கமும் தொகு

தீயவனைத் திருச்சபையிலிருந்து தள்ளிவைத்தல் தொகு


1 உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன்.
ஒருவன் தன் தந்தையின் மறுமனைவியை வைத்துக் கொண்டிருக்கிறானாம்.
இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை. [1]
2 இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி?
துயரமடைந்திருக்க வேண்டாமா?
இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டாமா?
3 நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன்.
நான் உங்களோடு இருப்பதாக எண்ணி
அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன்.
4 நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது
நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன்.
அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு,
5 அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும்.
அவனது உடல் அழிவுற்றாலும்
ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம்.


6 நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல.
சிறிதளவு புளிப்புமாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும்
என்பது உங்களுக்குத் தெரியாதா? [2]
7 எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்து விடுங்கள்.
அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள்.
உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள்.
ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். [3]
8 ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும்.
தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல,
மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு
பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. [4]


9 பரத்தைமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று
நான் உங்களுக்கு என் கடித்தில் எழுதியிருந்தேன்.
10 ஆனாலும் இவ்வுலகில் பரத்தைமையில் போராசையுடையோர், கொள்ளையடிப்போர்,
சிலைகளை வழிபடுவோர் ஆகியோரைப் பற்றி நான் பொதுவாக எழுதவில்லை.
அப்படியானால் நீங்கள் இவ்வுலகை விட்டே வெளியேற வேண்டியிருக்குமே!
11 உங்கள் நடுவில் 'சகோதரர்' அல்லது 'சகோதரி' என்னும் பெயரை வைத்துக்கொண்டு
பரத்தைமையில் ஈடுபடுபவராகவோ பேராசையுடையவராகவோ
சிலைகளை வழிபடுகிறவராகவோ பழிதூற்றுகிறவராகவோ
குடிவெறியராகவோ கொள்ளையடிப்பவராகவோ இருப்பவர்களோடு
உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் உங்களுக்கு எழுதியிருந்தேன்;
அவர்களோடு உணவருந்தவும் வேண்டாம்.


12-13 திருச்சபைக்கு வெளியே இருப்பவர்கள் குற்றவாளிகள் என நான் ஏன் தீர்ப்பளிக்க வேண்டும்?
கடவுளே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.
உள்ளே இருப்பவர்களுக்கு நீங்கள்தானே தீர்ப்பளிக்க வேண்டும்?
ஆகையால் அத்தீயவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வையுங்கள். [5]


குறிப்புகள்

[1] 5:1 = இச 22:30.
[2] 5:6 = கலா 5:9.
[3] 5:7 = விப 12:5.
[4] 5:8 = விப 13:7; இச 16:3.
[5] 5:13 = இச 13:5; 17:7.


அதிகாரம் 6 தொகு

சகோதரர் சகோதரிகளிடையே வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளுதல் தொகு


1 உங்களுள் ஒருவருக்கு மற்றொருவரோடு வழக்கு இருப்பின்,
தீர்ப்புக்காக இறைமக்களிடத்தில் போகாமல்
நம்பிக்கை கொள்ளாதோரிடம் செல்லத் துணிவதேன்? [1]
2 இறைமக்கள்தான் உலகுக்குத் தீர்ப்பு அளிப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?
உலகுக்கே தீர்ப்பளிக்கப்போகும் நீங்கள்
உங்களிடையே உள்ள சின்னஞ்சிறிய வழக்குகளைத்
தீர்த்துக் கொள்ளத் தகுதியற்றவர்களாகி விட்டீர்களா?
3 வான தூதர்களுக்கும் தீர்ப்பு அளிப்பது நாம்தான் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?
அப்படியிருக்க அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வழக்குகளை
நீங்களே தீர்த்துக் கொள்ள முடியாதா?
4 அத்தகைய வழக்குகளைத் தீர்க்கச்
சபையினரால் புறக்கணிக்கப்பட்டோரை நடுவர்களாக அமர்த்துவது எப்படி?
5 நீங்கள் வெட்கமடையவே இதைச் சொல்கிறேன்.
சகோதரர் சகோதரிகளிடையே உள்ள வழக்குகளைத் தீர்க்க
உங்களுள் ஞானமுள்ளவர் ஒருவர்கூட இல்லையா?
6 சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக
வழக்குத் தொடரலாமா?
அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா?


7 நீங்கள் ஒருவர்மீது மற்றவர் வழக்குத் தொடருவதே உங்களுக்கு ஒரு தோல்வியாகும்.
உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக் கொள்ளக்கூடாதா?
உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது
அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா?
8 ஆனால் நீங்களே ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கிறீர்கள்;
வஞ்சித்துப் பறிக்கிறீர்கள்;
அதுவும் சகோதரர் சகோதரிகளுக்கே இப்படிச் செய்கிறீர்கள்.
9 தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா?
ஏமாந்து போகாதீர்கள்;
பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர்,
விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர்,
ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர்
10 திருடர், பேராசையுடையோர், குடிவெறியர்,
பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர்
இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை.
11 உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள்.
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும்
நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்;
கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்.

பரத்தைமையை விட்டு விலகுதல் தொகு


12 "எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு";
ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவையல்ல.
"எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு";
ஆனால் எதற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன். [2]
13 "வயிற்றுக்கென்றே உணவு, உணவுக்கென்றே வயிறு."
இவை இரண்டையுமே கடவுள் அழித்து விடுவார்.
உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது.
ஆண்டவரும் உடலுக்கே உரியவர்.
14 ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள்
தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார்.


15 உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா?
கிறிஸ்துவின் உறுப்புகளை எடுத்து ஒரு விலை மகளின் உறுப்புகளாகும்படி நான் செய்யலாமா?
கூடவே கூடாது.
16 விலை மகளுடன் சேர்கிறவன் அவளோடு ஓருடலாகிறான் என்று தெரியாதா?
"இருவரும் ஒரே உடலாயிருப்பர்" என்று மறைநூலில் சொல்லப்பட்டுள்ளதே! [3]
17 ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்.
18 எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள்.
மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது.
ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கெதிராகவே பாவம் செய்கின்றனர்.
19 உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று
தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. [4]
20 கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார்.
எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.


குறிப்புகள்

[1] 6:1 = மத் 18:15-17.
[2] 6:12 = 1 கொரி 10:23.
[3] 6:16 = தொநூ 2:24.
[4] 6:19 = 1 கொரி 3:16; 2 கொரி 6:16.


(தொடர்ச்சி):கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை