திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

"அவர்களுள் சிலர் ஆண்டவரைச் சோதித்தனர். அதனால் பாம்பினால் கடிபட்டு அழிந்து போயினர். அவர்களைப்போல் நாமும் அவரைச் சோதிக்கக்கூடாது." (1 கொரிந்தியர் 10:9)

அதிகாரம் 9 தொகு

திருத்தூதரின் உரிமைகளும் கடமைகளும் தொகு


1 எனக்குத் தன்னுரிமை இல்லையா?
நானும் ஒரு திருத்தூதன் அல்லவா?
நம் ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா?
நான் ஆண்டவருக்காகச் செய்த வேலையின் விளைவாகத்தானே
நீங்கள் இந்நிலையில் இருக்கிறீர்கள்?
2 நான் திருத்தூதன் என மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும்
உங்களுக்கு நான் திருத்தூதன் தானே!
நீங்கள் ஆண்டவரோடு கொண்டுள்ள உறவே
என் திருத்தூதுப்பணிக்கு அடையாளச் சின்னமாய் அமைகிறது.


3 இது குறித்து என்னிடம் கேள்வி கேட்போருக்கு எனது விளக்கம் இதுவே:
4 உண்பதற்கும் குடிப்பதற்கும் உரியவற்றைப் பெற்றுக்கொள்ள
எங்களுக்கு உரிமை இல்லையா?
5 மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல
நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல
எங்களுக்கு உரிமை இல்லையா?
6 பிழைப்புக்காக உழைக்காமலிருக்க
எனக்கும் பர்னபாவுக்கும் மட்டுந்தான் உரிமை இல்லையா?
7 யாராவது எப்போதாவது ஊதியமின்றிப் படைவீரராகப் பணியாற்றுவாரா?
திராட்சைத் தோட்டம் போட்ட யாராவது அதன் பழங்களை உண்ணாதிருப்பாரா?
மந்தையை மேய்க்கும் ஆயர் அதன் பாலை அருந்தாதிருப்பாரா?


8 மனித வழக்கத்தை மட்டும் வைத்து நான் இதைச் சொல்லவில்லை.
திருச்சட்டமும் இதையே சொல்லவில்லையா?
9 மோசேயின் சட்டத்தில்,
'போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே' என்று எழுதியுள்ளதே!
மாடுகளைப் பற்றிய கவலையினால் கடவுள் இதைச் சொல்கிறாரா? [1]
10 அல்லது எங்கள் பொருட்டு இதைச் சொல்கிறாரா?
ஆம், இது எங்கள் பொருட்டே எழுதப்பட்டுள்ளது.
ஏனெனில், தமக்குப் பங்கு கிடைக்கும் என்னும் எதிர்நோக்குடன்
உழுகிறவர் உழவேண்டும்;
போரடிக்கிறவரும் அதே எதிர்நோக்குடன் போரடிக்க வேண்டும்.
11 நாங்கள் ஆவிக்குரியவற்றை உங்களிடையே விதைத்திருப்பதால்,
எங்கள் உடலுக்குரிய தேவைகளை உங்களிடமிருந்து
அறுவடையாகப் பெற்றுக் கொள்வது மிகையாகாது அல்லவா? [2]
12 உங்களிடம் பங்கு பெற மற்றவர்களுக்கு உரிமை இருந்தால்,
எங்களுக்கு அதைவிட அதிக உரிமையில்லையா?
அப்படியிருந்தும்கூட, நாங்கள் இந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்திக்கு எத்தடையும் வராதவாறு
எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறோம்.
13 கோவிலில் வேலைசெய்வோர் கோவில் வருமானத்திலிருந்தே உணவுபெறுவர்;
பீடத்தில் பணிபுரிவோர் பலிப்பொருட்களில் பங்கு பெறுவர்.
இது உங்களுக்குத் தெரியாதா? [3]
14 அவ்வாறே, நற்செய்தியை அறிவிக்கிறவர்கள்
அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப்
பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார். [4]


15 ஆனால் இவ்வுரிமைகளில் எதையும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
நான் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுதவுமில்லை.
அவ்வாறு பெற்றுக்கொள்வதைவிட நான் சாவதே நல்லது.
எனக்குரிய பெருமையை எவரும் அழித்துவிட முடியாது.
16 நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும்
அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை.
இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.
நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!
17 இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு.
நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள
பொறுப்பாக இருக்கிறது.
18 அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன?
உங்களுக்கு எச்செலவுமின்றி
நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு;
நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக்
கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.


19 நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும்
பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர
என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.
20 யூதரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர யூதருக்கு யூதரைப் போலானேன்.
நான் திருச்சட்டத்திற்கு உட்படாதவனாயிருந்தும்,
திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர
அச்சட்டத்திற்கு உட்பட்டவர் போலானேன்.
21 திருச்சட்டத்திற்கு உட்படாதவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர
திருச்சட்டத்திற்கு உட்படாதவர் போலவும் ஆனேன்.
ஆனால் நானோ கடவுளின் சட்டத்திற்கு உட்படாதவனல்ல;
ஏனெனில் நான் கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவன்.
22 வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர
வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன்.
எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.


23 நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி
நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
24 பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும்
பரிசு பெறுபவர் ஒருவரே.
இது உங்களுக்குத் தெரியாதா?
எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள்.
25 பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும்
அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத்
தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர்.
நாமோ அழிவற்ற வெற்றிவாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். [5]
26 நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன்.
காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன்.
27 பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே
தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு
என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.


குறிப்புகள்

[1[ 9:9 = இச 25:4; 1 திமொ 5:18.
[2] 9:11 = உரோ 15:27.
[3] 9:13 = இச 18:1.
[4] 9:14 = மத் 10:10; லூக் 10:7.
[5] 9:25 = 2 திமொ 4:7.

அதிகாரம் 10 தொகு

சிலை வழிபாடு தொகு


1 சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர்.
அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர். [1]
2 அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி
மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள்.
3 அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர். [2]
4 அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர்.
தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள்.
கிறிஸ்துவே அப்பாறை. [3]
5 அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர்
கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை.
பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள். [4]


6 அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல
நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன. [5]
7 அவர்களுள் சிலரைப்போல நீங்களும் சிலைகளை வழிபடாதீர்கள்.
அவர்களைக் குறித்தே,


"மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர்;
எழுந்து மகிழ்ந்து ஆடினர்"


என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது. [6]
8 அவர்களுள் சிலர் பரத்தைமையில் ஈடுபட்டனர்.
அதனால் ஒரேநாளில் இருபத்து மூவாயிரம் பேர் மடிந்தனர்.
அவர்களைப்போல் நாமும் பரத்தமையில் ஈடுபடக்கூடாது. [7]
9 அவர்களுள் சிலர் ஆண்டவரைச் [8] சோதித்தனர்.
அதனால் பாம்பினால் கடிபட்டு அழிந்து போயினர்.
அவர்களைப்போல் நாமும் அவரைச் சோதிக்கக்கூடாது. [9]
10 அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர்.
இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர்.
அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது. [10]


11 அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும்
மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன.
இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.


12 எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்
விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.
13 உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை
பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல.
கடவுள் நம்பிக்கைக்குரியவர்.
அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்;
சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்;
அதிலிருந்து விடுபட வழி செய்வார்.


14 எனவே, என் அன்புக்குரியவர்களே, சிலைவழிபாட்டை விட்டு விலகுங்கள்.
15 உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன்.
நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
16 கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே,
அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா!
அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே,
அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! [11]
17 அப்பம் ஒன்றே.
ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்.
ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.


18 இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள்.
பலிப்பொருட்களை உண்கிறவர்கள்
பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு உறவு கொள்ளவில்லையா? [12]
19 எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை
அல்லது சிலைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்றா சொல்லுகிறேன்?
20 மாறாக, சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை கடவுளுக்கு அல்ல,
பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும்.
நீங்கள் பேய்களோடு உறவுகொள்வதை நான் விரும்பவில்லை. [13]
21 நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும்
பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது.
நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும்
பேய்களின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது.
22 நாம் ஆண்டவருக்கு எரிச்சலூட்டலாமா?
நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா? [14]

எல்லாவிதத்திலும் கடவுளை மாட்சிப்படுத்துங்கள் தொகு


23 "எல்லாவற்றையும் செய்ய உரிமையுண்டு ";
ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவை அல்ல.
"எல்லாவற்றையும் செய்ய உரிமையுண்டு ";
ஆனால் எல்லாம் வளர்ச்சிதரக் கூடியவை அல்ல. [15]
24 எவரும் தன்னலம் நாடக்கூடாது;
மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்.


25 இறைச்சிக் கடையில் விற்கப்படும் எதையும் நீங்கள் உண்ணலாம்;
கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.


26 ஏனெனில்,


"மண்ணுலகமும் அதில் நிறைந்துள்ள அனைத்தும்
ஆண்டவருடையவை." [16]


27 நம்பிக்கை கொள்ளாதவருள் ஒருவர்
உங்களை உணவருந்த அழைக்கும்போது
நீங்கள் அவரோடு செல்ல விரும்பினால்,
அவர் உங்களுக்குப் பரிமாறும் எதையும் உண்ணுங்கள்;
கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
28 எவராவது உங்களிடம்,
'இது படையல் உணவு' என்று சொன்னால்
அவ்வாறு தெரிவித்தவரை முன்னிட்டும் மனச்சான்றை முன்னிட்டும்
அதை உண்ண வேண்டாம்.
29 உங்கள் மனச்சான்றை முன்னிட்டல்ல,
மற்றவருடைய மனச்சான்றை முன்னிட்டே இதைச் சொல்கிறேன்.
'ஏன் எனது தன்னுரிமை மற்றவருடைய மனச்சான்றின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்?'


30 'நான் நன்றியுடன் உணவருந்தினால்,
நன்றி கூறி அருந்திய உணவைக் குறித்து ஏன் பழிப்புரைக்கு ஆளாக வேண்டும்?'
என்று ஒருவர் கேட்கலாம்.
31 அதற்கு நான் சொல்வது:
நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும்,
எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். [17]
32 யூதருக்கோ கிரேக்கருக்கோ
கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள்.
33 நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன்.
நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல்,
பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். [18]


குறிப்புகள்

[1] 10:1 = விப 13:21,22; 14:22-29.
[2] 10:3 = விப 16:35.
[3] 10:4 = விப 17:6; எண் 20:11.
[4] 10:5 = எண் 14:29,30.
[5] 10:6 = எண் 11:4.
[6] 10:7 = விப 32:6.
[7] 10:8 = எண் 25:1-16.
[8] 10:9 - சில முக்கிய பாடங்களில் "கிறிஸ்து" என்று காணப்படுகிறது.
[9] 10:9 = எண் 21:5,6.
[10] 10:10 = எண் 16:41-49.
[11] 10:16 = மத் 26:26-28; மாற் 14:22-24; லூக் 22:19,20.
[12] 10:18 = லேவி 7:6.
[13] 10:20 = இச 32:17.
[14] 10:22 = இச 32:21.
[15] 10:23 = 1 கொரி 6:12.
[16] 10:26 = திபா 24:1; 50:12.
[17] 10:31 = கொலோ 3:17; 1 பேது 4:11.
[18] 10:33 = உரோ 15:2.


(தொடர்ச்சி):கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை