திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

"பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், "நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்" என்று அவர்களிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார்... பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, 'என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்' என்று கூறி இறைவனிடம் வேண்டினார்." - மத்தேயு 26:36-37,39

மத்தேயு நற்செய்தி (Matthew) தொகு

அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

அதிகாரம் 25 தொகு

பத்துத் தோழியர் உவமை தொகு


1 "அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப்
பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்:
மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர்
தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். [1]
2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.
3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்;
ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.
4 முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன்
கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.
5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே
அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.
6 நள்ளிரவில், 'இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்'
என்ற உரத்த குரல் ஒலித்தது.
7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.
8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து,
'எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன;
உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள்.
9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக,
'உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்.
எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது' என்றார்கள்.
10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அப்போது மணமகன் வந்து விட்டார்.
ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள்.
கதவும் அடைக்கப்பட்டது.
11 பிறகு மற்றத் தோழிகளும் வந்து,
'ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள்.
12 அவர் மறுமொழியாக,
'உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார். [2]
13 எனவே விழிப்பாயிருங்கள்;
ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.

தாலந்து உவமை தொகு

(லூக் 19:11-27)


14 "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்:
நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து
அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.
15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும்
வேறொருவருக்கு இரண்டு தாலந்தும்,
இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் [3] கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து
வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.
17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.
18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித்
தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.
19 நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து
அவர்களிடம் கணக்குக் கேட்டார். [4]
20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி,
வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து,
'ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்;
இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார்.
21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம்,
'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே,
சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர்.
எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.
உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார்.
22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி,
'ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர்.
இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார்.
23 அவருடைய தலைவர் அவரிடம்,
'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே,
சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர்.
எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.
உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்' என்றார்.
24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி,
'ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்;
நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.
25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்.
இதோ, பாரும், உம்முடையது' என்றார்.
26 அதற்கு அவருடைய தலைவர்,
'சோம்பேறியே! பொல்லாத பணியாளனே,
நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன்.
நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?
27 அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார்.
28 'எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப்
பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.
29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்.
அவர்கள் நிறைவாகப் பெறுவர்.
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். [5]
30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள்.
அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார். [6]

மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு தொகு


31 "வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது
தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். [7]
32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.
33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச்
செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல்
அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.
34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர்
தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,
'என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்;
உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை
உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்;
தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்;
அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;
36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்;
நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்;
சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார். [8]
37 அதற்கு நேர்மையாளர்கள்
'ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம்,
அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?
38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்?
அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?
39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?'
என்று கேட்பார்கள்.
40 அதற்கு அரசர்,
'மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு
நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். [9]
41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,
'சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள்.
அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற
என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.
42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை;
தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.
43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை.
நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார்.
44 அதற்கு அவர்கள்,
'ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ,
ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு
உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள்.
45 அப்பொழுது அவர், 'மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு
நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ
அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'
எனப் பதிலளிப்பார்.
46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும்
நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். [10]


குறிப்புகள்

[1] 25:1 = லூக் 12:35,36.
[2] 25:11,12 = லூக் 13:25.
[3] 25:15 - மத் 18:24 அடிக்குறிப்பு காண்க.
[4] 25:19 = 2 கொரி 5:10.
[5] 25:29 = மத் 13:12; மாற் 4:25; லூக் 8:18.
[6] 25:30 = மத் 8:12; 22:13; லூக் 13:28.
[7] 25:31 = மத் 16:27; 19:26; 2 கொரி 5:10.
[8] 25:35,36 = எசா 58:7.
[9] 25:40 = நீமொ 19:17; திப 9:5; எபி 6:10.
[10] 25:46 = தானி 12:2; யோவா 5:29.


அதிகாரம் 26 தொகு

இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழுதலும் தொகு

இயேசுவைக் கொல்லச் சதித்திட்டம் தொகு

(மாற் 14:1-2; லூக் 22:1-2; யோவா 11:45:53)


1 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு தம் சீடரிடம்,
2 "பாஸ்கா விழா இரண்டு நாள்களில் வரவிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
அப்பொழுது மானிட மகன் சிலுவையில் அறையப்படுவதற்கெனக்
காட்டிக்கொடுக்கப் படுவார்" என்றார்.
3 அதே நேரத்தில் தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும்
கயபா என்னும் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் ஒன்று கூடினார்கள்.
4 இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்ய அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள். [1]
5 "ஆயினும் விழாவின்போது வேண்டாம்; மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்" என்று
அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

பெண் ஒருவர் நறுமணத் தைலம் ஊற்றுதல் தொகு

(மாற் 14:3-9; யோவா 12:1-8)


6 இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார்.
7 அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது
விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன்
பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார். [2]
8 இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து,
"இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்?
9 இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே" என்றார்கள்.
10 இதை அறிந்த இயேசு,
"ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்?
அவர் எனக்குச் செய்தது முறையான செயலே.
11 ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள்.
ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப் போவதில்லை. [3]
12 இவர் இந்த நறுமணத்தைலத்தை எனது உடல்மீது ஊற்றி
எனது அடக்கத்திற்கு ஆயத்தம் செய்தார்.
13 உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ
அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்;
இவரும் நினைவுகூரப்படுவார் என்று நான்
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்.

காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல் தொகு

(மாற் 14:10-11; லூக் 22:3-6)


14 பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து
தலைமைக் குருவிடம் வந்து,
15 "இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?"
என்று கேட்டான்.
அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.
16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல் தொகு

(மாற் 14:12-16; லூக் 22:7-14)


17 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து,
"நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?"
என்று கேட்டார்கள்.
18 இயேசு அவர்களிடம்,
"நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய்,
'எனது நேரம் நெருங்கி வந்து விட்டது;
என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்' எனப்
போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்' என்றார்.
19 இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப்
பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

யூதாசின் சூழ்ச்சி வெளியாகுதல் தொகு

(மாற் 14:17-21; லூக் 22:21-23; யோவா 13:21-30)


20 மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார்.
21 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர்,
"உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். [4]
22 அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய்,
"ஆண்டவரே, அது நானோ?" என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.
23 அதற்கு அவர்,
"என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். [5]
24 மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார்.
ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு;
அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" என்றார்.
25 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும்
"ரபி, நானோ?" என அவரிடம் கேட்க இயேசு,
"நீயே சொல்லிவிட்டாய்" என்றார்.

ஆண்டவரின் திருவிருந்து தொகு

(மாற் 14:22-26; லூக் 22:15-20; 1 கொரி 11:23-25)


26 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது,
இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி,
அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து,
"இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார்.
27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி
அவர்களுக்குக் கொடுத்து,
"இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; [6]
28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்;
பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். [7]
29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான்
நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்;
அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
30 அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல் தொகு

(மாற் 14:27-31; லூக் 22:31-34; யோவா 13:36-38)


31 அதன்பின்பு இயேசு அவர்களிடம்,
"இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள்.
ஏனெனில் 'ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்'
என்று மறைநூலில் எழுதியுள்ளது. [8]
32 நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே
கலிலேயாவுக்குப் போவேன்" என்றார். [9]
33 அதற்குப் பேதுரு அவரிடம்,
"எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும்
நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்" என்றார்.
34 இயேசு அவரிடம்,
"இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என
உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றார்.
35 பேதுரு அவரிடம்,
"நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும்
உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்" என்றார்.
அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.

கெத்சமனித் தோட்டத்தில் இயேசு தொகு

(மாற் 14:32-42; லூக் 22:39-46)


36 பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார்.
அவர், "நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்"
என்று அவர்களிடம் கூறி,
37 பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார்.
அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.
38 அவர், "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது.
நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்" என்று
அவர்களிடம் கூறினார்.
39 பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து,
"என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும்.
ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்"
என்று கூறி இறைவனிடம் வேண்டினார். [10]
40 அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து
அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம்,
"ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?
41 உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது.
எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து
இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார்.
42 மீண்டும் சென்று,
"என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால்,
உமது திருவுளப்படியே ஆகட்டும்" என்று
இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.
43 அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன.
44 அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று
மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி
மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.
45 பிறகு சீடர்களிடம் வந்து,
"இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா?
பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது.
மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார்.
46 எழுந்திருங்கள், போவோம்.
இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்" என்று கூறினார்.

இயேசுவைக் காட்டிகொடுத்தலும் கைது செய்தலும் தொகு

(மாற் 14:43-50; லூக் 22:47-53; யோவா 18:3-12)


47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது
பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான்.
அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம்
வாள்களோடும் தடிகளோடும் வந்நது.
48 அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன்,
"நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு;
அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்று
அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். [11]
49 அவன் நேராக இயேசுவிடம் சென்று,
"ரபி வாழ்க" எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.
50 இயேசு அவனிடம்,
"தோழா, எதற்காக வந்தாய்?" என்று கேட்டார்.
அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி,
அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.
51 உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர்
தமது கையை நீட்டி வாளை உருவித்
தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி
அவருடைய காதைத் துண்டித்தார்.
52 அப்பொழுது இயேசு அவரிடம்,
"உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு.
ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்துபோவர்.
53 நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்?
நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு [12] மேற்பட்ட
வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே.
54 அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற
மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?" என்றார். [13]
55 அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து,
"கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும்
என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்?
நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன்.
நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; [14]
56 இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே
இவையனைத்தும் நிகழ்கின்றன" என்றார்.
அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.

தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு தொகு

(மாற் 14:53-65; லூக் 22:54-55; 63:71; யோவா 18:13-14,19-24)


57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள்.
அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள்.
58 பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்து
தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து
வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து
காவலரோடு உட்கார்ந்திருந்தார்.
59 தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும்
இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க
அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர்.
60 பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை.
இறுதியாக இருவர் முன்வந்தனர்.
61 அவர்கள், "இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து
அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்" என்று கூறினார்கள். [15]
62 அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம்,
"இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?" என்று கேட்டார்.
63 ஆனால் இயேசு பேசாதிருந்தார்.
மேலும் தலைமைக் குரு அவரிடம்,
"நீ கடவுளின் மகனாகிய மெசியாவா?
வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்" என்றார்.
64 அதற்கு இயேசு,
"நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும்
வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என
உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். [16]
65 உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு,
"இவன் கடவுளைப் பழித்துரைத்தான்.
இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா?
இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே.
66 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், "இவன் சாக வேண்டியவன்" எனப் பதிலளித்தார்கள். [17]
67 பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள்.
மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, [18]
68 "இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்" என்று கேட்டனர்.

பேதுரு மறுதலித்தல் தொகு

(மாற் 14:66-72; லூக் 22:56-62; யோவா 18:15-18,25-27)


69 பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார்.
பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து,
"நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" என்றார்.
70 அவரோ, "நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை"
என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார்.
71 அவர் வெளியே வாயிலருகே சென்றபோது
வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு,
"இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்" என்று
அங்கிருந்தோரிடம் சொன்னார்.
72 ஆனால் பேதுரு,
"இம்மனிதனை எனக்குத் தெரியாது" என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.
73 சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து,
"உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே;
ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது" என்று கூறினார்கள்.
74 அப்பொழுது அவர், "இந்த மனிதனை எனக்குத் தெரியாது" என்று சொல்லிச்
சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.
உடனே சேவல் கூவிற்று.
75 அப்பொழுது, "சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு கூறியதைப்
பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.


குறிப்புகள்

[1] 26:3,4 = திபா 2:1,2; யோவா 17:47-53; திப 4:25-27.
[2] 26:7 = லூக் 7:37,38.
[3] 26:11 = இச 15:11.
[4] 26:21 = திபா 55:22-14.
[5] 26:23 = திபா 41:9; யோவா 13:18.
[6] 26:27 = 1 கொரி 10:16.
[7] 26:28 = எசா 53:12; எரே 31:31-34.
[8] 26:31 = செக் 13:7.
[9] 26:32 = மத் 28:7,16.
[10] 26:39 = யோவா 4:34; உரோ 5:19; பிலி 2:8.
[11] 26:48 = நீமொ 27:6.
[12] 26:53 - பெரும் படைப்பிரிவு என்பது உரோமைப் படையின்
6000 போர் வீரர்கள் கொண்ட இலேகியோன் என்னும் பிரிவு.
[13] 16:54 = லூக் 24:26,27.
[14] 26:55 = லூக் 19:47; 21:37; யோவா 18:20.
[15] 26:61 = யோவா 2;19; திப 6:14.
[16] 26:64 = தானி 7:13; திப 2:33; 7:55.
[17] 26:65,66 = லேவி 24:16.
[18] 26:67 = எசா 50:6.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 27 முதல் 28 வரை