திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை


"மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே இயேசுவையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்... ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது. 'தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்' என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், 'இவர் உண்மையாகவே நேர்மையாளர்' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்." - லூக்கா 23:33,44-47


லூக்கா நற்செய்தி (Luke) தொகு

அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அதிகாரம் 23 தொகு

இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல் தொகு

(மத் 27:1-2, 11:14; மாற் 15:1-5; யோவா 18:28-38)


1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.
2 "இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்;
சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்;
தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான்.
இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்" என்று
அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
3 பிலாத்து அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்க,
அவர், "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று பதில் கூறினார்.
4 பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து,
"இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" என்று கூறினான்.
5 ஆனால் அவர்கள், "இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை
இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து
அவர்களைத் தூண்டிவிடுகிறான்" என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

ஏரோது முன்னிலையில் இயேசு தொகு


6 இதைக் கேட்ட பிலாத்து, "இவன் கலிலேயனா?" என்று கேட்டான்;
7 அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து,
அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.
8 இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்;
ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு
அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்;
அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும்
நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான்.
9 அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான்.
ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.
10 அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும்
அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.
11 ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து,
பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான்.
12 அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.

இயேசுவுக்கு மரண தண்டனை விதித்தல் தொகு

(மத் 27:15-26; மாற் 15:6-15; யோவா 18:39-19:16)


13 பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும்
மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.
14 அவர்களை நோக்கி,
"மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே;
இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும்
நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை.
15 ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை;
ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார்.
மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு.
16 எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்" என்றான்.
17 [விழாவின்போது அவர்களுக்கென
ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.] [1]


18 திரண்டிருந்த மக்கள் அனைவரும்,
"இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்" என்று கத்தினர்.
19 பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டு கொலை செய்தற்காகச் சிறையிலிடப்பட்டவன்.
20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.
21 ஆனால் அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள்.
22 மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி,
"இவன் செய்த குற்றம் என்ன?
மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை.
எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்" என்றான்.
23 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று
உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.
24 அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.
25 கலகத்தில் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை
அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்;
இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.

இயேசுவைச் சிலுவையில் அறைதல் தொகு

(மத் 27:32-44; மாற் 15:21-32; யோவா 19:17-27)


26 அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது
சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார்.
அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து,
அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள்.


27 பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும்
அவர் பின்னே சென்றார்கள்.
28 இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி,
"எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்;
மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.
29 ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும்.
அப்போது 'மலடிகள் பேறுபெற்றோர்' என்றும்
'பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்' என்றும் சொல்வார்கள்.
30 அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து,


'எங்கள் மேல் விழுங்கள்' எனவும்


குன்றுகளைப் பார்த்து,


'எங்களை மூடிக்கொள்ளுங்கள்'


எனவும் சொல்வார்கள். [2]
31 பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால்
பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!" என்றார்.
32 வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக
அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.
33 மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும்
வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும்
அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.


34 அப்போது [இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்.
ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்.] [3] [4]
அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.
35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
ஆட்சியாளர்கள், "பிறரை விடுவித்தான்;
இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால்
தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்" என்று கேலிசெய்தார்கள்.
36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,
37 "நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர்.


38 "இவன் யூதரின் அரசன்" என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
39 சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன்,
"நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று"
என்று அவரைப் பழித்துரைத்தான்.
40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு,
"கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா?
நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.
41 நாம் தண்டிக்கப்படுவது முறையே.
நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம்.
இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!" என்று பதிலுரைத்தான்.
42 பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது
என்னை நினைவிற்கொள்ளும்" என்றான்.
43 அதற்கு இயேசு அவனிடம்,
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.


44 ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை
நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
45 கதிரவன் ஒளி கொடுக்கவில்லை.
திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
46 "தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்"
என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். [5]
47 இதைக் கண்ட நூற்றுவர் தலைவர்,
"இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
48 இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு,
மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.
49 அவருக்கு அறிமுகமான அனைவரும்,
கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும்
தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். [6]

இயேசுவின் அடக்கம் தொகு

(மத் 27:57-61; மாற் 15:42-47; யோவா 19:38-42)


50 யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார்.
அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர்.
51 தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர்
யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்;
இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.
52 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.
53 அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப்
பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார்.
அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.
54 அன்று ஆயத்த நாள்; [7] ஓய்வுநாளின் தொடக்கம்.
55 கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள்
பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்;
அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு,


குறிப்புகள்

[1] 23:17 - அடைப்புக்குறிக்குள் உள்ள இவ்வசனம்
பல முக்கிய கையெழுத்துப்படிகளில் காணப்படவில்லை.
[2] 23:30 = ஓசே 10:8; திவெ 6:16.
[3] 23:34 - அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்றொடர்
பல முக்கிய கையெழுத்துப்படிகளில் காணப்படவில்லை.
[4] 23:34 = திபா 22:18.
[5] 23:46 = திபா 31:5; திப 7:59.
[6] 23:49 = லூக் 8:2,3; 24:10.
[7] 23:54 - "ஆயத்த நாள்" என்பது ஓய்வுநாளுக்கு முந்திய நாளைக் குறிக்கிறது.

அதிகாரம் 24 தொகு

இயேசு உயிர்பெற்று எழுதல் தொகு

(மத் 28:1-10; மாற் 16:1-8; யோவா 20:1-10)


1 வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே
தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்கள் எடுத்துக் கொண்டு
அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்;
2 கல்லறை வாயிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.
4 அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள்.
அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர்
அவர்களுக்குத் தோன்றினர்.
5 இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அப்பெண்களை நோக்கி, "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?
6 அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்.
கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
7 மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்;
மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே" என்றார்கள். [1]


8 அப்போது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவிற்கொண்டு
9 கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய்
இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள்.
10 அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும்
அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர்.
அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள்.
11 அவர்கள் கூற்று வெறும் பிதற்றலாகத் தோன்றியதால்
திருத்தூதர்கள் அவர்களை நம்பபில்லை.
12 ஆனால் பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார்.
அங்கு அவர் குனிந்து பார்த்தபோது
உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்;
நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள் வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார்.

எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல் தொகு

(மாற் 16:12-13)


13 அதே நாளில் சீடர்களுள் இருவர்
எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் [2] தொலையிலுள்ள
ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு.
14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து
ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.
15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது,
இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.
16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு
அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.
17 அவர் அவர்களை நோக்கி,
"வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?" என்று கேட்டார்.
அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.
18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக,
"எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான்
இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!" என்றார்.
19 அதற்கு அவர் அவர்களிடம், "என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம்.
அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச்
சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்.
20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.
ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும்
அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.
21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.
22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்;
அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்;
23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து,
வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று
அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.
24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று,
அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர்.
ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை" என்றார்கள்.


25 இயேசு அவர்களை நோக்கி, "அறிவிலிகளே!
இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!
26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன்
இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!" என்றார்.
27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும்
தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.


28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள்.
அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.
29 அவர்கள் அவரிடம்,
"எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக்
கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள்.
அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.
30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து,
கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.
31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன.
அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.
உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். [3]
32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி,
"வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது
நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" என்று பேசிக் கொண்டார்கள்.


33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.
34 அங்கிருந்தவர்கள், "ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார்.
அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்" என்று சொன்னார்கள்.
35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும்
அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும்
அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல் தொகு

(மத் 28:16-20; மாற் 16:14-18; யோவா 20:19-23; திப 1:6-8)


36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது
இயேசு அவர்கள் நடுவில் நின்று,
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று அவர்களை வாழ்த்தினார்.
37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய்,
ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.
38 அதற்கு அவர், "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?
ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்?
39 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான்.
என்னைத் தொட்டுப் பாருங்கள்;
எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே" என்று
அவர்களிடம் கூறினார்;
40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள்.
அப்போது அவர் அவர்களிடம்,
"உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?" என்று கேட்டார்.
42 அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.
43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.


44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து,
"மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும்
என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று
நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே" என்றார்;
45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.
46 அவர் அவர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,
47 'பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி
அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
49 இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்.
நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை
இந்நகரத்திலேயே இருங்கள்" என்றார். [4]

இயேசு விண்ணேற்றம் அடைதல் தொகு

(மாற் 16:19-20; திப 1:9-11)


50 பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று
தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
51 அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே
அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.
52 அவர்கள் அவரை வணங்கிவிட்டுப்
பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.
53 அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.


குறிப்புகள்

[1] 24:6,7 = மத் 16:21; 17:22,23; 20:18,19;
மாற் 8:31; 10:33,34; லூக் 9:22; 18:31,33.
[2] 24:13 - "அறுபது ஸ்தாதியம்" என்பது கிரேக்க பாடம்.
[3] 24:31 = திப 8:39.
[4] 24:49 = திப 1:4.


(லூக்கா நற்செய்தி நிறைவுற்றது)


(தொடர்ச்சி): யோவான் (அருளப்பர்) நற்செய்தி: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை