தில்லைப் பெருங்கோயில் வரலாறு/சிவாலய தரிசனவிதி

3. சிவாலய தரிசன விதி

சிவபரம்பொருளை வழிபடுதற்குச் சிறந்த இடம் திருக்கோயிலாகும். திருக்கோயிலுக்கு நீராடி, தூய உடை உடுத்து திருநீறு அணிந்து செல்லுதல் வேண்டும்.

திருக்கோயிலை நெருங்கியவுடன் தூல இலிங்கமாகிய திருக் கோபுரத்தைக் கண்டு, இரண்டு கைகளையும் தலை மீது குவித்துச் சிவ நாமங்களை உச்சரித்த வண்ணம் உட்புகுந்து பலிபீடத்துக்கு இப்பால் நிலமிசை வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும் மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும் வடக்கே தலைவைத்து வீழ்ந்துவணங்குதல் வேண்டும்.

தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும் கிழக்கே தலைவைத்து வணங்குதல் வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் ஒருபோதும் கால் நீட்டி வணங்குதல் கூடாது.

தலை, இரண்டு கைகள், இரண்டு செவிகள், மோவாய், இரண்டு புயங்கள் என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வீழ்ந்து வணங்குதல் அட்டாங்க நமஸ்காரம் ஆகும். இஃது ஆடவர்க்கு உரியது.

தலை, இரண்டு கைகள், இரண்டு முழந்தாள்கள் என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்துமாறு வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். இது மகளிர்க்கு உரியது.

நிலமிசை வீழ்ந்து வணங்கியபின் திருக்கோயிலை வலம் வருதல் வேண்டும். அவ்வாறு வலம் வரும் போது கரங்களைக் குவித்து வணங்கியவாறு சிவ நாமங்களை உச்சரித்துக்கொண்டு மெல்ல அடிமேல் அடிவைத்து வலம் வருதல் வேண்டும்.

திருச்கோயிலை மூன்று முறையேனும் ஐந்து முறையேனும், ஏழு முறையேனும், ஒன்பது முறையேனும் வலம் வருதல் நலமாகும்.

முதலில் விநாயகப்பெருமானை வணங்கிய பிறகு சிவலிங்கப் பெருமானையும், உமையவளையும் தரிசனம் செய்து திருநீறு பெற்று அணிந்து கொள்ளுதல் வேண்டும். அதன் பிறகு நடராசர், ஆலமர் செல்வர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் குமரப் பெருமான் முதலிய - மூர்த்திகளை வணங்குதல் வேண்டும். விநாயகரை வணங்கும்போது இரண்டு கைகளாலும் நெற்றியில் மும்முறைகுட்டி, வலக்காதை. இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.

அபிடேகம், நிவேதனம் ஆகியவை நிகழும்போது தரிசனம் செய்தல் ஆகாது.

தரிசனம் முடிந்தவுடன் சண்டேசுவரர் சந்நிதியை அடைந்து வணங்கி மூன்று முறை கைகொட்டி சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டு வேண்டுதல் வேண்டும்.

சண்டேசுவரர் வழிபாடு நிறைவு பெற்றவுடன் சிவ சந்நிதானத்தை அடைந்து வணங்கிப் பின் ஓரிடத்தில் அமைதியாக இருந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை இயன்றவரை உச்சரிததல் வேண்டும். பின்னரே எழுந்து இல்லத்திற்குச் செல்லுதல் வேண்டும்.

பிரதோஷம்

என்றும் சாவாதிருக்க அமிழ்தம் பெறவிரும்பிய தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும், வாசுகியென்னும் பாம்பினைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது ஆலாலம் என்னும் நஞ்சு தோன்றியது. அப்பொழுது திருமால் முதலிய எல்லோரும் அந்நஞ்சின் வெம்மையைத் தாங்க முடியாமல் சிலபெருமானைச் சரணடைந்தனர். கருணையே வடிவாகிய சிவபெருமான் தேவர்கள் வேண்டுகோட்கிணங்கி அந்நஞ்சினைத் தமது கண்டத்தில் அடக்கி மன்னுயிர்களை உய்வித்தருளினார். இவ்வாறு ஆலகால நஞ்சினைத் தன் கண்டத்தில் அடக்கியது ஏகாதசி மாலை நேரமாகும். மறு நாள் திரயோதசி, பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற தேவர்கள் தம்மைக் காத்தருளிய சிவபெருமானை முதல்நாளே வணங்காத தம்பிழையை யெண்ணிச் சிவபெருமானைப் பணிந்து தம் பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டினர். சிவ பெருமான் அன்று மாலை (4½ மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வேளையில் தம் திருமுன் உள்ள இடபதேவரின் இரு கொம்புகளுக்கிடையே நின்று அம்பிகை காணத் திருநடம் செய் தருளினார். தேவர்கள் வணங்கித் துதித்தனர். அதுமுதல் திரயோதசி திதியன்று மாலைப்பொழுது பிரதோஷம் {பாபத்தைப் போக்கும் காலம்) என வழங்கலாயிற்று.

சிவராத்திரி

மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி பதினாலாம் நாள்) இரவு பதினான்கு நாழிகை இறைவன் இலிங்கமாகத் தோன்றிய காலம். இதுவே மகா சிவராத்திரி என வழங்கப் பெறுகின்றது. இந்தநாளில் நேரிடும் திரயோதசி சிவபெருமானுக்கு உடம்பாகவும், சதுர்த்தசி சத்தியாகவும் சிவாகமம் கூறும். சிவராத்திரி நான்கு காலங்களிலும் ஆன்மார்த்த பூசையும் பரார்த்த பூசையும் நிகழ்த்தல் வேண்டும். இவற்றை அன்புடன் நிகழ்த்துவோர் இம்மை மறுமை யின்பங்களையும், முடிவில் முத்தியின்பத்தையும் பெறுவர். சிவராத்திரியாகிய இக்காலம் திருமால் பிரமர் பொருட்டுச் சிவபெருமான் 'இங்குற்றேன் என இலிங்கத்தே தோன்றியகாலமாகும்'. பிரமகற்பத்திலே நான்கு யாமங்களிலும் சத்திசிவபெருமானைப் பூசித்தார். உமையம்மையார் விளையாட்டாகச் சிவபெருமானின் கண்ணை மூட உலகங்கள் இருண்டன. அக்காலத்தில் தேவர்கள். சிவபெருமானை வணங்கினர். தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது உலகெலாம் அழிக்கும் வேகத்துடன் எழுந்த ஆலகால நஞ்சினைச் சிவபெருமான் உட்கொண்டு தன் கண்டத்தில் அடக்கியருளினான். அந்நஞ்சு இறைவனைப் பீடிக்காமல் இரவு முழுவதும் தேவர்கள் இறைவனைப் பூசித்தகாலம் இச்சிவராத்திரியேயாகும். ஒரு கற்பத்தில் அண்டங்களெல்லாம் இருள் மூடிய நிலையில் அவ்விருள் நீங்க உருத்திரர் இறைவனைப் பூசனை புரிந்ததும் சிவ ராத்திரி காலமேயாகும்.

சிவசாதனம்

திருநீறு, உருத்திராக்கம், திருவைந்தெழுத்து என்பன, திருநீறு பராசத்தியின் வண்ண மாகும். 'பராவணமாவது நீறு' 'என்பது திருஞான சம்பந்தர் அருள் வாக்காகும். உருத்திராக்கம்: திரிபுரசங்காரத்தின் பொருட்டு எழுந்தருளிய உருத்திர மூர்த்தியின் கோபக் கண்ணில் உண்டான விதையினின்று முளைத்த மரத்தின் மணியாதலின் உருத்திராக்ஷம் எனப் பெயர் பெற்றது. இதனை அணிவோர் உடற் பிணியும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலக் குற்றங்களும் நீங்கி எவ்வுயிர்க்கும் அருளுடையராவர்.

திருவைந்தெழுத்து: குருவின் பால் உபதேசம் பெற்றோர் மீண்டும் தம்மை மும்மலப் பிணிப்பு வருத்தாதவாறு இடைவிடாது எண்ணிப் போற்றுதற்குரியதாய் வேதம் நான்கினும் மெய்ப்பொருளாய் விளங்குமந்திரம் திருவைந்தெழுத்தாகும்.இது தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், முத்தி பஞ்சாக்கரம் என மூவகைப்படும்.

'நாதன் நாமம் நமச்சிவாயவே, (சம்பந்தர் 3--49--1)
சிவாயநம என்று நீறணிந்தேன், (அப்பர் 4-94--6}
'மறவாது, சிவாயவென்று எண்ணினார்க்கு' (5-51--6)

என வரும் தேவாரத் தொடர்களில் இம் மூவகைப் பஞ்சாக்கரமும் எடுத்தாளப் பெற்றுள்ளமை உணர்ந்து போற்றத்தகுவதாகும்.

நடராசர் அபிடேகம்

மக்களுக்குரிய ஓராண்டு தேவர்க்கு ஒரு நாள். ஒரு நாளைக் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என ஆறு சிறு பொழுதுகளாகப் பகுத்துரைத்தல் போலவே, ஓர் ஆண்டினையும் ஆறுகாலங்களாகப் பகுத்துக்கொண்டு கூடத்தப் பெருமானுக்கு ஆறு அபிடேகங்கள் நடைபெறுகின்றன. மார்கழித் திருவாதிரை விடியற்காலம். மாசி வளர்பிறைச் சதுர்த்தசி காலசந்தி. சித்திரைத் திருவோணம் உச்சிக்காலம், ஆனி உத்தரம் சாயரட்சை, ஆவணி வளர்பிறைச் சதுர்த்தசி இரண்டாங்காலம், புரட்டாசி வளர்பிறைச் சதுர்த்தசி அர்த்த யாமம். நடராசர்க்குரிய ஆறு அபிடேக நாள்களையும்

“சித்திரையில் ஓணமுதல் சீரானி உத்தரமாம்
சத்ததனு வாதிரையின் சார்வாகும் - பத்தி
மாசி அரி கன்னி மருவு சதுர்த்தசிமன் '
றீசரபி டே கதினமாம்".

என்ற வெண்பாவினால் அறியலாம். அட்டவீரட்டம்

சிவபெருமான் பிரமனது தருக்கினையடக்குதல் வேண்டி அவனுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளிய இடம் திருக்கண்டியூர். அந்தகாசுரனைக் கொன்ற தலம் திருக்கோவலூர். திரிபுரத்தை எரித்தழித்த தலம் திருவதிகை. தக்கனது தலையைத் தடிந்த தலம் திருப்பறியலூர். சலந்தராசுரனைத் தன் காற் பெருவிரலாற் கீறியமைத்த சக்கரத்தினால் தலையரிந்த தலம் திருவிற்குடி. கயமுகாசுரனாகிய யானையினைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்த தலம் வழுவூர். மன்மதனை எரித்த தலம் திருக்குறுக்கை. மார்க்கண்டேயர்க்காகக் கூற்றுவனை உதைத்த தலம் திருக்கடவூர். இங்கே கூறப்பட்ட எட்டுத் திருத்தலங்களும் சிவபெருமானுடைய வீரச் செயல் வெளிப்பட்டுத் தோன்றுதற்கு நிலைக்களமாய் விளங்குதலால் திருவீரட்டம் எனப் போற்றப் பெற்றன.

பஞ்சபூதத்தலங்கள்

எல்லாம் வல்ல இறைவன் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களின் வடிவில் எழுந்தருளியுள்ளான். அக்குறிப்பினை விளக்கும் திருத்தலங்கள்:

காஞ்சி திருவேகம்பம், திருவாரூர் -- நிலம்
திருவானைக்கா -- நீர்
திருவண்ணாமலை -- தீ
திருக்காளத்தி -- காற்று

தில்லைச் சிற்றம்பலம் -- ஆகாயம்.

சத்தவிடங்கத்தலங்கள்

முசுகுந்தச் சக்கரவர்த்தி தேவர்கோமானாகிய இந்திரனிடமிருந்து தான்பெற்று வந்த தியாகராசர் திருமேனி ஏழினையும் வைத்து வழிபட்ட திருத்தலங்கள் ஏழு. அவை: திருவாரூர், நாகப்பட்டினம், திருநள்ளாறு, திருமறைக்காடு, திருக்காறாயில், திருவாய்மூர், திருக்கோளிலி என்பன.

அட்டமூர்த்தம்

சிவபெருமான் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள், ஆன்மா. என்னும் எட்டினையும் தன் திருமேனியாகக் கொண்டு விளங்குதலின் அம்முதல்வனுக்கு அட்டமூர்த்தி என்பது பெயராயிற்று.

அட்டபுட்பம்

இறைவனை அருச்சனை செய்தற்குரியன எண் மலர்கள். அவை: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை. இவை புறத்தே அருச்சனை புரிதற்குரிய மலர்கள். கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எட்டும் நம் அகப்பூசைக்குரிய மலர்களாகும். இவற்றை 'நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டு' என்பர் திருநாவுக்கரசர்.

நால்வகைநெறி

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.

சரியை - இறைவனை வழிபடுவோர் திருக்கோயிலை அலகிடல், மெழுகிடல், பூமாலை தொடுத்தல் முதலாகச் செய்யும் புறத்தொழில்கள்.

கிரியை - சிவபெருமானை நீராட்டி மலர் தூவி வழி படுதலாகிய அகத்தொழில்.

யோகம் - அருவத்திருமேனியை நோக்கிய நிலையில் மனத்தை ஒரு வழிப்படட நிறுத்தி அகத்தே செய்யும் வழிபாடு.

ஞானம் - அகத்தும் புறத்தும் ஆக எங்கும் நிறைந்த உண்மை அறிவு இன்பவுருவாகிய இறைவனை அறிவுத் தொழிலால் செய்யும் வழிபாடு.

சைவசமய குரவர் நால்வர்

திருஞான சம்பந்தர்: சீகாழிப்பதியில் தோன்றி, மூவாண்டில் உமையம்மையார் அளித்த ஞானப்பாலைப் பருகித் 'தோடுடைய செவியன்' முதலாகவுள்ள தேவாரப் பதிகங்களைப் பாடித் திருநல்லூர்த் திருமணத்தில் வைகாசி மூலத்தில் முத்திபெற்றவர், இவருக்கு வயது 16.

திருநாவுக்கரசர்: திருவாமூரில் தோன்றிச் சமணசமயத்தினைச் சார்ந்து வயிற்றுவலியால் வருந்தித் தமக்கையார் திலகவதியார் அருளால் திருவதிகை வீரட்டானத்துப் பெருமானை வழிபட்டுக் *கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என்பது முதலாகவுள்ள தேவாரப்பதிகங்களைப் பாடித் திருப்புகலூரில் சித்திரைச்சதயநாளில் முத்திபெற்றவர். வயது 81.

சுந்தரர்: திருநாவலூரில் தோன்றித் திருமணக்காலத்தில் வெண்ணெய்நல்லூர் அருட்டுறை யிறைவரால் தடுத்தாட் கொள்ளப்பெற்றுப் 'பித்தா பிறைசூடி' முதலிய தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிச் சேரமான் பெருமாளுடன் ஆடிச் சுவாதியில் திருக்கயிலாயத்தையடைந்தார். வயது 18.

மாணிக்கவாசகர்: திருவாதவூரில் தோன்றிப் பாண்டியனுக்கு அமைச்சராகித் திருப்பெருந்துறையில் இறைவனே குருவாக எழுந்தருளி உபதேசிக்கப் பெற்று 'நமச்சிவாய வாழ்க' என்பது முதலிய திருவாசகப்பனுவலைப் பாடிப் போற்றித் தில்லையில் ஊமைப் பெண்ணைப் பேசச்செய்து இறைவனே கேட்டு எழுதிக் கொள்ளும்படி திருக்கோவையாரைப்பாடியவர். அந்நூற்கு அன்பர்கள் பொருள் கேட்டபோது திருவாசகத்திற்குப் பொருளாவான் தில்லையம்பலவாணனே எனக்காட்டி ஆனிமகத்தில் தில்லைப் பெருமானுடன் இரண்டறக்கலந்தவர். வயது 32.

சைவத்திருமுறைகள் பன்னிரண்டு

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகங்கள் 1, 2, 3 திருமுறைகள், திருநாவுக்கரசர் அருளியவை 4,5,6 திருமுறைகள், சுந்தரர் அருளியது 7-ஆம் திருமுறை, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருக்கோவையார் எட்டாம் திருமுறை. திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை. திருமூலநாயனார் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை. திருவாலவாயிறைவார் பாடிய திருமுகப் பாசுரம் முதல் நம்பியாண்டார் நம்பி பாடிய திருநாவுக்கரசர் திரு ஏகாதசமாலை ஈறாகவுள்ள நாற்பது பிரபந்தங்கள் அடங்கிய தொகுதி - பதினோராம் திருமுறை. சேக்கிழார் நாயனார் பாடியருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை.

சந்தான குரவர் நால்வர்.

மெய்கண்டார், அருணந்திசிவாசாரியார் மறைஞான சம்பந்தர், உமாபதிசிவாசாரியார் இவர்கள் முத்தி பெற்ற குரு பூசை நாள்கள் :

மெய்கண்டார் - ஜப்பசிச் சுவாதி
அருணந்தி சிவாசாரியார் - புரட்டாசிப் பூரம்
மறைஞான சம்பந்தர் - ஆவணி உத்தரம்

உமாபதிசிவம் - சித்திரை அத்தம்.

சைவசித்தாந்த நூல்கள் பதினான்கு

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞானசித்தியார், இருபாவிருபது. உண்மைவிளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறிவிளக்கம் சங்கற்ப நிராகரணம்.

நால்வேதம்: இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்பன.

ஆறங்கம்: சி௸, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோ விசிதி, சோதிடம் என்பன.

பதினெண்புராணம்: சைவம், பௌஷிகம், மார்க்கண்டம், லிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம் - இவை பத்தும் சிவபுராணம். காருடம், நாரதீயம், விஷ்ணு புராணம், பாகவதம் நான்கும் விஷ்ணு புராணம். பிரமபுராணம், பதும புராணம் இரண்டும் பிரமபுராணம். ஆக்கினேயம் அக்கினி புராணம். பிரமகைவர்த்தம் சூரியபுராணம்.

இறைவன் ஆடல்புரியும் ஐந்து சபைகள்:

(!) தில்லையிற் பொன்னம்பலம்
(2) மதுரையில் வெள்ளியம்பலம்
(3) திருநெல்வேலியில் தாமிரசபை
{4) திருக்குற்றாலத்தில் சித்திரசபை

(5) திருவாலங் காட்டில் இரத்தின சபை
———————