தென்னாட்டு காந்தி/பாரத நாடு பார்க்கெலாம் திலகம்!

◯ 1962-டிசம்பர், 11.
◯ தேசிய மகாகவி
◯ பாரதியாரின்
◯ விழாவை யொட்டிய
◯ சிந்தனைகள்
◯ கவிஞன் எனில்
◯ முக்காலமும்
◯ உணர்ந்தவன்
◯ அல்லவா?
◯ நன்றாகச் சாடியிருக்கிறார்
◯ வஞ்சகச் சீனனை!...
◯ என்றும் தேவை
◯ இம்மாதிரிப் பாடள்கள்!...
◯ பேராசைப்
◯ பாகிஸ்தானுக்கும்
◯ அருமையான
◯ வபாடம் கற்பிக்கும்
◯ இப்பாக்கள்! ..

 
“பாரதநாடு
பார்க்கெலாம் திலகம்!”
 
“பாரதநாடு
பார்க்கெலாம் திலகம்!”

“நாம் அனைவரும் இந்தியர்: நமது. தாய் நாடு பாரதம். இயற்கையாகவே நாம் விரும்பி மேற்கொண்டது இந்திய தேசம்.

பாரத நாட்டுக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். தலைவர் நேரு அவர்களின் வழி நடப்போம்.

பாரதத்தைப் பாதுகாக்க உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் தியாகம் செய்ய நாம் சித்தமாக. இருக்கிறோம்.

இந்த உறுதி மொழியை நிச்சயம். கடைப் பிடிப்போம். தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மீது ஆணை!”

பாட்டுக்கொரு புலவன் என்று ஏற்றிப் போற்றப்படுகின்ற பாரதியாரின் எண்பத்தோராவது பிறந்த நாள் விழா டிசம்பர் 11ம் தேதியன்று தமிழகத்தின் தலை நகரில் வெகு சிறப்புடன் நடந்தேறியது. அவ்வமயம், நம் நம் மாநில முதலமைச்சர் காமராஜர் மேற்கண்ட பாதுகாப்புப் பிரக்ஞையை மேற்கொள்ள, மக்கள் கூட்டம் தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டது: கட்டுண்டது!

பலவகையிலும் சிறப்புடையதாக விளங்குகிறது இவ்விரண்டின் பாரதி விழா. இதுவரை பார்த்தி மறைந்த நாளையே நாம் பாரதி விழாவாகக் கொண்டாடினோம்.

கவிக்கு இறப்பில்லை என்ற உண்மையை உணர்ந்து, இப்பொழுது, பாரதி பிறந்த நாளையே பாரதி விழாவாகக் கொண்டாட முற்பட்டிருக்கிறோம். அத்துடன் பாரதி விழா அரசாங்க விழாவாகவும் கௌரவிக்கப்பட்டிருக்கிறது. காலத்தினால் இறவாத நாட்டுப் பற்றுக் கவிகளைப் படைப்பவனே மக்கள் கவிஞனாகவும் தேசிய மகாகவியாகவும் இறவாப் புகழ் எய்த முடியும். இவ்வகையில் பாரதியின் தேசப்பற்றும் தியாகமனமும் அயலவனைச் சாடுகின்ற வீரமுழக்கமும் அனைவரும், ஒன்றுபட வேண்டுமென்கிற தேசிய ஒருமைப்பாட்டுக் குணமும் அவரது பாடல்களிலே விரவிக் கிடப்பதை நாம் காண்கிறோம். அப்படிப்பட்ட கவிதைகள், இன்றைய நம் நாட்டின் நிலையில் அடுத்துக்கெடுத்த ஈனச் சீனர்களின் மண்ணாசை வெறியினால் நம்மை வலிய வம்புக்கு இழுத்துக்கொண்டிருக்கின்ற இந்தச் சங்கடமான நிலையில், நமக்குப் போர்ப் பரணிபாடி, நம்மவர்களிடையே தேசீய எழுச்சியையும் நல்க பெரிதும் உதவியாக இருந்து வருகின்றன.

கண்ணீரால் காக்கப்பட்டிருக்கும் நம் சுதந்திரப் பயிரைக் கட்டிக்காக்க பாரதியார்படும் கவலை கொஞ்சமா, நஞ்சமா?

கிழக்கொன்றுமாகவும் மேற்கொன்றுமாகவும், வடக் கொன்றாகவும் தெற்கொன்றாகவும் சிதறிக் கிடந்த பாரத மக்கள் தங்கள் தங்களது கட்சிப் போர்வைகளை உதறி வீசி எறிந்துவிட்டு, எரிந்துகொண்டிருந்த நாட்டின் மானம் காக்கும் வேள்வியில் குதித்து, ஒன்றுபட்ட தேசிய உணர்ச்சி பூண்டு செயற்பட்டு வரும் இந்த மகத்தான ஐக்கியத்தைக் கண்டுமா, இந்தச் சீனன் வெருண்டு ஓடாமல் இருப்பான்? “ஆயிரம் உண்டிங்கு ஜாதி, அன்னியர் வந்து புகல் என்ன நீதி?” என்று பாடிய பாரதி இன்றிருந்திருந்தால், நமது இமயமலையில் காலடி எடுத்து வைக்கும் துராசையே தோன்றிக்கூட இருக்காது!.....

“பாரதபூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர்;
இந்நினைவ கற்றாதீர்!...
பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்;
நீரதன் புதல்வர்
இந்நினைவ கற்றாதீர்! ..”

ஆஹா! தம் ஞானரதப் பயணத்தில் எத்துணை தீர்க்கதரிசனத்துடன் ஒவ்வொரு பாடலையும் முழங்கியிருக்கிறார் பாரதி!

வஞ்சகச் சீனனுக்கு மண்ணாசை பிடித்தவர்களின் கதை தெரியாது போலிருக்கிறது! நன்றி மறந்த நயவஞ்சகர்கள் இந்நேரம் நம் எல்லையை விட்டு மரியாதையாக ஓட்டம் பிடிக்காமல் இருந்திருந்தால், உலக அரங்கிலிருந்தே அவர்களது மானம் மரியாதையும் ஓட்டம் பிடிக்கவேண்டியதுதான் என்ற உண்மையை ராஜரீகமாக உய்த்துணர்ந்தோ என்னவோ, அவர்கள் இப்போதைக்கு ஒரு நாடகம் ஆடி, ‘வாபஸ்’ ஆகிவிட்டிருக்கிறார்கள்! இல்லாவிட்டால், அவர்கள் பாடு என்ன ஆகியிருக்கும், தெரியுமா?

மாரதர் கோடி வந்தாலும்-கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள்!

ஆம்; பாரத தேவியைப் பற்றி சீனர்கள் அறிய மாட்டார்கள்!

இந்தியாவுக்கு ஆயுதங்கள் - வழங்குவதில் பிரிட்டனும் அமெரிக்காவும் போட்டா போட்டியிடுகின்றன!

சமாதானம் நிலவவேண்டுமென கூடிய கொழும்பு மாநாட்டிலே சீனாவின் துராக்கிரமச் சூதுகள் அம்பலப்படுத்தப்பட்டு விட்டன!

உலக அரங்கிலுள்ள பெரும்பாலான நாடுகள் பாரத நாட்டின் தார்மீகமான நியாய வாதங்களை மதித்துப் போற்றி வருகின்றன!

இந்நிலையிலே, பொம்டிலாவில் மறுபடியும் இந்தியத் தாயின் மணிக்கொடி பறக்கிறது. “காந்திஜிக்கு ஜே! ஜெய்ஹிந்த்!” போன்ற கோஷங்கள் விண்ணதிர முழங்குகின்றன!

அமைதியில் நம்பிக்கை வைத்து, இந்திய-சீன எல்லைத் தகராறைத் தீர்க்க பல தேசத் தலைவர்கள் முனைந்து வருகின்ற நேரத்தில், இந்த பாழாப் போன நயவஞ்சகக் கூட்டத்தினர் மறுபடியும் போர்க்கருவிகளைக் குவிப்பதாகவும் வேவு விமானங்களை அனுப்பி உளவு பார்ப்பதாகவும் செய்திகள் வருகின்றன!

“நாம் அனைவரும் ஒன்றுபட்டு விட்டோம்!” என்று உணர்ந்து, அவ்வுணர்ச்சியில் விம்மிப் புடைத்துச் செயற்பட்டு நம் தாய்த் திருநாட்டை அல்லும் பகலும் காக்க ஆர்த்தெழுந்து விட்டார்கள் பாரத மக்கள். ஆகவே, நமக்கு ஏது இனி அச்சம்? சீனர்களை முழுமையாக விரட்டியடிக்கும்வரை நமக்கு ஏது இனி ஓய்வு?

“பச்சை யூனியைந்த வேற்
படைகள் வந்த போதிலும்
அச்சமில்லை யச்சமில்லை;
அச்சமென்பதில்லையே!
துச்சமாக வெண்ணி நம்மைத்
தூறு செய்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை;
அச்சமென்பதில்லையே!”

நம் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டாற் போன்று, தர்மமே வெல்லும்! நாமே வெல்லுவோம்!...

“வெற்றிகூறுமின்;
வெண்சங்கு ஊதுமின்”

இந்த வெற்றித் திருப்பாடலை வாழ்த்தி வணங்கி, நமக்குக் கடைசிவரையிலும் வெற்றிகளே அருளுமாறு பராசக்தியை வணங்குவோமாக!