தேவலீலைகள்/தேவலீலைகள் !

தேவலீலைகள்!

"தேவாதி தேவா! தேவர். தலைவா! மூவரே, மூவரில் முதல்வனே!" என்று பக்திமான்கள் நித்த நித்தம் சத்தமிட்டுப் பூஜிக்கக் கேட்கிறோம். சித்தம் சிதைந்தவனை வித்தகனே என்று அழைப்பதுபோலக் குடியனைக் குணவானே என்று கொண்டாடுவது போல, குக்கலைக் கேசரி என்று அழைத்தல்போல இருக்கிறது.... காமவெறியர்களை தேவா என்றும் மூவா என்றும் அழைக்கும் போக்கு. ஏனெனில் எந்தப் பக்தியினால் யாராரை, இங்ஙனம் ஆரிய மதத்தைக் கடைப்பிடிக்கும் குறைமதியினர் பூஜிக்கின்றனரோ, அந்த மூர்த்திகளின் லீலைகள். கேவலம் காமாந்தகாரம், கபடம், கயமைக்குணம், காட்டுமிராண்டித்தனம் நிரம்பியதாக இருப்பதை, அதே பக்திமான்கள் பாராயணம் செய்யும் புராண ஏடுகளிலிருந்து காணலாம். தேவவீலைகள் என்ற தலைப்பிலே இந்தக் காமக்கூத்தர்களின் கோலாகலத்தை ஓரளவு தருகிறேன். கருத்துள்ளோர் சிந்திக்கட்டும்; பழமைவிரும்பிகள் வெட்கித் தலைகுனியட்டும்; வாலிப உலகு கைகொட்டி நகைக்கட்டும்!

000

"இந்திர தேவா! இதுவே தக்க சமயம் தாமதிக்க வேண்டாம். உடனே புறப்படுக!"

"தூதா! என்ன சேதி! எங்கே புறப்படச் சொல்கிறாய்?"

“தங்களுடைய நெடுநாளைய எண்ணத்தைப் பூர்த்தி செய்துகொள்ள அபூர்வமான சமயம் வாய்த்துவிட்டது, கிளம்புங்கள்"

"எங்கே?"

"பாரிஷதன் மாளிகைக்கு"

"ஆஹா! அந்தப் பேச்சை, ஏனடா தூதா எடுத்தாய்? அங்கு அந்த ரூபாவதி வபுஷ்டமை என்னை வாட்டியபடி இருப்பாளே! நான் கெஞ்சியும் கொஞ்ச மறுத்தாளே! என் மனம் பாகாய் உருகியும் அந்தப் பாவை இந்தப் பாவிக்கு இணங்கவில்லையே. என் செய்வேன்? எவ்வாறு உய்வேன்? என்னென்னவெல்லாமோ செய்து பார்த்தேன்; என் முழுத் திறமையையும் காட்டினேன், முடியவில்லையே. வபுஷ்டமை மீது கொண்ட மோகமோ தணியவில்லை. அவளோ இணங்கவில்லையே, ஏங்குதே என் மனம்"

"என்ன இது இப்படிச் சோதிக்கலாமோ! அகலிகையின் ........."

"அது சுலபமாக முடிந்துவிட்டது. சுலபமாக முடிந்தது மட்டுமல்லடா தூதா? அவளுக்கு, நான் இந்திரன் என்று தெரிந்ததும், ஆனந்தமும் பிறந்தது. பெரிய இடமாயிற்றே என்ற பெருமையுமடைந்தாள்; இந்த வபுஷ்டமை அப்படியில்லையே!"

"அதற்காகத்தான் சொல்கிறேன். இச்சமயம் தவறினால் மறுகணம் வாய்ப்பதரிது. புறப்படுங்கள் பாரிஷதன் மாளிகைக்கு"

"தக்க சமயமா? எப்படி? என்ன விஷயம்?

"அங்கே அசுவமேதம் நடக்கிறது!"

"அசுவமேதம் நடந்தால் எமக்கென்னடா? அப்சரசுகளைப் பழிக்கும் அழகியான அவளல்லவா எனக்கு வேண்டும்."

அவசரப்பட்டு என் பேச்சை முடிக்க முடியாதபடி தடுக்கிறீரே. அசுவமேதயாகம் நடக்கிறது. அந்த அசுவம் இறந்துவிட்டது"

"இறந்துவிட்டதா? அதனால் ..."

"அதனால் என்று யோசிக்கிறீரே. வபுஷ்டமைமீது ஆசை கொண்டதால், உமது வழக்கமான புத்திகூர்மை கூட மழுங்கிவிட்டதோ? அசுவமேதயாக முறைப்படி குதிரையுடன் ஓரிரவு ராஜபத்தினி தங்கி இருப்பது உமக்குத் தெரியாதா?"

"பேஷ்'பேஷ்! தூதா நல்ல சமயத்திலே கவனப் படுத்தினாய்! வளமான மூளை உனக்கு"

இந்திரனுக்கும். அவனுடைய தூதனுக்கும் இம்முறையிலே உரையாடல் நடைபெற்றதாம் ஒரு நாள். பாரிஷதன் எனும் மன்னனுடைய மனைவி, மகா ரூபவதி வபுஷ்டமை என்னும் பெயரினள். அவளிடம் மோகம் பிறந்தது இந்திரனுக்கு. இந்திராணியின் எழில், மேனகை, அரம்பை ஆகியோரின் லாவண்யம் ஆகியவற்றைவிட, வபுஷ்டமையின் வசீகரம் அதிகம்போலும் எப்படியோ இந்திரனுக்கு இவ்வெண்ணம் மூண்டு விட்டது. ஏதேதோ செய்து பார்த்தான்; அந்த வனிதை இடந்தரவில்லை. இந்நிலையிலே, பாரிஷதன் ஓர் யாகம் செய்தான். அதன் முறைப்படி மன்னன் மனைவி யாகக் குதிரையுடன் ஓரிரவு தங்கி இருக்க வேண்டும். அந்தச் சமயத்திலே குதிரை இறந்துவிட்டது. இது தெரிந்த தூதன் ஓடோடிச் சென்று, வபுஷ்டமையிடம் மோகங்கொண்ட இந்திரனிடம் இஷ்ட பூர்த்திக்கு ஏற்ற சமயம் இதுவே என்றுரைத்தான். இந்திரன் கிளம்பினான். எண்ணம் கைகூடிற்று என்ற களிப்புடன், யாகசாலை சென்றான்! இறந்த குதிரையின் உடலிலே தன் உயிரைப் புகுத்தினான்! வபுஷ்டமையிடம் கூடிக்களித்தான். இன்ப இரவு அவனுக்கு. இது சாமான்ய ஏடுகளிலே உள்ளதல்ல. சிவமகா புராணம்; புண்ணிய கதையிலே உள்ளவிஷயம்.

பிறனுடைய மனைவியைப் பெண்டாளும் பெருங்குணம் ! இறந்த குதிரையின் உடலிலே புகுந்து இராசானுபவம் நுகரும் இலட்சணம்! இந்திரனுக்கு இருந்தது. இத்தகைய காமாந்த காரத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் உரைவிடமாக விளங்கிய இந்திரன், காமக் குரோதாதிகளை ஒழித்து, இச்சைகளை அடக்கி கடுந்தவம் புரிந்து, கடவுள் அருள் பெற்று, தேவ பதவி பெற்றவர்களுள் சிலாக்கியமானவன், அவர்களுக்குத் தலைவன். காமக் குரோதாதிகளை அடக்கியவன் செய்தகாரியம், பிறன் மனைவி விழைதல் மட்டுமல்ல; அதற்காக அநாகரிக அக்கிரமச் செயல்! கடவுள் நிலை எய்தியோனின் காமச்சேட்டை இதுபோலென்றால், அதற்கு அடுத்தபடியிலே வைத்துப் பேசப்பட வேண்டிய தபோதனர்கள் ரிஷிகள் ஆகியோரின் யோக்கியதை எப்படி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இந்திரன் இவ்வண்ணம் அகலிகையிடமும், வபுஷ்டமையிடமும், அரம்பையரிடமும் ஆனந்தமாக இருந்து, காம இச்சைக்காகச் செய்யத் தகாத செயல் பல புரிந்து இருந்ததுபோலவே இந்திராணி அம்மையும் அவர்களுடைய சக்தியானுசாரம் ஏதோ 'சத்காரியம்'! செய்யாதிருக்கவில்லை.

ஒருமுறை இந்திராணிக்கு மகாவிஷ்ணுவின் மீது மோகம் பிறந்ததாம். அவரிடம், அம்மை தமது ஆசையைத் தெரிவித்தார். "அடி பேதாய்! கற்புக்கரசியாக வாழவேண்டுவது காரிகைகளின் கடனன்றோ! தேவமாதரும் பூவுலக மாதரும் சற்குணவதிகளாக இருக்க, நீ ஓர் வழிகாட்டியாக இருக்க வேண்டாமோ? சௌந்தரியம்மிகுந்தவனும், போகபோகாதிகளிலே இலயித்திருப்பவனும், ரசிகனுமாகிய இந்திரனுக்கு நீ பாரியையானாய். உனக்கேன் உதித்தது இக்கெடுமதி! பாபிதேவலோகத்திலே இப்படி ஒரு தூர்த்தை இருத்தல் தகுமா? அதிலும் உனக்குத்தான் எவ்வளவு துணிவு! மும்மூர்த்திகளிலே ஒருவனாகிய என்னிடம், சீதேவி பூதேவி மணாளனாகிய என்னிடமே உன் காமக் கண்களை ஏவினாயே எவ்வளவு நெஞ்சழுத்தம்! நான் காமுகனா? பிறன் இல்லம் நுழைபவனா! பேதாய்! பெருங்கடவுளரிலே ஒருவனாகிய என்னிடம் மோகம் கொண்டாயே, தகுமா? முறையா? பிடிசாபம்!" என்று மகாவிஷ்ணு மிரட்டினார் என்று எண்ணிடத்தான் எவருக்கும் தோன்றும். ஆனால் நடந்தது அதுவன்று! தம்மிடம் மையல்கொண்ட இந்திராணியை நோக்கி மகாவிஷ்னு, "இச்சைக்கினிய இந்திராணியே! இங்கே உன் இஷ்டத்தைப் பூர்த்தி செய்து வைக்க இயலாது. பூலோசத்திலே, நான் கிருஷ்ணனாக அவதார மெடுக்கப் போகிறேன். அது சமயம் நீயும், பூலோகத்திலே இராதையாக அவதரித்திடு; உன் மனோபீஷ்டம் நிறைவேறும்" என்று அருளிச் செய்தாராம். அதுபோலவே, விபசாரநோக்கங்கொண்ட இந்திராணி, ராதையாகப் பூலோகத்திலே பிறந்து நாராயணனின் அவதாரமாகிய கிருஷ்ணனிடம் சுக சல்லாபமாக வாழ்ந்ததாகப் புராணம் கூறுகிறது.

இப்படிப்பட்ட இந்திரன் இந்திராணி என்பவர்களைத்தான், இந்து மார்க்க சிகாமணிகள் என்போர், கடவுள் பட்டியலிலே சேர்த்துவைத்துக்கொண்டுள்ளனர். ரிக்வேதத்திலே இந்திரனைக் குறித்துப் பலசுலோகங்கள் உள்ளன. காமுகனை பிறன் இல்லம் நுழைபவனை, சோரம் போனவளை மனைவியாகக் கொண்டவனைத் தேவர்க்கரசன் என்று வெட்கமின்றிக்கூறிக்கொண்ட ஆரியக் கூட்டத்தின், அந்தநாள் மனப்பான்மை கூடக் கிடக்கட்டும். இன்றும் ஆரியர்கள், இந்திராதி தேவர்களை இஷ்டசித்தி மூர்த்திகளென்று பூஜித்து வணங்கிப் பலன் பெறவேண்டுமென்று உபதேசிக்கவும் துணிகின்றனர். அவர்களின் துணிவு காணும்போது, கோபம் பிறக்கிறது ஆனால் அந்தப் பேச்சை நம்பி, இவ்வளவு இழிதன்மைகளைக் கொண்ட கதைகளை நம்பி, மனிதத் தன்மையும், புனிதத் தன்மையுமற்ற கற்பனைகளை கடவுள்கள் என்று கருதும் நமது பாமர மக்களின் ஏமாளித்தனத்தைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம் பிறக்கிறது.

இந்திரனுடைய இலட்சணந்தான் இப்படி என்று எண்ணி விடுவதற்கில்லை, ஆரியர்களின் பட்டியலிலே காணப்படும் வேறு தேவர்களின் குணாதிசயங்களும், இதற்கு இம்மியும் குறைந்ததாகக்கூறுவதற்கில்லை. ஒரு தேவனை மற்றோர் தேவன் தோற்கடிக்கிறான். எதில்? தூய்மையிலா? வாய்மையிலா? கடவுட் தன்மையிலா? நீதி நேர்மையிலா? தயை தர்மத்திலா? இல்லை இல்லை; காமாந்தகாரத்தில்.

வேத ஒலி நிறைந்ததும், நாரத கானமும் நல்லோரின் நாதமும் கமழுவதும், ஓமப்புகை சூழ்ந்திருப்பதும், இராஜ அம்சங்கள் அழகுற உலவும் தாமரைத் தடாகங்கள் நிரம்பியதும், மந்தமாருதம் வீசும் மாண்புடையதும், வேத ஒழுக்கமுற்றநல்லோர் சென்று அடையும் புண்ய பூமியாக இருப்பதுமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது பிரம்மலோகம். இங்குக் கொலுவீற்றிருக்கும் சிருஷ்டிகர்த்கா பிரம்மன். இவருடைய லீலைகளோ அனந்தம். சிருஷ்டி கர்த்தாவின் லீலைகளிலே மிகச் சிலாக்கியமானது, தானே சிருஷ்டித்த மங்கையைத் தானே மணம் செய்து கொண்டது. சரசுவதிக்குத் தந்தையும் பிரமனே; கணவனும் அவரே! மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம், என்ற தத்துவத்தைப் பிரம்மன் தனது காமத்துக்குத் துணை கொண்டார் போலும். சிருஷ்டி கர்த்தாவைப் பற்றிக் கதைகளைச் சிருஷ்டித்தவன், அவருக்குச் சீலத்தை, சாந்தத்தை, ஒழுக்கத்தைச் சூட்டியிருக்கக் கூடாதா! பூலோகத்தின் பிதா என்ற பட்டத்தை யாருக்குச் சூட்டினரோ, அந்த பிதாவின் காமப்பித்தம், பெற்ற மகளைப் பெண்டாளும் அளவுக்குச் சென்றதாகக் கதை எழுதிப் பிறகு, "அப்படிப்பட்ட பிரமனைப் பூஜை செய்ய வேண்டும். அந்தப் பிரமனின் கட்டளையே குலதர்மம்" என்று கூறுவது எவ்வளவுபோக்கிரித்தனமான புரட்டு. அதனை நம்புவது எத்தகையகேவலமான குருட்டுக் கொள்கை என்பதை நமது மக்கள் சிந்திக்க மறுக்கிறார்கள், மடமையை வளர்க்கிறார்கள்; கொடுமைக்கு ஆளாகித் தவிக்கிறார்கள்; தீயைத் தொட்டுவிட்டுத் திமி திமி என்று கூத்தாடுவதுபோல; மலத்தை மிதித்துவிட்டு ஐயையே! என்று அசங்கியப் படுவதுபோல, மடமை நிறைந்த கருத்துக்களை—கட்டுக் கதைகளை நம்பிக்கொண்டு, பிறகு இழிநிலை பெற்று, இழிநிலை பெற்றதற்காகப் பிறகு மனம் வருந்துவது சரியா?

பிரம்மனின் பிரதாபத்திலே ஒன்று, பார்வதியை அவர் பெண்டாள நினைத்தது, ஆரியர்களின் கண்டனத்துக்கு ஆளான அரக்கர்கள் செய்ததில்லை அப்படிப்பட்ட அக்ரமங்களை. பிரமன் மும்மூர்த்திகளில் ஒருவர், மும்மூர்த்திகளிலே முதல்வர் சிவன், இருவருக்கும் ஐந்து சிரங்களாம். அம்மை பார்வதி ஒரு தினம், நந்தவனத்திலே சென்றார். அங்கு பிரமன் உலாவிக்கொண்டிருந்தார். தலை ஐந்து இருக்கவே பார்வதி தன் நாயகனே அவர் என்று எண்ணிக்கொண்டு, அன்னமென்று நடந்துசென்று அவரைத் தழுவிக்கொண்டாராம்! அம்மையாருக்குத்தான் அவசரத்தால் வந்தது இந்த விபத்து. அயனுக்குத் தெரியுமல்லவா? பார்வதியின் கரம் மேலே பட்டதும் கூவியிருக்கக்கூடாதா? "நான் பிரமன், சிவனல்ல!" என்று சொல்லியிருக்கக் கூடாதா? வலிய அணைந்த சுகானுபவத்திலே, வேதத்தின் முதல்வன்—சிருஷ்டி கர்த்தா களித்திருந்தார். அந்த நேரத்தில் வந்து சேர்ந்தார் அழகு மனைவியைத் தேடிக்கொண்டு, அரன்! கண்டார் காட்சியை! கொண்டார் கோபம் இவனுக்கும் தலைஐந்து இருத்தலாலன்றோ நமது இன்பவல்லி நாமென்று எண்ணி இவனைத் தழுவினாள் என்று வெகுண்டார். பிரமனைப் பிடித்திழுத்தார். ஒரு சிரத்தைக்கிள்ளி எறிந்தார். செய்யத்தகாத செயல் புரிந்ததற்காக எந்தப் பிரமனைச் சிவனார் தலையைக் கொய்து தண்டித்தாரோ, அதே பிரமனைப் பூலோகத்தார் எப்போதும் போலவே பூஜிக்கலாயினர் நான்முகன் என்ற புதிய நாமதேயமிட்டு.

பார்வதி தேவியை தொட்டிழுத்த துரோகியைத் தேவனென்றும், மூவரில் ஒருவனென்றும் கூறும் மதவாதியைக் கண்டிக்க அகராதியிலே சரியான பதமும் கிடைக்குமா? காட்டுமிராண்டியும், அத்தகைய காரியம் செய்தவனைக் கண்ணால் காண மறுப்பான். இங்குக் கடவுளென்று, காமுகனை, கயவனை, சிவத்துரோகியை கைகூப்பித் தொழுகிறார்கள். இதற்குப் பெயர் பக்தியாம்!

என்னய்யா பாபம்! அம்மையாரும் அவசரத்திலே ஆலிங்கனம் செய்து கொண்டார். அவரும் என்னவோ கொஞ்சம் ஆனந்தப் பரவசமாகி விட்டார், இதற்காக ஒரேயடியாகக் கண்டித்து விடுவதா?—என்று மதவாதிகளிலே ஒரு சாரார் கேட்பர். உண்மையிலேயே, உமையுடன் உல்லாசமாக இருந்து ஒரு சிரம் அறுபட்டதோடு பிரம லீலை முடிவடையவில்லை. இதுபோன்ற இன்னும் பல லீலைகளை, இந்தப் பிரபஞ்சசிருஷ்டியிலே சதா சர்வகாலமும் ஈடுபட்டிருக்கும் பிரமன் செய்த வண்ணம் இருந்திருக்கிறார். நாம் துப்பறிந்து கூறினதல்ல, தோத்திரப் புத்தகங்களென்று ஆரியர் கூறப்படும் புராணங்களிலே இருப்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறோம். பார்வதியாருக்குத் திருமணம். அதற்குப் பிரமன் புரோகிதர். முகமூடி அணிந்த அந்த மணப்பெண்ணின் காற் பெருவிரலின் அழகைக் கண்டதும், ஆஹா! விரலே இப்படி இருக்கும் போது, பாதம் எவ்வளவு அழகாக இருக்கும். பிறபிற.......என்று யோசித்தாராம் பிரமன்! காமாந்தகாரரானார்! திருமணத்துக்காக மூட்டப்பட்ட ஓம குண்டமே அணைந்துவிட்டதாம், அவருடைய கெட்ட எண்ணத்தின் விளைவின் காரணமாக. எப்படி இருக்கிறது யோக்கியதை! திருமணப் புரோகிதர்க்கு எத்தகைய திருக்கல்யாண குணம். படைப்புத் தொழிலின் தலைவர் மனதிலே, எப்படிப்பட்ட பாதக எண்ணம் திருமண நேரத்தில்? இத்தகைய தீய நினைவு கொண்டவரைத் துதிக்க வேண்டுமாம், இதற்குப் பெயர் பக்தியாம். ஓய்ந்தாரா பிரமன் இத்துடன்? இல்லை. ஒருமுறை பிரமனே அசுவமேத யாகம் செய்தாராம். யாக காரியத்தைத் தரிசிக்க தேவபத்தினிகள் வந்தனர், யாக குண்டத்தருகே வீற்றிருந்த பிரமன், யாகத்தைத் தரிசிக்க வந்த தேவ பத்தினிகளைத் தரிசித்தார். அவ்வளவுதான்! ஆசை கட்டுக்கடங்க மறுத்தது. காம வெள்ளம்! இதன் பயனாகத் தோன்றினராம் ஓமகுண்டத்தருகிலேயே—பிருகு, அங்கீரசர், அத்ரி, மரீசி, புலஸ்தியர் போன்ற புண்ணியவான்கள். ஓம குண்டத்தருகே நேரிட்ட பிரம லீலையைக் கவனியுங்கள். இவர் சிருஷ்டி கர்த்தர்; இவரைப் பூஜிக்க வேண்டும். அந்த பூஜைக்குப் பெயர் பக்தி. இதை ஒப்புக்கொள்வாரா ஒரு சொட்டு மானமும் ரோசமும் பகுத்தறிவும் உள்ளவர்கள்? பிரம புராணத்திலே எழுதப்பட்டிருக்கிறது மற்றோர் லீலை. கௌரிகல்யாணம் நடந்ததாம். அதனைக்காணச் சென்றாராம் பிரமன். கெளரியைக் கண்டார்; காமங் கொண்டதுதான் தாமதம், விளைவு வீறிட்டது. உடனே தோன்றினராம் வாலகில்லிய இருடிகள். எப்படி பிரமனின் பெருங்குணம்! பெண்களைக் கண்ட உடனே இப்பெருங்குணவானுக்கு தோன்றும் காமம், அதன் விளைவு ஆகியவற்றைக் கூறிவிட்டு, இப்படிப்பட்டவரை ஏத்தி ஏத்தித்தொழுவோம் யாமே என்றும் கூறுகிறார்களே புராணத்தைப் பேசி, அக்கற்பனைகளைப் பூஜிக்கும் மதவாதிகள். இவர்கள், எதை மதிக்கிறவர்களாகிறார்கள்? தெய்வத்தை? தீயசெயல் புரிவோன் தெய்வமல்லவே! தீய செயலைச் செய்ததாகக் கதையும் கூறிவிட்டுப் பிறகு, அச்செயலினனைத் தெய்வமென்று கூறினால், மதி தேய்ந்தவர் தவிர மற்றையோர் ஏற்பரோ? ஊர்வசி ஆடினாலும், திலோத்தமை பாடினாலும், பார்வதி கண்ணிலே பட்டாலும், கௌரியைக் கண்டாலும், மகளே எதிர்ப்பட்டாலும் இந்த மகானுபாவனுக்குக் காமவெறி பிடித்து விடுகிறது. இப்படிப்பட்ட காமிவெறிபிடித்தலையும் “கடவுள்கள்" யாருக்குத் தேவை என்று கேட்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தேவலீலைகள்/தேவலீலைகள்_!&oldid=1651857" இலிருந்து மீள்விக்கப்பட்டது