தேவலீலைகள்/சிவலோக வாசிகள்

சிவலோக வாசிகள்

"சர்வேஸ்வரா! இந்தப் பாவி செய்யும் அட்டூழியத்தைக் கண்டு, இவனை இப்படியே விட்டு வைக்கலாமா? கன்னியரைக் கற்பழிக்கும் காதகனைக் கல்லாய்ச் சபித்து விடலாகாதா? ரௌரவாதி நரகத்தில் தள்ள வேண்டாமா? காமப் பித்துப்பிடித்து அலைகிறானே! பெண்களை இம்சிக்கிறானே! பஞ்சமா பாதகத்திலே மிஞ்சியதான காமத்திலே புரள்கிறானே! அவனுடைய கபடக்கண்கள் கதியற்ற கன்னியரைக் சூறையாடுகின்றனவே. ஆண்டவனே! அபலைகளைக் கெடுக்கும் இக்காமுகனின் சிரம் ஆயிரம் சுக்கல்களாக வெடிக்க வேண்டாமா? இப்படிப்பட்ட பாவியை ஏன் இந்த பூமிக்குப் பாரமாக விட்டு வைத்திருக்கிறீர் அவனிடம் சிக்கிச் சீரழிந்தவர்களின் கண்ணீர் கல்லையும் கரைக்குமே, உமது மனம் உருகவில்லையா! ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் என்றுகூடக் கருதாமல் அக்ரமத்தை அடுக்கடுக்காகச் செய்கிறானே இந்தக் காமவெறிபிடித்த கயவன்! இவனை இனியும் நடமாட விடுவது முறையா? பாபத்துக்கேற்ற தண்டனை தரவேண்டாமா? பரமேஸ்வரா! கண் திறந்துபார். இந்தக் காமுகனைத் தண்டித்து, எம்மைக் காப்பாற்று" என்று பக்திமான்கள், குறிப்பாகத் தாய்மார்கள் பரம்பொருளைத் துதித்தனர். அவ்வளவு அக்ரமம்! அவன் செய்து வந்தான் காமுகன்! கயவன், கபடன். இராவணனா? இல்லை! இரணியனா? இல்லை! சிசுபாலனா? இல்லை! சூரபதுமனா? அல்ல; இராட்சதன் அல்ல. இராவணனை அழித்த, இரணியனை ஒழித்த, சிசுபாலனைக் சிதைத்து சூரபதுமனைச் சம்ஹரித்த சர்வேஸ்வரனிடம் தாய்மார்கள், பக்தி பூர்வமாகவும், அழுகுரலுடனும் மனுச்செய்து கொண்டது—ஒரு அரக்கனின் கொடுமையைப் பற்றியல்ல. மற்ற எந்த உயிருக்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவதால் அந்தணர் என்று அழைக்கப்படுவதாக அலங்கார அடைமொழியைப் பெற்ற குலம், பிரமனின் முகத்திலே தோன்றிய குலம்! பூசேவர் குலம். பிராமணன்! அவன் செய்த கொடுமை, காமச்சேட்டையைக் கண்டு சகிக்க முடியாமல்தான், முதல்வனை வேண்டிக் கொண்டனர் மாதர்கள்: காமுகனான அந்த பிராமணனுக்கு அற்புதமான பெயர்; சுகுமாரன்!

ஆண்டவன் என்ன செய்தார்! இந்தப் பிராத்தனையைக்கேட்டு சோகித்திருப்பார் என்று எண்ணுகிறேன். சம்ஹரிக்கவில்ல! சபிக்கவில்லை! அவனை நல்வழிப்படுத்தவுமில்லை! நாசத்தைத் தரவுமில்லை. எனவே எதும் செய்ய முடியாத நிலையிலே இருந்திருப்பார் என்றும், அதனால் ஏக்கம் கொண்டிருப்பார் என்றும் யூகிக்கத்தானே வேண்டும். ஏக்கத்திலே எம்பிரான் என்ன எண்ணியிருப்பார், “ஏதடா இது பெரிய நெருக்கடியாக விட்டது! ஏந்திழையார் அழுத கண்களுடன் நின்று தொழுகின்றனர். அந்தத் துர்த்தனோ அழிக்கப்பட வேண்டியவன், ஐயமில்லை. ஆனால், நான் என்ன செய்வது, அவன் அரக்கனாக இருந்தால் அரை நொடியிலே அவனை அழித்து விட்டிருக்கலாம். மற்றோர் புராணமும் ஏற்பட்டுவிடும். இந்தக் காமுகனோ, பிராமணனாக இருக்கிறானே! மாபாதகம் செய்யினும், மறையோனை நான் என்ன செய்வது?" என்று அவர் எண்ணியிருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும், சுகுமாரன் என்ற - அந்தப் பார்ப்பனன் செய்த பாபக்கிருத்யங்களுக்காகப் பரமன் அவனைத் தண்டிக்கவில்லை. அவன் செய்க அக்ரமங்களிலே ஆயிரத்திலே ஒரு பாகம் செய்தாலும் போதும், அரக்கனாக இருந்தால் அரனோ, அரியோ, அவர் தம் ஏவகரோ, நொடியிலே பஸ்மீகரம் செய்து விட்டிருப்பர். காமுகனான சுகுமாரனை ஒழிக்கும்படி கன்னியர் கடவுளைத் தொழுதும் பலன் இல்லை. அவர் அவனை அக்கிரமத்திலேயே புரளத்தான் விட்டுவைக்க முடிந்தது, ஆண்டவனின் கோபம் அவனை அணுக முடியவில்லை? பாபம் அவர்தான் என்ன செய்யமுடியும்? புற்றிலே இருக்கும் பாம்பைக் கொல்ல எத்தனைபேர் கிளம்புவர்? கொசு அடிக்கவோ எக்கோழையும் தயார். அதுபோலத்தான், அரக்கனை அழிப்பது என்றால் ஆண்டவனுக்கு அரை நொடி வேலை; ஆரியனிடம் அவ்வளவு எளிதிலே அவர் அணுக முடியாதே!

காமம் பிடித்த பார்ப்பனனை அவ்வூர் அரசன் நாடு கடத்தினான். சுகுமாரன் காடு சென்றான்; அவ்விடத்தையும் காமவேள் நடன சாலையாக்கினான் எப்படி? இதோ பாருங்கள்.

"ஐயா! நான் புலைச்சி!"

"இல்லை! வலைச்சி! உன் அழகெனும் வலை வீசி இந்தப் பூசுரனைப் பிடித்துவிட்டாய். புலைச்சியல்ல; என்........."

"ஐயையோ! அடுக்காதுங்க இந்தப் பாவம்! நீங்க பூலோகச் சாமி குலம், நான் பூலோக பாவி குலம். என் மேலே இச்சை வைப்பது கேவலம்"

"எவன் சொன்னான் இந்தப் பிச்சைப் பேச்சை! குலமும் கோத்திரமும் குப்பை! குலாவிட ஏற்றவளே எனக்குத் தேவை"

“நான் பு.........."

ஆம்! காட்டிலே கண்டான் ஒரு மாதை! அவள் இழிகுலம் என்று மதவாதிகளால் ஒதுக்கி வைக்கப் பட்ட வகுப்பு. அவளை அழைத்தான்; மறுத்தால் விடவா செய்வான்? அவனோ காமுகன். இடமோ அடவி, அணைத்தான்; அணுச்சஞ்சலமேனும் இல்லாத இடம் சென்றான். புலைச்சி புலைச்சியாமே இப்போது .......... என்று பிறகு கொஞ்சிடாமல் அவன்தான் இருந்திருப்பானா? அவனுடைய அணைப்பைப் பெற்ற பிறகு அந்த மாதுதான் "நீயும் நானும் ஜோடி விளையாடுவோம் வா கூடி" என்று பாடாமல் இருந்திருப்பாளா? நாட்டிலே அவன் காமுகனாக இருக்கவே காடு போ என்றான் காவலன்! காடு அவனுக்கு விபச்சார வீடாயிற்று. விட்டானில்லை தன் பழைய வேலையை. பரமன் என்ன செய்தார்? என்ன செய்தாரா? என்ன செய்ய முடியும்.

"எப்படியோ நம்மிருவருக்குள் சம்பந்தம் ஏற்பட்டு விட்டது. இன்பமாக இருந்தோம். கண்ணாளா! இந்த வாழ்வு இதோ முடிகிறது! நான் சாகிறேன்...... ஆம்! இனி நான் பிழைக்க முடியாது" என்று மரணப் படுக்கையில் கிடந்து குளறினாள். காட்டிலே கிடைத்த காமவல்லி காலம் முடியும் நேரத்தில், சுகுமாரனை அருகழைத்து அவன் பெற்ற பெண்மக்களைப் பக்கத்தில் நிறுத்தி, "நான் போகிறேன்! என் மக்களை உன்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போகிறேன், இவர்களை நீதான் ரட்சிக்க வேண்டும்" என்று கூறினாள். "இனி நீயே இந்தப் பெண்களுக்குத் தாயும் தந்தையும்" என்று கூறித் தலைசாய்த்துவிட்டாள். பிறகு சுகுமாரன், அப்பெண்களுக்குத் தாயும் தகப்பனும் மட்டுமல்ல நாயகனுமானான். தாயை இழந்தபோது தவித்து, "ஐயோ அம்மா! என்று அலறிய அப் பெண்கள், பிறகு அவனுடைய காமச் சேட்டையினால் உண்டான அலுப்புக் காரணமாக "ஐயோ! அப்பா!" என்று அலறி வாழ நேரிட்டது. அவனோ, தாய் இருந்தவரை அவளோடு வாழ்ந்தோம். தாய்க்குப் பிறகு மகள் தொண்டு செய்கிறாள் என்று எண்ணியிருப்பான். ஈனத்தனமான இக்காரியத்திலே ஈடுபட்டு அக்காமுகன் இருந்தபோதாவது இடி கிடைத்ததா இறைவனிடமிருந்து இல்லை.

பிறகு அவன் வழிப்பறி நடத்தினான்? எதிர்ப்பட்டோரைத் தாக்கினான். அவர்களின் கூக்குரலும் தோத்திரமும் அவனுடைய வெற்றிச் சிரிப்பின் சத்தத்தினால் ஆண்டவன் செவியில் விழவில்லை போலும்! அவனை அவர் அப்போதும் ஏதும் செய்யவில்லை!

இந்நிலையில் காட்டுக் கொள்ளைக்காரனான சுகுமாரனைக் காவலாளிகள் பிடிக்க வந்தனர்; மிரண்டோடினான் வேறோர் காட்டுக்கு.

"சரி கடைசியில் காவலரிடம் சிக்கினான்; அவர்கள் அவனைக் கொன்றார்கள். அடாது செய்தவன் படாது படுவான் என்ற பழமொழி பொய்யாகவில்லை" என்று கதை முடிகிறது போலும் என்று கருதிவிடாதீர்கள். வேறு ஒருகாட்டிலே அவன் போனபோது, நாககன்னியர் அங்குச் சிவபூஜை செய்துகொண்டிருந்தனர்; தரிசித்தான்; இறந்தான், கொல்லப்படவில்லை.

"ஒழியட்டும், இறந்தானல்லவா? பிறகு பூலோகத்திலே அவன் செய்த பாவங்களுக்காக, அவனைக் கடவுள் நரகத்திலே தள்ளித்தண்டித்திருப்பார்" என்று அவசர முடிவுக்கு வந்துவிடாதீர். பாபம் செய்தவன் நரகம் சேர்வான் என்ற நியதியின்படி, அவனுக்கும் நடக்கும் என்று முடிவு செய்துவிடாதீர்கள். அப்படிஒன்றும் அவனுக்கு நரகவேதனையும் தரப்படவில்லை.

சுகுமாரனின் கெட்ட நடத்தையைப்பற்றிக் கேட்டதும் அப்பாவிக்கு நரகம்தான் என்று பலரும் அவசர முடிவுக்கு வரக்கூடுமே, அதுபோலவே சுகுமாரனின் தீய செயல்களைத் தெரிந்திருந்த யமபடர்கள், இறந்தவனை இழுத்துச் செல்ல வந்தனர். ஆனால் எதிர்ப்புறத்திலே வந்து நின்றனர் சிவகணங்கள்! "தொடாதே! இவன் சிவானுக்கிரகம் பெற்றவன். சிவபதம் அழைத்தேகவந்திருக்கிறோம்" என்றனர் கணங்கள். “இவனா? இக்காமுகனா? கள்ளனா? புலைச்சியைப் புணர்ந்தவனா? தாயையும் கூடி மகளையும் கூடி சேர்ந்த மாபாவியாம் இவனா சிவானுக்கிரகம் பெற்றவன்" என்று கேட்டனர் யமபடர்கள். "ஆம்! இவன் ஆவிபிரியப்போகும் நேரத்திலே சிவபூஜை தரிசனம் செய்தான்; எனவே சிவபாதம் சேரவேண்டும்" என்றனர் சிவகணங்கள். யமபடருக்குச் சிவகணங்களை எதிர்க்கமுடியவில்லை, எனவே சுகுமாரன் சிவபாதம் அடைந்தான். இப்படியொரு புராணம் இருக்கிறது. இதிலுள்ள புளுகு கிடக்கட்டும் ஒரு புறம்; பார்ப்பனன் மாபாதகம் செய்த போதிலும், கடைசிவரை திருத்தமே அடையாலிருந்த போதிலும், சாகும்போது தன் பாபச்செயலுக்காக மனம் வருந்தாது இருந்தபோதிலும், நாககன்னியர் சிவபூஜையை நடாத்தியதைக் கண்டதற்காக, அந்தப் பாவிக்கு நரகம் இல்லாமல் போனதுடன், சிவபதம் கிடைத்ததாம்! இந்த நீதியை நாதன் அளித்தார் என்றால், நாதனாக இருக்க முடியுமா? ஆண்டவன், இப்படிப்பட்ட அக்கிரமக்காரனை அழிக்காமல், ஆதரிக்கலாமா? பாபியானாலும் பார்ப்பானாக இருந்ததற்காகப் பரமன் பயப்படுவதா?

நாககன்னியர் தாம் நல்வழிபடச் சிவனைப் பூஜை செய்தனர். இவனோ கள்ளன், காமுகன் காட்டிலே ஓடி வரும்போது இப்பூஜை நடைபெறக் கண்டான் தற்செயலாக! இவன் பூஜைசெய்தானா? இல்லை, மனம் உருகி மன்னிப்புக்கேட்டானா? இல்லை! இவ்விதமிருக்க இவன், பிறர் சிவபூஜை நடத்துவதைக் கண்டதையே பாதகம் துடைக்கும் மார்க்கமாக்கிக்காட்டிய மடமை, மாநிலத்திலே பாவிகளை அதிகரிக்கச் செய்யுமா? குறைக்குமா? கள்ளக் கையொப்பமிடுபவனும், கொள்ளையடிப்பவனும், வஞ்சிப்பவனும், பொய்யனும், "இவை பாபமன்றோ! உனக்கு நரகமன்றோ சம்பவிக்கும்" என்று எவரேனும் கூறினால், "நாமென்ன அவ்வளவு அதிகமான பாபம் புரிந்தோமா? சுகுமாரனைப் போலக் கெட்டு அலைந்தோமா? அப்படிப்பட்ட சுகுமாரனுக்கே சாகும் நேரத்திலே சிவபூஜை தரிசனம் கிடைத்த ஒரே காரணத்துக்காகச் சிவபதம் கிடைத்ததாமே, நமக்கென்ன பயம்? நாம்தான் கிடைத்த பொருளிலே, சிறிதை எடுத்துக்கிருத்திகையன்று சிவன் கோயிலிலே, கைங்கரியம் செய்திருக்கிறோமே, பாவம் பஸ்மீகரமாகியிருக்காதா?" என்றுதானே எண்ணுவான்!

எந்தவிதமான நீதியின்படி, சுகுமாரனுக்குச் சிவ பதம் தந்தார் சிவபெருமான்? சைவத்தின் பெருமை இதுவா? செய்யத்தகாதன செய்பவனானாலும், சாகும் போது சங்கரா என்று பிறர்கூறும் சத்தத்தைக் காதிலே கேட்டாலே - சிவபதமா? இது நீதியா? முறையா? நேர்மையாகுமா? வலிந்து பிறன் பொருள் கொண்டான் அடையும் தீ நிறைந்த இருப்புச்சால் இருக்கிறதாம் நரகலோகத்திலே! அந்த அக்கினிக் குண்டத்திலே அல்லவா வழிப்பறிக்கள்ளனாம் சுகுமாரனைத் தள்ளியிருக்கவேண்டும்! புணரக்கூடாதவரைப் புணர்ந்தவர் அணைத்துக் கொள்ள இரும்புக் கம்பம் உண்டாம் நரகத்தில். வசர கண்டமாம் அதற்குப்பெயர். அந்த வேதனையை அல்லவா அந்தக் காமுகன் பெற்றிருக்க வேண்டும்! முட்களால் கொத்துண்ணும்நரகம் ஒன்றும் - பெயர் சான்மலி என்பதாம், இங்கு உயர்வு தாழ்வு கருதாது புணர்ச்சி செய்தோன் தள்ளப்படுவானாம், புலைச்சியைக் கூடிய இப்பூசுரனை இதிலேயல்லவா போட்டிருக்க வேண்டும்! இவை ஏதும்இல்லை; சிவபதமாம் இந்தச் சீர்கேடனுக்கு! காமுகனுக்குக் கடவுள் அருளாம்! கள்ளனுக்குக் கைலாயபதமாம்! மாபாதகம் செய்தவனுக்கு மகேஸ்வரனின் அருளாம்! இது கடவுள் கொள்கைக்கு உகந்ததா, மனித நீதிக்கு அடுக்குமா, அறிவுக்குப் பொருந்துமா?

இத்தகைய பாப கிருத்தியங்களைச் செய்தும், பரமனருள் பெற்றவர்கள் பார்ப்பனர்களன்றி வேறு வகுப்பினர் காணோமே எந்தப் புராணத்திலும் அது ஏன்? நமது கண்ணப்பர், கண்ணைத் தோண்டித் தந்தார் கடவுள் அருள்பெற. நமதுகாரைக்காலம்மை உடல்தேய உதிரம் ஒழுக உருண்ட பிறகு சிவனருள் பெற்றார். சுகுமாரன் போன்ற பார்ப்பனர்கள் மட்டும், கேட்கவும் குலைநடுங்கும் கேடுகள் செய்தும், மிக மிகச் சாமன்ய—அறிவுக் கொவ்வாத காரணத்துக்காகப் பாபம் துடைக்கப்பட்டுப் புண்யபதம் பெறுவதாகப் புராணங்கள் இருப்பதன் மர்மம் என்ன? சுகுமாரன் ஒருவன் மட்டும் தானா? தாயைப் புணர்ந்து தகப்பனைக்கொன்ற மாபாவி பார்ப்பனனுக்கு ஆலவாயப்பனின் அருள் கிடைத்ததைத் திருவிளையாடற் புராணம் செப்புகிறதே! ஏன் இது போல ஆண்டவன் ஓரவஞ்சனை செய்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்? இது பக்திக்கோ—யுக்திக்கோ ஏற்றதாகுமா? பார்ப்பனன் எக்காரியம் செய்தாலும் அவன் விஷயத்திலே ஆண்டவன் அருள் சுரக்கிறான் ஏன்? அந்தப் பார்ப்பனக் குலத்துக்கு மகிமையைக் கற்பிக்க, மற்றக் குலத்தைத் தாழ்த்த ஏற்பட்ட சூழ்ச்சிகள் இவை.

"போ! பரதா! எதோ! ஒரு சுகுமாரன் கதையைக் கூறி, ஒரேயடியாக அதிலிருந்து பொது முடிவு கட்டுகிறாயே, ஒரு மரம் தோப்பாகாது பார்" என்று சிலர் கூறக்கூடும். எனவே, இதோ மற்றோர் மாபாவியை அறிமுகப்படுத்துகிறேன். சொல்லொணாத் தீச்செயல் புரிந்தவனுக்குச் சுகுமாரன் என்ற பெயர் இருந்தது. இதோ இவனுக்கும் அழகான பெயர் குணநிதி: என்ன குணம்? என்ன நிதி? என்று நீங்களே பிறகு யோசிக்கலாம். கேளுங்கள் இவன் கதையை!

இவன் பிறந்த இடமே புண்யபூமி கோசலநாடு. கோசல நாட்டிலே கிரிநாதன் என்பவனின் மகன் குணநிதி என்பவன் இருந்தான். இப்பார்ப்பனன் குரு பத்தினியைக் கற்பழித்தான். சல்லாபம் கெட்டு விடுமே என்று அஞ்சி குரு இருக்கும்வரை தொல்லை தானே என்று கருதி துணிந்து குருவையே கொலையும் செய்தான். இவை மட்டும் குணமெனும் நிதியைத்தராது என்று எண்ணினான் போலும் இக்குணநிதி. எனவே தாய் தந்தையரைக் கொன்றான். என்ன நடந்தது? குணநிதிக்குக் குட்டம் வந்ததா, குலைநோய் கண்டதா? கண் கெட்டதா; கைகால் பட்டுப் போயிற்றா? இல்லை! இறைவன், அவனை ஏதும் செய்தாரில்லை. ஊரார் கோபித்து அவனைக் காட்டிலே விரட்டினர். அங்கு அவன் இறந்தான்.

"ஒழிந்தானா பாவி! அவனுக்கு அந்தக் கதிதானே கிடைக்கும்!" என்று கூறிவிடாதீர். கதைமுடியவில்லை. குணநிதி இறந்த உடனே யமபடர் வந்தனர் குருத்துரோகியை, பெற்றோரைக் கொன்ற பேயனை—குரு பத்தினியைக் கற்பழித்தகாமுகனை, அவர்கள் எந்தெந்த நரகத்திலே தள்ள எண்ணினரோ தெரியவில்லை. யமபடர்கள் அவனை இழுத்துச் செல்லத் தொடங்கியதும் சிவகணங்கள் வந்துவிட்டன.

"ஆஹா! என்ன ஆணவம், யமபடர்காள்! எமது சிவனடியாரை அணுகும் துணிவு எங்ஙனம் பெற்றீர்?"

"சிவனடியாரை நாங்கள் இம்சிக்க வருவோமா? இவன் குணநிதி, குருத்துரோகி"

"எந்தத் துரோகியாக இருப்பினும் எமக்கென்ன? இவன் சிவானுக்கிரகம் பெற்றுவிட்டான், சிவலோகம் அழைத்துச் செல்லப்போகிறோம்”

இதுபோல உரையாடல் நடந்தது. யமபடர்கள் "இவன் எப்படிச் சிவனருள் பெற்றான்?" என்று கேட்கச் சிவகண நாதர்கள் செப்புகின்றனர். (சிரிப்பை அடக்குங்கள்!) "இந்தக் குணநிதி கொலைசெய்தவன். குருவைக் கொன்றவன், அவர்தம் பத்தினியைப் புணர்ந்தவன் பாவம் இவை. ஆனால் இந்த வனத்திலே உருத்திராட்ச மரத்தின் காற்றுப்போக்கில் இருந்ததால் இவன் சிவனருள் பெற்றான்" என்று கூறிவிட்டுக் குணநிதியைச் சிவலோகம். அழைத்துச் சென்றனர் என்று சிவலோகமகிமையைக் கூறுகிறார் ஒரு புராணிகர். சுகுமாரன் சிவபூசையைக் கண்டான், சிவபதம் பெற்றான் குணநிதியின் உடலிலே உருத்திராட்சத்தின் மேல் உராய்ந்து வந்த காற்றுப்பட்டது. இதற்காக இக்கொடியவனுக்குச் சிவலோகம். அறிவா? அழகா? நீதியா? அன்றி ஆரியனுக்கு உயர்வு ஆணவக்கருத்தா? ஆற அமர யோசியுங்கள்.

இப்படிப்பட்ட மாபாவிகள் உலவும் இடம் சிவலோகமானால், சீலர்களுக்கு அங்கே என்ன வேலை இருக்கிறது? சிவலோகத்தில் சுகுமாரனும், குணநிதியும் போன்ற மாபாவிகள் மகேஸ்வரன் அனுமதித்ததால் சென்று தங்கியுள்ளனர் என்று புராணம் கூறும் போது, "சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்!" என்று பஜனை பாடுவது தகுமா, சிவபதம் தேவை என்று சித்தம் உருக ஜெபிப்பதில் அர்த்தமுண்டா? அந்த சிவலோகத்திலே இருப்பவர்களின் யோக்யதைக்கு இரு எடுத்துக் காட்டுக்கள் தந்தேன். அத்தகையவர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் இடத்துக்குப் போகவேண்டும் என்று இனியும் கருதும் "மெய்யன்பர்கள்" இருப்பரேல், மெய்யல்ல நண்பர்களே. இனம் இனத்தோடு என்பதற்கேற்ப அவர்கள் நாடுகின்றனர் என்றே கருதிடவேண்டும்! தீயாரைக் காண்பதுவும் தீதாமே! சுகுமாரனும், குணநிதியும் சென்ற இடத்துக்குச் செல்வது தீதினும் தீது என்று நான் எண்ணுகிறேன். பன்றியும், எருமையும் புரண்டு கொண்டிருப்பதைக் கண்டபிறகும், அந்தக்குளத்திலே நீர் பருக யாருக்கு மனம் இடந்தரும்? மதுக்குடத்திலே பாலூற்றியிருந்தால் பருகுவார் யார்? மலங்கொட்டும் குழி என்று தெரிந்த பிறகும், அங்கு மனை அமைக்க எவன் விரும்புவான்! அதுபோல், சுகுமாரனும், குணநிதியும் சென்றடைந்த சிவலோகத்தில், பாடுபட்டு பிறனை வஞ்சிக்காது, பாபம் புரியாது, கேடு செய்யாது உள்ளவர்களுக்கு வேலையில்லை, விரும்பவும் செய்யார்.