நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/25. என் வழி தனி வழி

25. என் வழி தனி வழி

‘தூக்குமேடை நாடகம் தஞ்சாவூரோடு நிற்கல்லே, எல்லா நாடகங்களையும் போல அதுவும் பட்டி, தொட்டியெல்லாம் நடந்தது. அந்த நாடகத்துக்கு நாட்டிலே எவ்வளவு ஆதரவு இருந்ததோ, அவ்வளவு எதிர்ப்பும் இருந்தது.”

“பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கையை முதன் முதலாக அம்பலப்படுத்திய நாடகம் அது என்று சொல்வார்களே, எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா ?”

“நான்தான் எதிர்ப்பிலேயே வளர்ந்தவனாச்சே, அதுக்கெல்லாம் அஞ்சுவேனா? என் நாடகம் பாகற்காய் மாதிரி. கசப்பைப் பார்க்காம பாகற்காயைக் கறி சமைத்துத் தின்னா உடம்புக்கு நல்லது; அதேபோல என் நாடகக் கருத்துக்களிலே உள்ள உண்மையும் உங்களில் சிலருக்குக் கொஞ்சம் கசப்பாய் தான் இருக்கும். அதை முகத்தைச் சுளிக்காம, எதிர்த்துக் கூச்சலிடாம, அமைதியாயிருந்து கேட்டா உங்க அறிவுக்கு நல்லது. எங்களுக்கு அறிவு வேணாம்னு யாராவது நினைச்சிக் கலாட்டா செய்யறதாயிருந்தா அவங்க தயவு செய்து டிக்கெட்டைத் தியேட்டர் கவுண்டரிலே கொடுத்துப் பணத்தை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போயிடுங்க'ம்பேன். அதையும் மீறி வம்புச் சண்டைக்கு வந்தா, அந்தச் சண்டைக்கும் நான்: தயாராயிருப்பேன். நீங்க பார்த்திருப்பீங்களே, நம்ம சாமிகளிலே ஏதாவது ஆயுதம் ஏந்தாத சாமி இருக்கா ? இருக்கவே இருக்காது; எல்லா சாமியும் ஆயுதம் ஏந்திக்கிட்டுத்தான் இருக்கும். எதுக்கு அப்படியிருக்கு, மனுஷனைக் கண்டு பயந்தா? அதெல்லாம் ஒண்னுமில்லே, துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்ய எல்லா சாமியும் அப்படியிருக்கு'ன்னு பெரியவங்க சொல்வாங்க. அந்த சாமிகளைப் போலவே நானும் என் எதிரிகளுக்காக எப்பவும் ‘ஆயுதம் ஏந்திய சாமி'யாவே இருந்துகிட்டிருந்தேன்...”

“சுவாமிகள் ஏதாவது தப்புத் தண்டா செய்தால்கூட அதைத் ‘திருவிளையாடல்’ என்று பக்தர்கள் சொல்லிவிடுவார்கள்; நீங்கள் தப்புத் தண்டா செய்தால்...”

“நானாக எப்பவுமே எத்தத் தப்புத் தண்டாவுக்கும்: போக மாட்டேன்; எல்லாம் தானாகத்தான் வந்து சேரும்...”

“அது உங்கள் ஜாதக விசேஷம் போலிருக்கிறது ?”

“இல்லே, நாடக விசேஷம்!”

“சரி, பிறகு....?”

“மலைக்கோட்டை மணின்னு ஒரு நண்பர். அவர் திருச்சி தேவர் ஹாலிலே என் நாடகங்கள் சிலவற்றை நடத்தினார். அந்தச் சமயத்திலேதான் குன்றக்குடி அடிகளார் எனக்குக் ‘கலைத் தென்றல்’ என்ற பட்டத்தை வழங்கினார்...”

“கலைத் தென்றல் எம்.ஆர்.ராதா என்று சொல்பவர்களை விட நடிகவேள் எம்.ஆர்.ராதா என்று சொல்பவர்கள்தானே அதிகமாயிருக்கிறார்கள் ? அந்தப் பட்டத்தை யார் கொடுத்தது?”

“என் அருமை நண்பர், அஞ்சா நெஞ்சர் அழகிரிசாமி. திராவிடர் கழகத்துக்காகத் தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் உண்மையாகவே தத்தம் செய்த உத்தமர் அவர்.”

“அவருடைய குடும்பத்துக்கு யாரும் எந்த உதவியும்...”

“கேட்காமலேயே உதவி செய்ய வேண்டிய குடும்பம் அது. இப்போ உள்ள நிலவரத்தைப் பார்த்தா கேட்டால்தான் ஏதாவது செய்வார்கள் போலிருக்கிறது...!”

“வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும், இல்லையா?" “எனக்குத் தெரிந்த வரையிலே அந்த மாதிரியெல்லாம் கேட்டுப் பிழைக்கக்கூடிய பிள்ளையில்லே அழகிரிசாமி பெற்ற பிள்ளை...”

“ஆமாம், இங்கே வந்திருந்தபோது நானும் ஒரு சமயம் அவரைப் பார்த்தேன். எனக்கும் அவர் அப்படியெல்லாம் கேட்டுப் பிழைக்கக் கூடிய பிள்ளையாகத் தோன்றவில்லை...”

“புலிக்குப் பிறந்தது பூனையாக இருக்க முடியுங்களா ?”

“அது எப்படி இருக்க முடியும்? அப்புறம்.. ?”

“எல்லா நடிகருங்களுக்கும் அவங்கவங்க ரசிகருங்களே ‘ஓசி டிக்கெட்'டுக்காக மன்றம் வைக்கிறாங்க; எனக்குப் பெரியாரே எந்தவிதமான பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் என் பேரால் ‘ராதா மன்றம்’னு ஒரு மன்றம் வைச்சார். அந்த மன்றத்திலே ஒரு சமயம் என் நாடகம் நடந்துகிட்டிருந்தப்போ காமராஜர் வந்து எனக்குப் பொன்னாடை போர்த்தி, ராதா செய்யும் புனிதமான தொண்டுக்கு நான் போர்த்தும் புனிதமான பொன்னாடை இது'ன்னார். இப்படி எந்த விளம்பரத்தையும் தேடி நான் போகாமலேயே எல்லா விளம்பரமும் என்னைத் தேடி வந்துகிட்டிருந்தப்போதான் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் வந்தார்.”

“எதற்கு? ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தைப் படமாக எடுப்பதற்கா ?”

“ஆமாம் “

“அப்போ” ‘நந்தனா'ரா நடிச்ச கே.பி.சுந்தராம்பாளுக்கு வாசன் ஒரு லட்சம் ரூபா கொடுத்தார்னு ஊர் பூரா ஒரே பேச்சாயிருந்தது. எனக்குத் தெரிந்த வரையிலே இந்த சினிமா உலகில் முதன் முதலா லட்ச ரூபா வாங்கிய நட்சத்திரம் அந்த அம்மாதான்னு நினைக்கிறேன்...”

“எனக்கும் அதுதான் உண்மையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது; இந்த மாதிரி விஷயங்களில் எப்போதுமே வாசன்தான் முந்திக்கொள்வது வழக்கம்." “காரணம், ‘தரித்திர புத்தி'க்குப் பதிலா அவருக்குக் ‘கொடுக்கிற புத்தி’ இருந்ததுதான். இதைக் கேள்விப்பட்டிருந்த நான் பெருமாள் முதலியார்கிட்டே சொன்னேன் -'ரொம்ப நாளா இந்த சினிமாக்காரன் சகவாசமே நமக்கு வேணாம்னு இருந்து விட்டவன் நான். இப்போ நீங்க கூப்பிடறீங்க; வரேன். ஆனா, எதிலுமே என் வழி தனி வழின்னு உங்களுக்குத் தெரியும்...”

“அதெல்லாம் தெரிஞ்சித்தான் வந்திருக்கேன்; உங்க வழி என்ன வழின்னு சொல்லுங்கன்னார் முதலியார். ‘சினிமாவுக்காக நாடகத்தை நான் விடமாட்டேன். வால்டாக்ஸ் தியேட்டரிலே அது தொடர்ந்து நடக்கும். பகல்லே நாடகம்; ராத்திரியிலே படப்பிடிப்பு. சம்மதமா? ன்னேன். அப்படியே செய்வோம்'ன்னார். அடுத்தாப்போல, ‘காமிராவின் இஷ்டத்துக்குத் திரும்பித் திரும்பி நான் நடிக்க மாட்டேன், என் இஷ்டத்துக்குத் தான் காமிரா திரும்பித் திரும்பி என்னைப் படம் எடுக்கணும். என்ன சொல்றீங்க ?ன்னேன். சரி'ன்னார். கடைசியாச் சம்பளம். கே.பி.எஸ்.ஸ் அக்கு வாசன் ஒரு லட்ச ரூபா கொடுத்திருக்கிறாராம். நீங்க இருபத்தையாயிரம் கூடச் சேர்த்து ஒண்ணேகால் லட்சமா கொடுக்கணும். கொடுக்க முடியுமா ?ன்னேன்; ‘கொடுக்கிறேன்'னார். அப்படியே கொடுக்கவும் கொடுத்தார்.”

“சினிமா உலகில் முதன் முதலாக ஒன்றே கால் லட்ச ரூபாய் வாங்கிய நட்சத்திரமும் நீங்களாய்த்தான் இருக்க வேண்டும், இல்லையா ?”

“வேறே யார் வாங்கினாங்க, எனக்கு முந்தி ? அதுக்காகத்தானே உங்ககிட்டே இதைச் சொல்றேன்!”

“பிறகு... ?”

“மாலை நாடகம் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குவேன். அப்படி ரெஸ்ட் எடுத்துக்கிறப்போ சில சமயம் தன்னை மறந்து தூங்கிடறதும் உண்டு. அந்த மாதிரி சமயங்களிலே முதலியாரே போன் பண்ணிட்டு வந்து என்னை எழுப்பி ஸ்டூடியோவுக்கு அழைச்சிக்கிட்டுப் போவார்....”

“ஏன், புரொடக்சன் மானேஜர், புரொடக்சன் எக்ஸிகியூடிவ், அப்படி இப்படின்னு எத்தனையோ பேர் இருப்பார்களே, அவர்களெல்லாம் உங்களை எழுப்ப வர மாட்டார்களா ?”

“அவங்களையெல்லாம் என்னை நெருங்க விடறதில்லே முதலியார். அவரேதான் வந்து அழைச்சிகிட்டுப் போவார்...”

“அந்த அளவுக்கு உங்களிடம் அவருக்கு மரியாதை இருந்திருக்கிறது...”

“நானும் வீண் வம்புக்கெல்லாம் போகமாட்டேன். நான் நடிக்கிற படத்திலே எனக்கு வால் பிடிக்கிற அவனைத்தான் போடணும், இவனைத்தான் போடணும்; எனக்கு வால் பிடிக்காத அவனைப் போடக் கூடாது, இவனைப் போடக்கூடாதுன்னெல்லாம் சொல்ல மாட்டேன். அதுதான் சொல்லிவிட்டேனே, என் வழி எதிலுமே தனி வழின்னு!”

“சரி, அப்புறம்.. ?”

“எப்படியோ படத்தை எடுத்து முடிச்சாங்க. அதுக்குள்ளே அறிஞர் அண்ணாதுரைக்கு முதல் அமைச்சர் பதவி அலுத்துப் போனாப்போல எனக்கும் சினிமா உலகம் அலுத்துப் போச்சு. சென்னையை விட்டுக் கிளம்பிட்டேன்."