நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இது ஒரு பெரிய தியாகமா?

93. “இது ஒரு பெரிய தியாகமா?”

போரில் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டிருப்பதாக மதீனாவுக்குச் செய்தி எட்டியது.

அங்கிருந்து ஹம்ஸா அவர்களின் சகோதரியும், பெருமானாரின் மாமியுமான ஸபிய்யா நாச்சியார் போர் முனைக்கு வந்து விட்டார்.

தமையனாரின் சின்னா பின்னப்படுத்தப்பட்ட உடலை ஸபிய்யா பார்த்தால், வேதனைப்படுவாரே என்று எண்ணிய பெருமானார், அம்மூதாட்டியின் மகனார் ஸூபைர் இப்னு அவ்வாம் அவர்கள் தம் அன்னையாரைத் தடுத்து நிறுத்துமாறு சொன்னார்கள். அவர் அன்னையாருக்குத் தெரிவித்தனர்.

ஆனால், “என் சகோதரருக்கு நிகழ்ந்தது முழுவதும் நான் கேள்விப்பட்டேன். ஆண்டவனுடைய வழியில் இது பெரிதல்ல. அமைதியோடு இருக்க ஆண்டவன் அருள் செய்திருக்கிறான். இன்ஷா அல்லாஹ் அதைப் பார்த்துப் பொறுமையோடு இருப்பேன்” என்று ஸபிய்யா நாச்சியார் சொன்னார்கள். ஸுபைர் அவர்கள் நாயகத்திடம் இதைத் தெரிவித்ததும், “சரி போகட்டும் விட்டு விடுங்கள்” என்று பெருமானார் கூறி விட்டார்கள்.

தம்முடைய அருமைச் சகோதரரின் உடல் சின்னாபின்னப்பட்டுக் கிடப்பதைக் கண்டார். அவருடைய இரத்தம் கொதித்தது. இத்தகைய துக்ககரமான நிலைமையில் அந்த அம்மையார், “நிச்சயமாக நாம் அனைவரும் அல்லாஹ்விடமிருந்தே வருகிறோம்; நிச்சயமாக அவனிடமே திரும்புவோம்” என்ற வேத வசனத்தைக் கூறிப் பின்னர், தம்முடைய சகோதரருக்காகப் பிரார்த்தனை செய்தார். அவருடைய உடலைப் போர்த்தி அடக்கம் செய்வதற்காக இரண்டு துணிகளைக் கொடுத்து விட்டுத் திரும்பி விட்டார்.