நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உள்ளத்தை நெகிழச் செய்த நிகழ்ச்சி

160. உள்ளத்தை நெகிழச் செய்த நிகழ்ச்சி

பெருமானார் அவர்கள் கஃபாவிலிருந்து வெளியே வந்ததும், குறைஷிகளுக்கு ஒரு நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அதன்பின், அவர்கள் மக்கள் கூட்டத்தைப் பார்த்தார்கள். நாயகத்துக்கும், முஸ்லிம்களுக்கும் பொறுக்க முடியாத துன்பத்தை உண்டாக்கிய கொடியவர்கள் பலர் பெருமானார் அவர்களின் முன்னே நின்றார்கள்.

கருணைக் கடலான பெருமானார் அவர்கள் அங்கே கூடியிருந்தோரை “குறைஷி வம்சத்தினரே! நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அவர்கள் எல்லோரும் அநியாயக்காரர்கள், கொலைகாரர்கள், கல் நெஞ்சர்கள் ஆனாலும் பெருமானார் அவர்களின் கருணை உளளத்தை நன்கு அறிந்தவர்கள். ஆதலால், பெருமானார் அவர்களைப் பார்த்து, “கருணைமிக்க சகோதர கருணை உள்ள சகோதரர் குமாரரே! நீங்கள் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்வீர்கள்” என்று கூறினார்கள்.

அவர்கள் கூறிய சொற்கள், பெருமானாரின் உள்ளத்தை நெகிழச் செய்து, கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

பெருமானார் அவர்கள், அந்த மக்களை நோக்கி, “யூஸுப் நபி அவர்கள், தங்கள் சகோதரர்களிடம் தெரிவித்தது போலவே, நான் உங்களிடம் கூறுகிறேன். இன்று உங்களைக் குற்றவாளிகளாகக் கருத மாட்டேன். நாயன் உங்களை மன்னிக்கட்டும். இரக்கமுள்ளவர்களில் எல்லாம் அவனே மிகுந்த இரக்கமுள்ளவன். நீங்கள் செல்லுங்கள்!” என்று கூறினார்கள்.

பெருமானார் அவர்களின் உத்தமக் குணச் சிறப்பைக் கண்டு மக்கள் அனைவரும் உள்ளம் நெகிழ்ந்தார்கள்.