நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எதிரிக்கு அளித்த விதிவிலக்கு

155. எதிரிகளுக்கு அளித்த விதிவிலக்கு

பெருமானார் அவர்களிடம், “அபூ ஸுப்யான் கெளரவத்தில் மிகவும் பிரியமானவர். அவருக்கு ஏதாவது கண்ணியம் கொடுக்க வேண்டும்” என்று அப்பாஸ் அவர்கள் சொன்னார்கள்.

அதற்குப் பெருமானார் அவர்கள், “மக்காவாசிகளில், கஃபாவுக்குள் தஞ்சம் அடைந்தவர்களும், அபூ ஸுப்யான் வீட்டுக்குள் போய் இருந்து கொண்டவர்களும், அவரவர் வீட்டில் கதவைத் தாழிட்டுக் கொண்டிருப்பவர்களும், பாதுகாக்கப்படுவார்கள். வாளை உறையில் போட்டுக் கொண்டிருப்பவர்களுடனும் சண்டை செய்ய மாட்டோம்” என்றார்கள். அபூ ஸுப்யான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அபூ ஸுப்யானை மேட்டில் நிறுத்தி, தங்களுடைய சேனையின் பல பிரிவுகளையும் பார்க்கச் செய்யுமாறு, ஹலரத் அப்பாஸிடம் பெருமானார் (ஸல்) சொன்னார்கள்.

சேனையின் பிரிவுகளையும் காட்டி, அவர்கள் எந்தக் கூட்டத்தினர், அவர்களுக்குத் தளபதிகள் யார் என்பதையும் அபூ ஸுப்யானுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

வியப்பு மேலிட்ட அபூ ஸுப்யான், “உண்மையாகவே, உங்களுடைய சகோதரர் குமாரருடைய அரசாங்கம் வலிமையுடையது" என்றார்.

“அது அவர்கள் நபியாக இருப்பதன் காரணத்தால் ஏற்பட்டது” என்றார்கள் அப்பாஸ் (ரலி)