நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கூட்டத்தில் பிளவு உண்டாகிவிட்டது

115. கூட்டத்தில் பிளவு உண்டாகி விட்டது

குறைஷிகளும், கத்பான் கூட்டத்தினரும் கூடி ஆலோசித்தார்கள்.

அபுஜஹிலின் மகன் இக்ரிமாவையும் இன்னும் வேறு சிலரையும் பனூ குறைலா கூட்டத்தாரிடம் தூது அனுப்பினார்கள்.

“இங்கே எங்களுடைய ஒட்டகங்களும் குதிரைகளும் துன்புற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகையால், நாளைக் காலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போர் செய்து ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம்” இவ்வாறு தூது வந்த இக்ரிமா கூறினார்.

அதற்கு, பனூ குறைலா கூட்டத்தின் தலைவர்கள், “நாளை எங்களுக்கு ஓய்வு நாள். நாங்கள் ஒரு வேலையும் செய்ய மாட்டோம். அதுவும் தவிர, நீங்கள் உங்களுடைய தலைவர்களில் சிலரை எங்களிடம் பிணையாக ஒப்புவித்தால் ஒழிய, நாங்கள் சண்டை செய்ய முடியாது. ஏனெனில் நாங்கள் தனியாக நின்று, சண்டை செய்யுமாறு எங்களை விட்டு விட்டு, நீங்கள் உங்கள் நாட்டுக்கு ஓடிப் போய் விடுவீர்களோ என்று சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று கூறினார்கள்.

அவர்கள் அவ்வாறு கூறியதும், குறைஷிகளும், கத்பான் கூட்டத்தாரும் நயீம் வந்து, தங்களிடம் கூறியவை அனைத்தும் உண்மையே என உறுதிப்படுத்திக் கொண்டனர்.

பின்னர், அவர்களிடம், “எங்கள் தலைவர்களில் யாரையும் உங்களிடம் நாங்கள் பிணையாக ஒப்புவிக்க இயலாது. ஆனால், அவசியம் சண்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், நாளையே நடத்தி விடுவோம்” என்றனர் குறைஷிகள்.

“ளங்களுக்குத் திருப்தி ஏற்படாத வரையில், நாங்கள் உங்களுடன் சேர்ந்து சண்டை செய்ய முடியாது” என்று கூறிவிட்டனர் புனூ குறைலா கூட்டத்தினர்.

இதிலிருந்து அவர்களுக்குள் பிளவு உண்டாக்கி விட்டது.