நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/சுகவாசி ஒருவர் படையில் சேர்ந்தார்

178.சுகவாசி ஒருவர் படையில் சேர்ந்தார்!

ஹிஜ்ரி 9-வது வருடம், முப்பதாயிரம் வீரர்களுடன் பெருமானார் அவர்கள் ஷாம் தேசத்தை நோக்கிப் படையெடுத்துச் சென்றார்கள்.

அப்பொழுது அபூ கைதமா என்ற தோழரின் மனைவியர் இருவர் தம் கணவருக்காக வீட்டில் தண்ணீர் தெளித்து, குளிர்ச்சியாக, நல்ல உணவும் தயாரித்து வைத்திருந்தனர். இதைக் கண்ட அபூ கைதமா “பெருமானார் அவர்கள் வெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கையில், நான் மட்டும் இங்கே இந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதா?” என்று சொல்லிக் கொண்டே ஒடிப் போய், தம்முடைய ஒட்டகத்தின் மீது ஏறி, பெருமானார் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

பெருமானார் அவர்கள் மதீனாவை விட்டுப் புறப்படும் பொழுது, மதீனாவிலுள்ள காரியங்களை நிர்வகிக்கத் தகுதியான ஒருவரை நியமித்துச் செல்வது வழக்கமாகும். இப்பொழுதும் அவ்வாறே, முஹம்மதுப்னு மஸ்லமா என்ற தோழரை நியமித்துச் சென்றார்கள். தங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு ஹலரத் அலியை விட்டுச் சென்றார்கள்.

பெருமானார் செல்லும் வழியில், ஹிஜர் என்னும் நகரம் இருந்தது. தமூது கூட்டத்தாரின் மீது ஆண்டவனுடைய தண்டனை இறங்கியது அந்த நகரத்திலேதான்.

அந்த நகரத்தில் யாரும் தங்கக் கூடாது என்றும், தண்ணீர் கூட அங்கே குடிக்கக் கூடாது என்றும், அங்கே ஒரு காரியமும் செய்யக் கூடாது என்றும், சேனைகளுக்குப் பெருமானார் அவர்கள் கட்டளை இட்டார்கள்.