நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/திக்கற்றவரிடம் பரிவு

49. திக்கற்றவரிடம் பரிவு

மற்றொரு நிகழ்ச்சி.

மக்காவில் ‘ஸௌதா பின்த் ஸம்ஆ’ என்னும் பெண்மணி, பெருமானார் அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு முஸ்லிம் ஆனார்.

அவருடைய முயற்சியினால், அவருடைய கணவரும் இஸ்லாத்தைத் தழுவினார்.

அவர்களையும், மற்ற முஸ்லிம்களைப் போலவே குறைஷிகள் துன்புறுத்தினார்கள். அதனால் கணவனும், மனைவியும் மக்காவை விட்டு அபிசீனியா நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில நாட்களில் அந்தப் பெண்ணின் கணவர் இறந்து விட்டார். அந்தப் பெண்மணியை ஆதரிப்பவர் எவரும் இல்லை.

திக்கற்ற நிலையில் இருந்த அந்தப் பெண்மணியின் பரிதாப நிலைமையைக் காணப் பெருமானார் அவர்களின் மனம் பொறுக்கவில்லை.

தவிர, ஆயிஷா நாயகியோ வயதில் சிறியவர்கள். பெருமானார் அவர்களின் வீட்டுக் காரியங்களை நிர்வகிக்கவும், குழந்தைகளைப் பாதுகாக்கவும் தகுதியானவர் ஒருவரும் இல்லை.

மற்றும், விதவைகளை மறுமணம் செய்து ஆதரிப்பது, முன்னே இருந்த தீர்க்கதரிசிகளின் வழக்கமாகவும் இருந்து வந்தது. இத்தகைய காரணங்களினால், ‘ஸௌதா பின்த் ஸம்ஆ’ என்னும் பெண்மணியையும் பெருமானார் அவர்கள் மணம் செய்து கொண்டார்கள்.