நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பெருமானார் அவர்களின் கடைசிப் போர்

180. பெருமானார் அவர்களின் கடைசிப் போர்

கெய்ஸரின் ஆட்சிக்கு உட்பட்ட தவ்மத்துல் ஜந்தல் என்ற நாட்டின் சிற்றரசரான அக்கீதர் முஸ்லிம்களுக்குப் பகைவராக இருந்து வந்தார்.

அவரை அடக்கி வருமாறு காலித் அவர்களின் தலைமையில் நானுாறு வீரர்களைப் பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

படையினர் அங்கே சென்று, அக்கீதருடைய நாட்டைத் தாக்கி, அந்தச் சிற்றரசரைச் சிறைப் பிடித்தார்கள்.

அந்த அரசர், பெருமானார் அவர்களின் முன் வந்து உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் மீது அவரை விடுவித்தனர்.

சில நாட்களுக்குப் பின், அவ்வரசரும், அவருடைய சகோதரரும் மதீனாவில் பெருமானார் அவர்களிடம் தஞ்சம் அடைந்து, ஆதரவு தேடிக் கொண்டார்கள்.

தபூபக்கில் இருபது நாட்கள் வரை பகைவர்களின் நடமாட்டம் காணப்படவில்லை. எல்லைப்புறப் பகுதி அமைதியாகத் தென்பட்டது. இவற்றை அறிந்த பெருமானார் அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி விட்டார்கள்.

பெருமானார் அவர்கள் நேரில் சென்று கலந்து கொண்ட போர்களில் இதுவே கடைசியானது.

பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு அருகில் வந்ததும், மக்கள் அனைவரும் நகரத்துக்கு வெளியே வந்து, மிகவும் ஆர்வத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.