நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பெருமானார் அவர்களின் முத்திரைக் கடிதம்

138. பெருமானார் அவர்களின் முத்திரைக் கடிதம்

மிஸ்று ஆட்சித் தலைவருக்குப் பெருமானார் அவர்கள் எழுதிய கடிதத்தை அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்ததை இஸ்லாமிய வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

1853-ம் ஆண்டில் பிரெஞ்சு உல்லாசப் பயணிகள் சிலர், மிஸ்று (எகிப்து) தேசத்தில் சுற்றுலாச் சென்ற போது, ஒரு கிறிஸ்துவ மடத்தில் பெருமானார் அவர்களின் மேற்படி கடிதம் அகப்பட்டது. அதில் உள்ள எழுத்துகள் அக்காலத்திய அரபி எழுத்தில் எழுதப்பட்டிருந்தன. டாக்டர் பாட்ஜர் என்பவர் அதைப் பிரித்து எடுத்து இக்காலத்திய எழுத்தில் எழுதினார்.

அதில் காணப்படும் வாசகத்துக்கும், இஸ்லாமிய வரலாற்றில், மிஸ்று தேச அரசருக்கு எழுதப்பட்டதாகக் கூறப்படும் வாசகத்துக்கும் கொஞ்சம் கூட வேறுபாடு இல்லை.

அக்கடிதத்தின் இறுதியில், “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்ற முத்திரை ஒன்று இடப்பட்டிருக்கிறது. வரலாறுகளிலும் அவ்வாறு முத்திரையிடப் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அக்கடிதம் இப்பொழுது கான்ஸ்டாண்டி நோபில் அரண்மனையில் இருக்கிறது.