நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பெருமானார் அவர்களின் முன்னேற்பாடு

76. பெருமானார் அவர்களின் முன்னேற்பாடு

பெருமானார் அவர்களின் கொடிய விரோதியான அபூஜஹில், இச்சண்டையின் மூலமாக இஸ்லாத்தை அழித்து விட வேண்டும் என்ற கொடுரமான எண்ணத்தோடு அங்கே வந்திருந்தான்.

குறைஷிகள் முன்னதாகவே வந்து விட்டதால், தங்குவதற்குத் தகுந்த இடங்களை அவர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.

முஸ்லிம்கள் தங்கியிருந்த இடத்தில், தண்ணீர் வசதி இல்லை; மணல் நிறைந்த தரையானதால், கால்கள் பதிந்தன.

அப்பொழுது ஹூபாப் என்பவர் பெருமானார் அவர்களிடத்தில், “இப்பொழுது இந்த இடத்தைத் தாங்கள் தேர்ந்தெடுத்திருப்பது ஆண்டவனுடைய அறிவிப்பின் மூலமாகவா, அல்லது யுத்த தந்திரத்தை அனுசரித்தா?” என்று கேட்டார்.

அதற்குப் பெருமானார் அவர்கள், "ஆண்டவனுடைய அறிவிப்பு மூலமல்ல", என்று கூறினார்கள்.

உடனே தண்ணீர் வசதியுள்ள இடத்துக்கு முன்னேறினார்கள்.

அப்பொழுது ஆண்டவனுடைய கருணையால் மழை பெய்தது. தண்ணீருள்ள இடங்களை, அவர்கள் கைப்பற்றிக் கொண்ட போதிலும், எதிரிகளும் அங்கே தண்ணீர் எடுத்துக் கொள்ள இடம் கொடுத்தனர்.

தோழர்கள் எல்லோரும் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கினார்கள்.

ஆனால், பெருமானார் அவர்கள் மட்டும் இரவு முழுவதும் விழித்திருந்து, ஆண்டவன் முன்னிலையில் முஸ்லிம்களுக்கு உதவியும், வெற்றியும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்து கொண்டிருந்தார்கள்.

காலையில் தொழுகைக்காக முஸ்லிம்களை எழுப்பி அவர்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.