நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பொறுமை மிக்கவர்கள்

12. பொறுமை மிக்கவர்கள்

மக்காவிலுள்ள குறைஷி இனத்தவர்களுக்கு வியாபாரமே முக்கியத் தொழிலாக இருந்து வந்தது.

பெருமானார் அவர்களின் மூதாதையருக்கும் அதுவே தொழிலாக இருந்தது.

ஒரு வியாபாரிக்கு வேண்டிய முக்கிய அம்சங்களான நம்பிக்கையும், வாக்குறுதியும் பெருமானார் அவர்களிடம் முழுமையாக அமைந்திருந்தன.

அப்துல்லாஹ் இப்னு அபில் அம்ஸா என்னும் வர்த்தகருக்கும், பெருமானார் அவர்களுக்கும் சரக்குகள் கொடுக்கல், வாங்கல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஒரு சமயம், தமக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொள்வதற்காக, பெருமானார் அவர்களிடம், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக, அப்துல்லாஹ் இப்னு அபில் அம்ஸா என்பவர் கூறிச் சென்றார். ஆனால், என்னவோ மறந்துவிட்டார். காலம் கடந்து அங்கே போன சமயம், பெருமானார் அவர்கள் அவ்விடத்திலேயே அவரை எதிர்பார்த்து இருக்கக் கண்டார். எனினும் அவரிடம் பெருமானார் அவர்களுக்குக் கோபமோ வருத்தமோ உண்டாகவில்லை. “எவ்வளவு நேரமாக இவ்விடத்திலேயே இருக்கிறேன். எனக்குக் கஷ்டத்தைக் கொடுத்து விட்டீரே” என்று மட்டும் கூறினார்கள் பெருமானார் அவர்கள்.