நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/போகவும் விடவில்லை

53. போகவும் விடவில்லை

பெருமானார் அவர்களுக்கும், மதீனாவாசிகளுக்கும் நிகழ்ந்த உரையாடல், உடன்படிக்கை ஆகியவற்றைத் தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த மக்காவாசி ஒருவர் ஓடிப் போய் குறைஷிகளிடம் கூறினார். அதைக் கேட்டதும் ஆத்திரம் கொண்ட குறைஷிகள், உடன்படிக்கை செய்த மதீனா வாசிகளைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால், அவர்களோ மக்காவை விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார்கள்.

மக்காவில் குறைஷிகளின் கொடுமைக்கு ஆளாகிக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு மதீனாவில் ஆதரவு இருப்பதால், தங்கள் தோழர்களை அங்கே போகும்படி பெருமானார் அவர்கள் கட்டளையிட்டார்கள். முஸ்லிம்களும் புறப்படத் தொடங்கினார்கள். குறைஷிகள் அதை அறிந்து, அவர்களைப் போக விடாமல் தடுத்தனர். அவர்கள் இருவர் மூவராகச் சேர்ந்து, மறைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். சில நாட்களுக்குள் நூறு குடும்பங்கள் வரை மதீனாவை அடைந்தன.

மக்காவில் பெருமானார் அவர்களுடன் அபூபக்கர், அலி அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் துன்பத்தினால் வருந்திக் கொண்டிருந்த வேறு சிலரும் தவிர, முஸ்லிம்கள் வேறு ஒருவரும் அங்கே இல்லை.

மக்காவில் பல வீடுகள் காலியாகக் கிடந்தன. வியாபாரம் குறைந்தது.